Tuesday, December 20, 2011

அப்பத்தா: உண்மையும் உணர்ச்சியும்

அப்பத்தா: உண்மையும் உணர்ச்சியும்

சென்ற ஞாயிறு சென்னை ஆழ்வார்பேட்டை ரஷ்யன் கல்ச்சுரல் செண்டரில் நடந்த பாரதி கிருஷ்ணகுமாரின் இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். பாரதி கிருஷ்ணகுமாரை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். என்னுடைய குட்டியாப்பா சிறுகதை நூல் வெளியீட்டு விழா ஆம்பூர் கல்லூரியில் நடந்தபோது அவர் வந்து பேசியுள்ளார். அப்போது நான் அவரை நெருக்கமாக அறிந்துகொள்ளவில்லை. ஆனால் அவரது உயரமும், அழகிய தோற்றமும், வசீகரமான பேச்சும், கம்பீரமான குரலும் யாரையும் வசீகரிக்கும். 
சமீபகாலமாகத்தான் அவரை நான் கொஞ்சம் உன்னிப்பாகப் பார்க்க ஆரம்பித்தேன். அவரது குறும்படங்கள் சிலவற்றைப் பார்த்துவிட்டு, அவை பற்றி எழுதவும் செய்தேன். டைரக்டர், தயாரிப்பாளர், பேச்சாளர், இப்போது எழுத்தாளர் என்பதைத் தாண்டி, அவர் ஒரு நல்ல மனிதர். எனினும் அவரது அப்பத்தா என்ற சிறுகதைத் தொகுப்பை விமர்சன நோக்கோடுதான் படித்தேன். அது பற்றிய என் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவே இக்கட்டுரை.
எதிர்மறையானதொரு தொனியோடு தொடங்கி நேர்மறையாக முடியும் அழகானதொரு கவிதையோடு துவங்குகிறது தொகுப்பு. மொத்தம் பத்து சிறுகதைகள். சிறுகதைகள் என்ற பெயருக்கு ஏற்றாற்போல சின்ன கதைகள். ஐந்து பக்கங்களுக்கு மேல் எந்தக் கதையும் போகவில்லை. ஆனால் ஐம்பது பக்கங்கள் அல்லது ஐநூறு பக்கங்கள் கொண்ட ஒரு நாவல்கூட ஏற்படுத்த முடியாத தாக்கத்தை அவை ஏற்படுத்துகின்றன.
தொகுப்பு அம்மாவுக்கும் கந்தர்வனுக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. முன்னுரையில் பிகே (பாரதி கிருஷ்ணகுமார்), “எனது எல்லாப் படைப்புகளிலும் ஏதேனும் ஓரிடத்தில் ஏதேனுமோர் வடிவத்தில் அம்மா ஒளிர்ந்துகொண்டே இருக்கிறாள். அந்த ஒளியில்லாத உலகில்,என்னால் எதையும் எழுதிவிட முடியாது. இதனை எழுதுகிறபோதுகூட அம்மா எதிரே இருந்து பார்த்துக்கொண்டே இருக்கிறாள்” என்று கூறுகிறார். பிகே எப்படிப்பட்ட மனிதர், அவரது எழுத்து எப்படியிருக்கும் என்பதன் குறிப்பு இங்கே கிடைக்கிறது. தர்க்கங்களை மீறிய தெளிவும் உறுதியும் மின்னும் எழுத்து.
பத்து கதைகளில் நான்கு கதைகளின் கருவாக இருப்பது இறப்பு. “வெளியேற முடியாமல் ஒற்றை மூச்சுக் காற்று, உள்ளிருந்து தொண்டைக்குழிக்குள் மோதித் திரும்பிக்கொண்டே இருந்தது.” “தலையில் இருக்கும் துவாரங்கள் வழியாக உயிர் பிரிவது புண்ணியமென்றும், இடுப்புக்குக் கீழே உள்ள துவாரங்கள் வழியாக உயிர் பிரிவது பாவம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தாள்” (அப்பத்தா) என்ற