Friday, May 29, 2020

மானமிகு கல்வி அமைச்சருக்குத் திறந்த கடிதம்-01

Courtesy: Thnathi TV

மாண்புமிகு மற்றும் மானமிகு கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு...
அன்பும் வணக்கமும்.

நேற்றைய தினம் உங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் ஓய்வுபெறும் நிகழ்வொன்றில், நீங்கள் கண்கலங்கிய காட்சிகளை செய்திகளில் பார்க்க நேர்ந்தது.உங்கள் இளகிய மனதை உணர்ந்து என் கண்களும் கலங்கியதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

பிறர் துன்பம் காணப் பொறுக்காத,வெடித்துக் கண்ணீர் சிந்துகிற மனம் தான் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இன்றைக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது.அது உங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.
அறுபது வயதை நெருங்கும் அதிகாரிகளைப் பிரிவதற்கு மனம் இல்லாமல் நீங்கள் அழுதீர்கள் என்றால்,அவர்கள் உங்களுக்காக உங்களோடு உங்களுக்காகவே எப்படியெல்லாம் பணியாற்றி இருப்பார்கள் என்பதை என்னால் உணரமுடிகிறது.

வயது ஏறிய ஆட்களுக்காக வருந்திக் கலங்கும் நீங்கள்,வயது குறைந்த குழந்தைகள் விஷயத்திலும் கருணையோடு இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஜூன் 1ஆம் தேதி முதல் நடைபெறுமென்று முதலில் அறிவித்தீர்கள்.மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்போது ஜூன் 1ஆம் தேதி தேர்வுகள் எப்படி சாத்தியம் என்று சிந்திக்காமலேயே அறிவித்தீர்கள்.அக்கறையுள்ள கல்வியாளர்கள் ஆசிரியர் சங்கங்கள் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் நீங்கள் பொருட்படுத்தவில்லை.ஆனால்,ஜூன் 1ஆம் தேதி தேர்வுகளை நடத்த முடியாதென்று உங்களுக்கும் உங்கள் துறையில் உள்ள அறிவிற்சிறந்த அதிகாரிகளுக்கும் தெரிந்துவிட்டதால்,இப்போது தேர்வுகளை ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிரீர்கள்.
இப்போதும் மற்றவர்கள் கேட்டுக்கொண்டதற்காக நீங்கள் தேதியை மாற்றவில்லை.நீங்களும் உங்கள் துறை சார்ந்த அதிகாரிகளும் கூடி எடுத்த அறிவார்ந்த முடிவு இது.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை ஜூன் 15ஆம் தேதியே நடத்தியாக வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள்? என்ன அவசரம்?எதற்கு அவசரம்? உங்கள் உத்தரவை நீங்கள் எப்படி நியாப்படுத்துகிறீர்கள்? அல்லது நீங்கள் முன்வைக்கும் நியாமான காரணங்கள் யாவை? உங்கள் துறையின் இந்த அறிவார்ந்த முடிவின் அறம் சார்ந்த பின்னணி எது?

நீங்கள் உத்தரவிட்டபடி பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி நடைபெறாவிட்டால்...
எந்தக் கடல் கரையேறி வந்துவிடும்?
எந்த மலை தகர்ந்து தரைமட்டமாகிவிடும்?
எந்தச் சாப்பாட்டில் மண் விழுந்துவிடும்?
யார் வருமானம் குறைந்துவிடும்?
இந்த நான்கு கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு விடையளித்து நீங்கள் தேர்ச்சி பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டுமெனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஊரடங்கு முடிந்து பொதுப் போக்குவரத்து செயல்படத்துவங்கி கொரோனா அச்சம் ஓரளவேனும் விலகி,பள்ளிகள் திறந்து இயங்க ஆரம்பித்து,குறைந்தது 15 நாட்கள் குழந்தைகள் ஆசிரியர்களின் அரவணைப்பில் இருந்த பிறகே பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெற வேண்டும்(ஜூன் 15ஆம் தேதி கூட அல்ல) என்பதற்கான நியாங்களை,அடுத்து உங்களுக்கு எழுதும் கடிதத்தில் விரிவாக எழுதுகிறேன்.

அதற்கு முன்னதாகவே, என் முந்தைய கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு விடையளிக்க வேண்டுமெனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


தங்கள்
உண்மையிலும் உண்மையுள்ள,
பாரதி கிருஷ்ணகுமார். 

பின் குறிப்பு:
இக்கடிதத்தைப் படிக்கும் பொதுமக்களுக்கு...
1.10ஆம் வகுப்பில் படிக்கும் குழந்தைகள் எதுவும் எனக்கில்லை.
2.10ஆம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளை என் குழந்தைகளாகக் கருதுகிறேன்.     
3.பெற்றால் தான் பிள்ளையா? என்றொரு திரைப்படத்தில் M.G.R. நடித்திருப்பதை கல்வி அமைச்சருக்கும் மற்றவர்களுக்கும் நினைவூட்டுகிறேன்.
4.எவனுக்கோ வந்த துன்பம் தானே என்று சும்மா இருந்தால்,நமக்குத் துன்பம் வரும்போது தோள் கொடுக்க யாரும் இருக்கமாட்டார்கள்.
5.ஒய்வு பெறும் அதிகாரிகளை நினைத்துக் கண்ணீர் வடித்த கல்வி அமைச்சரைப் பார்த்தாவது நாமெல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்.
6.மற்றதெல்லாம் அடுத்த கடிதத்தில்.

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 17

என்.சங்கரய்யா @ N.S 

அம்மா இறந்த இருபத்தி இரண்டாவது நாள் என் வாழ்வின் மிக முக்கியமான ஒரு நிகழ்வு நடந்தது.   

 பின்னாளில் நான் பணிக்குச்சேர்ந்த பாண்டியன் கிராமவங்கியில் , பணியில் சேர்வதற்கான நேர்முகத்தேர்வு சாத்தூரில் நடந்தது .


அதே வேலைக்கான எழுத்துத் தேர்வு, ஓராண்டுக்கு முன்பே  மதுரையில் நடந்து முடிந்திருந்தது. அதில் நான் கலந்துகொண்டதே அம்மாவின் சந்தோசத்திற்காக தான் . எனவே , அம்மாவின் சந்தோசத்தை நான் நிறைவேற்ற வேண்டும் என்றும் , அதனால் நேர்முகத்தேர்வுக்குப் போகவேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டேன். அதனால் போனேன் . ஒரு வருடம் எந்தத் தகவலும் இல்லை. நானும் அதை மறந்து போனேன். 



அம்மாவின் மரணத்திற்கு முன்பாகவே நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றத் தொடங்கி இருந்தேன் . அப்போது கட்சியின் நகரச் செயலாளர் ஆகத் தோழர் எம் . முனியாண்டி இருந்தார். M.M. என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட , அருமையான தோழர் . கட்சியின் இளைஞர் பிரிவு அப்போது சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி SYF என்று அழைக்கப்பட்டது . அதுவே இன்றைய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் DYFI. கட்சியில் சேருவது என்பது நானே எடுத்த முடிவு. எனவே,நானாகவே மதுரையில்  மண்டையன் ஆசாரி தெருவில் இருந்த கட்சி அலுவலகத்திற்குப் போனேன். 


நான் நேரே கட்சி அலுவலகம் போய் தோழர் M.M. அவர்களைச் சந்திப்பது என்கிற முடிவை சௌபாவும் , நண்பர் தங்கமாரியும் மட்டுமே அறிந்து இருந்தார்கள் . சௌபாவுக்குத் தோழர் M.M. உடன் நல்ல நெருக்கமும் தோழமையும் இருந்தது . வேறு யார் பரிந்துரையும் இன்றி நீங்கள் நேரே அவரைப் பார்ப்பது நல்ல பயன் தரும் என்று இருவருமே எனக்குச் சொன்னார்கள். அதன்படியே நான் அவரைச் சந்தித்தேன். அது சிறந்த பலனைத் தந்தது .


அதற்குப்பிறகு நானும் சௌபாவும் இணைந்து நிறைய நிகழ்ச்சிகளில் பேசிக்கொண்டே இருந்தோம் . சந்தித்துக் கொண்டே இருந்தோம் . 


அம்மாவின் இழப்பில் இருந்து என்னை மீட்டு எடுக்க சௌபாவும் , குணசேகரும் ஆற்றிய பங்களிப்பை என் வாழ்நாளின் இறுதிவரை நான் மறக்கமாட்டேன் . இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் என்னோடு இருந்தார்கள் . நான் துன்பக்கேணியில் இருந்து கரையேற இருவரும் தங்கள் கரங்களைத் தந்துகொண்டே இருந்தார்கள். ஆனால் இருவரின் இறுதிச் சடங்கிலும் பங்கேற்க இயலாத , ஒரு சபிக்கப்பட்ட வாழ்க்கைச் சூழல்  எனக்கு அமைந்தது. 


எங்கள் சந்திப்பு மையமாகக் கட்சி அலுவலகம் இருந்தது . என்னைச் சந்திக்க வேண்டியே குணசேகர் கட்சி அலுவலகம் வந்து , கட்சிக்காரன் ஆனான் . சௌபா ஏற்கெனவே கட்சியில் இருந்தான். 


கட்சி எங்களை அனுப்பிவைத்த பல நிகழ்ச்சிகளில்,அரசியல் வகுப்புகளில் சில விசயங்களைத் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டே இருக்கும் நிலை வந்தது . அது எனக்கே சோர்வும் அலுப்பும் தந்தது.  புதிய செய்திகளைப் பேசவேண்டும் என்கிற விருப்பம் நிறையப் படிக்க வைத்தது . என்றபோதும் , சில செய்திகளைப் பேசித்தான் ஆக வேண்டும் என்கிற சூழல் இருந்துகொண்டே இருந்தது . சில தோழர்கள், பேசுனதையே எதுக்குப் பேசுறீங்க என்று கேட்டு நிம்மதியை அழித்தார்கள் .  


எத்தனை விதமான களப்பணிகளைச் செய்தபோதும்,பிரச்சாரம் என்பது மிகமிக முக்கியமான களப்பணிகளில் ஒன்று  என்கிற நுண்ணறிவு எனக்கிருந்தது.அதைப் பலரது வாக்குமூலங்களைப் படித்து அறிந்து இருந்தேன்.மேடையில் பேசுவது தவிர, அனைத்துவகையான களப் பணிகளையும் எவ்வித மனத்தடையும் இன்றிச் செய்யும் பண்பும் எனக்கு இயல்பிலேயே வாய்த்து இருந்தது.இதுகுறித்து எனக்குப் பெருமிதங்கள் எப்போதும் உண்டு. 


ஆனபோதும், மனித மனங்களை வெல்லும் மாயக்கலையான மேடைக்கலை குறித்து ஆழ்ந்த அக்கறையும் கவனமும் செலுத்தினேன். எவ்வளவு கூட்டங்கள் பேசினேனோ , அவ்வளவு கூட்டங்கள் கேட்டேன். கலை இலக்கியம் அரசியல் சார்ந்து, பேதமில்லாமல் எல்லா ஆளுமைகளின் உரைகளையும் கேட்டேன்.எஞ்சிய நேரமெல்லாம் படித்தேன்.இந்தக் காலம் முழுவதிலும் துணையாக, நட்பாக , உறவாக வந்து கொண்டே இருந்தான் சௌபா. ஆனால் இந்தக் கூறியது கூறல் பற்றி மட்டும் குழப்பமே நீடித்தது. கூறியது கூறல் குற்றம் என்றார்கள் நான் அறிந்த தமிழ் ஆசிரியர்கள்.


ஒருநாள் மண்டையன் ஆசாரி தெருவில் இருந்த கட்சி அலுவலகத்தில் நானும் சௌபாவும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். பிற்பகல் நான்கு மணி இருக்கும். தோழர். சங்கரய்யா உள்ளே வந்தார். வந்ததும் எங்கள் இருவரோடும் உரையாடத் தொடங்கினார் . ஏதோ , பாதியில் நிறுத்திவிட்டுப் போன உரையாடலைத் தொடர்வது போலத் தொடர்ந்தார் . " நெறைய கூட்டங்கள் , வகுப்புகளுக்கு எல்லாம் போறீங்கன்னு கேள்விப்பட்டேன். நல்லது. நெறையப் படிக்கணும். படிக்கிறத நிறுத்தக்கூடாது"என்று சொல்லிக்கொண்டே போனார். எப்போதும் பேச ஆரம்பித்ததும் குரலை உச்ச ஸ்தாயியில் துவங்கி முடிக்கிறவரை அதே உச்ச ஸ்தாயிலேயே பேசுவது அவரது வழக்கம் . தான் பேசும் எல்லாச் சொற்களுக்கும் சமமான மதிப்புத் தருவது போன்ற பேச்சு அது.


