Monday, April 6, 2020

அவனை முதன் முறை பார்த்தபோது .... பகுதி இரண்டு - பாரதி கிருஷ்ணகுமார்


அந்தக் கூட்டத்திற்குள் அவனும் இருந்தது எனக்குத் தெரியாது.

கணையாழியை விற்பது என்று முடிவு செய்திருந்த போதும் ரொம்பவே கலங்கிப்போய் பேசினார் கஸ்தூரிரெங்கன். கண்களுக்குள் கண்ணீர் ததும்பி , கரை உடைக்காமல் கண்களுக்கு உள்ளேயே  நின்றதை உணர முடிந்தது.அது அரங்கம் முழுவதையும் இறுக்கமாக்கி விட்டது.


திருவாளர்கள் தமன் பிரகாஷ், மா . ராஜேந்திரன், கமல்ஹாசன், சுவாமிநாதன் , சுஜாதா நான் என்று மேடை நிரம்பக் கூட்டம். நான் தயாரித்து வைத்து இருந்ததை எல்லாம் யாரோ பேசி முடித்து இருந்தார்கள். நான் மனதுக்குள் வேறு புள்ளிகள் வைத்து வேறு கோலம் போட்டுக்கொண்டே இருந்தேன். 


முதலில் கஸ்தூரி ரெங்கனின் துயரம் அரங்கம் முழுவதும் பரவி அடர்ந்து நிற்பதை விலக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டேன் .

அதே போல் சிறு பத்திரிகைகள் சந்திக்கும் துயரங்கள் நெருக்கடிகள் சவால்கள் பற்றி எல்லோரும் ஏதாவது ஒரு வார்த்தை துயரமாகச் சொல்லி இருந்தார்கள் .ஒவ்வொருவரும் பேசப்பேச சிறு பத்திரிகைகளே துயரம் என்கிற உணர்வு எல்லோருக்கும் வந்து விட்டது . 

பிரச்சினைகள் துன்பங்கள் சவால்கள் நெருக்கடிகள் பற்றிப் பேசும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் . தொடர்ந்து ஒரே மேடையில் நான்கைந்து பேர் அதனை வேறுவேறு சொற்களில் வேறு வேறு தொனியில் வேறுவேறு உடல் மொழியில் பேசியதும் அது ஒப்பாரியாக உருப்பெற்று விடுகிறது . அது தீர்வே இல்லாத துயரமாகப் பிறப்பெடுக்கிறது . மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு அன்றைக்கு அந்த உணர்வு தோன்றி விட்டது.பழைய சாக்கை நனைத்துத் தலையில் போட்டது மாதிரி ஆகி இருந்தது அரங்கம்.



என்னைப் பேச அழைத்தார்கள். முதலில் எல்லோருக்கும் ஒரே வரியில் வணக்கம் சொன்னேன் . அதுவே அரங்கத்தில் பலருக்கு ஆறுதலும் நிம்மதியும் தந்திருக்க வேண்டும். தயாரித்துக்கொண்டு போன குறிப்புகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்தேன் ." இத்தனை காலம் நடத்திய கணையாழி பத்திரிகையை இன்னும் ஒருவருக்குக் கை மாற்றிக் கொடுத்தமைக்காக கஸ்தூரி ரெங்கன் வருந்தக்கூடாது . இதில் வருந்துவதற்கு ஒன்றுமேயில்லை. கை மாறினால் தான் கணையாழிக்குப் பெருமை அழகு மங்களம் என்றேன். அரங்கம் மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்தது. எனக்கு அது உவப்பானது தான். அதனினும் நன்கு, மனமாரப் புன்னகைத்துத் தலையாட்டிக் கஸ்தூரி ரெங்கன் என்னைப் பார்த்துத் தன் கண்களை மூடி ஆமோதித்த கணம் இருக்கிறது பாருங்கள் ... அது தான் அந்த நாளின் மகிழ்ச்சி.


