Monday, May 25, 2015

கந்தர்வன் கவிதைகள் நூலுக்கு எழுதிய முன்னுரை

முன்னுரை
1
அவரது முதல் கவிதைத்  தொகுப்பான "கிழிசல்கள்" நூல் வெளியீட்டு விழாவில், சிறப்புரையாற்றினேன். இப்போது, அவரது ஒட்டு மொத்தத் தொகுப்பிற்கும் முன்னுரை எழுதிக் கொண்டிருக்கிறேன். இரண்டும் தற்செயலானவை அல்ல. எனக்கும், அவருக்குமான எப்போதும், இப்போதும் அறுபடாத உறவின் அடையாளம் அது.

2
அன்னம் பதிப்பகத்தின் சார்பில், பேராசிரியர். மீரா தான் அந்தத் தொகுப்பினை வெளியிட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒருவரது படைப்பை பேரா. மீரா வெளியிட்டது அதுவே முதல் முறை. கலை இலக்கிய பெருமன்றத்துக்காரரான பேரா. மீரா அதனை வெளியிட்டது சிலருக்குப் பொறுக்கவில்லை. தங்கள் கோபத்தையும், வருத்தத்தையும் நேரிடையாகவே பேரா. மீராவிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், பேரா. மீரா அதைப் பொருட்படுத்தாது, தொகுப்பை வெளியிட்டார்.
மானாமதுரையில், மேல்கரைப் பெருமாள் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் தான் வெளியிட்டு விழா நடந்தது. விழாவில், நீ தான் சிறப்புரையாற்ற வேண்டுமென்று கந்தர்வன் அழைத்தார். ஒப்புக் கொண்டேன். ஆனால், விழா நடந்த அன்று ஒரு வேலைச் சுழலில் அகப்பட்டுக் கொண்டேன். தொலைபேசியில் அழைத்து "விவரம்" எல்லாம் சொன்னேன். அமைதியாகக் குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டார். சொல்லி முடிந்ததும், "நீ சொல்றது எனக்குப் புரியுதுடா தம்பி... முதல்ல அந்த வேலையப்பாரு... நாம் பாத்துக்குறேன்... என்ன... நீ பேசுனா நல்ல இருக்கும்னு ஆசைப்பட்டேன்". என்றார். கொஞ்சம் வாய்ப்புக் கிடைத்தாலும், புறப்பட்டு வந்து விடுவேன் என்றேன். "தம்பி... வேணாம்.. ஒரு மனசா அந்த வேலையப் பாருங்க... வர வேண்டாம்" என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டார். மனிதர்களை அவர்களது சூழ்நிலையுடன், இணைத்துப் புரிந்து கொள்கிற பக்குவம் அவருக்கு இயல்பிலேயே இருந்தது. அவர் அப்படிச் சொன்னதும், எனக்குப் போயே தீர வேண்டுமென்று, வேகம் பிடித்தது.
எல்லாவற்றையும் உதறித் தள்ளி விட்டு, மானாமதுரை போனேன். என்னை பார்த்ததும், "தம்பி... வந்துட்டீங்க... வருவீங்கன்னு தெரியும்" என்றபடி நகர்ந்து போனார். வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை. விழா துவங்க இன்னும் நேரம் கிடந்தது. வாசலில் நின்று பேசிக் கொண்டு இருந்தோம். அந்த "சிலர்" பற்றி, அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு மீரா வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தார். பதிப்பகத்தின் பரந்து பட்ட செயல்பாடு, சந்திக்கும் தடைகள், எதிர்கொள்ளும் சவால்கள் என்று விரிவாக பேசிக்கொண்டிருந்தார். எல்லோரும் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.
விழா துவங்கி, புத்தகம் வெளியிட்ட பிறகு நான் பேசத் துவங்கினேன். வேறு எதையும் குறிப்பிடாமல், "ஊசிகள்" மீரா "கிழிசல்கள்" தொகுப்பை வெளியிட்டது தான் பொருத்தமானது; சரியானது" என்று பேச்சைத் துவங்கினேன். (ஊசிகள் என்ற தனது தொகுப்பை அதற்கு முன்பு மீரா வெளியிட்டு இருந்தார்) கந்தர்வனும், மீராவும் கைதட்டி ஆரவாரம் செய்து, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை என்னால் மறக்கவே இயலாது. அதிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வழிமுறைகளை, கந்தர்வனைப் போல இந்த உலகத்தில் யாராலும் புதிது புதிதாக கண்டறிந்து விடவே முடியாது.
எதைப் பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கூச்சலிடுவார், கொண்டாடுவார், கைதட்டுவார், உரக்கச்சிரிப்பார், தலை நிமிர்த்திப் பார்ப்பார், தலையைக் குனிந்து கொண்டு இடமும் வலமுமாகப் பலமுறை தலையசைப்பார், குலுங்கச் சிரிப்பார், கண்களில் கண்ணீர் பெருகச்சிரிப்பார், மேசையை அடிப்பார், தோள்களில் தட்டுவார், கைகளைப் பற்றுவார், கட்டியணைத்துக் கொள்வர், எதுவும் பேசாமல் கண்களுக்குள் பார்ப்பார், "சே" என்பார், 'அட' என்பார் "ஆஹா" என்பார்... அவரது சிவந்த முகம் மேலும் சிவக்கச் சிவக்க சந்தோசத்தைக் கொண்டாட்டமாக மட்டுமே வெளிப்படுத்துவார். அன்றைக்கு நிகழ்ச்சி முழுவதுமே அப்படித்தான் அமைந்தது. 
எல்லோரும் புறப்பட்டோம். என் கைகளைப் பற்றித் தனியே அழைத்துப் போனார். "நீ வரமுடியாதுன்னு சொன்னதும், "பொக்குன்னு" போயிடுச்சுடா தம்பி... ஆனாலும் வந்துடுவேன்னு மனசு சொல்லிச்சு... உன்னப் பார்த்ததும், சந்தோசமா இருந்தது மாதிரி, இவ்வளவு பிரச்சனைலையும் வந்துருக்கியேன்னு வருத்தமாவும் இருக்கு... ஆனா வேற எவன் பேசி இருந்தாலும், இப்படிப் பேசிக் கொண்டாட முடியாதுடா " என்று இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டார். வழிச்செலவுக்குப் பணம் கொடுத்தார். " அண்ணாச்சி காசெல்லாம் வேண்டாம்" என்றதும், உறுதியாக மறுத்து "புத்தகம் வாங்கிக்க" என்று சொன்னார். வந்திருந்த எல்லோரிடமும் தனித் தனியே பேசி வழியனுப்பினார். அவர் யாருடன் பேசினாலும், பழகினாலும், இந்த உலகத்திலேயே அவர்களிடம் மட்டுமே அன்பு பாராட்டுகிறார் என்கிற உணர்வைத் தந்துவிடுவார். கபடமின்றி, களங்கமின்றி, ஒளித்து வைக்காமல் வெளிப்படுகிற அன்பிற்கு, அத்தகைய உணர்வைத் தோற்றுவிக்கும் ஆற்றல் எப்போதும் உண்டு. அந்த ஆற்றலின் அடையாளம் கந்தர்வன்.

