Friday, January 28, 2011

கரையுடைத்தது கண்ணீர்

குருவிக்காரன் சாலை கீழ் இறங்கி, வைகை ஆற்றுக்குள் தரைப்பாலமாகி, மீண்டும் மேடேறிக் கொள்ளும். ஓசையின்றி ஓடிக்கொண்டிருந்தது வைகை.கடந்து போன வாகனங்களும, மனிதர்களும்,கூட மௌனமாகக் கடந்து போனார்கள் .எப்போதாவது சூழலும் நமது மௌனத்தை ஏற்று தனதாக்கிக் கொள்ளுகிறது.

முதல் நாள், திருப்புவனத்தில் வைகையாற்றில் தான் அம்மாவின் அஸ்தியைக் கரைத்தோம். பூமிக்கு வந்த ஆத்மாக்களைத் திருப்பி அனுப்புகிற வனம் என்பதால் "திருப்புவனம்" என்றார்கள். இங்கு அஸ்தியைக் கரைத்திருக்கக் கூடாது என்று அப்போது தோன்றியது எல்லாம் நடந்து முடிந்த பிறகு, என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்று யோசனைகளை உற்பத்தி செய்து காட்டுவது, மனசுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.

பாலம் கடந்து மேடேறியதும், இடதுபுறம் இருந்த திரையரங்கின் வாசளில் நின்று, "சினிமாவுக்குப் போகலாமா ?" என்று கேட்டார் அக்கா வீட்டுக்காரர். மறுக்கவுமில்லை. சம்மதிக்க்கவுமில்லை. ரெண்டுங்கெட்டான் நிலை என்பது இதுதான், என்று இப்போது தெரிகிறது. இழுத்த இழுப்புக்குப் போய், உள்ளே உட்கார்ந்த சில நொடிகளில் திரைப்படம் ஆரம்பித்தது.

நேர்த்தியான ஒளிப்பதிவு, பொருத்தமான பின்னணி இசை, அளவான உரையாடல்கள் எனப் படம் நகர்ந்தது. ஒரு வாழ்க்கையை அவதானிக்கிறோம் என்ற உணர்வை, படம் உடனே உருவாக்கி விட்டது. திருமணமான மகளின் உயிர் பிரியும் தருணத்தில், அவரது தகப்பன் மகளின் குழந்தைகளை அழைத்து அவர்களை தங்கள் தாயின் வாயில் பால் ஊற்றுகிற காட்சி. பாலூட்டி வளர்த்த தாய்க்குக் குழந்தைகள் பாலூட்டிக் கொண்டிருந்தார்கள். பால் இறங்க மறுத்து, வளதுபுறமாய் வழிந்து வெளியேறிக் கொண்டிருந்தது. தாயின் உயிர் பிரிந்த அந்த தருணத்தில், அரங்கிலிருந்து வெளியேறி படிகள் இறங்குகிற இடத்தில், திரண்டிருந்த அரையிருட்டில் அமர்ந்தேன். எந்தப் பிரயாசையுமின்றி கரையுடைத்துப் பெருகியது கண்ணீர்.

அம்மா இறந்து இருபத்தியேழு ஆண்டுகளுக்குப் பின், அதே திரைப்படத்தின் திரைக்கதை புத்தக வடிவில் வந்தபோது, அதன் முதல் பிரதியை சென்னை புத்தகத் திருவிழாவில் நானே வெளியிட நேர்ந்தது. முன்பு அந்த திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்த நாளையும், கண்ணீர் கரையுடைத்துப் பெருகியதையும் அரங்கிலேயே குறிப்பிட்டு, முதல் பிரதியை வெளியிட்டேன் "உதிரிப்பூக்கள்" என் வாழ்வில் கலந்துவிட்ட ஒரு திரைப்படம் தான்.

Wednesday, January 19, 2011

வர மறுத்த கண்ணீர் ...