சொற்கள் நம்மை என்னவோ செய்கின்றன. இது தகவல் அல்ல. மரணத்தின் மீதான ஒரு கலைஞனின் மனக்குவிப்பு. இறப்பு இங்கே எழுத்தில் மறு உயிர்ப்பு செய்யப்படுகிறது. இக்கதைகளில் வரும் மனிதர்கள் நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்கள்தான். ஆனால் நாம் கண்டும் காணாமல் விட்ட விஷயங்களை பிகே பார்க்கிறார். 
எழுத்தில் ஒருவிதமான கவிதா தன்மை கைகூடி வந்திருக்கிறது. ஒரு எழுத்தாளனின் கற்பனையில் எதுவும் அழகிய இலக்கியமாக அழகுடன் பரிணமிக்கக் கூடிய சாத்தியம் உண்டு. உன் சகோதரன் கடலில் மூழ்கி இறந்துவிட்டான் என்பதை டெம்பெஸ்ட் நாடகத்தில் ஏரியல் என்ற பூதம் அல்லது ஜின் இப்படிச் சொல்கிறது: “Those are pearls that were his eyes”! ஷேக்ஸ்பியரைத் தவிர வேறு யாரால் இப்படிச் சொல்ல முடியும்? பிகேயின் ஒரு கதையில் கணவன் மனைவி உறவும், அதனூடாக ஒரு பெண்ணின் மனதும் வெகு அழகாக, வெகு நுட்பமாகப் படம்பிடித்துக் காட்டப்படுகிறது: 
“ஊடலுக்கு பிந்திய காமத்தில், ஊடலின் கரையாத வண்டல் என்று எதுவுமே மிஞ்சியதில்லை…மெல்லிய இழைகள் முறுக்கேறி, முடிச்சாகி, இறுகிய பாறையாக எழுந்து நின்றது. போகத்தின், சமகால போகத்தின் நறுமணம் எழவேயில்லை. பலாத்காரத்தின் துர்நாற்றம் என் உதடுகளுக்குள்ளும், குழந்தைகள் உயிர்த்திருந்த உயிர்ப்பாதைக்குள்ளும் வேட்டை நாயாய் விரைந்தது” (அறம் வளர்த்த நாதன்).
பிகேயின் கதை மாந்தர்கள் மிகமிக மென்மையானவர்கள். வீட்டுக்குள் வந்து கண்ணாடியில் உட்கார்ந்த வண்ணத்துப் பூச்சிக்குத் தொந்தரவாக இருக்கக் கூடாதென்று மின்விசிறியை நிறுத்தும் மனம் கொண்டவர்கள்(தெய்வநாயகம் சார்). ஒருவகையில் பிகேகூட இப்படிப்பட்டவர்தான். அவர் மேடைகளில் பேசும்போது கேட்டிருக்கிறேன். பம்பாயில் குண்டு வெடித்தபோது அந்த சத்தம் கேட்டு அதிர்ச்சியில் செத்த புறாக்களை ஆறு சாக்குகளில் அள்ளிப் போட்டுக்கொண்டு கார்ப்பரேஷன் போனது என்று சொல்லும்போது கண் கலங்குபவர். 
மேடைகளில், பொதுமக்கள் முன்னிலையில், பிரார்த்தனைக் கூட்டங்களில் தலைமைப் பொறுப்பேற்று பிரார்த்திக்கும் சிலர் திடீரென்று உரத்த குரலெடுத்து அழுவதை நான் கேட்டிருக்கிறேன். “எங்கள் பாவங்களை மன்னித்துவிடு இறைவா! எங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவாயாக இறைவா!” என்று சொல்லும்போதெல்லாம் அழுதுகொண்டே சொல்வார்கள்.
