Thursday, August 29, 2013

கண்களும் , கறுப்புக் கண்ணாடிகளும் ...

      நான் எப்போதும் கறுப்புக் கண்ணாடிகள் அணிந்ததில்லை .அவைகளின் மீது எனக்கு பெரும் விருப்பம் இருந்ததில்லை .
படிப்பதற்கும் , எழுதுவதற்குமான கண்ணாடியை அணியத் துவங்கிய பிறகு அதைக் கழற்றி வைக்கவே வாய்ப்பும் , வழியும் இல்லாமல் போய் விட்டது . .ஒரு கண்ணாடியைப் பராமரிப்பதே பெரும் பாடு .
இதில் இன்னொரு கண்ணாடி குறித்த விருப்பம் வராமால் போய் இருக்கலாம் .

கறுப்புக் கண்ணாடிகள் எல்லோருக்கும் பொருந்துவதில்லை . சிலருக்கு மேலும் பொலிவைத் தரும் அவை , சிலருக்கு எதிர் மறையான தோற்றத்தை தருவது நமது காட்சிப் பிழையாகக் கூட இருக்கலாம் .

வெளியில் போகிற போது , வெயிலுக்கு அஞ்சிக் கறுப்புக் கண்ணாடி அணிந்து கொள்ளுவது ஏற்புடையது தான் . ஆனால் பரஸ்பர உரையாடலின் போது கண்களைப் பார்த்துப் பேச வழி இல்லாமல் செய்து விடுகின்றன கறுப்புக் கண்ணாடிகள் .

எப்போதும் கறுப்புக் கண்ணாடி அணிந்து கொண்டே இருக்கும் ஒருவருடன் உரையாடுவது கடினமானது . அவர் நாம் பேசுவதைக் கேட்கிறாரா , உறங்குகிறாரா என்று அறிந்து கொள்ள இயலாது . அதனினும் ,அவர் என்ன கருதுகிறார் என்பதை அவரது கண்களின் வழியே நீங்கள் கண்டறிய முடியாது .
பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் , கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், சென்னைக் கண் வியாதிக்காரர்கள்  அணிவது நியாயமானது . அவர்கள் தேவை கருதி அதை அணியத் தான் வேண்டும் .

பகலில் கண்களில் தூசி படாமல் இருக்க அணிவதும் சரி தான் . இருபத்தி நாலு மணி நேரமும் அணிந்து கொண்டு திரிகிற ஒருவரால் இந்த உலகத்தை அதன் அசலான வண்ணத்தில் ஒரு போதும் பார்க்க இயலாது .

ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி மதுரையில் திருநங்கைகளின் மாநில மாநாட்டில் துவக்க உரை நிகழ்த்த , தங்கி  இருந்த விடுதியில் இருந்து புறப்பட்ட போது வீதிகளில் வெயில் மிகப் பெரும் வெண் சாமரம் வீசிக் கொண்டிருந்தது .

"என்னாப்பா ... இப்பிடி வெயில் " என்றதும் , " இதப் போடுங்கண்ணே " என்று தனது கறுப்புக் கண்ணாடியைக் கழற்றிக் கொடுத்தான் தம்பி எர்னஸ்டோ .
முதலில் தயக்கமாக இருந்தது . வாங்கி அணிந்து கொண்டதும் "நன்றாக இருப்பதாக" சுற்றி இருந்த எல்லோரும் சொன்னார்கள் . நம்பிக்கை தானே வாழ்க்கை .அணிந்து கொண்டேன் .

மாநாட்டு வாசலில் போய் இறங்கியதும் எர்னஸ்டோவே வளைத்து வளைத்து வித விதமாய்ப் புகைப்படங்கள் எடுத்தான் .புகைப்படம் எடுத்து முடித்ததும் கண்ணாடியைக் கழற்றிக் கொடுத்து விட்டேன் .வந்த புகைப்படங்களைப் பார்த்த போது நண்பர்கள் பொய் சொல்லவில்லை என்பது தெரிந்தது

 எனவே , முதன் முறையாகக் கறுப்புக் கண்ணாடி ஒன்றை வாங்க வேண்டும் என்று விரும்பினேன் . அண்மையில் மும்பை போன போது சில கடைகள் ஏறி இறங்கியும் வாங்காமல் வந்து விட்டேன்

எப்போது வாங்குவேன் என்று தெரியவில்லை .


இந்தப் படத்தைப் பார்த்து விட்டு ஒருவர், "மதுரைல அரவிந்த் கண் மருத்துவ மனைக்குப் போனியா ? என்று கேட்ட பிறகும் கண்ணாடி வாங்குகிற ஆசை குறையவில்லை . யாரை விட்டது ஆசை ...

 ஆனால் உரையாடல்களின் போது கண்களுக்கு இடையில் கறுப்புத்  திரை இருப்பதை ஒரு போதும் என்னால் ஏற்க இயலாது