அம்மாவின் உயிர் பிரிந்த போது அதிகாலை நான்கு மணி . நான் அருகில் இருந்தேன் . அந்த இரவைப் பற்றி ,என்றேனும் எழுதுவேன் என்று நம்புகிறேன் .
அந்த இரவு , மூச்சுத் திணற என் முகத்தில் அடித்தது.வீட்டில் மிச்சமிருந்தது அப்பாவும் ,நானும் தான். மிக நெருங்கிய உறவினர்களுக்கு தகவல் சொல்ல நானே போக வேண்டியதாகி விட்டது . அப்பா ஒரு நாற்காலியில் சரிந்து கிடந்தார் . எதிர் வீட்டில் இருந்த சாம் நெதானியேல் மாமா தனது ஸ்கூட்டரைக் கொண்டு வந்தார் . அக்கா வீடு , சித்தப்பா , மாமா வீடு என மிக நெருங்கிய உறவினர்கள் வீடுகளுக்குப் போய்ச் சொன்னோம் .அவர்கள் அழ , அடுத்த வீடுகளுக்கு விரைந்தோம் .
வீடு திரும்பிய போது நன்கு விடிந்திருந்தது .மனமெல்லாம் இருட்டு அடைத்திருந்தது .கட்டிலில் கிடந்த அம்மாவை இரட்டை பெஞ்ச் போட்டு நடுவீட்டில் கிடத்தி இருந்தார்கள் .மாலை போட்டு , தலை மாட்டில் ஒரு விளக்கு ஏற்றி இருந்தது . அம்மா விரும்பி வாங்கி வைத்திருந்த ஊதுபத்திகள் புகைந்து கொண்டு இருந்தன . அதன் மணம் முற்றிலும் வேறாக இருந்தது . யாரோ என்னைக் கட்டிப் பிடித்து அழுதார்கள் . எனக்கேதும் அழுகை வரவில்லை . அன்றே , மாலையே எல்லாம் முடிந்தது .
மூன்று நாட்கள் கடந்து விட்டன , எல்லோரும் அழ வேண்டும் என்று சொல்லிக்கொண்டே  இருந்தார்கள் .நானும் முயன்று கொண்டே இருந்தேன் . கண்ணீர் கண்களில் இருந்து எங்கோ தொலைதூரம் போய்விட்டிருந்தது .
"அவன் நெஞ்சழுத்தக்காரன் ".... " ஆத்தாவ முழிங்கிட்டு அழுகாம திரியுது "...."அழுகை வர முடியாதபடி என்ன மனசோ ' ....." அவன் சோத்துல காய மறச்சுவச்சு திங்கிறவன் " ..."ரொம்பத் துக்கமானா அழுகை வராதா "....என்று வித விதமான குரல்கள் என்னைச் சுற்றித் திரிந்து கொண்டே இருப்பது தெரிந்தும், அழுகை வரவில்லை .
கண்கள் ரத்தச் சிவப்பில் குழம்பிக் கிடந்தன .அக்கா வீட்டுக்காரர் மூன்றாம் நாள் இரவு வெளியே போகலாம் என்றார் . பதினாறு நாள் எங்கும் போகக்கூடாதென்று சொல்லி இருப்பதை நினைவூட்டினேன் . "அது , துக்கம் கேக்க யாராவது வந்தால் வீட்டுல ஆளு இருக்கணுங்குற சம்பிரதாயம். ராத்திரில எவன் வர்றான் ? வா குமாரு .. வெளிய போகலாம் " என்றார் . எங்காவது வெளியில் போக மனம் தவித்துக்கொண்டே இருந்தது . கீழச்சந்தைப்பேட்டை பக்கம் திரும்பி வைகை ஆத்தங்கரைப் பக்கம் நடந்தோம் .
மூன்று நாட்களாக மூடிக் கிடந்த கண்ணீர்ச்சுரப்பிகள் அறுந்து , உடைந்து , கிழிந்து ....கதறிக் கதறி அழப்போவது தெரியாமல் போய்க்கொண்டு இருந்தேன் குருவிக்காரன் சாலையில் .....
 ·  · Share · Dele