ஆனால் அது மேடைக்கண்ணீர். முதலைக் கண்ணீர். உண்மையில் அது கண்ணீரே அல்ல. பொய்யான பக்தியை திறமையாக மறைத்து, கேட்பவர்களை முட்டாளாக்கிவிட்ட வெற்றிச் சிரிப்பு அது. திரவப் புன்னகை. நரகம் என்று ஒன்று இருக்குமானால் நிச்சயமாக அந்த அழுகுணிகளுக்கு அதில் இடமிருக்கும். ஆனால் போலியான மேடை நாகரீகம் எதையும் பொருட்படுத்தாத பிகேயின் தழுதழுப்பில் நேர்மை இருந்தது. பிகேயின் பேச்சிலும் எழுத்திலும் இரண்டு விஷயங்களை நான் பார்க்கிறேன்: ஒன்று உண்மை. இன்னொன்று உணர்ச்சி. தலையால் வாழ்பவர்கள் அறிவாளிகள். இதயத்தால் வாழ்பவர்கள் மனிதர்கள். நானும் பிகேயைப் போல ஒரு மனிதனாகவே வாழ விரும்புகிறேன். முத்துக்கனிமா என்றொரு பெரியம்மா எனக்கிருந்தார்கள். ஏதோ படம் பார்த்து அழுதுகொண்டிருந்த அவர்களிடம் நான் கேட்டேன், “சினிமா பார்த்து அழுவது முட்டாள்தனமில்லையா?”. அதற்கு அவர்கள் சொன்ன பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. “சினிமா பார்த்து சிரிக்கலாம் என்றால், ஏன் அழக்கூடாது?”
உண்மைதான். ஏன் அழக்கூடாது? மனிதர்கள் மீதும், மரம், செடி கொடி, பூச்சிகள், பறவைகள், கிணறு, ஆறு போன்ற இப்பிரபஞ்சத்தின் மீதுமான அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் ஒரு இதயத்தை இக்கதைகளில் நாம் தரிசிக்கலாம். 
’அம்மாவும் அந்தோன் சேக்கவும்’  என்ற முதல் கதையின் முடிவில் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. இறந்து போன அம்மாவை அடக்கம் செய்ய அல்லது எரியூட்ட மகன் போகிறான். அக்கா வருவதற்குத் தாமதாமாவதால் நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த மயானத்திலேயே அவன் அந்தோன் சேக்கவின் ”ஆறாவது வார்டு” என்ற கதையை அவர்களுக்குச் சொல்ல ஆரம்பிக்கிறான். 
இது நடைமுறைக்கு மாற்றமாக, கொஞ்சம் செயற்கையாக உள்ளது. அம்மாமீது பாசமில்லாத மகனாகவும் அவன் காட்டப்படவில்லை. ரொம்ப ‘ப்ராக்டிக்கலானவன்’ என்பதற்காக இது நுழைக்கப்பட்டிருந்தாலும் சரியென்று தோன்றவில்லை.
சல்மாவின் ’இரண்டாம் ஜாமங்களின் கதை’ நாவலில் இறந்து போன ஒரு பெண்ணின் உடலை வீட்டில் கிடத்தி வைத்திருக்கும்போது சுற்றியிருக்கும் பெண்கள் செக்ஸ் பற்றி சிலாகிப்பது போன்ற காட்சி விவரிக்கப்படுவது நினைவுக்கு வருகிறது. சல்மாவைப் பொறுத்தவரை அக்காட்சி போலித்தனத்தின் உச்சம். ஆனால் பிகேயின் கதையில் வரும் இறுதிக்காட்சி லேசான சறுக்கலாகவே தோன்றுகிறது. தவிர்த்திருக்கலாம். 
சில தலைப்புகளை மாற்றியிருக்கலாம், சில இடங்களில் வேறு மாதிரி செய்திருக்கலாம் என்று எனக்கு ஆங்காங்கு தோன்றினாலும், அவற்றையெல்லாம் நான் இங்கே சொல்லப் போவதில்லை. ஏனெனில் இது இவரின் முதல் தொகுதி என்ற ஆச்சரியத்திலிருந்து நான் இன்னும் விடுபடவில்லை.
அப்பத்தா. The Roots வெளியீடு. பக்கங்கள் 96. விலை ரூ 100/- அவரது மின்னஞ்சல்: bkkumar.theroots@gmail.com
நன்றி தமிழோவியம்
 http://nagoorumi.wordpress.com