நான் மெதுவாகக் கேட்டேன்," பேசுற விசயத்தையே பேசுறோம்னு தோழர்கள் சொல்லுறாங்க .. அத எப்பிடி தவிர்க்கிறது?" 


N.S.என்று எல்லோரும் இன்றும் மதிப்புடன் அழைக்கும் தோழர் சங்கரய்யா, தான் அமர்ந்த நாற்காலியில் கொஞ்சம் தன்னை இடம் மாற்றி அமர்த்திக் கொண்டார். தலையை சற்று முன்புறமாகச் சாய்த்துக்கொண்டு கண்களுக்குள் பார்த்துப் பேசத் துவங்கினார் .


"நிறையப் படிச்சா , நிறையப் புது விசயங்களைப் பேசிக்கிட்டே இருக்கலாம்.அதுக்காக எல்லாமே புதுசாப் பேச முடியுமா? ஏற்கெனவே இருக்குற சமூகப் பிரச்சனைகளை எப்பிடிப் பேசாம இருக்குறது?தீர்க்கப்படாத பிரச்சனைகளைப் பேசாம இருக்க முடியுமா? அதப் பழைய விஷயம்னு பேசாமவிட்டா என்ன ஆகும் ?அத எப்பிடி தீக்குறது ? அது தீர்ற வரைக்கும் அதப்பத்திப் பேசணுமா இல்லியா? என்ன கதையா சொல்லுறோம்?நேத்து சொன்ன கதைய இன்னைக்குச் சொல்லக்கூடாதுன்னு சொல்லுறதுக்கு ? எது புதுசு ? எது பழசு ? யாரு தீர்மானிக்குறது?


கேள்விகளாகப் பொரிந்தார் N.S.

ஒவ்வொரு கேள்வியும், ஒரு விடையாக எனக்குப் பாதை திறந்து கொண்டே இருந்தது.

" இல்ல... நம்ம தோழர்கள் சில பேரு"... என்று நான் சொன்னதும் , தனது விரிந்த கையை உயர்த்தி என்னை நிறுத்தச் சொன்னார். ஒரு இளம் புன்னகையுடன் தொடர்ந்தார். "நம்ம தோழர்கள் ஆர்வத்துல , எல்லாக் கூட்டத்துக்கும் வந்துருவாங்க...அவங்க சொல்லுறதப் பொருட்படுத்த வேண்டியதில்ல ..ஏன்னா  பொதுக்கூட்டம் மக்களுக்கானது.. நம்ம தோழர்களுக்கு மட்டுமில்ல.. அரசியல் வகுப்பு எடுக்கும்போது வேணா அவங்க சொல்லுறத நினைவுல வச்சுக்கலாம்... அப்பக் கூட சொல்ல வேண்டிய  விசயங்களை திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருக்கணும் . சோர்வில்லாமச் சொல்லணும் . புதுசாச் சொல்லுறமாதிரி சொல்லணும் . ஒரு பிரச்சனைய அது தீர்ற வரைக்கும் பேசணும். உயிரோட்டத்தோட பேசணும். வறுமை, பசி , வேலையில்லாத் திண்டாட்டம், இதெல்லாம் பழசுன்னு பேசாம இருப்பமா? ஏகாதிபத்திய எதிர்ப்பு , விவசாயிகள் நெசவாளர்கள் பிரச்சனை , மத ஒற்றுமை, தீண்டாமை,மாதர் முன்னேற்றம் ... இப்பிடி எத்தனை இருக்கு .. இதெல்லாம் பழசுன்னு பேசாம இருக்கலாமா ?


இந்த நாட்டுல சுதந்துரத்துக்கான போராட்டம் இருநூறு வருஷம் நடந்துச்சு... இருநூறு வருஷமும் சுதந்திரம் தான் ... அதைத்தான் பாரதியார் "எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு"ன்னு பாடினார். ஒரே topic  தான்... bore அடிக்குதுன்னு topic  மாத்திக்கல..மாத்தி இருந்தா சுதந்திரம் கெடச்சு இருக்காது" ன்னு சொல்லி நிறுத்திப் புன்னகைத்தார் ."ஒரே ஊர்ல , அடுத்தடுத்து பேசும்போது வேணா கவனமாப் பேசணும் .. சொன்னதையே சொல்லிப் பேரக் கெடுத்துக்கக் கூடாது.. ஒன்னு விசயத்த மாத்தணும் ... இல்ல ஊர  மாத்தணும். ஏற்கெனவே ஒரு ஊர்ல பேசுன விசயத்த இன்னொரு ஊர்ல பேசும்போது கூட அதப் புதுசாப் பேசுற உணர்வோடப் பேசணும் ... சுதந்திரம் வேணுமுன்னு எப்பப் பேசுனாலும்,சோர்வில்லாமத் தான பேசணும்" ...


அவரது இடது கையில் உட்புறமாக வைத்துக்கட்டி இருந்த கடிகாரத்தைப் பார்த்தார் . "வேறென்ன " என்றார். இருவரும் ஒன்றுமில்லை என்பதுபோல எழுந்து நின்றோம். விரைந்து வெளியில் புறப்பட்டுப் போனார். எங்களோடு பேசுவதற்காகவே அவர் வந்துவிட்டுப் போவதாக உணர்ந்தேன். என் மேடைக்கலையின் ஆற்றலை உயர்த்திய பெருமை உணர்ச்சி ஏதும் இன்றி போய்க்கொண்டே இருந்தார் எங்கள் அன்புத் தலைவர் தோழர் N S.                

சில வாரங்களிலேயே, அதே அலுவலகத்தில் அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. 

அப்போது சந்தித்தபோது...


என்ன நடந்தது?


அப்புறம் சொல்லுகிறேன்...



-பாரதி கிருஷ்ணகுமார்.




Thursday, May 28, 2020

யுகங்களைக் கடந்தும் ...


விடைகளற்ற வினாக்களும் 
வினாக்களற்ற விடைகளும்
பொருதி,வீழ்ந்து,
துடிக்குமொரு போர்க்களத்தில்,
புறமுதுகில் குத்துப்பட்டு
மரணித்துக் கிடக்கிறேன் நான்.

களத்தில் எனைத் தேடி வந்து,

புறமுதுகின் காயம் பார்த்து,
புறமுதுகு கொண்டானோ மகனெனக் கருதி,
பருத்துச் சரிந்து,
பழுத்த மாம்பழமெனக் கனிந்த,
எனக்கு அமுதூட்டிய,
உன் மார்பகங்களை,
அவசரப்பட்டு
அறுத்துக்கொண்டு விடாதே அம்மா.

இறந்த பின்னும் உன்னோடு பேசும்

என் சொற்களைக் கேள்.
இது எதிரிகளின் வெற்றியன்று.
கோழைகள் நிகழ்த்திய துரோகம்.
என்னோடிருந்தவனின் ரேகை கத்தியின் பிடியில் காணக் கிடைக்கும் அம்மா..

ஆழமான காயம் முதுகில் கொண்டும்,

வீரனாகத்தான் இறந்திருக்கிறேன்.
வீரனாகவே இருந்திருக்கிறேன்.
இந்தக் களம் வேறு.
காலம் வேறு.
காயங்களும் வேறு.

யுகங்களைக் கடந்தும்

நீ மட்டும் 
எப்போதும் 
அம்மாவாகவே இருக்கிறாய்.

-ப்ரகலாதன்.    

(பாரதி கிருஷ்ணகுமார்)

Monday, May 18, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 15


கலைச்செல்வி: படித்துறை
(திருப்புவனம் அல்ல) 

அஸ்தியைக் கரைத்தோம்.மண் குடம் கொஞ்ச தூரம் நீரில் அசைந்தோடி,தண்ணீர் குடித்துத் தண்ணீருக்குள் மூழ்கியது.

நானும் சௌபாவும் குணசேகரும் ஒன்றாக இருந்தோம்  . கொஞ்சம் தயங்கித் தாமதித்துக் கரையேறினோம்  . அப்பாவும் நெருங்கிய உறவினர்களும் கொஞ்சம் முன்னால் நடக்க, தலைகள் மறைந்ததும் எங்களைப் படித்துறைப் படிக்கட்டுகளில் உட்காரச் சொன்னான் குணசேகர். கொஞ்சம் நடுத்தர வயதில் இருந்த அந்தப் பிராமணரின் கைகளைப் பிடித்து "நீரும் உக்காரும் சேர்ந்து போகலாம் "என்று அவரையும் உட்காரவைத்தான் . அவர் அச்சத்துடன் அமைதியாக அமர்ந்து கொண்டார் .அதுபோல எதையாவது செய்துகொண்டே இருப்பது அவனுக்குப் பழக்கம்.  நீங்கள் கற்பனை கூடச் செய்துவிட முடியாத ஒன்றை , இயல்பாகச் செய்வது அவனது பண்புகளில் ஒன்று. எதுக்கு? என்றேன் நான் . அந்த ஆளு இங்க இருந்தா நம்மளத் தேட மாட்டாங்க என்று அவருக்கும் கேட்கிற சத்தத்தில் சொன்னான் . சிகரெட் பாக்கெட்டைத் திறந்து,  எனக்கும் அவனுக்கும் சேர்த்து இரண்டு சிகரெட்டுகளை எடுத்து , இரண்டையும் தன் வாயில் வைத்துப் பற்ற வைத்தான் . சௌபா இந்தக் காட்சியை சபையில் பலமுறை  பார்த்திருக்கிறான். அந்த பிராமணர் திகைத்துப் போனார் . அக்கம்பக்கம் இருந்த ஒன்றிரண்டு பேர்களும் திகைத்து, மெல்லிதாகச் சிரித்துக்கொண்டே போனார்கள் . பற்ற வைத்ததும் ஒன்றை எடுத்து எனக்குத் தந்தான் . நாங்கள் இருவரும் புகைக்க ஆரம்பித்தோம் . ஒரு நொடி கூட இடைவெளி இல்லாமல் அந்தப் பிராமணரிடத்திலும் , சிகரெட் பாக்கெட்டை நீட்டினான் . அவர் இரண்டு கரங்களையும் குவித்துத் தலைதாழ்த்திக் குணசேகரைக் கும்பிட்டார் . சேகர் அதேபோல் திரும்பக் கும்பிட்டான் . அதில் கேலியோ , பகடியோ எதுவும் இல்லை . நான் ஆழ்ந்து புகைபிடிக்கத் தொடங்கி இருந்தேன். ஆறு கலங்கலாக ஓடிக்கொண்டிருந்தது . என் மனம் போலவே ...

" நான் சொல்றேன்னு தப்ப நெனச்சுக்காதீங்கோ ... உங்க தாயாருக்கு நல்ல கொடுப்பினை இருக்கு ... புண்ணியாத்மா " என்றார் அந்தப் பிராமணர். 

அம்மா மாபெரும் புண்ணியாத்மா என்பதை நானறிவேன் . யார் எப்போது வந்தாலும் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வயிறார உணவு படைத்தவள் அம்மா . சமைப்பதில் மட்டுமல்ல . பக்கத்தில் நின்று பார்த்துப்பார்த்துப் பரிமாறுவதில் அம்மா நுட்பமான மனுஷி . குறைவாகக் கிள்ளிக் கிள்ளி  வைக்காமல், ரொம்பத் தள்ளித் தள்ளி முகத்தில் அடித்து விடாமல் , பரிமாறுகிற கலை அவள் கைகள் மட்டுமே அறிந்த அனுபவ நுட்பம் . நேற்றுக் கூட அனுப்பானடியில் இருந்து கீழத்தெரு முழுவதும்  திரண்டு அம்மாவுக்கு அஞ்சலி செலுத்த வந்தது . கீழத்தெரு ஊர்த்தலைவர் இருளாண்டி , அம்மாவின் உடலுக்கு முன்னால் இரண்டு கைகளையும் நீட்டி , " அன்னலெட்சுமி அன்னலெட்சுமி " என்று கூவி அரற்றி அழுதது கண் முன்னே வந்தது . இந்தப் பிராமணர் என்ன சொல்லுகிறார் என்று அறிய அவர் முகம் பார்த்தேன் . சௌபா எனக்கு மிகஅருகில் நெருங்கி அமர்ந்து அவர் சொல்லுவதைக் கேட்கத் தொடங்கினான்.