3
தன்னை விட அறிவும், ஆற்றலும் உள்ள மனிதர்களைப் பார்த்ததும்  நம்மில் சிலருக்கு வியப்பும், பலருக்குப் பொறாமையும் இயல்பாகவே தோன்றிவிடுகிறது. திறமையும், ஆற்றலும் உள்ள மனிதர்களைக் கண்டு விட்டால், அவர்களைக் கொண்டாட மறுக்கும் பலரை நான் அறிவேன். அந்தத் திறமையை, ஆற்றலை மறைக்கவும், ஒழிக்கவும் அவர்கள் செய்யும் கிழ்த்தரமான தந்திரங்களையும் நான் கண்டிருக்கிறேன். வாய் நிறைய அவதூறும், மனம் நிறையக் கள்ளமெளனமும் சுமந்து ஊர் ஊராகப் போய், ஆள் சேர்த்து, அவதூறுகளை இறைத்துக் கொண்டே போவார்கள். தன்னைத் தவிர மற்றவர்களுக்குப் புகழும், வெளிச்சமும் வருவதை அவர்களால் தாங்கவே முடியாது. ஆற்றல் மிக்க, அறிவு மிக்க மனிதர்கள் நடந்து போகும் பாதையெங்கும் மலத்தையும் கண்ணடித் துண்டுகளையும் தங்கள் கைகளாலேயே கலந்து போடுவார்கள். ஆனால், ஆற்றலும் அறிவும் மிக்கவர்கள் எதன் மீதும் நடந்து, கடந்து போய் விடுவார்கள் என்பதும், அவர்களைக் கையில் சுமந்து, அந்தப் பாதையைக் கடக்க கந்தர்வன் மாதிரி மனிதர்கள் எப்போதும் காத்திருப்பார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியாது.

திறமையும், அறிவும், ஆற்றலும் உள்ள யாரைக் கண்டுவிட்டாலும், கந்தர்வன் அவர்களைக் கொண்டாடிக் கொண்டே இருப்பார். அவர்களைப் பற்றி ஆயிரம் பேருக்குச் சொல்லுவார். சலிக்காமல், வித விதமாய்ப் புகழ்ந்து கொண்டே இருப்பார். ஒரே நாளில், அவர்களுக்கு எல்லாப் புகழையும் வாங்கித் தர வேண்டுமென்று பேசுவார். அப்படிப் பலரை, அவர் கொண்டாடுவதை, அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். என்னை அவர் கொண்டாடியதைப் பலர் எனக்குச் சொல்லி இருக்கிறார்கள்.
ஒரு கலை இலக்கிய இரவில் பேசி முடித்து விட்டு, மேடைக்குப் பின்புறம் வந்தேன். முன்னால் இருந்து ஓடோடி வந்தார். என்னை ஆரத் தழுவி, முகத்தில் பெருகுகிற வியர்வையை வழித்துக் கைகளில் எடுத்து, லேசாகச் சுவைத்து "இனிக்குதுடா தம்பி" என்று சொன்னார். நான் திகைத்து, கண்களை மூடித் திறந்த போது, முன் வரிசைக்குப் போய் விட்டிருந்தார். அதே ஊரில், அடுத்த ஆண்டு கலை இரவுக்கு அவரால் வர இயலவில்லை. இரண்டு நாள் கழித்துக் கடிதம் வந்தது, "தம்பி... திரும்பிய பக்கமெல்லாம் உன் பேச்சுத் தான்... வந்திருந்தால், வியர்வை துடைத்திருப்பேன்" என்று எழுதி இருந்தார். இன்னும் பத்திரமாக என்னிடம் இருக்கிறது அந்தக் கடிதம்.
இதோ, இப்போதும் இந்த முன்னுரையை வியர்வை பொங்கத் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். நிகழ்வுகளில், வியர்வை வழிய வழியத் தான் பேசிவிட்டு இறங்குகிறேன். துடைத்துவிடும், துடைத்து விடுவதாக எழுதும் கைகளைத் தான் காணவில்லை.

4
எங்கள் முதல் சந்திப்பு இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் என்கிற ஊரில் தான் நடந்தது. இபோதைய செம்மலர் இதழின் ஆசிரியர் அன்பும், அருமையுமான தோழர். எஸ்.ஏ.பெருமாள் தான் எங்கள் இருவருக்குமான அறிமுகத்தைச் செய்து வைத்தார். முகம் மலர, என் கைகளைப் பிடித்துக் கொண்டு, "உங்களுக்கு என்னத் தெரியாது: எனக்கு உங்களத் தெரியும். நீங்க பிரபலம்" என்றார். நான் விழித்தேன்.
 "நீங்க எங்ககிட்ட இருக்க வேண்டிய ஆளுன்னு, நான் தான் முதல்ல சொன்னேன்... நீங்க எங்க கிட்ட வந்துருவீங்கன்னும் சொன்னேன். தோழர்... இவர விட்டுறாதிங்க... எப்பிடியாவது புடிங்கன்னு நாந்தான் எஸ்.ஏ.பி. கிட்ட சொன்னேன்". நான் வியப்பாகப் பார்த்தேன்.
"தோழர்... எங்க ஊரு முத்தாலம்மன் கோவில் திடல்ல நீங்க பேசுனதை நாங்க கூட்டமா வந்து கேட்டோம்... அடேங்கப்பா... என்னா பேச்சு?... பேச்சா அது?..." என்று சப்தமாகச் சிரித்தார்.
பெருமிதத்துடன் எஸ்.ஏ.பியைப் பார்த்தார். "பேசின மாதிரியே புடிச்சிட்டு வந்துட்டீங்க எஸ்.ஏ.பி... எப்பிடிப் பிடிச்சீக?" என்று கேட்டு விட்டு, மீண்டும் சப்தமாகச் சிரித்துக் கொண்டார். எப்போதும் போல, உதடு பிரியாத ஒரு மர்மப் புன்னகையுடன் எஸ்.ஏ.பி. சொன்னார். "வந்தாச்சுல்ல... பத்திரமாப் பாத்துக்குங்க" என்றார்.
 "ஆஹா" அதை விட வேற வேல... ஒப்படைச்சுட்டீங்கல்ல, நாங்க பாத்துக்குறோம்" என்று மீண்டும் கைகளைப் பற்றிக் கொண்டார். அந்தப் பற்றுதலை இறுதி வரை விடவேயில்லை. இந்த, "ஆஹா" என்கிற ஒற்றைச் சொல்லை அவர் உச்சரிக்கும் விதமும், தொனியும், பாங்கும் ஜீவரசம் ததும்பிக் கிடக்கும். அந்தச் சொல்லையே அவர் தான் கண்டு பிடித்தார் என்று நம்பத் தோன்றும்.
கொஞ்ச நாள் தான் 'தோழர்' என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்புறம் 'தம்பி' தான். கடைசி வரைக்கும் 'தம்பி' தான். திருமதி. கந்தர்வனை "மதினி" என்று தான் நான் எப்போதும் அழைத்தேன். வாங்க "கொழுந்தனாரே" என்று குறைவில்லாமல் இப்போதும்  மதினி அழைக்கிறார்கள். பிள்ளைகள் இரண்டும், வாய் நிறைய எப்போதும் "சித்தப்பா" என்று தான் கூப்பிடும். அரவணைத்துக் கொள்ள ஆயிரம் ஆயிரம் கைகள் இருந்த மனிதன் கந்தர்வன்.