Sunday, December 11, 2011

தமிழருவி மணியனின் மடல்


இன்று வெளியான எனது பாரதி பற்றிய 'அருந்தவப்பன்றி" சுப்பிரமணிய பாரதி என்ற நூலுக்கு திரு தமிழருவி மணியன் எழுதிய மடல் .



ஒரு புதிய மைல் கல் ...

மாளிகை முற்றங்களில் மட்டும் இதமாக வீசிக்கொண்டிருந்த கவிதைத்  தென்றலை மண்குடிசைக்குள்   குடியேற்றிய முதல் மக்கள் கவிஞன் மகாகவி பாரதி . வானத்து நிலாவையும் , முடிமன்னர்களின் உலாவையும் ,கிழடு தட்டிப் போன பழைய உவமைகளின் துணையோடு பாடிக் கொண்டிருந்த இலக்கணப்  புலவர்களுக்கு இடையில் , 'மரங்களைப் போல் மழையில் நனைந்து , விறகுகளைப் போல வெயிலில் காய்ந்த பாதையோரத்துப்  பஞ்சைகளின் பக்கம் பார்வையைத் திருப்பிய புதுயுகக் கவிஞன் அவன் .
ன்மதனின் மலர்க்கணைப் பட்டு , மாலைத்  தென்றலில் மதிமயங்கி, ஆணின் வருகைக்காக அணையாத விரக நெருப்பை நெஞ்சில் சுமந்து, காற்றையும் , கிளியையும் தூதனுப்பித் துடித்து நிற்கும் தோகையரின் காமப் புலம்பலை இரசனையுடன் இலக்கியமாக்கிய கவிராயர்களுக்குப் பின்னால், கவிதையைக்  கௌரவிப்பதற்காகவே எழுதுகோல் ஏந்தியவன் பாரதி .
மிந்தார்களின் மலினமான  மன்மத உணர்ச் சிகளுக்குத் தீனி போடுவதறக்காகவே விறலி  விடு தூதும், கூளப்ப நாயக்கன் காதலும் பாடி இலக்கியத்தைச் சிலர் சிறுமைப் படுத்திய வேளையில், தன் வாழ் காலச் சமுகத்தின் இழிவுகளை அழித்தொழிக்க அமில தாரை வழியும் அருவியாகத் தன்னுடைய பேனா மையை ரசவாதம் செய்து, சமுதாயப் புரட்சிக்குக் கவிதையைச் சக்தி மிக்க ஆயுதமாக மாற்றிக் காட்டிப் புதிய சரித்திரம் படைத்தவன் பாரதி .
றிவு என்னுள் கண்விழிக்கத் தொடங்கிய காலம் தொட்டு, என்னுடைய ஆதர்ச ஆசானாக நெஞ்சுக்குள் நான் நேர்ந்து கொண்ட மனிதன் மகாகவி பாரதி. அவனுடைய ஒவ்வொரு சொல்லும், என் சிந்தனையைச்  செதுக்கிச் செப்பனிட்டது. அவனை பற்றிய நூல் எதுவாயினும் ,அதை தேடிப் படிப்பது என் வழக்கம் . நண்பர் பாரதி கிருஷ்ண குமார் அற்புதமாகப் படைத்திருக்கும் ' அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி ' யைப் படிக்க நேர்ந்தபோது என்னுள் விளைந்த உணர்வுகளை எழுத்தில் வெளிப் படுத்த முயல்வது ' வானத்து நீலத்தை வட்டிலில் இறக்கிவைக்கும் ' முயற்சியைப்  போன்றது.
ஒரு வெள்ளிவிழா காலத்துக்கு முன்பே என் நெஞ்சுக்கு நெருக்கமான நண்பராகி விட்டவர் கிருஷ்ணகுமார் . எஸ்.ஆர்.கே . என்று அன்புடன் அழைக்கப்பட்ட மார்க்சியவாதி எஸ்.இராமகிருஷ்ணனின் பாதிப்பை ஜெயகாந்தனிடமும் , ஜெயகாந்தனின் சிந்தனை வீச்சை நண்பர் பாரதி கிருஷ்ணகுமாரிடமும் மேடைப்  பேச்சில்  கண்டு வியந்தவன் நான் . இளம் பருவம் முதல் சமூகநலன் சார்ந்து இயங்கும் என் நண்பருக்கு, எழுத்தும் பேச்சும் வணிக நோக்கில் கடைபரப்பும் விற்பனைப் பொருளாக இருந்ததே இல்லை என்பதுதான் நான் அவரிடம் கண்ட தனிச்சிறப்பு .
பாரதியைப்  பற்றி எண்ணற்ற நூல்கள் எழுதப்பட்டுவிட்டன. ஆனால் , எந்த பாரதி நேயரும் பார்த்தறியாத, ஒருக்கால் பார்த்திருந்தும் பறைசாற்ற விரும்பாத பக்கத்தில்  தன் பார்வையைத் திருப்பியிருக்கிறார்  நம்  கிருஷ்ணகுமார் . அதன் விளைவுதான்  இந்த 'அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி ' என்னும் ஆய்வு நூல் . முதற்பார்வையில் தலைப்பே வாசகர்களைத் திகைக்க வைக்கும். ஒருவகையில் பாரதியிடம் ஆழ்ந்த அன்பு கொண்டவர்களை அதிர்ச்சிக்கும் ஆளாக்கும் .