அவர் தொடர்ந்தார் ," நல்ல வசதி இருக்கிறவா அஸ்தியைக் கரைக்க காசிக்குப் போய் கங்கையில கரைப்பா ... இல்ல இப்படியே ராமேஸ்வரம் போய் அக்கினி தீர்த்தக் கடல்ல கரைப்பா... ரொம்ப ஏழைப்பட்டவா  , மயானத்துக்குப் பக்கத்துலயே ஏதாவது குளம் குட்டைன்னு பாத்துக் கரைச்சுப்பா ... நம்மள மாதிரி மிடில் கிளாஸ்ல இருக்குறவா , கொஞ்சம் நுட்பமானவா இங்க தான் வருவா ... எத்தனை தூரம் வைகை ஓடி வர்றா ... ஆனா இங்க கரைச்சாத்தான் விஷேசம் " என்று நிறுத்தினார் . நாங்கள் மூவரும் அவரையே பார்த்தோம் .

"இந்த எடத்துக்கு என்ன பேரு ? திருப்புவனம் ... ஒரு காலத்துல இந்த இடம் எல்லாம் பெரிய காடு . பெரிய பெரிய மரங்கள் அடர்ந்து இருந்த படித்துறைன்னு எங்க பாட்டனார் சொல்லி இருக்கார் .. இப்ப சும்மா பேருக்கு நாலு மரம் நிக்குது , வனம் ன்னாலே காடு தான ... அதுலயும் வெறும் வனமில்ல கேட்டுக்கோங்க .. திருப்புவனம் ... அதாவது இந்த உலகத்துக்கு வந்த எல்லா ஜீவனும் ஒரு நாள் பகவான் கிட்டத் திரும்பப் போய்டறது. அது தானே நியதி .. ஆனா பாருங்கோ .. சில ஆத்மாக்கள் அந்தக் கர்ம காலம் முடியாம பூமியில அலஞ்சுட்டுத் தான் , அப்புறமா பகவான்கிட்ட போறது ... அது சாந்தி ஆகாமத் திரிஞ்சுட்டுத்தான் போகும் . அப்படித் திரியப்பிடாதுன்னு தான் இந்த சாஸ்திரம் சடங்கு எல்லாம் நம்மப் பெரியவா உண்டு பண்ணி இருக்கா ... இதுல ஒரு விஷேசம் என்னன்னா " என்று நிறுத்தினார் . 

சேகர் ஏதாவது சொல்லிவிடுவானோ என்கிற பதட்டம்  எனக்கு இருந்தது . ஏனெனில்  எதுவும் எப்போதும் நடக்கலாம் என்பது எங்கள் எல்லோருக்குமான அனுபவம் . அந்த பிராமணருக்கு நல்லநேரம் . வழக்கத்திற்கு மாறான அமைதியோடு சேகர் இருந்தான் .

"இந்த இடம் தான் விஷேசம் .. சாதாரண வனமில்லே .. திருப்புவனம் ... இந்த லோகத்துக்கு வர்ற எல்லா ஆத்மாக்களையும் திருப்பி அனுப்புற வனம் .. அதுனாலதான் இந்த எடத்துக்கு திருப்புவனம் னு பேரு .. அது மட்டுமில்ல . இந்த எடத்தப் புஷ்பவனத்துக் காசின்னும் சொல்லுவா ... இங்க அஸ்தியைக் கரைச்சுட்டா அந்த ஆத்மா அப்பவே பகவான்கிட்ட போயிடுறது ... திரும்பாது அலையாது .. சாந்தி ஆயுடறது " என்றபடியே எழுந்து கொண்டார் . " வாங்கோ போலாம் " என்றபடியே எங்களுக்காகக் காத்திராமல் நடந்துபோக ஆரம்பித்தார் . 

எனக்கு அதிர்ச்சியாகி விட்டது . நான் இந்த வார்த்தைகளை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை . நான் சௌபாவைத் திரும்பிப் பார்த்தேன் . அவனது கண்களில் ஒரு சிறிய கலக்கம் இருந்தது . 

நான் சௌபாவிடமும் , சேகரிடமும் சொன்னேன் .

என்ன சொன்னேன் ?


அப்புறம் சொல்லுகிறேன் 

- பாரதி கிருஷ்ணகுமார். 


Friday, May 15, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 14

தத்தளிக்கும் தத்தனேரி மயானத்திற்கு ...
தத்தனேரி மயானம்,மதுரை.




அம்மா உடல் எரியூட்டப்பட்ட மறுநாள் காலை தத்தனேரி மயானத்திற்கு அஸ்தி சேகரிக்கப் போனோம் . சௌபா அங்கே காத்திருப்பதாகச் சொல்லி இருந்தான் . 

தத்தனேரி பொது மயானம். மதுரையின் மிகப்பெரிய மயானம் . அது பற்றி ஆனந்த  விகடனில் ஒரு சிறப்புக்கட்டுரையை சௌபா எழுதி இருக்கிறான் . சிறந்த கட்டுரை . அந்த வருடம் எனக்கு நினைவில்லை . ஆனால் அந்தக் கட்டுரையைப் படித்ததும் நான் சௌபாவுடன் பேசினேன் என்பது நினைவில் இருக்கிறது . 2003 ஆம் ஆண்டு சுதந்திரதின சிறப்பிதழுக்காக சௌபா அதை எழுதினார் என்று இந்தத் தொடரின் முந்தைய பதிவில் தம்பி இளங்கோவன் அன்பன் பதிவிட்டு இருக்கிறார் . அந்தக் கட்டுரையைப்  படித்ததும் , நான் சௌபாவோடு பகிர்ந்து கொண்ட செய்திகளை இப்போது சொல்லுவது பொருத்தமானது.


பள்ளி இறுதி வகுப்பில் படிக்கிறபோதே, நான் காதலில் நின்றேன் . விழுந்தேன் என்று சொல்லுவது எனக்குச் சம்மதமில்லை . "You should not fall in love ; You must stand in love "  என்று யாரோ எனக்கு எப்போதோ சொன்னதை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன் .


"அன்பெனும் பெருவெள்ளம் இழுக்குமேல் அதனை யாவர் பிழைத்திட வல்லரே ?

முன்பு மாமுனிவர் தமை வென்றவில் 
முன்னர் ஏழைக் குழந்தை என் செய்வனே ?"
என்று பாரதியார் தன் பிள்ளைக் காதல் பற்றிப் பாடுகிறார்.

காதல் உடலுக்குத் தருகிற பரவசம் முக்கியமே இல்லை . அது மனதுக்குள்ளும் அறிவிற்குள்ளும் நிகழ்த்துகிற  ரசவாதமே அற்புதமானது. அது எல்லாக் கருப்பு வெள்ளைப் படங்களையும் வண்ணமுறச்  செய்து விடுகிறது . எல்லா வண்ணப் படங்களையும் ஓவியங்களாக்கி விடுகிறது . ஒரு அரைவட்டமான வானவில் தலைக்குமேல் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். வாழ்வில் முதன்முறையாக இரவு பகலாகி , பகல் இரவாகும். ஒரு பூந்தூறல் நீங்கள் போகிற பாதை எங்கும் எப்போதும் பொழிந்து கொண்டே இருக்கும் . களங்கமற்ற அந்த இளம் உயிர்களின் பார்வையின் பரிசுத்தம் பற்றி மட்டுமே பத்துப் பக்கங்கள் எழுதலாம்.


அப்போது எங்கள் வீடு மதுரையின் தென்கரையில் இருந்தது . நாங்கள் இருவரும் பள்ளி முடித்து கல்லூரிக்கு வந்திருந்தோம். ஆற்றைக் கடந்து வடகரைக்கு வந்தால் நான் படித்த அமெரிக்கன் கல்லூரி . வடகரையிலேயே, மேற்கு நோக்கி ஏழு கிலோமீட்டர் போனால் அவள் படித்த கல்லூரி . அவள் வீடும் வடகரையில் இருந்தது. காலையில் சந்திக்க இயலாது . எனவே மாலையில் கல்லூரி முடிந்ததும் சைக்கிள் பறக்கும் . ஆற்றின் வடகரை வழியாக , தத்தனேரி மயானத்தைக் கடந்து தான் அந்தப் பெண்கள் கல்லூரிக்குப் போகவேண்டும் . செல்லூர் சாலை இளம்பிள்ளை வாதம் பிடித்த கால்போல , ஓரிடத்தில் வலதுபுறமாக  வளைந்து , ரெயில்வே கேட்டில் முட்டி நிற்கும் . அங்கிருந்து லேசாக மேடேறும் சாலையின் வலதுபுறத்து முதல் வாசல் தத்தனேரி மயானம். இப்போது போல மின்மயானமோ , உயர்ந்த புகைபோக்கிகளோ அப்போது இல்லை .  பொது மயானம் என்றதும் எல்லாமே பொது என்று மயங்கி விடாதீர்கள் . சாதி வாரியாகத்தான் பிணம் எரிப்பார்கள் . சாதிப்பிணம் எப்போதும் உயிர்த்திருந்த மயானம் தான் அது . " வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே "... என்று ,மருதகாசி என்னும் மாபெரும் கவிஞன்   எழுதிய கவிதையைப் பொய்யாக்கிய போலிகள் நாம். தன்தரையில் தான் பிணங்களை எரிப்பார்கள் .அந்தப் புகையும் தரையோடு தரையாகத்தான் பரவிக்கொண்டே இருக்கும்.  சுடலையில் இருந்து வரும் நிணம் கருகும் நாற்றம் கடந்து போக இயலாதது . எனவே ரெயில்வே கேட் வந்ததும் சட்டைக் காலர் மூக்குவரை உயர்ந்துவிடும் . மூக்கு மார்பு வரைக்கும் புதைத்துக்  கொள்ளும் . இல்லாத வேகத்தில் விரைந்து கடந்து போய்விடுவேன் . ரெயில்வே கேட் மூடிவிட்டால் இன்னும் கொடுமை . சைக்கிளைத் தலைக்குமேல் தூக்கிக்கொண்டு கடந்து ஓடுவேன் . சைக்கிளைத் தூக்க முடியுமா என்று காதல் அனுபவம் இல்லாதவர்களே கேட்பார்கள். அருவருப்போடும் அவசரத்தோடும் மயானத்தைக் கடந்து போவேன். இங்கும் , நிண வாடையின் அருகிலேயே மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்கிற வியப்போடும் தான் திரும்பிவருவேன் .


அங்கு போனதும் , காத்திருக்கும் அவளைப் பார்ப்பதும் , அவள் பேருந்தில் ஏறுகிறவரை காத்திருந்து , பார்த்திருந்து , பேருந்து புறப்பட்டதும் திரும்பிவிடுவேன் . ஒரு வார்த்தை பேச இயலாது . யாராவது மாணவி யாராவது ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தால், அதைக் கல்லூரி முதல்வரின் கவனத்துக்கு உடனே கொண்டுசேர்க்கும் பெண் உளவாளிகள் நிறைய நியமிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் மாணவிகளிடையே பரப்பப்பட்டு இருந்தது . எனவே நாங்கள் பேசுவதற்கு வேறு இடத்தைத் தேர்வு செய்கிறவரை நயனபாஷை தான் . அதுபோதாதா? காதலுக்கு மொழி எதற்கு? மொழிக்கும் முந்தைய காதலுக்கு மொழி எதற்கு ?

அப்படியாகக் கடந்து போகவும் வரவும் நான் கஷ்டப்பட்ட , அருவருத்த தத்தனேரி மயானம் நோக்கிப் போய்க்கொண்டு இருந்தேன். முதல்நாள் தான் அம்மாவை அங்கு எரியூட்டி இருந்தது. இரண்டாம் நாள் பாலூத்தும் சடங்கு.எங்கள் வாகனம் மூடிக்கிடந்த ரெயில்வே கேட்டில்நின்றது.