5
அவர் பார்த்த வேலையில் இருந்து, தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்த பத்தொன்பது மாதங்களும், ஏறக்குறைய அன்றாடம் சந்தித்திருக்கிறோம். அவர் அப்போது பரமக்குடியில் இருந்தார். நான் ராமநாதபுரத்தில் வேலை பார்த்தேன்.
"நேரங் கிடைக்கும் போதெல்லாம் போய்ப் பாக்கணும், முடிஞ்ச வரைக்கும் கூட இருக்கணும், நிறையப் பேசணும், பாதிக்கப்பட்டவங்க கூட இருக்குறது தான் அவங்களுக்கான நம்பிக்கை... கஷ்டப்படுற காலத்துல கை விட்டுறக் கூடாது "என்று என்னைப் பார்க்கும் போதெல்லாம் எஸ்.ஏ.பி. சொல்லிக் கொண்டே இருப்பார். எங்களை எல்லாம் இணைத்த மையப் புள்ளி எஸ்.ஏ.பி. தான். அது தனி வரலாறு.
வேலை முடிந்து, வேக வேகமாக பரமக்குடி போவேன். முக்கால் மணி நேரப் பயணம். பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் தான் எங்கள் சந்திப்பு மையம். சில நாட்களில் எஸ்.ஏ.பியும் வந்து இறங்கி விடுவார். அந்த நாட்களில் நான் மட்டுமின்றி, ஒரு பெரிய அறிவுலகப் பட்டாளமே அவரோடு இருந்தது. பேராசிரியர் தொ. பரமசிவன், ஷாஜஹான் கனி, கே.ஏ. குணசேகரன், ஜேம்ஸ் வாத்தியார், பறம்பைச் செல்வன் என்று பலரும் வந்து கூடி விடுவார்கள். சந்திப்பு எப்போதும் மாலையில் துவங்கி விடும். எப்போது முடியுமென்று சொல்லவே முடியாது. அதிகாலை ஆறு  மணி வரை பேசிக் கொண்டிருந்தது கூட உண்டு. அந்தப் பணி நீக்கம் செய்யப்பட்ட நாட்கள் பற்றி, "பத்தொன்பது மாதங்கள்" என்றொரு கவிதை எழுதி இருக்கிறார்.
இன்னும் பலருக்குத் தெரியாது. அவர் பணியாற்றிய துறையில் இருந்த மூன்றாம் நிலை, நான்காம் நிலை ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடத் துவங்கி இருந்தனர். அதற்கு மேல் நிலையில் இருந்த, இரண்டாம் நிலை அதிகாரிகளின் துணை கொண்டு, அந்தப் போராட்டத்தை விழ்த்த அரசு திட்டமிட்டது. போராட்டத்தை அடக்கும் ஆலோசனைகளையும், உத்தரவுகளையும் அரசு பிறப்பித்துக் கொண்டே இருந்தது. இரண்டாம் நிலை அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற்ற பலரும், மூன்றாம் நிலை ஊழியர்களாக இருந்து, பதவி உயர்வு பெற்றவர்கள் தான். ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயங்கள் தெரிந்தும், அதிகாரத்திற்கு அஞ்சி, அதிகாரிகள் அரசுக்குத் துணை போனார்கள். ஆனால், அதிகாரியாக இருந்தும், ஊழியர்களின் போராட்டத்தில் பங்கேற்றார் கந்தர்வன். போராடிய ஊழியர்களைவிடவும், அவர்களை ஆதரித்த அதிகாரிகளின் மீது வெஞ்சினம் கொண்டது அரசு. அதிலும் எப்போதும் அதிகாரத்திற்கு அடி பணிய மறுத்துக் தன் மானுட இயல்பை வெளிப்படுத்திக் கொண்டே இருந்த கந்தர்வன் மீது தனிக் கோபம் கொண்டது அரசு. தற்காலிகப் பணி நீக்கம் செய்தது. பத்தொன்பது மாதங்கள். பத்தொன்பது மாதங்களுக்குப் பிறகு, பணியில் சேரச்சொல்லி உத்தரவு வந்தது. பணியில், காலையில் சேர்ந்தவரை, பிற்பகலில் மீண்டும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது அரசு. உறுதி குலையாது நின்றார் கந்தர்வன்.
இந்தத் தொகுப்பில் உள்ள அந்தக் கவிதையை, வாழ்வின் போராட்டக் கணங்களில் இருக்கும் எல்லோரும் படிக்க வேண்டும். வீட்டில், நீண்ட தேடலுக்குப் பிறகு கிடைத்த பத்து பைசாவில், பேனாவுக்கு மைநிரப்பி, அதிகாரத்திற்கு எதிராகப் போராட அழைக்கும் கவிஞனின் குரல் அது. இந்தக் தொகுப்பு முழுவதும் "அந்தப் பத்துப் பைசா" மையில் எழுதியது தான்.
அந்த நீண்ட கவிதையில் ஓரிடத்தில் எழுதி இருப்பார்
"நான் கவலையோடு
வருவதறிந்தால்,
செடிகள் சிரித்துக் கொண்டு
வரவேற்புக் கொடுக்கும்.
விடிய விடிய என்னோடு
விவாதங்கள் நடத்தும்.
கவலைப் படாதே என்று
தைரியம் சொல்லும்"
அந்தச் செடிகளில் ஒன்றாக நானும் இருந்தேன்.

6
இந்தத் தொகுப்பில் உள்ள மிகப் பெரும்பாளான கவிதைகளை அவர் வாசிக்க நான் கேட்டிருக்கிறேன். அவரது வீட்டில், அலுவலகத்தில், கலைஇரவு மேடைகளில்,எனது அலுவலகத்தில், ரயிலில், பேருந்தில், பெட்டிக்கடை வாசலில் என்று நாங்கள் பேசி வாழ்ந்த இடமெங்கும் கேட்டிருக்கிறேன். அவர் வாசிப்பது ஒருவகை இன்பம் என்றால், வாசிக்கக் கேட்பது பேரின்பம். ஏற்ற இறக்கங்களோடு, குரலில் உணர்வைக் குழைத்து, வாசிப்பின் வழியே கவிதையை உயிர் பெற்று எழச் செய்வார்.