பாரதியின் ' கனவு' என்ற காதற்கவிதையிலும் , 'பாரதி அறுபத்தாறு' என்னும் முற்றுப்பெறாத பாடல் தொகுதியிலும் , 'சின்ன சங்கரன் கதை' என்னும் முற்றுப்பெறாத கதைப் பகுதியிலும், ' கவிதாதேவி அருள்வேண்டல்' போன்ற சில பக்கங்களிலும் காணப்படும் கவிஞனின் வாழ்வு தொடர்பான ஒளிக்கீற்றுகளை, இன்றுவரை அறியப்படாத இருண்ட பக்கத்தில் பாய்ச்சி உண்மைக்கு நெருக்கமாக தன் ஆய்வை நடத்திஇருக்கிறார்  என் நண்பர் .
" தென்திசைக் கண்ணொரு    சிற்றூர்க்  கிறைவனாந்
திமிங்கல வுடலுமோர்  சிறியநா யறிவும் 
பொருந்திய வொருவனைத் துணையெனப்  புகுந்தவன்
பணிசெய விசைந்த  ' பாரதி ' தன்னை 'அருந்தவப் பன்றி ' என்று அடைமொழி தந்து இழித்துப்  பேசுகிறான். எட்டயபுரத்து ஜமீனில் பணிபுரிந்த காலத்தில் கவிதை என்னும்  'தெய்வ மருந்துடைப் பொற்குடம்' தன்னிடமிருந்து மறைந்துவிட்டதாக மனத்துள் மறைவாகக் கண்ணீர் விட்டுக் கதறியழுகிறான்  பாரதி .
'வறுமை காரணமாக எட்டயபுரம் ஜமீனில் வேலைக்குப் போன பாரதியாரைக் 'கவிதா தேவி' ஏன் பிரிந்து போக வேண்டும்? எதற்காக , இத்தனை கடுமையான சொற்களால் எட்டயபுரம் ஜமீந்தாரை விமர்சிக்க வேண்டும்? ஜமீன் 'வேலை'யில் பாரதியாருக்கு நேர்ந்த அனுபவங்கள் என்ன? அத்துணை கடுமையாக விமர்சித்த ஜமீனுக்கு மீண்டும் ஏன் வேலைக்குத்  திரும்ப வேண்டும் ? வாழ்வியல் தேவைகளுக்காக ஜமீன் வேலைக்குப்  போகும் பாரதியைக் கவிதா தேவி விட்டு விலகுவதற்கு முன் அவர் எழுதிய கடைசிக் கவிதை எதுஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கவிதாதேவி  மீண்டும்வந்த போது எழுதிய முதல் கவிதை எது ?பல்லாண்டுகள் பாரதியாரைப் பிரிந்திருந்த கவிதா தேவி மீண்டும்  அவரிடம் வந்த பிறகு , அவரது இறுதிக்காலம் வரை அவரோடு இணைந்து இருந்தாளா? மீண்டும் இடையில் ஏதேனும் பிரிவு இருவருக்கும் இடையில் நேர்ந்ததா ? என்று கேள்வி மேல் கேள்வியாக நண்பரின் நெஞ்சில் எழுந்து உந்தியதின் பலனாக ஓர் உன்னதமான ஆய்வு ,இந்த நூல் வடிவில் அரங்கேறியிருக்கிறது .
பாரதி கிருஷ்ணகுமார் இந்த அரிய ஆய்வு நூலில் கையாண்டிருக்கும் 'சொல் புதிது; சுவை புதிது ; பொருள் புதிது'.  நடுநிலை நின்று, அறிவுநிலையில் மதிப்பிட்டு, மகாகவி பாரதியார் வாழ்வின் விழ்ச்சிக்கூறுகளை இனங்கண்டு , கவிதாதேவி அவரிடமிருந்து பிரிந்த காலத்தைக் கண்டுணர்ந்து , அதற்கான அடிப்படைகளைத் தேர்ந்து தெளிந்து வசீகரமான நடையில் நண்பர் வடித்திருக்கும் இந்த நூல் பாரதி குறித்த படைப்புகளில் தவிர்க்க முடியாத இடத்தை என்றும் பெற்று இலங்கும்கால பிரக்ஞையும் , வரலாற்றுணர்வும் இல்லாத தமிழினத்தின்  இலக்கியப் பாதையில் பாரதி கிருஷ்ண குமாரின் இந்த ஆய்வு நூல் ஒரு புதிய மைல்கல் !
அன்புடன்,
தமிழருவி மணியன் .