காற்றில் நிணவாடை மிதந்து கொண்டே இருந்தது. ஆனால் ஏதும் துர்நாற்றமில்லை. காற்றில் அம்மாவின் வாசனையைத் தேடித் தவித்தது நாசி . ஜாதிப்பூவும் மஞ்சளும் குங்குமமும் தனது வியர்வையும் கலந்த வாசனையில் இருந்து வேறு ஒரு வாசனைக்கு அம்மா மாறி இருக்கிறாள் என்பதை உணர்ந்த நொடியில் ஆழ்ந்து சுவாசிக்கத் தொடங்கினேன் . என் மார்புக்கூடு முழுவதும் அந்த நறுமணத்தை நிரப்பிக் கொள்ளத் தவித்தேன். அந்நியமான உடலாக இருந்தால் துர்நாற்றமாகவும் , அந்நியோன்யமான உடலாக இருந்தால் நறுமணமாகவும் மாறும் விந்தையை அன்றைக்குத்தான் உணர்ந்தேன். ஏனோ அறிவெங்கும் வெட்க உணர்ச்சி பரவிக் குமைந்தேன் .

மார்புக்கூடு விரிந்தது . பலமுறை பலமுறை சுவாசித்து மார்பெங்கும் அந்தப் புகையின் நறுமணத்தை நிறைத்தேன். அதற்குப்பிறகு இன்றுவரை தத்தனேரி மயானத்தை விரைந்து கடந்ததே இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே மயானத்தில் தான் அப்பாவும் எரியூட்டப்பட்டார்.

இப்போதெல்லாம் சென்னையில் இருந்து மதுரைக்கு ரெயிலில் வந்தால் , திண்டுக்கல் தாண்டியதும் எழுந்துகொள்ளுவேன். மதுரை வரக் காத்திருப்பேன். மதுரையைத்  தொடுவதற்கு முன்னால் வைகை ஆற்றுப்பாலத்திற்கு சற்று முன்னதாக  ரயிலின் மேற்குப்பக்க கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு நின்று கொள்ளுவேன். தொலைவில் மின்னொளியில் தத்தனேரி மயானம் ஜொலிக்கும். மின்னொளியை எப்போதும் புகைசூழ்ந்து இருப்பதாகவே எனக்குத் தெரியும். மணம் மாறிய அம்மாவின் புகை;அப்பாவின் புகை. மின்விளக்கிற்கு இடது புறத்தில் , சற்றுத் தொலைவில் நவீன மின்மயானத்தின் கருத்த உயர்ந்த புகைபோக்கி . தலையில் இடி விழுந்த பனைமரம் போல நிற்கும். மேற்கில் இருந்து ரெயில் மீது மோதும் காற்றை நிறையச் சுவாசித்து நெஞ்சமெல்லாம் நிறைத்துக் கொள்ளுவேன். அந்த மணம் அற்புதமானது.

வெந்து சாம்பலாகி இருந்தாள் அம்மா . முதல்நாள் பார்த்தபோது உணர்ந்தேன் .. இறந்து கிடந்தது அம்மாவே அல்ல; அச்சு முறிந்து கிடந்த அப்பாவின் அதிகாரம் என்று ...
இப்போது உணர்ந்தேன் .. எல்லா அதிகாரமும் ஒருநாள் சாம்பலாகும் என்று......

பாலூத்தி , நீராத்தி மண் கலயத்தில் அம்மாவைச் சேகரித்துக்கொண்டு திருப்புவனம் போனோம்.சௌபா , முரளி , குணசேகர் என மூன்று பேர் உடன் வந்தது நினைவில் இருக்கிறது . நாற்பத்தியொரு ஆண்டுகளுக்குப் பின் இதனை எழுதுகிறபோது நடந்தது எல்லாம் காட்சியாக விரிகிறது . உடன் வந்த வேறு சிலர் பற்றியும் எனக்கு நினைவிருக்கிறது . ஆனால் மனக் கண்ணில் விரியும் காட்சிப்படலத்தில் அவர்கள் ஏனில்லை ? எவ்வளவு வலிந்து முயன்று தேடிப் பார்த்தாலும் அவர்கள் தென்படாமல் இருப்பது எதனால் ? நினைவாற்றலுக்குள் இந்தப் பாகுபாடு எப்படி நிகழ்கிறது ? புரியவேயில்லை... 

வைகையில் தண்ணீர் முழங்காலளவு ஓடிக்கொண்டிருந்தது.அங்கு அதற்கான இடத்தில் அஸ்தியைக் கரைத்தோம்.மண் குடம் கொஞ்ச தூரம் நீரில் அசைந்தோடி,தண்ணீர் குடித்துத் தண்ணீருக்குள் மூழ்கியது.குளித்துக் கரையேறியதும் கூட வந்த பிராமணர் சொன்னது கேட்டு நான் திகைத்தேன்.அதிர்ந்தேன்.

அவர் என்ன சொன்னார் ?

அப்புறம் சொல்லுகிறேன்...

-பாரதி கிருஷ்ணகுமார்.   

Tuesday, May 12, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 13

மாயாண்டி பாரதி - தமிழ் விக்கிப்பீடியா
ஐ.மாயாண்டி பாரதி


எங்கள் பகுதிக்கு சௌபா வந்தாலும் , சௌபா வீடு இருக்கிற பகுதிக்கு நாங்கள் போனாலும் இரவு பகலாகி விடும்.


எங்கள் சந்திப்புகளில் இசைக்குப் பெரும் பங்கு இருந்தது.இரவு முழுக்கப் பாட்டும் பேச்சும் கூத்தும் தான். உற்சாகமற்ற இரவாக ஒரு இரவு கூட இருந்ததில்லை.

மதுரை நகரின் மையப்பகுதியில் இருந்த ஒரு கல்லூரியின் மைதானத்தில் தான் எங்கள் சபை வழக்கமாகக் கூடும். நம்பி யாரும் சபைக்கு வரலாம். சபைக்கு கையில் காசு இருக்கிறவர்கள் தான் வரவேண்டும் என்பதில்லை. புதிதாக நண்பர்களை அழைத்து வந்தால் முறையாக அறிமுகம் செய்துவைத்து விடவேண்டும். நாம் இல்லாதபோது வந்தாலும் உபசரிப்பார்கள். அந்த சபைகளுக்கு நான் பலரை அழைத்துப் போய் இருக்கிறேன் . அதில் சௌபாவும் ஒருவன் . 

ஆரம்பத்தில் சௌபா புகை பிடிக்கமாட்டான். சபையிலோ புகை தான் எப்போதும் சுற்றிச் சுழன்று கொண்டே இருக்கும். தானும் புகை பிடிக்க விரும்புவதாகச் சொன்னபோது சபை விதிகள் அனுமதிக்காது என்று அவனுக்குச் சொல்லப்பட்டது . அவனுக்கு மட்டுமல்ல . 

புதிதாக, முதன்முறையாகப் புகை பிடிக்கவோ,மது அருந்தவோ அந்தச் சபையில் யாரையும் அனுமதிப்பதில்லை. சுருக்கமாகச் சொன்னால் சபையில் கன்னி சாமிகளுக்கு அனுமதியில்லை. வேறெங்காவது துவங்கிப் புழங்கிப் பழகியவர்களுக்குத்தான் சபையில் எல்லாம் கிடைக்கும். கன்னி சாமிகள் பார்க்கலாம்.உணவு வந்தால் உண்ணலாம்.

இரவெல்லாம் இசையென்றால்,ஏதோ வெறுமனே சினிமாப் பாட்டு பாடுகிற சபை என்று கருதி விடாதீர்கள்.எந்தப் பாடலைப் பாடினாலும்,பாடலை எழுதிய கவிஞர் ,இசைஅமைப்பாளர்,பாடியோர்,நடித்தோர்,பாடல் இடம்பெற்ற சூழல்,காட்சியமைப்பு என்று எவ்வளவு செய்திகள் சொல்ல முடியுமோ அவ்வளவும் சொல்லிவிட்டுத் தான் பாடுவார்கள்.எல்லாப் பாடகர்களின் குரலையும் போலப் பாடுகிற பாடகர்கள் சபையில் இருந்தார்கள்.தமிழ்த் திரை உலகின் எல்லாக் கவிஞர்களையும் ,மேதைகளையும் அருகிருந்து தரிசித்த இரவுகள் அவை.

பல சமயங்களில் சபை தீவிரமான புத்தக வாசிப்பில் இறங்கிவிடும். ஒருவர் வாசிக்க எல்லோரும் கேட்பார்கள்.ஒருவர் பாடுகிற போதோ,பேசுகிறபோதோ,வாசிக்கிறபோதோ,இடையில் குறுக்கிட்டு யாரும் யாரோடும் பேசமாட்டார்கள்.பேசவேண்டி வந்தாலும் இடையூறு இல்லாமல் சைகை மொழியில் பேசிக்கொள்வார்கள்.ஒரு சபையில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்த சபை.

ரஜினி பாமிதத்தின் இன்றைய இந்தியா என்ற புத்தகத்தை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.அந்தப் புத்தகத்தை முழுமையாக வாசித்து உணர்ந்த ஒருவர்,எல்லாப் பிறப்பிலும் ஏகாதிபத்திய எதிப்பாளராக,காலனி ஆதிக்கத்தின் எல்லா வடிவங்களையும் நிராகரிப்பவராக அனைத்துத் தேசிய இன விடுதலை போராட்டங்களையும் ஆதரிப்பவராக மட்டுமே பிறக்க முடியும்.சபையில் எல்லோர் முன்னிலையிலும் சிறப்பாகப் பிழையின்றி வாசிக்க வேண்டும் என்பதற்காக புத்தகத்தை முன்னதாக ஒருமுறை வாசித்துவிட்டு போகிற பழக்கம் எனக்கு இருந்தது.எத்தனை புத்தகங்கள் ! எத்தனை இரவுகள் ! இப்படிதான் எங்கள் வாழ்க்கை விடிந்தது.

என் நண்பர்கள் எல்லோரும் சௌபாவிற்கும் நண்பர்கள் ஆனார்கள்.அவ்வாறே தான் வாழ்ந்த பகுதியில் இருந்த இடதுசாரி இயக்கத் தோழர்கள் பலரை சௌபா எனக்கு அறிமுகம் செய்து வைத்தான்.அவர்களில் பலர் என்னை ஏற்கெனவே அறிந்திருந்தார்கள்.

ஏனெனில்,அவசரநிலைக்குப் பிறகு 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு எதிராக தி.மு.க.தலைமையில் ஒரு பெரும் கூட்டணி அமைந்திருந்தது.அதில்,மதுரை பாராளுமன்றத்தொகுதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.அதன் வேட்பாளர் தோழர் பி. ராமமூர்த்தி.

ஜனதாக் கட்சியின் சார்பில் நாங்கள் தோழர் பி ஆர் க்காகத் தேர்தல் பணி ஆற்றினோம்.மதுரைப் பாராளு மன்றத்தொகுதி முழுவதும் சுற்றினோம்.ஒலிபெருக்கியே இல்லாமல் சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்கான கூட்டங்களில் பேசினோம். பெரும்பாலான இடங்களுக்கு மாட்டுவண்டியில் தான் போயிருக்கிறோம். 

மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் மாநிலத் தலைவராக இப்போதும் பணியாற்றிக்கொண்டிருக்கும் திரு.ஜான் மோசஸ்,பெரும் தியாகப்பரம்பரையைச் சேர்ந்த நண்பன் சிதம்பரபாரதி,மதுரையில் இப்போது பிரபலமான வழக்கறிஞர் கவிஞர்.கோ.மணிவண்ணன்,மதுரை கிழக்குத் தொகுதியை சேர்ந்த அருமை நண்பன் கோவர்தனன்,ஆகிய ஜனதாக் கட்சிக்காரர்களைத் தவிர அந்தந்தப் பகுதி CPM தோழர்களும் தான், மாட்டுவண்டியில் சக பயணிகள்.

அந்தப்பயணத்தின் ஒரு பகுதியாக செல்லூர் மீனாம்பாள்புரம்,நரிமேடு ஆகிய இடங்களிலும் பிரச்சாரம் செய்ததில் நிறைய அறிமுகங்கள் இருவருக்கும் இருந்தது.