அவர் சிறுகதைகளுக்குள் இருந்த இலக்கியச் செறிவை, அவரது கவிதைகள் பெற்றிருக்கவில்லை என்று ஒருமுறை சொன்னபோது, தயக்கமின்றி ஒப்புக்கொண்டார். “எனக்கு அது வேற இது வேற... கவிதை நேரடியா களத்துல, ஜனங்களோட பேசுறதுக்கு... கோவிலுக்குப் போனா  சிங்காரிச்சிட்டு போகலாம்... சண்டைக்குப் போகும்போது சிங்காரிச்சிட்டு இருக்கமுடியுமா..? என்று சொல்லி விட்டுப் பலமாக சிரித்துக்கொண்டார். ஆனால், அவர் விரும்பியிருந்தால், இன்னும் ஆழமான, அற்புதமான கவிதைகளை எழுதி இருக்க முடியும். அவரே வரைந்து கொண்ட ஒரு கோட்டிற்குள் தனது கவிதைகளை நிறுத்திக் கொண்டார் என்பது என் கணிப்பு. கவிதையைக் களமாடும் கருவியாக மட்டுமே வைத்துக் கொண்டார். மேடைகளில் அவர் கவிதை வாசிக்கும்போது பெரும் திரளான மக்கள் கை தட்டி ஆர்ப்பரிப்பதை அனைவரும் கண்டு ரசித்திருக்கிறோம். ஜனங்களைச் சிரிக்க வைத்து, சிலிர்க்க வைத்து, எழுச்சிகொள்ளச் செய்து விடுவார். கவிதை எழுதுவதில் வெற்றி பெற்ற எல்லோராலும், கவி அரங்குகளில் வெற்றி பெற முடிந்ததில்லை. அது ஒரு தனித்துவமான நிகழ் கலை, நுட்பமான வித்தை. அந்த வித்தையில் அவர் எப்போதும் வெற்றியாளராகவே இருந்தார்.

அவரது ஒளிரும் நிறத்திற்கு, மேடை விளக்கின் ஒளியும், அவரது வியர்வையும் மின்ன, அவர் கவிதை வாசிப்பதை எல்லாம் ஒளிப்பதிவு செய்திருக்க வேண்டும். அதை ஒரு வீடியோப் புத்தகமாக வெளியிட்டிருக்க வேண்டும். நமக்கென்ன..?... எல்லா யோசனையும் “இருக்கிறபோது வருவதில்லை. இல்லாது போன பிறகு இப்படிச் செய்திருக்கலாம், அப்படி நட்டிருக்கலாம், எப்படி பறித்திருக்கலாம், என்று பேசிக்கொண்டு இருப்போம். எல்லாக் கருவிகளும் வந்துவிட்ட காலத்தில் வாழ்ந்தவரை, அவரது எல்லாச் செயல்பாடுகளையும் பதிவு செய்யத் தவறினோம். பாதுக்காக்கத் தவறினோம்.

நமது இல்லாமைகளும், இயலாமைகளும் சேர்ந்து, குவித்துக்கொண்டே இருக்கும் குற்ற உணர்ச்சிகளின் மீது தான் உட்கார்ந்துகொண்டு இருக்கிறோம். உன்னதமான கனவுகளும், இல்லாமையும் நடத்துகிற போரில், பல சமயங்களில் இல்லாமை வென்று விடுவதைத் தடுத்தாக வேண்டும். ஒரு நாவல் எழுத வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டும், எழுதாமலே போய்விட்டது மாதிரி நடக்கவே கூடாது.

7
மனதில் தோன்றும் நினைவுகளும், உணர்ச்சிகளும் ஒரு முழுப் புத்தகம் எழுதுகிற அளவுக்கு பெருகிக்கொண்டே இருக்கிறது. கைகளைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

8
இந்த முன்னுரையை எழுதுவதற்கு முன் ஒரு சிறு தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள திருமதி கந்தர்வனுக்குப் போன் செய்தேன். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் பேசுகிறேன் “வணக்கம் என்று மட்டும் தான் சொன்னேன் “என்னப்பா கொழுந்தனாரே எப்படி இருக்கீங்க..? என்று கேட்டார். “மதினி... எப்படி கண்டுபுடிச்சிங்க..? என்றேன். “...நீங்கெல்லாம் கூடப் பொறந்தவங்க மாதிரி... கூடப் பொறந்தவங்க எல்லாம் நமக்குப் பொறந்தவங்க என்றார்.

9
“தம்பி என்றுதான் அண்ணாச்சி எப்போதும் கூப்பிடுவார். “கூடப்பொறந்தவங்க, நமக்கு பொறந்தவங்க மாதிரி என்பதாகத் தான் நானும் அவரும் இருந்தோம், வாழ்ந்தோம்.




10
சந்தித்த தருணங்களில் எல்லாம் பேசிக்கொண்டே இருந்தோம். உரையாடல் இன்றி ஒரு நிமிடம் கூடக் கழித்ததில்லை. பேசாத பொருளே இல்லை என்பது மாதிரி, எல்லாவற்றைப் பற்றியும் அறிவு பெருக, மனம் மலரப் பேசிக்கொண்டு இருந்திருக்கிறோம். இவ்வளவு சீக்கிரமாக விடைபெற்றுப் போன அண்ணாச்சி மரணத்தைப் பற்றி ஒருமுறை கூட பேசியதே இல்லை.

பாரதி கிருஷ்ணகுமார்.
16.03.2015.
சென்னை.


Friday, May 15, 2015

எனக்கு இல்லையா கல்வி ஆவணத்திரைப்பட வெளியீட்டு விழாவில்

இடமிருந்து வலம் ...
பேராசிரியர் . தேவசகாயம் , வழக்கறிஞர் ஹென்றி திபேன் , கல்வியாளர் எஸ் . எஸ் . இராஜகோபாலன் , மேனாள் துணை வேந்தர் வசந்தி தேவி , பேராசிரியர் பிரபா கல்விமணி , எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் , பாரதி கிருஷ்ணகுமார் .

Wednesday, May 13, 2015

Monday, May 11, 2015

அழக்கொண்ட எல்லாம் அழப்போம்...

01.01.2000 அன்று வடசென்னையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் , கலைஞர்கள் சங்கக்  கலை இரவில் நான் பேசியது இன்றைக்கு மீண்டும் நினைவுக்கு வருகிறது .

"முன்பெல்லாம் குற்றவியல் வழக்குகளில் தீர்ப்பு வந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதியா அல்லது குற்றவாளியா என்று தெரிந்து கொள்ள முடியும்.
இப்போதெல்லாம் தீர்ப்பு வந்தால், நீதிபதி நிரபராதியா அல்லது குற்றவாளியா என்று தெரிந்து கொள்ள முடிகிறது."  

இந்த நினைவாற்றல் பெரும் துன்பம் அளிக்கிறது. "எதைப் பற்றியுமே பிரக்ஞை இல்லாதவர்கள் பாக்கியவான்கள்" என்பார் திரு.ஜெயகாந்தன்.

என்றபோதும், வினைத் தூய்மை எனும் அதிகாரத்தில் வள்ளுவன் சொல்வதும் நினைவுக்கு வருகிறது.

"பிறரை அழ வைத்து அவர்களது கண்ணீரில் சேர்த்துக்கொண்டதை எல்லாம்
அழுது இழக்க வேண்டியது இருக்கும்" என்று...

வள்ளுவன் பொய்யா மொழிப் புலவன்.
காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருதுபவர்.

Sunday, May 10, 2015

உயிர்மை மே 2015 - சுதந்திர புருஷன் – ஜே.கே




சுதந்திர புருஷன் – ஜே.கே


அவரைச் சந்திப்பது பற்றி, அவருடன் தொலைபேசியில் முன்னதாகப் பேசி நேரம் குறித்துக் கொண்டு போவது நல்லது.
யாராக இருந்தாலும், அவருக்கு உவப்பில்லாத தருணத்தில் வந்தால், சந்திக்க மறுத்து விடுவார்.

