Sunday, April 26, 2020

அருப்புக்கோட்டையும் , போஸ்பாண்டியனும் , பாரதி கிருஷ்ணகுமாரும்- உலகப் புத்தக தினம்



2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நண்பனும் தோழனுமான போஸ்பாண்டியன் என்னைத் தொலைபேசியில் அழைத்தான் . எப்போதும், எங்களில் யார் அழைத்தாலும் வணக்கம் என்ற வார்த்தைக்குப் பிறகு இரண்டு பேரும் மனமாரச் சிரித்துக் கொள்ளுவோம் .சில நொடிகள் நீடிக்கும் சிரிப்பு . நல்ல சிரிப்பு . புன்னகை அல்ல . சிரிப்பு . எந்தக் காரணமும் தேவைப்படாத சிரிப்பு. உரையாடல் துவங்குவதற்கு முன்பாக இருவரும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளுவது அந்தச் சிரிப்பு தான். புதிதாகப் பார்க்கிறபோது சிலருக்கு அல்லது பலருக்குப் புரியாத சிரிப்பு. அந்த நாள் முழுவதும் நீரோடை போலக் கூடவே நடைபோட்டு வருகிற சிரிப்பு. சிரித்து முடித்ததும் உரையாடத்துவங்கினோம். அவன் என்னை அருப்புக் கோட்டை புத்தகத் திருவிழாவுக்கு அழைத்தான். அவன் புதிதாகத் துவங்கிய பாரதி புத்தகாலய புத்தகக் கடையைத் திறந்து வைத்து , புத்தகத்திருவிழாவையும் துவக்கிவைக்க வேண்டும் என அழைத்தான். எனக்கு மாளாத வியப்பு . இதில் வியந்து போக என்ன இருக்கிறது ? என்று உங்களில் பலர் நினைக்கலாம் . நீ தான் நிறைய புத்தகத் திருவிழாக்களுக்குப் போகிறாயே ... இதில் உனக்கென்ன வியப்பு என்றும் கேட்கலாம் . உண்மை தான் . அப்படி நீங்கள் நினைத்தால் கேட்டால் தவறில்லை . ஆனால் எனது வியப்புக்கு வேறு காரணங்கள் உண்டு. அதை இப்போது இங்கு விவரிக்க நான் விரும்பவில்லை . பிறகு எப்போதாவது யாராவது நினைவூட்டினால் சொல்லுகிறேன் . போஸ் என்னையா அழைக்கிறீர்கள்? என்று மீண்டும் வியப்புடன் கேட்டேன் . ஆமாம் BK ..உங்களைத்தான் அழைக்கிறேன் . நீங்கள் தான் வரவேண்டும் என்றான் உறுதியான குரலில்... நான் மௌனமாக இருந்தேன். "BK' என்று அழைத்தான். நான் தயக்கமாக ஆனால் மிகுந்த மகிழ்ச்சியாக "வருகிறேன்"என்றேன். போஸ் தொடர்ந்து பேசினான் .... இந்த ஆண்டு மட்டுமல்ல.. இனி வரும் எல்லா ஆண்டுகளிலும் ஏப்ரல் இருபத்திமூன்றாம் தேதி உலக புத்தக தினத்திற்கு நீங்கள் அருப்புக்கோட்டையில் தான் இருக்கவேண்டும் . நீங்கள் தான் புத்தகத் திருவிழாவைத் துவக்கிவைக்க வேண்டும் என்றான் . 2017, 2018, 2019 எனத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஏப்ரல் 23 ஆம் தேதி அருப்புக்கோட்டையில் தான் இருக்கிறேன் . யார் என்ன பொருள் கொடுத்தாலும் , எந்த நாட்டுக்கு அழைத்தாலும் போவதைத் தவிர்த்து அருப்புக்கோட்டைக்குத் தான் போகிறேன் . பழைய பேருந்து நிலையத்திற்குப் பக்கத்தில் ஒரு சிறிய திருமண மண்டபத்தில் நடக்கும் புத்தகத் திருவிழாவைத் துவக்கி வைக்கிறேன். தனியொரு மனிதனாக போஸ் எடுக்கும் இந்த முயற்சிக்கு , அவன் செய்யும் திருப்பணிக்கு அவனோடு , அவனருகில் நிற்கிறேன் . ஏன் ? 2017 ஆம் ஆண்டு அவன் அழைத்தபோது நான் தயங்கினேன் என்று முதலில் சொன்னேன் .. என் தயக்கத்தை போஸ் உடைத்தான் . அன்பு ததும்பும் சொற்களால் உடைத்தான். கண்களில் கண்ணீர் பெருகி உடைத்து ஓட என் தயக்கத்தை உடைத்தான் .. ஆஅம் ... ஆஆம் ..போஸ் சொன்னான். BK .. நீங்க வரணும் .. நீங்க தான் வரீங்க ... நான் உயிரோட இருக்கிறவரைக்கும் என்றான் ... நாம் உயிரோட இருக்கிறவரைக்கும் என்றேன் நான் . ***** எல்லாவற்றிலும் மண்ணள்ளிப் போட்ட கரோனா புத்தகத் திருவிழாவையும் நடக்காமல் செய்து விட்டது. என் நண்பன் போஸ் மறக்காமல், " இந்த ஆண்டு எதுவும் செய்ய இயலாது .. எனவே நீங்கள் ஒரு செய்தியை மட்டும் பதிவு செய்து எங்கள் அருப்புக்கோட்டை மக்களுக்குத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டான் . இதோ ... உலகில் உள்ள எல்லோருக்குமான எனது உலகப் புத்தக நாள் செய்தியும் , வாழ்த்தும் ... சிறப்பாக அருப்புக்கோட்டை மக்களுக்கு... மிகச் சிறப்பாக உனக்கு .. கண் கலங்குகிறது நண்பனே ... திரையில் எழுத்தும் கலங்குகிறது ... ஆனபோதும் எதிர்காலம் துல்லியமாகத் தெரிகிறது. என்றும் தோழமையுடன் , பாரதி கிருஷ்ணகுமார் .



இந்த இணைப்பில் உலகப் புத்தக தின வாழ்த்து :
https://youtu.be/3a9tC1lUrBw


தோழர் . போஸ்பாண்டியன்

No comments:

Post a Comment