அந்தத் தேர்தலில் இந்திரா தோற்றார்.மதுரையில் பி.ஆர்.தோற்றார்.தோல்விக்குப் பிறகான ஒரு நாளில்,மதுரை மேலமாசி வீதியில் குடியிருந்த அவரது வீட்டுக்கு சௌபா என்னை அழைத்துப் போனான்.இடதுசாரிக் கட்சிக்குள் வயது வித்தியாசம் இல்லாமல் ஒருவரை ஒருவர் தோழர் என்று தான் அழைப்பார்கள்.ஆனால் அப்பா என்று அழைத்தபடி அந்த வீட்டுக்குள் போனான் சௌபா.சொந்த வீட்டுக்குள் போவதுபோலப் போனான். நான் தயங்கி உள்ளே போனேன்...உள்ளே இருந்த அவர் சௌபாவை "வாடா... எங்க ஆளையே காணோம் ?" என்று உரிமையோடு அழைத்தார்.என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்."பேரு கிருஷ்ணகுமார்... நாங்க BKன்னு கூப்டுவோம். பெருசுன்னும் கூப்பிடுவோம்." அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியில் இருந்து தலைதூக்கி அவர் என்னை அண்ணாந்து பார்த்தார். "எனக்குத் தெரியும்.பெருசாத்தான் இருக்காரு... பேச்சும் கேட்ருக்கேன்" என்றார். எனக்கு வியப்பாகிவிட்டது.இருவரையும் அமரச் சொன்னார்.வீட்டிற்குள் திரும்பி, "பசங்க வந்துருக்காங்க.ரெண்டுபேருக்கும் காப்பித் தண்ணி குடு" என்றார்.சௌபா,பேசிகிட்டு இருங்க என்றபடி வீட்டிற்கு உள்ளே போனான்.


அவர் பேச ஆரம்பித்தார்.அவர்,விடுதலைப் போராட்ட வீரர்,பத்திரிகையாளர்.தீக்கதிர் நாளிதழின் ஆசிரியர் குழுவில் இருந்தார்.தோழர் ஐ.மாயாண்டிபாரதி.பேசினார் பேசினார் பேசிக்கொண்டே இருந்தார்.நான் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.

தனது பதின்மூன்று ஆண்டுகால சிறை வாசத்தை எந்தப் பம்மாத்தும் இல்லாமல் சொன்னார்."ஏறினா ரயிலு எறங்கினா ஜெயிலு" என்றார்.முதல் சந்திப்பே மூன்று மணி நேரத்திற்கு நீடித்தது.


பாரதியை,வள்ளுவனை,பாரதிதாசனை,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை,பாவலர் வரதராசனை,அவர் தம்பி இசைஞானி இளையராஜாவை,ஜெயகாந்தனை,ஜீவாவை,ஜானகி அம்மாளை,எனத் தான் அறிந்தவர்களைப் பற்றியும் அவர்களைப் பற்றி நாம் அறியாதவைகளையும் சொல்லிக்கொண்டே இருந்தார்.அவரது இறுதிக் காலம் வரையில் இந்தத் தோழமையும் உரையாடலும் நிற்கவே இல்லை.சௌபாவைப் போலவே நானும் அவரை அப்பா என்று தான் எப்போதும் அழைத்தேன். 

இப்படியாக நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மனிதர்களைப், புத்தகங்களை அறிமுகம் செய்துகொண்டே இருந்தோம் . 

சௌபாவின் தாயார் என்னை உபசரித்தது போலவே, என் தாயாரும் சௌபாவை உபசரிப்பதுண்டு.யார் வந்தாலும் உபசரிப்பதும் , வயிறார உணவு தருவதும் என் தாயாருக்கு இயல்பாக இருந்த குணம். அம்மா காலமான அன்று , அம்மாவின் உடலைச் சுமந்தது முதல் , இறுதிச் சடங்குக்கான எல்லாப் பணிகளையும் சபை உறுப்பினர்களே செய்தார்கள். அன்றைக்கு என் சபை உறுப்பினர்கள் செய்த வேலையைப் பார்த்த நெருங்கிய உறவினர்கள் அஞ்சித்தான் போனார்கள் . யாரையும் எந்த வேலையும் செய்ய விடாமல், வேலைகளைச் செய்துகொண்டே இருந்தார்கள் . நான் அம்மா இறந்த அதிர்ச்சியில் அழ மறந்து , துளிக்கூட கண்ணீர் இன்றி வறண்டு போயிருந்தேன். 

மதுரையில் எந்த மயானத்திற்குக் கொண்டுபோவது என்பதைக் கூட சபையே முடிவு செய்தது. எங்கள் மதுரை வீட்டில் இருந்து, தத்தனேரி மயானத்திற்குக் குறைந்தது ஆறேழு கிலோமீட்டர் தொலைவு. இப்போதுபோல வாகனவசதிகள் இல்லை. தோளில் தூக்கிச் சுமக்க வேண்டும். சபை சுமந்தது. தோள் கொடுத்த பலரில் சௌபாவும் இருந்தான் . அவனது இறுதிப் பயணத்திற்குத் தோள் தர இயலாத தூரத்தில் காலம் என்னை நிற்கவைத்து விட்டது . இப்போது இந்த எழுத்தின் வழியாகத் தான் தோள் சுமக்கிறேன்.

எத்தனையோ பயணங்களில் என் தோளில் படுத்துறங்கியவனை , இப்போது நினைவுத் தோளில் சுமக்கிறேன்.

தத்தனேரி மயானத்திற்கு வந்து சேர்ந்தோம், அம்மாவின் அம்மாவும் , என்னோடு பிறந்த ஒரு அக்காவும் சென்னையில் இருந்து வரவேண்டும். அவர்கள் வந்து முகம் பார்க்கிறவரை காத்திருப்பது என்று முடிவு . அவர்கள் சென்னையில் இருந்துவரும் பேருந்தை மறித்து அழைத்துவர ஒரு மூன்று பேர் தல்லாகுளத்திலே நின்றார்கள் . தவறிப் போனால், பெரிய பேருந்து நிலையத்தில் மூன்று பேர். எல்லாமே சபை முடிவு. அக்காவும் , பாட்டியும் வர இரண்டு மணிநேரமாகும் என்று எனக்குச் சொன்னார்கள். அம்மாவுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த என்னை ஒரு மறைவான இடத்திற்கு அழைத்துப் போனார்கள். புகைக்க, பற்றவைத்த சிகரெட்டை ஒருவன் நீட்டினான். நான் மறுத்தேன். நண்பன் குணசேகரபாண்டியன்... " பெருசு .. பேசாமக் குடிங்க .. உக்காந்து குடிங்க " என்றான். சொந்தக்காரங்க நெறையப் பேரு நிக்குறாங்க என்றேன் . " ஏ மனோகரா .. அங்கபோய் உக்காரு .. எவனாச்சும் வந்தா வரக்கூடாதுன்னு சொல்லு " என்று உத்தரவிட்டார் இரும்புக்கடை தங்கம். நான் புகைக்க ஆரம்பித்தேன். நெஞ்சில் இருந்த அடைப்பு நீங்கியது போன்ற உணர்வு ... யாரோ, ஒரு பெரிய பக்கெட் நிறைய சாராயம் கொண்டு வந்து எல்லோருக்கும் பணிவாகப் பரிமாறிக்கொண்டு இருந்தார்கள்." பெரிய சாவு .. எல்லாரும் அந்தம்மா கையால சாப்பிட்டுருக்கோம்.. ஒரு குறையும் இல்லாமச் செய்யணும் என்றார் தங்கமாரி. சௌபா என்னருகில் வந்து அமர்ந்தான் . கலங்கி அழுதான் . சட்டென எல்லோரும் அழுது குமைந்தார்கள். நான் வறண்டு போயிருந்தேன். சட்டென சௌபா சற்றே உரத்த குரலில்," BK... அக்கா வர ரெண்டு மணிநேரமாகும். அது வரைக்கும் நீங்க ஒரு கதை சொல்லுங்க" என்றான். 

(இந்த நிகழ்ச்சி குறித்துப் பல இடங்களில் , பல மேடைகளில் நான் பேசி இருக்கிறேன்.ஆனாலும்...) "கத சொல்லுறதுக்கு நேரம் காலம் இல்லியா என்று யாரோ மறுத்தார்கள். அவர் சொல்லுவாரு .. நீ மூடிக்கிட்டுக் கேளு என்றான் குணசேகரன். எல்லோரும் அமைதியாகக் காத்திருந்தார்கள். 

அந்தோன் செக்காவின் "ஆறாவது வார்டு"என்னும் மாபெரும் படைப்பைச் சொல்ல ஆரம்பித்தேன் . சபை ஆழ்ந்து கேட்டது.கதை சொல்லி முடிக்க ஒன்றரை மணி நேரம் ஆனது. 


அக்காவும் பாட்டியும் வந்து சேர எல்லாம் முடிந்தது. 

பல ஆண்டுகளுக்குப் பிறகு இது பற்றி ஒரு பின்னிரவில் நானும் சௌபாவும் அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தோம் .

"எப்படி BK அவ்வளவு உறுதியாக் கதை சொன்னீங்க?" என்று கேட்டான் சௌபா 

"என்ன தைரியத்துல நீ என்னக் கதை சொல்லச் சொன்ன ?" என்று கேட்டேன் .


சற்று மெளனமாக இருந்துவிட்டு சௌபா சொன்னான்... "அந்தத் துயரத்த எப்படிக் கடந்துபோறதுன்னு தெரியல ... எல்லோருக்கும் துயரம் வரும் போது கடந்துபோக நீங்க வழி சொல்லுவீங்க ... இப்ப உங்க துயரத்த, உங்க உதவி இல்லாமக் கடக்க முடியாதுன்னு தோணுச்சு.. அதான் சொல்லச் சொன்னேன். எவனா இருந்தாலும் இப்ப வேணாம்னு சொல்லி இருப்பான் . நம்ம பசங்க துன்பப்படக் கூடாதுன்னு கத சொன்னீங்க ..." என்றபடி குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினான் . நானும் அழத் துவங்கினேன் .சில நொடிகள் ஓசையின்றி அழுதிருந்தோம்.

சட்டென்று ," எல்லாத்துக்கும் மேல, கதை சொல்லி வளர்த்த அம்மாவுக்குச் சொன்ன கடைசிக் கதை" என்றான்.

நான் குரலெடுத்து அழத் துவங்கினேன் . அவனும் அழுதுகொண்டே இருந்தான் . அதற்குப்பிறகு ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளாமல் அலைபேசிகளை அணைத்துக் கொண்டோம்.

அம்மா உடல் எரியூட்டப்பட்ட மறுநாள் காலை தத்தனேரி மயானத்திற்கு அஸ்தி சேகரிக்கப் போனோம் . சௌபா அங்கே காத்திருந்தான் ..

அப்போது அங்கு என்ன நடந்தது ?அங்கிருந்து எங்கு போனோம்?
   
                       
அப்புறம் சொல்லுகிறேன்...

-பாரதி கிருஷ்ணகுமார்.     

Sunday, May 10, 2020

அன்னையர் தினம்.

இன்று அன்னையர் தினமாம் . ஒரு தினம் மட்டுமா உன்னுடையது . இந்தப் பிறப்பே உன்னுடையது .

Image may contain: one or more people, people sleeping, baby and close-up

நீ சொன்னது தான் நடந்தது அம்மா


பொறுப்பற்றவனாக
பிழைக்கத் தெரியாதவனாக
கோழையாக, கஷ்டம் தெரியாதவனாக,

சம்பாதிக்கத் துப்பில்லாதவனாக
வீட்டுக்குப் பயனில்லாதவனாக,
போதையில் திரிபவனாக,

தன்னிலை இழந்து தெருவில் கிடப்பவனாக
சோத்துக்குச் சிங்கி அடிக்கிறவனாக
போலீஸ் வீட்டுக்குத் தேடி வருகிற புள்ளியாக,

பெண் பித்தனாக
சொத்தெல்லாம் வித்து வீதிக்கு வருபவனாக
ஏமாளியாக, ஏழையாக,

எந்தச் சொந்தக்காரனும் சேர்த்துக் கொள்ளாதவனாக
ஒரு வேலைக்கும் லாயக்கில்லாதவனாக
வேலை பார்த்தும் கூலி பார்க்கத் தெரியாத மூடனாக,

நான் ஆவேன் என்று

மற்றவர்கள் சொன்னதெல்லாம்
பொய்த்து,

நீ சொன்னது தான் நடந்தது அம்மா.