அவரது வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டு, அவரை அப்போதே சந்திக்க விரும்பிய அவரது தீவிர வாசகர் ஒருவரை, “மறுநாள் சந்திக்கலாம்” என்று சொல்லி அனுப்பி விட்டார்.
அவரோ மறுநாள் தான் ஊருக்குப் போவதாகவும், அன்றே பார்த்துவிட்டுப் போக விரும்புவதாகவும் சொன்னதை ஜே.கே ஏற்றுக் கொள்ளவில்லை. “இரண்டு நிமிடம்” என்று கேட்ட போதும் சம்மதிக்கவில்லை. “மாடிப் படியில் வந்து நில்லுங்கள்... ஒரு கும்பிடு போட்டு விட்டு போகிறேன்” என்று அவர் கேட்டதைக் கோபமாக மறுத்துத் தொலைபேசியைத் துண்டித்தார் ஜே.கே.

அப்போது அவர் “சபையில்” தனது நண்பர்களுடன் தீவிரமான உரையாடலில் இருந்தார். அது குறித்து, அல்லது அந்த உரையாடல் குறித்து யாரும் எதுவும் கேட்கவில்லை, அன்றைக்கு “சபையில்” நானும் இருந்தேன். திருக்குறளின் சிறப்பு குறித்து, நான் அறிந்த எந்தப் பண்டிதனும் சொல்லாத அற்புதமான நுட்பங்களை ஜே.கே. விவரித்துக் கொண்டிருந்தார்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, ஒரு ஆழ்ந்த மௌனமான பெருமூச்சுக்குப் பிறகு ஜே.கே. சொன்னார், “ஒரு எழுத்தாளனுக்கும், வாசகனுக்கும் என்ன உறவு..? படிப்பதா..? பார்பதா..?.. நான் சந்திக்கவே முடியாதுன்னு கூடச் சொல்லல... நாளைக்கு வரச்சொன்னேன்... அவருக்கு நாளைக்கு வேலை இருக்காம்? ....த்தா... எனக்கு இன்னைக்கு வேலை இருக்காதா... என்று சத்தம் போட்டுச் சிரித்தார்.”

அட்டகாசமாக,கம்பீரமாக, சந்தோஷமாக, பொங்கப் பொங்க, குலுங்கிக் குலுங்கி சிரிப்பார். மேஜையைத் தட்டிக்கொள்வார். ஒரு ஆண் சிங்கத்தின் பிடரி போல, அவர் சிரிக்கிறபோது அவர் தலைமுடி ஆடிச் சிலிர்க்கும். எந்த ஒரு அங்க அசைவையும் வலிந்து திட்டமிட்டு ஒருபோதும் ஜே.கே. செய்து நான் பார்த்ததில்லை. அவர் பேசுவதற்கு இசைவான உடலசைவே அவரிடம் எப்போதும் வெளிப்பட்டது . மிகையாக சுண்டு விரலைக்கூட அசைக்க மாட்டார் .
அவரது புன்னகையோ வசீகரமானது. புன்னகைக்கிற தருணங்களில் அவர் கண் சிமிட்டிக் கொண்டே பேசுவது பரவசம் தருகிற அனுபவம்.

அவரது எழுத்தின் வழியே, அவரை அறிந்தார்கள் எல்லோரும் சிறப்புடையவர்கள் தான். ஆனால்,அவர் பேசுவதை, அருகில் இருந்து கேட்கப் பெற்றவர்கள் மேலும் சிறப்புடையவர்கள்.
முன்னதாகத் தொலைபேசியில் அழைத்து, அவரது சம்மதத்தைப் பெற்றுக் கொண்டு நானும், நண்பர் சௌபாவும் அவரைச் சந்திக்க அவரது கே.கே. நகர் வீட்டுக்கு போனோம்.

மாலை ஐந்து மணிக்கு வரச்சொல்லி இருந்தார். வீடு சென்று அழைப்பு மணியை அழுத்தினேன். அவரே வந்து, கதவைத் திறந்து “வாங்கோ” என்றார். தன்னைச் சந்திக்க வருகிற எல்லோரையும் பார்த்த மாத்திரத்தில் அன்பும், கனிவும் ததும்புகிற குரலில் “வாங்கோ” என்றழைப்பது ஜே.கே. வுக்கு வழக்கமாய் இருந்தது. சபையில் அவ்வப்போது வந்து சேருகிற தனது நண்பர்களை மனமார அழைக்க, ஜே.கே. எப்போதும் பயன்படுத்துகிற சொல் “வாங்கோ”. பலமுறை கேட்டிருக்கிறேன் அருகில் இருந்து. பெசன்ட் நகர் மயானத்தில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப் போன போது கூட, “வாங்கோ” என்கிற அவரது குரல் எனக்குக் கேட்கத்தான் செய்தது. அப்படிக் கூப்பிடுவார்... அவரால் மட்டுமே அப்படிக் கூப்பிட முடியுமென்று, நாம் உணரும் படி அழைப்பார்.

மேல் சட்டை போடாமல், லுங்கியை மார்புக்கும், வயிற்றுக்கும் நடுவாக ஏற்றிக் கட்டி இருந்தார். மெல்லிய புன்னகையுடன் மீண்டும் “வாங்கோ” என்றார். வீட்டின் முன்னறையில் இருந்த நாற்காலிகளைக் காண்பித்து “உக்காருங்கோ” என்றார். “வந்துர்றேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.

இரண்டே நிமிடங்களில் திரும்பி வந்தார். துண்டில் முகத்தை துடைத்தபடியே வந்தார். முகம் துடைத்த, துண்டைத் தோளில்  போட்டுக்கொண்டு, “சொல்லுங்கோ” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.

அவரது புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றான “சமூகம் என்பது நாலுபேர்” என்னும் குறு நாவலைத் திரைப்படமாக எடுக்க அவரது அனுமதியை வேண்டினேன். ஒரு கணம் உற்றுப் பார்த்தார் “டெலிவிஷனுக்கா..? இல்லை சினிமாவுக்கா..?” என்று கேட்டார். “சினிமா” என்றேன்.

screen play ரெடி பண்ணிட்டு வாங்கோ... மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்” என்றார்.

தேநீர் வரவழைத்து கொடுத்தார். மீசையை எப்போதும் போல் முறுக்கி விட்டுக் கொண்டே இருந்தார். எதற்காக வந்தோமோ, அந்த வேலை முடிந்தது. மொத்தமும் மூன்று நிமிடத்தில் முடிந்துபோனது. அவருடன் இன்னும் கொஞ்ச நேரம் உரையாட வேண்டுமென்கிற எனது விருப்பம் காரணமாக, “வீட்ல இருக்குற தென்னை மரத்துல தேங்காயைத் திருட ஒருத்தன் வீட்டுக்கு வந்ததைப் பத்தி, “தென்னை மரங்கள்” ன்னு ஒரு கட்டுரை எழுதி இருந்தீங்களே ஜே.கே.... அது இந்த வீடா ? ” என்று கேட்டேன். “ஆமாம்... இந்த வீடு தான்” என்று மெலிதாகப் புன்னகைத்துக்கொண்டார்... அந்தக் கட்டுரையை எல்லோரும் அறிய வேண்டுமென்பதற்காக அதை அப்படியே கீழே தருகிறேன்.
...

