Monday, November 23, 2020

மேடையை வசப்படுத்துவது எப்படி ? தினமணி தீபாவளி மலர்- மேடைப்பேச்சு ஒரு நிகழ்கலை

 1. எப்போதும் மேடை என்பது தனித்த , உயர்ந்த பீடம் அல்ல ; அது பார்வையாளர்கள் கண்களில் , பேசுபவர் காணக் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தரப்படும் தற்காலிக உயரம் . மேடையில் ஏறி விடுவதாலேயே நாம் உயர்ந்தவர்கள் ஆகி விடுகிறோம் என்று கருதாமல் இருப்பது , மேடையை வசப்படுத்த விரும்புவர்களுக்கான அரிச்சுவடி .


2. எந்த மேடையிலும் ஏறுவதற்கு முன் , அது நமது சிந்தனைக்கு உகந்த மேடைதான் என்கிற உறுதிப்பாடு வேண்டும் . எத்தனை கோடிக் கொட்டிக் கொடுத்தாலும் , அறிவுக்கும் ஆன்மாவுக்கும் ஒவ்வாத மேடைகளை மறுக்கிற மன உறுதி ஆதாரமானது . ஒவ்வாத மேடைகளில் ஒளிரவே இயலாது . 


3. மேடையை அறிவதென்பது , பார்வையாளர்களை அறிவதேயாகும் . பார்வையாளர்கள் இன்றி மேடைகள் இல்லை. பார்வையாளர்களின் நீட்சியே மேடை . மேடையின் நீட்சியல்ல பார்வையாளர்கள் . இதை அறிந்திருப்பது அவசியமானது . 


4. எந்த அவையிலும் , கூடி இருப்போர் அனைவரின் நேரமும் நம் கைகளில் தரப்பட்டிருக்கிறது என்கிற கவனமும் அக்கறையும் எப்போதும் நினைவில் இருக்கட்டும் . சங்கீதம் தெரியாது போனாலும் பிழையில்லை . இங்கிதம் தெரியாமல் இருக்கலாகாது . 


5. மேடையில் நிற்பது நுனிக் கொம்பேறுவது என்கிற அவையச்சம் இருந்தேயாக வேண்டும் . அந்த அச்சம் தருகிற துணிவு எல்லையற்றது. 


6. நிகழ்ச்சி அமைப்பாளர்கள், பார்வையாளர்கள் என சுற்றுச் சூழலை முற்றாக உணர்ந்து , பேசுபொருளைத் தீர்மானிப்பது பேசுகிறவன் கடமை . கண்ணியமும் , கட்டுப்பாடும் தேவைப்படுகிற கடமை . 


7. முழுமையான , விரிவான முன்தயாரிப்பு ( HOME WORK ) இன்றி மேடையேறுதல் குற்றம் . தயாரிக்க இயலாது போனால், பேசுவதைத் தவிர்ப்பதே சிறந்தது . தயாரிக்கப்படாத உரை நிகழ்த்தப்படாவிட்டால் , எவருக்கும் எந்த இழப்பும் இல்லை . 


8. வெல்லும் சொல் தேர்ந்து பேசுவது வெற்றிக்கான வழி . மனித மனங்களை வெல்லுவதொரு மாயக்கலை . அது அவ்வளவு எளிதில் வசமாகி விடுவதில்லை. அர்ப்பணிப்பு , அக்கறை , உழைப்பு , என்று பல படிகள் ஏறித்தான் உயரத்துக்கு வர இயலும் .ஒரு குழந்தைக்குச் சோறூட்டும் தாயின் அக்கறை போலப் பேச்சு இருக்க வேண்டும் . எப்படியாவது கற்றுத் தந்துவிட வேண்டும் என்ற நல்லாசிரியனின் தீவிரம் தேவைப்படுகிறது .இந்த அக்கறையும் , தீவிரமும் பேசுகிற சொற்களில் மட்டுமல்ல; சொற்களின் இடைவெளிகளிலும் இருக்க வேண்டும். பேசுவதை நாமும் கேட்டுக் கற்றுக் கொள்ளுகிறோம் என்பதால் , எப்போதும் ஒரு மாணவப் பணிவு மனதிற்குள் இயங்குதல் வேண்டும் . 


9. இவை அனைத்தின் திரட்சியில் . எல்லையற்றுப் பரந்து விரிந்த நமது மொழி, நமக்குத் தரும் விசாலமான வெளியெங்கும் பறந்து திரிதல் வேண்டும் .சொற்கள் சேர்ந்து பொருளாக உருக்கொள்ளும் தருணத்தில் , தொனியின் துணை கொண்டு களமாட வேண்டும் . பேசுகிறவரை அது நிலம் . பேசத் துவங்கியதும் அது களம் . 