- ப்ரகலாதன்
(பாரதி கிருஷ்ணகுமார்)

Saturday, May 9, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 12



அன்றிரவு சௌபா வீட்டில் தங்கிவிட்டு நான் எப்போது வீட்டுக்குப் போனேன் ?

சௌபா வீட்டிற்கு எப்படிப் போகவேண்டும் ?


மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவிற்கு அழகர்கோவிலில் இருந்து வரும் கள்ளழகர், அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டோமா மதுரைக்கு வந்தோமா என்று வந்துவிட மாட்டார் . வழிநெடுக பலநூறு இடங்களில் இறங்கி நின்று மாலை மரியாதை வாங்கிகொண்டு தான் வருவார் . அப்படிக் கள்ளழகர் நின்று இருந்து போகும் இடங்களுக்கு மண்டகப்படி என்று பெயர். மைசூர் மண்டகப்படி, தளவாய் மண்டகப்படி என்று அதிலும் பலதரப்பட்ட மண்டகப்படிகள் உண்டு.அஃதே போல நாங்கள்,எந்தப் பாதையில் நடந்து வந்தாலும் , வழிநெடுக மண்டகப்படிகள் இருக்கும். மதுரையில் எனது வீட்டுக்குப் போகிற பாதையிலும் ஏராளம் மண்டகப்படிகள் . மண்டகப்படிகளுக்கு ஏற்ப மாலை மரியாதை மாறிக்கொண்டே இருக்கும்.உபசரிப்பும், உற்சாகமும் எல்லா மண்டகப்படிகளுக்கும் பொது நடைமுறை. அரசியல் சினிமா ஆன்மிகம் இலக்கியம் என்று வகைவகையான மண்டகப்படிகள்.இரவெல்லாம் தங்கி இருந்து உரையாடி, இளைப்பாறி அதிகாலைத் தேநீரோடு அனுப்பி வைக்கும் மண்டபப்படிகளும் உண்டு ...
   


சௌபா வீடு ஆற்றின் வடகரையில் இருந்தது.வைகை வகிடு எடுத்தது மாதிரி மதுரைக்குள் ஓடுவாள் .வைகை மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகிற நதி. வைகை நேரே கடலில் சென்று கலப்பதில்லை .எனவே கன்னி ஆறு என்று வைகைக்குப் பெயருண்டு.மதுரை பெரிய பாலத்திற்குப் பிறகு விரகனூர் வரை ஆற்றின் இரு கரையிலும் நாவல் , அத்தி , மருதம், வேம்பு, கொடுக்கா என்று மரங்கள் அடர்ந்த மதுரையை நான் பார்த்திருக்கிறேன். கோடை இல்லாத காலங்களில், முழங்காலுக்குத் தண்ணீர் ஓடுவது நடைமுறையாகவே இருந்தது. நாங்கள்  பெரும்பாலும் நடந்து தான் போவோம். ஆற்றுக்குள் இறங்கி செல்லூரில்,அந்தப் பெரிய படித்துறையில் கரையேறினால், ஒரு அகலமான சாலை கிழக்கு மேற்காக ஆற்றை ஒட்டிக் கிடக்கும். அது செல்லூர் சாலை.அந்தச்சாலையைக் கடந்து ஒரு சிறிய இறக்கத்தில் நடக்க செல்லூர் அய்யனார் கோவில் திடல்.திடலைக் கடந்து வடக்கு நோக்கி நடந்து மேடேறினால் செல்லூர் பெரிய கண்மாயின் உயர்ந்த கிழக்குக் கரை. கரை மீதே ஒன்றரைக் கிலோமீட்டர் நடந்து , கண்மாய்க்கரையில் இருந்து இறங்கினால் மீனாட்சிபுரம் என்கிற மீனாம்பாள்புரம்.இறங்கி நூறுஅடி நடந்ததும் ரோடு பாம்பின் நாக்குப்போல இரண்டாகப் பிரியும். பிரிகிற இடத்தில் தான் சக்கரைச் செட்டியார் படிப்பகம்.நேரே வடக்குமுகமாக நடந்து இரண்டாவது வலதுகைப் பக்கம் திரும்ப மூன்றாவதுவீடு சௌபாவின் வீடு.      

சௌபா அப்போதே இந்திய மாணவர் சங்க உறுப்பினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தான்.நான் ஜனதா கட்சி.பெருந்தலைவர் காமராஜர் தலைமையில் இயங்கிய ஸ்தாபன காங்கிரசில் இருந்து ஜனதாவுக்கு வந்தவன்.கட்சி மாறி வரவில்லை.ஸ்தாபன காங்கிரஸ் கட்சி தான் ஜனதா கட்சியாக  ஆகியிருந்தது.அந்த அரசியல் வரலாறு பிறகு பேசிக்கொள்ளலாம்.


கையில் காசுபணம் புழக்கமாக இருந்தால் நகரப்பேருந்தில் ஏறி வருவோம் . ஆனால் எந்தப் பக்கம் வந்தாலும் ஒரு நடை நடந்து தான் ஆகணும். ஆனையூர் ,குலமங்கலம் பேருந்துகளில் ஏறினால் வெங்கிடாசலபதி திரையரங்க வாசலில் இறங்கி கிழக்காக நடந்தால் மீனாம்பாள்புரம். நரிமேட்டில் இறங்கி வந்தால் சின்ன சொக்கிகுளம் வழியாக, மேற்கு நோக்கி நடக்க மீனாம்பாள்புரம்.


செல்லூர் கண்மாய் , தாமரைக் கண்மாய் , பீபிகுளம் கண்மாய் என்று பெரும் நீர்நிலைகள் . வயக்காடுகள். மாலை ஆறுமணியானால் அமைதியும் குளிரும் அரவணைத்துக் கொள்ளுகிற பசுமை.


எப்போது போனாலும் அன்போடு உபசரிக்கற பண்பு சௌபாவின் தாயாருக்கு உண்டு.கையில் காசிருந்தால் வீட்டுக்குச் சாப்பிட வரமாட்டார்கள் என்பது அவர்கள் அறிந்த உண்மை. சாப்பிடக் கடைதேடிப் போவதில் எங்கள் அளவுக்குத் தீவிரமாக  உழைத்தவர்கள் யாரும் இல்லை . பசிக்கும் , கைப் பணத்துக்கும், நேரத்துக்கும் தகுந்த கடையைத் தேர்வு செய்து சாப்பிடப்போவது ஒரு தனிக்கலை. அப்படிச் சாப்பிட்ட கடைகள் , உணவு வகைகள் பற்றி எழுதினால் , அது தனிப் புத்தகம். அதிலும் மதுரையின் தனிச் சிறப்பு இரவுநேரக் கடைகள். எத்தனை வகைவகையான உணவுகள். உறங்காத நகரம் என்று அழைத்தது துளிக்கூட பொய்யில்லை. இப்போது போனால் அப்படியில்லை. இரவு பதினோரு மணிக்குள் போலீஸ்காரர்கள் மதுரையை லத்தியால் அடித்து உறங்கவைத்து விடுகிறார்கள். இதை மாநிலம் முழுவதும் போலீஸ்காரர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள் .அதிலும் ,ஒரு ஜீப்பில் ஒருவர் அமர்ந்துகொண்டு கடை அல்லது கடைக்காரரின் பெயரைச் சொல்லிக்கொண்டு ஒருமையில் மிரட்டியபடி "ஊர்வலம்" வர, திருடர்கள் போலக் கடைக்காரர்கள் விளக்குகளை அணைத்துக் கடைகளை மூடி .. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அழகைக் காணச் சகிக்கவில்லை. சென்னை சென்ட்ரலில் இருந்து, பின்னிரவில் இறங்கி வந்தால், போரூர் வரைக் குடிக்கத் தண்ணீர் தர ஒரு கடை கூட இல்லை. இரவு குற்றங்களுக்கும் குற்றவாளிகளுக்கும் உரியது என்று உலகின் இரண்டாவது பெரியகாவல்துறை கருதுகிறது. எனக்கு இது வியப்பளிக்கிறது . இதுபற்றி வர்த்தக சங்கங்களும் , வியாபாரிகளின் சங்கங்களும் , இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும்  மௌனம் சாதிப்பது இன்னும் கூடுதல் வியப்பு .இதனால் குற்றங்கள் குறைந்து போயிருப்பதாகவும் கருத இடமில்லை. சங்கிலி அறுக்கிற சகோதரர்கள் இரவு வரை காத்திருப்பதில்லை. இரவு நேரங்களில் பொதுமக்களின் நடமாட்டம் இருந்தால், குற்றங்கள் குறையும் என்பதுதானே இயற்கையான நடைமுறை . சிறு குறு தொழில் செய்து பிழைக்கிற சாலையோர வியாபாரிகள் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டு விட்டு என்ன சட்டம் ஒழுங்கு? எல்லோரும் உறங்கப்போய் விட்டால் குற்றம் செய்கிறவர்களுக்குக் கொண்டாட்டம் தானே? இதில் யாருக்கும் யாருக்கும் கூட்டணி ? யாரை யார் காப்பாற்றுகிறார்கள்? கடைகள் திறந்திருக்க , வணிகம் நடக்க , பொதுமக்கள் புழங்க இருக்கும் போது தானே சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் வேலை? எல்லாவற்றையும் மூடிவிட்டால் என்ன வேலை ? யாருக்கு வேலை? 


இப்படித்தான்... எதையோ சொல்லவந்து எதையோ பேசிக்கொண்டு இருக்கிறேன்.நீங்களும் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள்.பிறகு சொல்ல வந்ததை எப்போது சொல்லி முடிப்பது?


சௌபா வீடு சின்ன ஓட்டு வீடு . நாங்கள் எப்போதும் படுப்பது சக்கரைச் செட்டியார் படிப்பகம் தான் . இரவெல்லாம் பாட்டு , பேச்சு , படிப்பு என்றுதான் கழியும். சந்திக்கிற நாட்களில் இரவு மூன்று மணிக்கு படுக்கப் போனால் அது சீக்கிரம் படுத்த நாளாக இருக்கும் . 


காளியப்பன் என்றொரு தோழர் நன்கு பாடுவார். நானும் பாடுவேன் என்பதை இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திச் சொல்லி விடத்தான் வேண்டும். சைக்கிள் கடை செல்வராஜ் வந்து சேர்ந்து கொள்ளுவார். எப்படியும் நாலைந்து பேர் கூடி விடுவார்கள். இரண்டு மூன்று மணிக்கொருதரம்,பத்து நிமிடம் சைக்கிளில் சுற்றினால் சூடான இட்லி, தோசை , பொங்கல்,ஆம்லெட், தேநீர் ,பருத்திப்பால்,சிகரெட் என்று எல்லாம் கிடைக்கும். இப்போது நினைத்தாலும் வயிறு எரிகிறது . திங்கிற சோற்றில் மண்ணள்ளிப்போட்டு விட்டு மக்களை ஆளுகிறார்களாம்...!


எங்கள் பகுதிக்கு சௌபா வந்தாலும் , சௌபா வீடு இருக்கிற பகுதிக்கு நாங்கள் போனாலும் இரவு பகலாகி விடும்.


அந்தப் பகலாகிய இரவுகளில், ஒரு இரவு ஒருவரைச் சந்திக்க என்னை அழைத்துப் போனான். 


அவருடனான சந்திப்பு என் வாழ்க்கையில் மிக மிக மதிப்பும் சிறப்பும் மிக்கது. 


அவர்... ?



அப்புறம் சொல்லுகிறேன்... 


-பாரதி கிருஷ்ணகுமார்.
 


Thursday, May 7, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 11



இறுதியாக தன் சக ஊழியரிடம் ஏதோ கேட்டார் .

அவர் OK என்றார் .

அபராதத் தொகையாக அவர் எவ்வளவு சொன்னார்?...


"ஒரு 630 ரூபாயக் கட்டிட்டு உம் ப்ரெண்ட்ஸக் கூட்டிட்டுப் போ ... சாயங்காலம் நாலு மணிக்குள்ள பணத்தக் கட்டணும்.. இல்லாட்டி உன்னையும்,எல்லாரையும் ரிமாண்ட் பண்ணிக் காலையில கோர்ட்ல ஆஜர் பண்ணிருவேன் " என்றார். 