“ மணிக்கணக்காக தென்னை மரங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு பிடிக்கும். மயிலின் தோகை மாதிரி சில சமயங்களில் அவை சிலிர்க்கும். மந்தகாசத் தென்றலில், சிட்டுக்குருவிகளுக்கு ஊஞ்சல் கட்டித் தாலாட்டும். புயற்காற்று வந்து விட்டால் தலைவிரித்து நின்று ஆடும். மாரிக்காலத்தில் மழை ஓய்ந்த பின்னர் சரம் சரமாக முத்துக்கட்டி நின்று... நிலாக் காலமும் சேர்ந்துவிட்டால் ஜகஜ்ஜாலம் காட்டி ஜொலிக்கும்..!

அந்தத் தென்னை மரங்கள் எனக்குச் சொந்தமானவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவை அண்டை வீட்டில் இருந்தாலும் போதும்; ஆற்றங்கரை மணலில் நின்றிருந்தாலும் போதும்; தொடு வானத்துக்கு விளிம்பு கட்டி ஊருக்கு வெளியே தோப்பாக குவிந்திருந்தாலும் அழகாய்த் தான் இருக்கும்.
பத்துப் பன்னிரெண்டு தென்னை மரங்கள் பக்கத்திலேயே வேண்டும் என்பது பாரதியாரின் கனவு. எனக்கு அப்படி ஏதும் ஏக்கங்கள் இருந்ததில்லை. ஆனாலும் ஒரு ஏழெட்டுத் தென்னை மரங்கள் என்னைத்தேடி வந்து, என்னைச் சுற்றிலும் நிலைபெற்று, எங்கள் வீட்டை சுற்றி ஒரே அழகு தான் போங்கள்... மட்டையும்... செத்தையும்... பன்னாடையும்... பத்து பன்னிரெண்டு வருஷத்துக்கு முன்பு நான் புதுவீடு கட்டிக் குடியேறியிருக்கிறேன் என்று தெரிந்த, என் நண்பருக்குத் தெரிந்த நண்பரொருவர் இன்றுவரை அவர் பெயரோ, முகமோ எனக்குத் தெரியாது – வேதாரண்யத்துக்காரர்... வாசகராய் இருத்தல் வேண்டும்... ஒரு பத்துத் தென்னங் கன்றுகளை ரயில் மூலம் அனுப்பியிருந்தார்.

கார் டிக்கியில் போட்டுக்கொண்டு வருகிற அளவுக்கு ஒரு பத்து பன்னிரெண்டு தென்னங்கன்றுகள். ஒரு நண்பர் மூலம் தகவலும் அனுப்பியிருந்தார்; “ நட்டு வைத்து மரமாக வளரும் வரை நாள் தோறும் தண்ணீர் ஊற்றுங்கள் போதும், ‘உப்பு வைக்கிறேன் புளி வைக்கிறேன்’ என்று யாராவது வந்தால் கிட்டே சேர்க்காதீர்கள்.” அது போலவே இந்த மரங்களை நட்டு வைத்துத் தினமும் தண்ணீர் ஊற்றப்பட்டது. ஒரு நாள் கூட நான் அந்தக் காரியத்தைச் செய்ததில்லை. சில வருஷங்களுக்குப் பிறகு, “ இந்த மரங்களையா நான் என் கார் டிக்கியில் வைத்துக் கொண்டு வந்தேன்..! ” என்று பிரமிக்கும் அளவுக்குச் செழித்து வளர்ந்து, பாலை வெடித்துச் சிலிர்த்துக் குலை குலையாய்க் காய்த்துத் தள்ள ஆரம்பித்து விட்டன. அண்ணாந்து பார்த்து ரசிக்க வேண்டியதுதான்... எனக்கு மரம் ஏறத் தெரியாதே..! நம் ஊர் பக்கத்தில் என்றால் அதற்கென்றே சில பேர் திரிவார்கள். இங்கே யாரையும் காணோம். நானும் பலரிடம், “தேங்காய் அறுப்பதற்கு யாராவது ஆள் கிடைப்பார்களா..?..” என்று விசாரித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் நள்ளிரவில்  அவர் வந்தார், எப்படி வந்தார் என்று தெரியவில்லை. மரத்தின் மீதிருந்து தேங்காய்களைப் பறித்துக்கொண்டிருந்தார். சின்ன வயதிலிருந்தே எனக்குத் திருடர்களைப் பற்றிய பயம் கிடையாது. அவர்களும் மனிதர்கள்தானே என்ற எண்ணம்.

எனவே மாடி அறை ஜன்னலைத் திறந்து, அவரிடம் அன்பாகப் பேசினேன். அவரை நான் “திருடன்” என்று நினைப்பதாக என்னை அவர் சந்தேகித்துக் குதித்து ஓடி விட்டால் எனக்குத் தானே நஷ்டம்..?

“என்னய்யா பகலெல்லாம் தேடினேன். கிடைக்கவில்லை, நல்ல வேளை.! இப்பொழுதாவது வந்தீரே. இருக்கிற காய்களையேல்லாம் பறித்துப் போடும், உமக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு போம்”...
மறுநாள் காலையில் போய்ப் பார்த்தேன். அந்த மரத்துக்குக் கீழ் நான்கைந்து குலைகள் பறித்துப் போடப்பட்டிருந்தன. பறித்துப் போட்டவன் தனது கூலியை எடுத்துக் கொண்டு போயிருப்பான் அல்லவா..?
ஜன்னல் வழியாகத் தெரியும் தென்னை மரத்தின் பசிய ஓலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமே எனக்கும் அவற்றுக்கும் உள்ள சொந்தம்..!
...

“அந்த இரவில், அந்தக் கணத்தில் எப்படிப் பதட்டமின்றி உங்களால் அப்படிக் கையாள வேண்டுமென்று தோன்றியது..?” என்று கேட்டேன்.
என்னை உற்றுப் பார்த்தார்.
“பதட்டப்பட்டு என்ன பயன் ? அவன் பதட்டப்பட்டு அவ்வளவு உயரத்துல, தென்னை மரத்துல இருந்து கீழே விழுந்துட்டா ? அது இன்னும் பெரிய திருட்டாயிடாதா..?...” என்று கேட்டு சிரித்தார்...
கனத்த கண்ணாடிக்குள் கண்கள் சிவந்து கலங்கி இருந்தது. சட்டென்று தலையைக் குனிந்து, உதடுகளை மடித்து ஒரு முறை ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டார். கைகள் மீசை மீது விளையாடிக் கொண்டிருந்தது. சில நொடிகள் அப்படியே இருந்தார். நாங்கள் இருவரும் அவரையே பார்த்துக்கொண்டு இருந்தோம். இத்தகையான மௌனத்தில் அடிக்கடி அவர் அமிழ்ந்து, மூழ்கிய பின் விஸ்தாரமாகப் பேசுவதை நான் பல முறை தரிசித்திருக்கிறேன். சட்டென்று தலையை நிமிர்த்தி, தலையை இட வலமாக அசைத்தார். தோளில் கிடந்த தலை முடி புரண்டது. முன்னே விழுந்த தலைமுடியை, இடது கையால் பின்னுக்குத் தள்ளிக் கொண்டார். தோளில் கிடந்த துண்டை எடுத்து, நெற்றியில் பூத்திருந்த வியர்வையை அழுத்தத் துடைத்துக் கொண்டார். இருவரையும் ஒருசேரப் பார்த்தார்.