10. ஆயிரம் பேர் நிறைந்த அவையென்றால் , இரண்டாயிரம் கண்களும் , இரண்டாயிரம் செவிகளும் பார்த்துக்கொண்டும் / கேட்டுக்கொண்டும் இருக்கப் பேசுகிறோம் என்கிற பிரக்ஞையில் இருந்து பிறழவே கூடாது . 


11. புதிய சிந்தனைகளும் , செய்திகளும் அவைக்கு எளிதில் வசமாகி விடும் .  தேர்ந்த அவை அதனை அப்போதே கொண்டாடி மகிழ்ந்து விடும் . ஆனால் , அறிந்த செய்திகளைப், பேசியே தீர வேண்டியவற்றை பேசுகிறபோது , கூறியது கூறல் நேருகிறபோது , வியத்தகு புதுமையுடன் அதனை மொழிதல் வேண்டும் . 


12. மேடைப்பேச்சு ஒரு நிகழ்கலை .   சர்க்கஸ் , நாடகம் , கூத்து இவற்றைப்போல ... "கரணம் தப்பினால் மரணம் " என்கிற கவனமே , நமது வழித்துணை . 


13. மொழி , சிந்தனை , த்வனி இவற்றுடன் உடல் மொழியும் இசைவாகச் சேருவது , சமைத்த பண்டத்தைச் சாதுர்யமாகப் பரிமாறுவதற்கு ஒப்பானது . 


14.   தனித்தனி இழைகள் சேர்ந்து , கூடித் துணியாகி மானம் காப்பது போலவே , மேற்சொன்னதெல்லாம் சேர்ந்துதான் ஒரு உரை  நிகழ்த்தப்படுகிறது . அது பேசுகிறவனுக்குப் பொருளும் , புகழும் கொண்டுவந்து சேர்க்கும் . அது அவன் வாழ்க்கைத்   தேவைகளுக்கான நேரிய பொருளீட்டும் வழி. ஆனால், ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதான மாண்புடைய, மாசற்ற அன்பும், இந்த மண்ணின் மீது கொண்ட மாளாத காதலும் தான் வசப்படுத்தும் தகுதிகள். 


15.  "அவையஞ்சி மெய் விதிர்ப்பார் கல்வியால் பயனில்லை, "கல்லார் அவையாஞ்சா ஆகுலச் சொல்லாலும் பயனில்லை" என்பார் பிரபந்தங்களின் பேராசான் குமரகுருபரர். இது - "பூத்தலின் பூவாமை நன்று."


16.  ஓர் அங்குலமேனும் தானும், சபையும் மாண்புற்று உயர வேண்டும் என்று கங்கணம் காட்டிக் கொண்டால், எல்லாமே நம் வசமாகும்.

  





                                                          பாரதி கிருஷ்ணகுமார்


Friday, November 20, 2020

Thursday, November 19, 2020

"இருப்பிடம்"

கழுத்தறுத்தாய்
பின்னிருந்து...
நீ அறுப்பதற்கு இசைவாகக் கழுத்தை சாய்த்துக் கொடுத்தேன் என்பது உனக்குத் தெரியுமா ?
நீ பற்றிக்கொண்டு போவதற்கு ஏதுவாக
நொடிகளின் இடைவெளிகளின் இடைவெளிகளில்
என் தலைமுடி வளர்ந்தது உனக்குத் தெரியுமா ?
சிந்துகிற குருதி உன் கால்களில் பட்டுவிடக் கூடாதென்பதற்காக அறுபட்ட கழுத்தின் தசைகள் துடித்தது உனக்குத் தெரியுமா ?
நீ அறுப்பதற்கு முந்தைய கணங்களிலேயே
என் சிந்தனையின் இருப்பிடத்தை
இடம் மாற்றிக் கொண்டது உனக்குத் தெரியுமா ?
கழுத்தறுபட்ட பின்னும் கைகள் எழுதுவதைப்
பார்த்திருக்கிறாயா?
பார்.

-ப்ரகலாதன்
(பாரதி கிருஷ்ணகுமார் )

Friday, November 6, 2020

Thursday, November 5, 2020

42 B , L.F தெரு , சாத்தூர் .


 உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் எது என்று கேட்டால் எதைச் சொல்வீர்கள் என்று "அந்திமழை" மாத இதழில் இருந்து ஒரு கட்டுரை கேட்டார்கள் . அனுப்பினேன் . பிரசுரம் ஆகி இருக்கிறது. அந்திமழைக்கு என் மனமார்ந்த நன்றியும் வணக்கமும்.