நான் திகைத்துப் போனேன் . 


சார் .. எதுக்கு சார் இவ்ளோ கேக்குறீங்க என்றேன் .


"No Discussion ... No Arguements Pay the money before 4 pm "  


சொல்லிக்கொண்டே அவர் நடக்க ஆரம்பித்தார் . அவரது வன்மம் எனக்குப்  புரிந்துவிட்டது.நாங்கள் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தது அவருக்கு ஒரு குற்றமாகப் படவே இல்லை .அவரே  ஓரிடத்தில் சொன்னார். "ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்குல டிக்கெட் எடுக்காமப் போறானுங்க .. நீங்க போனா மட்டும்  என்ன கொறையுது ... மத்தவங்க எங்க கண்ணுல படாமப் போறாங்க ... நீங்க என்னோட கண்ணுல பட்டுடீங்க ... அதான் டிபரன்ஸ்" ... அவர் கேட்டுக்கொண்ட படி நான் எழுதிக்கொடுக்கச் சம்மதிக்கவில்லை என்பதுதான் அவரது ஒரே கோபம் .அந்தக் கோபமே இத்தனை பெரிய தொகையை அபராதமாகப் போட வைத்தது.


பத்தடி நடந்ததும் நின்று திரும்பிப் பார்த்தார். நான் அவருக்குப் பின்னால் மன்றாடியபடியே வருவேன் என்று எதிர்பார்த்துத் திரும்பினார். நான் நின்ற இடத்திலேயே நின்றது,அவருக்குப் பெரும் அதிர்ச்சியாகி விட்டது. 


அவருக்குப்பின்னே மன்றாடியபடியே செல்லும் எண்ணம் எனக்கு இல்லை. துளிக்கூட இல்லை. ஆனால் நான் அங்கேயே நின்றது,அவ்வளவு பணத்தை எப்படிக் கட்டமுடியும் என்கிற திகைப்பில் தான் ... சில நிமிடங்கள் எதுவும் தோன்றவில்லை.பிற்பகல் மணி ஒன்றை நெருங்கிக்கொண்டு இருந்தது. 


"பையங்க போய் சாப்பிட்டுட்டு வரட்டும்.மத்தத அப்புறம் பேசிக்கலாம்." என்று அங்கிருந்த ஒரு அதிகாரியிடத்தில் சொன்னேன். பையன்கள் சாப்பிடப் போனார்கள் . என்னோடு ஜெயவீரபாண்டியன் மட்டும் இருந்தார் . அவர் ஒருவர் தான் என் வயதுக்காரர் . மற்ற எல்லோரும் வயதில் சிறியவர்கள் . அவர்கள் எல்லோரும் படித்துக்கொண்டும் இருந்தார்கள். நாங்கள் எல்லோருமே எளிய குடும்பத்துப் பையன்கள் தான். இவ்வளவு பணம் கையிருப்பில் வைத்துக்கொள்ளுகிற அளவு வசதியான குடும்பம் எவருக்கும் இல்லை .


அன்றைய மதிப்பில் 630 ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை.ஒரு பவுன் ஆபரணத் தங்கமே 320-330 ரூபாய்க்குள் தான் இருக்கும். பையன்கள் சாப்பிடப் போன நேரத்தில் நானும் ஜெயவீரபாண்டியனும் ஆலோசித்தோம். முடிவெடுத்தோம். 


உண்மையில் நாங்கள் வருகிற வரையில் பையன்களைப் பிணையாகத்தான் நிறுத்தி வைத்திருந்தார்கள் . அதை நான் உணர்ந்தே இருந்தேன் . எப்படியாவது மாலை நான்கு மணிக்குள் பணம் கொண்டுவந்து கட்டுகிறேன், பையன்கள் போகட்டும் என்று கேட்டேன் . அவர்கள் சம்மதிக்கவில்லை. சம்மதிக்கமாட்டார்கள் என்பதை உணர்ந்தும் கேட்டேன் . மறுபடியும் கேட்டேன். மறுத்தார்கள். எங்களைப் பற்றிய எல்லாத் தகவல்களும் அவர்களிடம் இருந்தது . அதற்குமேலும் எதற்குப் பையன்களை நிறுத்தி வைக்கவேண்டும் என்பது என் எண்ணம் . இங்கு யாரும் ஓடிப்போகப் போவதில்லை , முதலிலேயே ஓடிப்போய் இருந்தால் , சங்கரநாராயணன் மட்டும் தான்அகப்பட்டு இருப்பார். எல்லோரும் வெளியில் போய் இருந்தால் , பிறகு அவரை மட்டும் காப்பாற்றுவது எளிதான வேலை தான். ஆனால் நாங்கள் வருகிறவரையில் அவருக்கு நடக்கும் அவமதிப்புகளுக்கு அஞ்சியே யாரும் ஓடவில்லை .பலமுறை கேட்டும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.


இனி பயனில்லை என்றானபோது, ஜெயவீரபாண்டியன் என்னைச் சமாதானம் செய்தார்.  "குமார் .. நேரமாகுது போய் ஆகுற வேலையப் பாப்போம் . நான் நேரா எங்க லேத் பட்டறைக்குப் போயிட்டு அங்க என்ன பணம் இருக்கோ அதை எடுத்துட்டு எங்க வரணும்னு சொல்லுங்க" என்று என்னைவிட நிதானமாக பொறுப்பாகக் கோபமே இல்லாமல் பேசினார் . 


அடுத்து என்ன செய்வது, எப்படிப் பணம் திரட்டுவது என்று என் மனமும் அறிவும் திட்டம் இட்டாலும், கோபம் அடங்கவேயில்லை . அந்த ஆள் என்னிடம் ஒரு இழிவான பேரம் பேசினான் என்பதை விடவும், என்னிடத்தில் அப்படிப் பேசலாம் என்று அவன் நினைக்கிற அளவுதான் நாம் தோற்றம் அளிக்கிறோமா என்பதே கோபத்திற்கான அடிப்படை. என் கோபம் என் மீதே சுழன்றடித்தது.கண்கள் மேலும் சிவந்து பிதுங்க ஆரம்பித்தது . 


ஜெயவீரபாண்டியன் பொறுப்போடு செயல்பட வேண்டியதை உணர்த்தினார் .ரெயில்வே நிலையத்தில் இருந்து மாரியம்மன் தெப்பக்குளம் ஐந்து கிலோமீட்டர் இருக்கும் . வெளியில் வந்து நண்பர் ஒருவர் உதவியுடன் இரண்டு வாடகை சைக்கிள்களில் பறந்தோம் . மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு சற்று முன்னதாக புது ராமநாதபுரம் சாலையில் இருந்தது ஜெயவீரபாண்டியனின் லேத் பட்டறை . அவர் பட்டறைக்குப் போனார்.நான் தினமணி திரையரங்க வாசலில் நின்றுகொண்டேன் . ஒரு தேநீர் அருந்திவிட்டு புகை பிடித்தேன். சிந்திக்க வேண்டாமா ? 


அங்கிருந்து நூறு மீட்டரில் எனது வீடு. வீட்டுக்குப் போனேன். அப்பா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் . அவர் விழித்திருந்தாலே எதுவும் நடக்கப்போவதில்லை. இப்போதோ உறங்குகிறார் . அவர் கண் விழிக்க நாலரை அல்லது ஐந்து மணி ஆகிவிடலாம்.அவரை எழுப்பவே முடியாது. எழுப்பவும் கூடாது.அம்மாவின் நினைவு வந்து,அம்மா வேலை பார்க்கிற பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளை விரட்டினேன். அம்மா ஏதோ மீட்டிங்கில் இருந்தாள். ஐந்து மணியாகும் என்று வாசலிலேயே சொல்லிவிட்டார்கள். காதில் வாங்கிக்கொண்டு, கருணையோடு ஏதாவது செய்து கொடுப்பாள். ஆனால் காத்திருக்க இயலாதே ? ...


தினமணி திரையரங்க வாசலுக்கு வந்தேன் . ஜெயவீரபாண்டியன் முன்னூறு ரூபாயுடன் காத்திருந்தார் . நன்றி சொல்லக்கூடத் தோன்றவில்லை. இதுவரை அவனுக்கு நன்றி சொன்னதில்லை. இப்போது இதை எழுதிக்கொண்டு இருக்கும்போது மனமார நன்றி சொல்லத் தோன்றுகிறது. நன்றி நண்பனே நன்றி .


மீதிப் பணத்திற்கு என்ன செய்வது ? குற்றங்கள் குற்றங்களை நோக்கித்தான் வழி நடத்தும். வேறு பாதைகளைக் குற்றங்கள் அறிவதில்லை. மனம் குறுக்கு வழியில் ஓடத் தொடங்கியது. 


அப்பா ஒரு வெற்றிகரமான மருந்தாளுனர். (PHARMACIST)எங்கள் பகுதியில் இருந்த சில டாக்டர்களை விடப் பிரபலமானவர். நிறையச் சம்பாதித்தவர். சில மிகப் பெரிய வசதியான குடும்பங்கள் அப்பாவின் வாடிக்கையாளர்கள் . பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்கள். அந்தக் குடும்பங்களுக்குக் குடும்ப மருத்துவராக அப்பாவே இருந்தார் . அதில் ஒரு குடும்பத்தின் நினைவு வந்தது .அவர்கள் அலங்கார் திரையரங்கத்திற்கு எதிர் வீதியில் இருந்தார்கள். அவர்கள் வீட்டுக்கு எப்போதாவது மருந்து கொண்டுபோய்க் கொடுக்கும் வேலையை அப்பா தந்திருக்கிறார். அவர்கள் நினைவு வந்தது. அப்பா அவசரமாக 350 ரூபாய் வாங்கிவரச் சொன்னார் என்று கேட்டேன் . ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் எடுத்துத் தந்தார்கள் .


நான்கு மணிக்குள் ரெயில்வே ஸ்டேஷன் வந்து பணம் கட்டி ரசீது வாங்கிக்கொண்டு , எல்லோரையும் அழைத்துக்கொண்டு ZAM ZAM தேநீர்க் கடையில் சமோசா டீ சாப்பிட்டு விட்டு, மீதமிருக்கிற பணத்தில் எல்லோருக்கும் பேருந்துக்குப் பணம் கொடுத்து விட்டு, நம்மால் யாருக்கும் எந்தத் துன்பமும் இல்லை என்கிற நிம்மதி வந்தது.கோபம் தணிந்தது .


மற்றவர்கள்  எல்லோரும் புறப்பட்டுப் போனார்கள் .


குற்ற உணர்ச்சியால் ,நான் வீட்டுக்குப் போகத் தயங்கி, அன்று இரவு மீனாம்பாள்புரத்தில் இருந்த சௌபாவின் வீட்டுக்குப் போனேன் .

(ஜெயவீரபாண்டியன் இன்றும் இப்போதும் அதே லேத் பட்டறையின் உரிமையாளர் . பட்டறை இப்போது அனுப்பானடியில் இருக்கிறது . இன்னும் சைக்கிள் தான் . 

கடுமையான உழைப்பாளி.இப்போதும் நட்பும் தோழமையும் தொடர்கிறது .

கனகசபாபதி எங்கோ கனராவங்கியில் வேலை பார்த்ததாக சௌபா ஓரிருமுறை சொல்லி இருக்கிறான் . நான் அவரோடு  நீண்ட நாட்களாகத் தொடர்பில் இல்லை. 


சங்கரநாராயணன் என்கிற சங்கர் பின்னாளில் சட்டம் படித்து நீதிபதியான பிறகும் தொடர்பில் இருந்தார். இப்போது இல்லை . காலமாகிவிட்டார் .


தங்கமாரி மதுரையில் எங்கோ இருக்கிறார் . சில ஆண்டுகளுக்கு முன் அலைபேசியில் பேசிக்கொண்டது தான் .இப்போது தொடர்பில் இல்லை . 


சௌபா காலமானது, உங்களில் பலர் அறிந்தசெய்தி தான் . மரணம் அடைவதற்கு முன்வரை நானும் அவனும் தொடர்பில் இருந்தோம். 


எங்களுக்கு இழைக்கப்பட்ட தவறுக்குத் தானே காரணம் என்று ஒருமுறை நேரில் மன்னிப்புக் கோரியதற்குப் பிறகு, ரெயில்வே சங்கரும்  நானும் இன்றுவரை சந்திக்கவே இல்லை.


