Thursday, April 30, 2020

இதே நாளில் ...முப்பது ஆண்டுகளுக்கு முன்பு


இன்றைக்குச் சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு , இதே நாளில் நான் ஹைதராபாத்தில் இருந்தேன்.
நான் அப்போதுபாண்டியன் கிராமவங்கி ஊழியன் . பாண்டியன் கிராமவங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச்செயலாளர் . நாடெங்கிலும் இருந்த 196 கிராமவங்கிகளில் இருந்த 80000 க்கும் மேற்பட்ட கிராமவங்கிகளில் பணியாற்றிய அனைத்துத் தரப்பு ஊழியர்களின் நலன் காக்கும், AIRRBRA என்று அழைக்கப்பட்ட அகில இந்திய கிராமவங்கி ஊழியர்கள் சங்கத்தின் அகில இந்திய துணைப்பொதுச்செயலாளர் .
பாண்டியன் கிராமவங்கியின் தலைமை அலுவலகம் அப்போது சாத்தூரில் இருந்து இயங்கி வந்தது.

நாடெங்கிலும் கிராமவங்கி ஊழியர்கள் அவர்கள் பணிபுரியும் மாநிலத்தில் , அந்த மாநில அரசு ஊழியர்கள் என்ன ஊதியம் பெற்றார்களோ அதைத்தான் பெற்று வந்தார்கள் . ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் . குளறுபடிகள் . நாங்கள் பார்த்ததோ வங்கிப் பணி . ஆனால் பெற்றதோ மாநில அரசுப் பணிக்கான ஊதியம் .

இந்த முரண்பாடுகளை எதிர்த்து எங்கள் சங்கம் நடத்திய நீண்ட கடினமான சட்டப் போராட்டத்தில் , ஒரு கட்டத்தில் ஒரு முழுமையான தீர்ப்பாயத்தை (TRIBUNAL)அமைக்குமாறு உச்சநீதிமன்றம் இந்திய அரசுக்குப் பரிந்துரைத்தது . 1987 நவம்பர் 26 டிரிப்யூனலை இந்திய அரசு நியமித்தது . முப்பது மாத சட்டப் போராட்டத்தை AIRRBEA நடத்தியது . எங்கள் வழக்கறிஞராக புகழ்மிக்க மனித உரிமைப் போராளி திரு.கே.ஜி.கண்ணபிரான் மகத்தான பணியாற்றினார் .


முப்பதுமாத சட்டப் போராட்டம் முடிவுக்குவந்து, 1990 ஏப்ரல் 30 நீதியரசர் ஓபுல் ரெட்டி தீர்ப்பளித்த நாள் இன்று .

1990 ஏப்ரல் 30 ஆம் தேதி காலை பதினோரு மணிஅளவில் நீதியரசர் ஓபுல்ரெட்டி கிராமவங்கி ஊழியர்களுக்கும் வணிகவங்கி ஊழியர்களுக்கு இணையான ஊதியம் என்று அறிவித்தபோது அந்த அறையில் கூடியிருந்த நூற்றுக்கும் குறைவான AIRRBEA தலைவர்களில் ஒருவனாக நானும் இருந்தேன் . பிற்பகல் உணவுக்கு முன்னதாக சாத்தூரில் இருந்த சங்க முகவரிக்கு இந்த வெற்றிச் செய்தியை ஒரு தந்தி மூலம் தெரிவித்தேன் . அந்தத் தந்தி பல ஆண்டுகள் சங்க அலுவலகத்தில் பத்திரமாக இருந்ததும் எனக்குத் தெரியும்.

வரலாற்று சிறப்புமிக்க அந்தத் தீர்ப்பின் 438 ஆம் பக்கத்தில் பத்தி 4.362 இல் கடைநிலை ஊழியர்கள் பணி நிரந்தரம் தொடர்பான பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் (Letter No GS|326|84 Dated 28.04.1986)உச்சநீதி மன்றத்திற்கு எழுதிய கடிதம் குறித்து விரிவாகப் பேசி இருக்கிறார் நீதியரசர் திரு ஓபுல்ரெட்டி . அந்தக் கடிதமே கடைநிலை ஊழியர்களின் பணி நிரந்தரத்திற்குப் பெரும் பங்காற்றியது .

AIRRBEA வின் வழிகாட்டுதலுடனும் NIT தீர்ப்பின் அடிப்படையிலும் பணியில் சேர்ந்த நாள் முதல் அனைத்துக்கடைநிலை ஊழியர்களும் பணிநிரந்தரம் பெற்றது, இந்தியாவிலேயே தமிழகத்தில் பாண்டியன் கிராம வங்கியில் தான் முதலில் நடைபெற்றது . அதைப் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கமே சாத்தியமாக்கியது . அதற்குப்பின் தான் இதர கிராமவங்கிகளில் PGB நிர்வாகம் வெளியிட்ட உத்தரவைப் பயன்படுத்திப் பயன் பெற்றார்கள் .

PGB நிர்வாகம் பிறப்பித்த உத்தரவின் 300 ஜெராக்ஸ் பிரதிகளை AIRRBEA தலைமைக்கு அனுப்பி வைத்தது PGBEA .(Pandyan Grama Bank Employees Association )

இரண்டு நாட்களாக அந்த நினைவில்தான் நீந்திக் கொண்டு இருக்கிறேன்.

இப்போது என் மேசையில் NIT AWARD புத்தகம் விரித்து வைக்கப்பட்டிருக்கிறது.

என் நினைவுகளைப் போல...
AIRRBEA CC meeting held at Bengaluru on 13.05.2018 to celebrate ...



2 comments:

Rathnavel Natarajan said...

மகிழ்ச்சி சார்.

vimalanperali said...

மகத்தான தீர்ப்பு.
உக்கிரமான போராட்டம்
பெற்றுத்தந்த உன்னதமான விஷயம்! கிராமவங்கியில் குறிபாக
கடைநிலை ஊழியன் வாழ்வில் விளக்கேற்றிய
விளக்கேற்றிய தீர்ப்பு.
நினைவு கொள்வோம் இந்நாளை!

Post a Comment