அதன் சற்றே சுருக்கப்பட்ட வடிவம் நவம்பர் மாத அந்திமழையில் பிரசுரம் ஆகி இருக்கிறது.

இது முழுக் கட்டுரையும் ... 


30 ஏப்ரல் 1990

அப்போது நான் கிராம வங்கி ஊழியன். அதன் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர். அகில இந்திய அமைப்பின் துணைப்பொதுச் செயலாளர். நாடெங்கிலும் கிராமவங்கி ஊழியர்களின் ஊதியம், பணி  நிலைமைகள் என எல்லாவற்றிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். ஏற்றத்தாழ்வுகள்.மிகவும் இழிவான நிலைமையில் வைக்கப்பட்டு இருந்தார்கள் நான்காம் நிலைக் கடைநிலை ஊழியர்கள்.பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பணி நிரந்தரம் இன்றி , அந்தக் கூலிகளாக அற்ப ஊதியத்தில் பணி புரிந்தனர். என் கவனம் முழுவதையும் அவர்கள் பக்கம் திருப்பினேன் . அவர்கள் பணிநிலைமையை மாற்ற, எடுத்துக்கொண்ட முயற்சிகள் எதையும் நிர்வாகம் பொருட்படுத்தவில்லை. அதிகாரிகள் ஆளுக்கொரு திசையில் கைகாட்டி விட்டு, ஆடம்பரமாய்த் திரிந்தார்கள். பொறுக்க முடியாமல் 28 ஏப்ரல் 1986 ஆம் தேதி ஒரு நீண்ட கடிதத்தை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எழுதினேன் . 13 ஜுன்  1986 அன்று , பழுப்பு நிற நீண்ட உறையில் ,அரக்கு வண்ணத்திலான உச்ச நீதிமன்றத்தின் இலச்சினையோடு கூடிய கடிதம் வந்தது.எனது முந்தைய கடிதமே , மனுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக, இந்தக் கடிதம் சொன்னது . நான் வழக்காடத் தயாரானேன் . பின்னாளில் நீதியரசரான திரு கே சந்துரு , அப்போது எங்கள் சங்கத்தின் வழக்குரைஞர். எல்லாம் தயாரானது.

அந்தச் சமயத்தில், கிராமவங்கி ஊழியர்களின் ஊதியம், பணி நிலைமைகள் குறித்து விசாரிக்க ஒரு தீர்ப்பாயத்தை உச்சநீதி மன்றமே அமைத்தது.எங்கள் வழக்குகள் அனைத்தும் தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டது. தீர்ப்பாயத்தில் அனைத்து ஆவணங்களுடனும் ஆதாரங்களுடனும் சாட்சியம் அளித்தேன் . நான்காம் நிலை ஊழியர்கள் பணி நிரந்தரம் குறித்துக் கூடுதல் கவனம் செலுத்தினேன் . மூன்றாண்டு கால விசாரணைக்குப் பிறகு 30 ஏப்ரல் 1990 அன்று தீர்ப்பாயம் தனது தீர்ப்பை வழங்கியது.

ஹைதராபாத்தில் இருந்து இயங்கிய தீர்ப்பாயத்தின் அலுவலகத்தில் நீதிபதி ஓபுல்ரெட்டி தனது தீர்ப்பை வழங்கிய போது , அந்த அறையில் நானும் இருந்தேன் . நாங்கள் வழக்கில் பெற்றோம்.

இந்தியாவிலேயே முதன்முறையாகப் பணி நிரந்தரம் நடந்தது பாண்டியன் கிராம வங்கியில் தான் . சராசரியாக ₹20000 வரை ஊதிய நிலுவைத் தொகை நான்காம் நிலை ஊழியர்களுக்குக் கிடைத்தது. பின்னர் அவர்களில் பெரும்பாலானோர் பதவி உயர்வு பெற்று, காசாளர்கள்/ மேலாளர்கள் ஆகிப் பணி ஓய்வும் பெற்று விட்டார்கள் ‌. ஒரு நாகரீகமான ஓய்வூதியமும் பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த மகிழ்ச்சி ஒரே ஒரு நாள் மகிழ்ச்சி அல்ல ...எனக்கு மட்டுமான மகிழ்ச்சியுமல்ல ...பலருக்குமான தொடர் மகிழ்ச்சி.

28 ஏப்ரல் 1986 அன்று சாத்தூரில் , 42 B, LF தெருவில் இருந்த , எங்கள் சங்கத்தின் அலுவலகத்தில் இருந்து எழுதின கடிதம் தந்த மகிழ்ச்சி அது .

அந்த இடத்தை , எழுதிய கணத்தை இப்போதும் நினைக்கிறேன்.

மகிழ்கிறேன்.


பாரதி கிருஷ்ணகுமார்