கண்கள் மேலும் சிவப்பாகி ஒளிர்ந்து கொண்டிருந்தது.
“திருலோக சீதாராம் தெரியுமா..?” என்றார்.
“தெரியும்” என்றேன்.
மீண்டும் சில நொடிகள்... தலை குனிந்து, உதடுகள் மடித்து, ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டார்.

“தஞ்சாவூர்ல தான் இருந்தார்... ரொம்பக் கஷ்ட ஜீவனம்... திருச்சியில தான் அவர் பொண்ணு எடுத்தது... அதனால மனைவியையும், குழந்தையையும் கொண்டு போய் திருச்சியில விட்டுட்டா, அவங்களாவது சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட மாட்டாங்களேன்னு... திருச்சியில, மாமனார் வூட்ல கொண்டு போய் விடணும்னு முடிவு பண்ணாரு... கொண்டுபோய் விட்ட இடத்துல “நீங்க மட்டும் தஞ்சாவூர் போய் என்ன பண்ண போறிங்க..? எங்க கூடவே  இருந்துருங்கன்னு மாமனார் சொன்னதை ஏத்துக்கல”... ரோஷக்காரர்.
“வேற வழி இல்லாமத் தான் இவங்களையே கொண்டாந்து விடுறேன்

கொஞ்ச நாள்ல திரும்ப வந்து கூட்டிக்கிறேன்னு சொல்லிட்டு, ராத் தங்கிட்டு காலையில தஞ்சாவூருக்கு வந்தா... அவரு வீட்டு வாசல்ல, வீட்டைச் சுத்தி ஒரே கூட்டம். என்னன்னு கேட்டா... அவர் வீட்டுல, பின் பக்கத்துச் சுவர்ல யாரோ கன்னக்குழி போட்டு உள்ளே போய்த் திருடி இருக்காங்க... ஜனங்கல்லாம் பதறிட்டு நிக்குதுங்க... கூட்டத்தை விலக்கிட்டு, பின் பக்கச் சுவரில், கன்னம் போட்ட துவாரத்துக்குப் பக்கத்துல வந்து நின்னு பாத்துட்டு, அங்கேயே உக்காந்து அழ ஆரம்பிச்சுட்டாரு திருலோக சீத்தாராம்..."
மீண்டும் சில நொடிகள் மௌனம்...
மெலிதாக, சத்தம் வருகிற மாதிரி சிரித்துக் கொண்டார் ஜே.கே... தொடர்ந்தார்.
"ஏதோ பெருசாக் களவு போயிருச்சுன்னு தான் கவிஞன் அழுகுறான்னு ஊர்ல இருக்கவன்லாம் நினைச்சுக்கிட்டான்..." சற்றே சப்தமாக சிரித்துக் கொண்டார் ஜே.கே.
"அழுதவர சமாதானப்படுத்தி, சுத்தி இருந்தவன்லாம் கேட்டப்ப திருலோக சீத்தாராம் சொன்னாராம்... "நானே ஏழை... திருட வந்தவனுக்குப் பசியாறிட்டுப் போக ஒரு பருக்கைச் சோறு கூட இல்லாத வீட்டுக்குத் திருட வந்திருக்கான்னா...
அவன் எவ்வளவு பெரிய ஏழையா இருப்பான்னு நினைச்சு அழுதேன்னாராம்”...
“அதுக்கு முன்னால இதெல்லாம் என்ன ?” என்றார்.
சட்டென்று உரையாடலை நிறுத்திய மௌனத்தில் ஆழ்ந்து, ஒளிரும் கண்களுடன் எங்களைப் பார்த்தார்.
நாங்கள் விடைபெற்றுக்கொண்டோம்.
வாசலில் வந்து நின்று கொண்டு நான் சொன்னேன்
“இரண்டு மாசத்துல screenplay ரெடி பண்ணிட்டு வர்றேன் ஜே.கே.”...

“வாங்கோ”... “போன் பண்ணிட்டு வாங்கோ” என்றார்.
இருவரும் கை கூப்பி வணங்கினோம்.
திரும்பிக் கையெடுத்துக் கும்பிட்டார்...

நான்கைந்து அடிகள் நடந்த பின்னர், திரும்பிப் பார்த்தேன். கதவு திறந்திருந்தது. ஜே.கே. அங்கேயில்லை.
...
இரண்டு மாதங்கள் கழித்து திரைக் கதையை முழுவதுமாக எழுதி எடுத்துக் கொண்டு, தொலைபேசியில் சம்மதம் பெற்று அவரைப் போய்ப் பார்த்தேன்.
மாடியில் இருந்தார் வணங்கினேன்.
“வாங்கோ” என்றார்.
"screenplay ரெடி பண்ணிட்டேன்" என்றேன்
"உம்" என்றார்
"எங்கேயாவது இரண்டுநாள் discussionக்குப் போகணும்... நீங்க வரணும் ஜே.கே." என்று விண்ணப்பித்தேன்..
"போலாமே... ஏற்காடு போலாம்" என்றார்.
ஏற்காடு நல்லா இருக்குமா?" என்றேன்
"யாருக்குத் தெரியும்?" என்றார்... எனக்கு விளங்கவில்லை
"நான் போனதில்லை... அதனால அங்க போகலாம்னேன்" என்றார்.
அவரே, "நாலு நாள் போய் இருக்கலாம்" என்றார். ஜே.கே.
கலை இயக்குனர் ஜே.கே. என்கிற ஜெயக்குமார், இசையமைப்பாளர் இரா.ப்ரபாகர், கவிஞர். பரிணாமன், ஒளிப்பதிவாளர் wide-angle ரவிசங்கர், நான் என ஆறு பேருமாக ஏற்காடு போய்ச் சேர்ந்தோம்.
மூன்று அறைகளில், அறைக்கு இருவராகத் தங்கினோம். ஜே.கேவும், கவிஞர் பரிணாமனும் ஒரு அறையில் தங்கினார்கள். போய்ச் சேர்ந்த அன்று காலை 10 மணிக்கு அவரது அறையில் ஒன்று கூடினோம்.
கட்டிலின் மையத்தில் காலைச் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டார். புகை சுழன்றது! அறையெங்கும் புகை பரவி அறைக்கதவைக் கடந்து ஏரியின் மீதும் பரவியது.

எந்த இடத்திலும், எந்த ஊரிலும் அச்சமின்றி தயக்கமின்றி தன் நண்பர்களுடன் சிலும்பியில், டெமோவைப் போடுவார். எத்தனை முறை போட்டாலும் ஒரு சொல் கூடப் பிழையின்றி, தடுமாற்றமின்றி, குழப்பமின்றி பேசிக் கொண்டிருப்பார். சமயங்களில், சபையில் எல்லோரும் சரிந்த பின்னரும், எப்போதும் விழித்திருக்கிற பிரக்ஞை தான் ஜே.கே...

“என்னை பார்த்து, நான் தான் செட்டியார்... இந்தப் படத்தோட producer…  shot by shot எனக்குப் படத்தச் சொல்லுங்க” என்றார்.