தோழர் பரமசிவம் ஒரு நாள் தற்செயலாக மதுரை ரெயில்நிலையத்துக்குப் போகிற பாதையில் சந்தித்தார். சங்கர் தனக்குத் தகவல் சொன்னதாகவும்,நான் பணம் கட்டாமல் அவர் பேரை எழுதிக் கொடுத்திருக்க வேண்டும் என்றும் உண்மையாக ஆதங்கப்பட்டார். காட்டிக் கொடுக்க நான் விரும்பவில்லை என்றதும் கண்கள் மினுக்க நன்றி தோழர் என்றார் . அதற்குப்பிறகு அவரைச் சந்திக்க வாய்க்கவில்லை.


பாலா என்கிற பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ் படித்து ,இப்போது பணி ஓய்வு பெற்ற பின்னும் ஒரிசாவில் அரசின் சிறப்பு ஆலோசகர் . சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் என்னும் அதி முக்கிய நூலின் ஆசிரியர் . இன்னும் நிறைய சிறந்த நூல்களின் ஆசிரியர். இப்போதும் நட்பும் தோழமையும் தொடர்கிறது.)


அன்றிரவு சௌபா வீட்டில் தங்கிவிட்டு, நான் எப்போது வீட்டுக்குப் போனேன்?



வீடு எப்படி எதிர் கொண்டது ?



அப்புறம் சொல்லுகிறேன் ...



- பாரதி கிருஷ்ணகுமார்.    


    

Wednesday, May 6, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 10






அவர் புன்னகைத்தவாறே எனக்கு அருகில் வந்தமர்ந்து இரகசியம் சொல்லுகிற குரலில், சொல்ல ஆரம்பித்தார் .

" நல்ல குடும்பத்துப் பசங்களாத் தெரியிறீங்க சமயத்துல சில ஜட்ஜுங்க அபராதமே போடாம நேரா ரெண்டு மாசம் ஜெயில்னு போட்டுருவானுங்க ... எதுவேணா நடக்கும் . உங்களால மொத்தக் குடும்பத்துக்கும் கெட்ட பேரு ... அதனால "... 


சொல்லுங்க சார் என்று மீண்டும் பணிவாகக் கேட்டேன் .என் முன்கோபத்தால் இருக்கிற நிலைமையைச் சிறிது  கூடச்  சீர்குலைத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.


கடந்த காலங்களில் முன் கோபத்தால் நிறைய இழந்திருக்கிறேன். நிறையப்  பெற்றும் இருக்கிறேன் .பல இடங்களில் இந்தக் கோபம் தான் சுயமரியாதை அடிபடாமல் காத்திருக்கிறது . எனவே எனது கோபத்தின் மீது எனக்கு ஒரு மதிப்பு இருந்தது . யாராவது கால ஓங்கி  மிதிச்சுட்டா, தள்ளுய்யா என்று சொல்லுவது கோபமா என்று கோபப்பட்டிருக்கிறேன் . கோபக்காரன் என்கிற அவப்பெயர் எனக்கு ஏற்கெனவே இருந்தது . அதைவிட மோசமாகக், கோபம் வந்ததும் முட்டைக் கண்கள் சிவந்து காட்டிக் கொடுத்துவிடும் . கோபத்தை மறைக்கும் திறமையும் ஆற்றலும் இல்லாதிருந்தது . அவர் பேசப்பேச எனக்குக் கோபம் தான் வந்தது . சொல்லுங்க சார் என்றேன் மீண்டும் பொய்யான பணிவுடன் ...


அடிப்படையில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தது குற்றம் . சட்டப்படி நாம் தண்டனைக்குரியவர்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இருக்கவில்லை .எத்தனை நட்பும் தோழமையும் இருந்தபோதும், பயணச்சீட்டு வேண்டுமென்று கேட்டுப் பெற்று இருக்க வேண்டும். எல்லாம் என் தவறு ; என் குற்றம் . 


தண்டிக்கப்படுவது குறித்தோ , சிறைச்சாலைக்குப் போவது பற்றியோ எனக்கு எந்த மனத்தடையும் இல்லை . என் கவலையெல்லாம் என்னை நம்பிவந்த மற்றவர்களைக் காப்பாற்ற வேண்டும் . அதற்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது. எனவே பொறுமை பொறுமை என்று உள்ளுக்குள் நானே பெருங்குரலில் சொல்லிக்கொண்டே இருந்தேன்.
அவர் என் மனதைப் படித்துக்கொண்டே இருந்தார் .



நான் அவரைப் படிக்க ஆரம்பித்திருந்தேன். குற்றங்களைத் தடுப்பதும், குற்றவாளிகளைத் தண்டிப்பதும் தனக்கு மட்டுமேயான கடமை என்கிற அதீத உணர்வு அவருக்கு உண்டாகி இருந்ததை என்னால் உணர முடிந்தது. அதன் விபரீத நீட்சியாக எல்லோரையும் குற்றவாளிகளாகப் பார்ப்பதும் , நடத்துவதும் அவரது இயல்பாகவே மாறி இருந்தது. அது அவரது முகத்தின் தசைகளைப் பாறாங்கற்களாக மாற்றி இருந்தது. அவரது கண்கள் ஓரிடத்தில் நில்லாமல் குற்றங்களைக் கண்டுபிடிப்பதற்காகவே சுழன்று கொண்டிருந்தன. தான் மிகுந்த நேர்மையானவன் என்பதை எல்லோரும் உணரவேண்டும், தனக்கு முன்பே அதை ஒத்துக் கொள்ள வேண்டும் என்னும் பேரவா அவருக்குள் தளும்பிக்கொண்டே இருந்ததை என்னால் உணர முடிந்தது. நன்றாக மழுங்கச் சிரைத்து இருந்தார். அவரது நாசிக்கும் மேல் உதட்டுக்கும் இடைப்பட்ட பகுதி ஒரு சதசதப்பான அட்டைப் பூச்சியின் அருவருப்போடு மின்னிக்கொண்டிருந்தது . அவரது இரண்டு காது மடல்களிலும் கரேலென்று ரோமங்கள் அடர்ந்திருந்தன.உண்மையில் அவருக்குப் பெரிய மீசை வைக்கும் விருப்பம் இருந்திருக்க வேண்டும் . ஆனால் அவரது சாதியோ அல்லது குடும்பமோ அதற்குத் தடையாக இருந்திருக்க வேண்டும். அந்தத் தடையை மீறித் தனக்கொரு மீசை வைத்துக் கொள்ளும் துணிவு இல்லாதவராகவே அவர் இருந்தார் . எனவே நேரம் கிடைக்கிறபோதெல்லாம் அவர் தனது இடது கையால் அடர்ந்த தனது இடது புருவத்தின் நுனியைத் திருகிகொண்டே இருந்தார். என் 22 வயதிற்கு , இப்படியான ஒரு மனிதனை , ஒரு முகத்தை நான் அன்றைக்குத் தான் முதன்முறையாகப் பார்த்தேன். அதற்குப் பிறகான வாழ்வில் அது போல நிறைய முகங்களை நான் இன்னும் நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன். இப்படியான ஆட்கள் தங்கள் விசுவாசத்தைத்,தங்களுக்கு மேலிருக்கும் ஆட்களிடம் நிரூபிக்க எந்தக் குற்றத்தையும் , குற்ற உணர்ச்சி இல்லாமல் , அதையும் கடமை போலக் கருதிச் செயல்படுகிறவர்கள். எனக்கு மட்டும் ஓவியம் வரையும் திறன் இருந்தால், இப்போது கூட , வஞ்சகத்தை நேர்மையாகக் காட்டமுயன்ற அந்த முகத்தை வரைந்து விட முடியும். அது ஒரு மறந்து போகிற முகமல்ல. 

அவர்  பேச ஆரம்பித்தார் . கண்ணோடு கண் பார்க்காமல் , நடுவாந்திரமாக எங்கோ பார்த்துக்கொண்டு பேச ஆரம்பித்தார் . " இப்பவே உன்னையும் உன்னோட ப்ரெண்ட்ஸயும் அனுப்பிடறேன். எந்தக் கேசும் போடல. உங்களுக்கு இப்பவே சாப்பாடும் வாங்கித்தரச் சொல்லுறேன் ... என்ன சம்மதமா?" 
நான் அதற்குப்பிறகு அவர் என்ன சொல்லுவார் என்பதை ஊகிக்க முடியாமல் தவித்தேன். 
இந்த டிக்கெட் வாங்காம போற புத்தி உங்கள்ள யாருக்குமே இருக்காதுன்னு எனக்குத் தெரியும். என் கண்ணுலபடாம பகவான் உங்களை அனுப்பி இருக்கணும் . அவர் என்னையும் சோதிக்கிறார் .. உங்களையும் சோதிக்கிறார் ... எதுக்கு வள வள ன்னு பேசிகிட்டே இருக்கணும். நான் சொல்லுறத மட்டும் நீ செஞ்சா போதும். மதுரைல இருந்து செங்கோட்டைக்கும் , செங்கோட்டைல இருந்து மதுரைக்கும் டிக்கெட் இல்லாம பரமசிவம் தான் கூட்டிட்டுப் போனார்னு ஒரு ஸ்டேட்மெண்ட் குடுத்துட்டு , நீங்க பாட்டுக்குப் போய்க்கிட்டே இருங்க .. அந்த விருதுநகர் சங்கரும் எங்க கூட இருந்தார்னு சேத்து எழுதுவோம் . எல்லாமே உண்மை தான .. பொய் சொல்லலியே... என்ன நடந்ததோ அத எழுதிக்குடுங்க ... நீங்களே எழுதுங்க .. all are poets all are speakers and all are brilliant boys...  என்ன நான் சொல்லுறது" என்று தன் சகாக்களைப் பார்த்தார் . கோழியைத் தன்னோடு நட்பாக விளையாடக் கூப்பிடும் நரியின் தந்திரம்.



அதில் ஒருவர், " yes ... thats the truth ... எப்பவுமே உண்மையப் பேசீட்டா .. யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்ல" என்று வழிமொழிந்தார். 

நான் தயங்காமல், தடுமாற்றமில்லாமல் சொன்னேன். " சார் .. நாங்க டிக்கெட் எடுக்காததுக்கும் அவங்களுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது . நாங்க அவசரத்துல எடுக்கல ... நீங்க கேக்குற மாதிரி எல்லாம் எந்தக் காலத்துலயும் எழுத முடியாது. அவங்க எங்களுக்கு டிக்கெட்டுக்கு சாப்பாட்டுக்கு ன்னு எல்லாத்துக்கும் பணம் குடுத்தாங்க ... அவங்களை இதுல சம்பந்தப் படுத்தாதீங்க நீங்க சட்டப்படி என்ன செய்யணுமோ அதைச் செய்யுங்க" என்றேன் . என்னை மீறி என் கோபம் என் கண்களின் வழியே கசிந்தது. 

மறு நொடியே " அப்ப அபராதம் கட்டுங்க இல்ல ஜெயிலுக்குப் போங்க .. எனக்கு என்ன? ஏதோ படிச்ச பசங்க.. உதவி செய்யலாமேன்னு சொன்னேன் ... நீ அவ்வளவு ரோஷக்காரன்னா காசைக் கட்டிட்டுப் போ "

காசைக் கட்டுனதும் விட்டுருவீங்களா?

அப்புறம் ... உங்களை வச்சுக்கிட்டு நாங்க என்ன பண்ணப் போறோம் ?

எவ்வளவு கட்டணும்?

இந்தா ... இப்ப சொல்லுறேன் ... பில் புக் போல இருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஏதோ எண்களாக எழுதினார் .அவருடன் இருந்த ஒருவரிடம் எனக்குப் புரியாத மொழியில் ஏதோ பேசினார் . இரண்டு பேரும் வாக்குவாதம் செய்து கொண்டார்கள் . மீண்டும் ஏதோ எண்களாக எழுதினார். நான் மெதுவாக எட்டிப் பார்த்தேன் . எனக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டார். தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார் . இறுதியாக தன் சக ஊழியரிடம் ஏதோ கேட்டார் .
அவர் OK என்றார் .

அபராதத் தொகையாக அவர் எவ்வளவு சொன்னார்?

அப்புறம் சொல்லுகிறேன் 

- பாரதி கிருஷ்ணகுமார்