வண்டி புறப்பட வேண்டும். அவ்வளவுதான். அதற்குப் பிறகு அது முன்றிலில் ஓடும் வண்டியைப் போலன்று .. மூன்றுலகும் சூழ்ந்தே நன்கு திரியும் விமானத்தைப் போலாகி விடும் . மேடைப்பேச்சு என்பது நினைத்ததைப் பேசுவதற்குப் போதுமான சொற்கள் சிந்தையில் இருப்பதும் அதனை எடுத்துப்பரிமாறுவதும் தான். அதற்கு மேலும் சில நகாசு வேலைகள் தெரிந்திருப்பது மேடைப்பேச்சை மேலும் சுவை உள்ளதாக்கி விடும். 


சிறு பத்திரிகைகள் சந்திக்கும் சவால்கள் பற்றி எல்லோரும் சொன்னதையே நாமும் எதற்குச் சொல்ல வேண்டும் இப்படித் துவங்கினேன் " நாம் எந்தச் சமூகத்தில் எந்தச் சூழலில் இலக்கியம் பேசுகிறோம் எழுதுகிறோம் என்கிற கவனம் இன்றியா இருக்கிறோம்.நீங்கள் குறிப்பிட்ட சவால்கள் துயரங்கள் நமக்கு இருந்தே தீரும் . இருக்காது என்று கருதுவதும் இருக்கலாகாது என்று விரும்புவதும் நமது ஆசைகள் மட்டுமே ... கள் உட்கார்ந்த இடத்திலயே விற்றுப் போகிறது. மோரைத் தெருத்தெருவாக அலைந்து தான் விற்க வேண்டியிருக்கிறது. இந்தச் சமூகச் சூழலில் தான் சிறு பத்திரிகைகள் இயங்க வேண்டி இருக்கிறது . எனவே நமது பொருள் தகுதி உடையதாக இருந்தால் அதைக் கூவி விற்கும் கம்பீரமும் நமக்கு வேண்டும் . கணையாழி மோராக இருந்தால் நான் கூவி விற்றுத் தருவேன். எழுதுவது மட்டும் நமது பணியல்ல எடுத்துரைப்பதும் நமது பணியேயாகும் என்றேன் .


அரங்கம் முழுவதும் மகிழ்ந்து செருக்குடன் கரவொலி எழுப்பி அங்கீகாரம் செய்தது . அரங்கில் எல்லோரும் ஆமோதித்தது எனக்கும் நிறைவைத் தந்தது .பலத்த கரவொலியோடு பேசி முடித்து என் இருக்கைக்குத் திரும்பினேன். 


எனக்குப் பக்கத்து இருக்கையில் சுஜாதா. என்னைப் போலவே உயரம் . ஆனால் தோள்கள் இரண்டும் காதுவரைக்கும் ஏறி இருந்த மாதிரி உட்கார்ந்து இருந்தார் .தனது இரண்டு தோள்களுக்கு இடையில் தன் தலையைப் பிடித்து வைத்துக்கொண்டு இருந்தார் .  எனக்கு அவரது எழுத்து ரொம்பப்பிடிக்கும். வந்து அமர்ந்ததும் மெல்லிய குரலில் நல்லாப் பேசுனீங்க என்றார் . நிச்சயம் கேலி இல்லை . தன் கைகளை நீட்டினார் . முகத்தில் ஒரு இரண்டு சென்டிமீட்டர் அளவான புன்னகையுடன் கைகளை நீட்டினார் . மெலிந்த நீண்ட குளிர்ந்த விரல்கள் . தலை சாய்த்து அவரது பாராட்டுக்களை ஏற்றுக் கொண்டேன் . விரல்களைப் பார்த்தேன் . குண்டூசி விழுந்தால் கூட எடுத்து விடும் வெளுத்த நீண்ட கூர்மையான விரல்கள் . சுத்தமாக நகம் வெட்டித் தூய்மையாக இருந்தன விரல்கள் .



சுஜாதாவைப் பேச அழைத்தார்கள் .


அப்போதும் அந்த அரங்கில் முத்துக்குமார் இருப்பது எனக்குத் தெரியாது ....



மற்றது ... பிறகு   

No comments:

Post a Comment