குறுநாவலின் இறுதிக்காட்சியில் நான் சில மாற்றங்கள் செய்திருந்தேன்.... அவர் எப்படி எதிர்வினையாற்றுவாரோ என்கிற தயக்கம் எனக்கு இருந்தது. எனினும் முழுத் திரைக் கதையையும் நான் செய்த மாற்றங்களுடனே சொன்னேன், சொல்வதற்கு நாற்பது நிமிடங்கள் எடுத்துக் கொண்டேன்... குறுக்கிடவேயில்லை. மௌனமாகக் கேட்டுக்கொண்டார்.
சில நொடிகள் மௌனமாகவே இருந்தது சபை.
நான் பதட்டமாக இருந்தேன்.
“நல்லா இருக்கு” என்றார்...
dialogues  நீங்களே எழுதிக்கங்க” என்றார்.
“பெரும்பாலும் உங்க dialogues தான் use பண்ணப்போறேன்

சில இடங்கள்ல மட்டும் நான் எழுதிக்குவேன்" என்றேன்
"உம்... செய்ங்கோ" என்றார்
"உரையாடல் என்று டைட்டில் போடுற இடத்துல உங்க பேரைப் போட்டு, அதுக்குக் கீழ எம்பேரையும் போட்டுக்குவேன்" என்றேன்
மெலிதாகப் புன்னகைத்தார். "செய்ங்கோ" என்றார்.
அந்தத் திரைப்படத்தில் இடம் பெரும் ஒரு காட்சிக்கென கவிஞர். பரிணாமன் எழுதிய பாடல் ஒன்றைப் பற்றிச் சொன்னேன்.. வியப்போடு பரிணாமனைப் பார்த்தார்.
கதையின் மையக் கதாபாத்திரங்களான முத்துவேலருக்கும், சுகுணாவுக்கும் இடையிலான காட்சியில் இடம் பெறும் பாடல் என்றேன்.
"அவங்களே பாடுறாங்களா?" என்று கோபமாகக் கேட்டார். நான் அவசரமாக மறுத்து, "இல்ல... montage song... song throw பண்றோம்... lip movement கிடையாது" என்றேன். பாடலை படிக்கச் சொன்னார். பரிணாமன் பாடினார். "எச்சில் படாத முத்தங்களை எனக்குத் தருவாயா?" என்று துவங்கும் அந்தப் பாடலை ஜே.கே. ரொம்பவே ரசித்தார்.

“சரி வந்த வேல முடிஞ்சது... எப்பவுமே வேலைய முடிச்சுத் தூக்கி வச்சிரணும்” என்றார் ஜே.கே.
“அப்ப இன்னைக்கே புறப்பட்டுறலாமா ? ” என்று கேட்டார் பரிணாமன்.
“எதுக்குய்யா ?” நாலுநாள் இருந்துட்டுப் போகலாம் என்றார்.
இருந்த நான்கு நாட்களும் அந்தக் கதையின் உள்ளிருக்கும் ஊற்றுக்கண்களைத் திறந்து வைத்துக் கொண்டேயிருந்தார்.
குடும்பம், சமூகம், காதல், திருமணம், மனித உறவுகள் குறித்த அவரது எல்லையற்ற, கரை காண முடியாத சிந்தனையின் வீச்சில் எல்லோரும் கட்டுண்டு கிடந்தோம்,
சென்னை திரும்பிய சில நாட்களுக்குப் பின், தயாரிப்பாளர் கொடுத்த பணத்தை அவரிடம் தந்தேன். எவ்வளவு என்று கேட்கவில்லை, எண்ணிப் பார்க்கவில்லை... அப்படியே மேசை மீது வாங்கி வைத்துக் கொண்டார். அது அங்கேயே ரொம்ப நேரம் கிடந்தது.
...
இரண்டு மூன்று மாதங்கள் கழித்து, உங்க பேர்ல ஒப்பந்தம் type  அடிச்சிட்டு வாங்க... கையெழுத்து போட்டுறலாம்” என்றார்...
என் பெயருக்கே ஒப்பந்தம் தயாரானது. கையெழுத்திட்டார்.
ஆனால், திரைப்படமாகும் முயற்சி தொடரவில்லை...
அவரிடம் போய்த் தயக்கத்துடன் சொன்னேன்.
"So what... நடக்கும் போது நடக்கட்டும்... என்னைக்காவது நீங்க எடுங்க..
எல்லாக் கனவுகளும் மெய்ப்படும்" என்றார்...
வலது கையை உயர்த்தி...
தலை வணங்கி அதை ஏற்றுக் கொண்டேன்..
அந்த வாழ்த்துக்கள் என்னிடம் எப்போதும் இருக்கும்.
...
தமிழகத்தின் வரலாற்றில் இலக்கியம், அரசியல், சினிமா, எழுத்து, பேச்சு என்று எல்லாத் துறையிலும் வென்ற, ஒளிர்ந்த ஒரு மனிதன் ஜே.கே. மட்டும் தான்.
அந்த மனிதன், தன் வீட்டில், தனக்கும் தன் நண்பர்களுக்குமாக உருவாக்கிய உலகம் ஒப்பற்றது.
அது அறிவும், ஞானமும், செருக்கும், சத்தியமும் ஒளிர்ந்த சபையாக இருந்தது.
அவரது ஞானச்செருக்கு கூட அவரது தனித்த சிறப்பன்று: பட்டினத்தார், கம்பர், பாரதி என்று நீண்ட கவி மரபில் இருந்த

தொடர்ச்சியே எனினும், நாம் நம் காலத்தில் கண்டு கேட்டு, வாசித்து, வியந்த, மனிதன், ஜே.கே.
நம் காலத்து அறிவுலகின் பேரழகுகளில் ஒருவர் ஜே.கே...

சீறுவோர்க்குச் சீறும், நேர்படப் பேசும் கம்பீரம்.
எந்த அதிகாரத்திற்க்கும் எப்போதும் மண்டியிடாத சுதந்திரம்.
தனக்குச் சரியென்று பட்டதை உரத்துப் பேசும் சங்கநாதம்.
கம்பனை, பாரதியை, வள்ளுவனை, வாசித்துணர்ந்த அறிவாற்றல்.
கனிவும் அன்பும் தோழமையும் ததும்பும் அற்புதம்...
தர்க்கத்தின் எல்லைகளை மீறிச் சதிராடும் வாக்குச் சாதுர்யம்...
உண்மையும் சத்தியமுமான மனிதன் ஜே.கே...

...


அந்த நான்கு நாள் உரையாடலின்போது ஒருமுறை சொன்னார்.
“உண்மை சுடும்”... (இது அவர் சிறுகதை ஒன்றின் தலைப்பு)
உண்மை சுடும் என்றால் எல்லோரும் தொடமுடியாது என்றாகாதோ..? உண்மை சுடாதென்றால் அது உயிர் அற்றது என்றாகிவிடாதோ..?
உண்மை சுடும்...
எல்லோரையும் அல்ல...
பொய்யர்களை...” என்றார்
ஜே.கே. பேசி எவ்வளவோ கேட்டிருந்தும் இதுதான் இப்பொழுது நினைவுக்கு வருகின்றது.
உங்களோடு இருந்த கணங்கள் குளிர்ச்சியானவை ஜே.கே.
ஏனெனில், அவை உண்மையானவை...