Monday, September 30, 2013

ஒற்றைச் சொல்

தாத்தாக்களும், பாட்டிகளும்
அம்மா , அப்பாவும் ,
அக்காக்களும்
ஆரம்ப , நடு , உயர் பள்ளி ஆசிரியர்களும் ,
ஒரு சில கல்லூரி ஆசான்களும் ,
வேலைக்கு வந்தவிடத்தில்
அபூர்வமாய்ச் சிலரும்
இப்படித்தான் அழைத்தார்கள் .

இன்னும் கூட மிச்சமிருக்கிறார்கள் ஓரிருவர் .
அப்படி எல்லோரும் அழைத்தது ,
என்னைத்தானென்ற போதும் ,
அழைக்கப்பட்டது நான் மட்டும் தான் .
எல்லோருமழைத்தது  எல்லாம்
செவிகளில் நுழைந்து திரும்பிய ஓசைகள் .

அதே ஒற்றைச் சொல்லால்
அவள் அழைக்கிற போது ,
உடல் , உயிர் , உணர்வு , ஆன்மாவென்று
எல்லாவற்றையும் அழைக்கிறது அது .
ஒற்றைச்சொல் மந்திரமாகும்
சூட்சுமமது .

அழைக்க அல்லாது ,
உயிர்ப்பிக்க அழைத்த ஒற்றைச் சொல்

"டே "....






Thursday, September 19, 2013

ஒப்பனையற்ற எழுத்துக்காரன் 02

மதுரையில் நடந்த விழாவில் நான் சொன்னேன் .

ஒரு படைப்பாளியை அவனது படைப்புகளின் வழியே தான் அவனது வாசகர்களும் , ஒரு சமூகமும் அணுகுதல் வேண்டும் .

அவனது தனிப்பட்ட , அந்தரங்க வாழ்க்கையின் வழியே அவனது படைப்புகளை அணுகுதல் பிழையான அணுகுமுறை .

திருவள்ளுவர் நல்லவரா , கெட்டவரா என்று யாருக்குத் தெரியும் ? திருவள்ளுவரைப் பற்றி வழக்கில் இருக்கும் கதைகள் அவரது புகழுக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை .திருவள்ளுவர் அழைத்ததும் , கிணற்றடியில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருந்த அவரது மனைவி வாசுகி , கயிற்றை அப்படியே விட்டு விட்டு ஓடிப் போனதாக ஒரு கதை சொல்லப்படுகிறது .அந்தக் கயிறும் , வாளியும் கிணற்றில் விழாமல் அப்படியே இருந்ததாகக் கதை நீளுகிறது .

கயிறும் , வாளியும் அப்படியே நின்று விட வாய்ப்பே இல்லை . இறைத்து முடித்து விட்டு வருகிற வரை காத்திருக்கும் பொறுமை வள்ளுவருக்கு இல்லாமல் இருந்திருக்கும் என்று எடுத்துக் கொண்டால் , "வாழ்க்கைத் துணை நலம்" என்ற அதிகாரத்தை எந்த அதிகாரத்தில் வள்ளுவர் எழுதினார் என்று எளிதில் கேட்டு விடலாம் .இது பொருத்தமான அணுகுமுறை அன்று .ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை முறைகளைக் கடந்து நிற்பது படைப்பு மட்டுமே .

இந்தக் கேள்வியைக் கம்பன் , இளங்கோ , காளிதாசன் , என்று எல்லாப் படைப்பாளிகளுக்கும் , படைப்புகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம் . திருவள்ளுவரைப் பற்றி எல்லாம் இத்தகைய கேள்விகளை நீங்கள் எழுப்பக்கூடாது என்று ஒரு நண்பர் நிகழ்ச்சி முடிந்ததும் சொன்னார் . அவருக்குச் சொன்னேன் . "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் ...... என்பது வள்ளுவனுக்கும் பொருந்தும் என்று . அவர் அறிவு ஒப்புக் கொண்டாலும் மனசு கேட்கவில்லை என்றார் . அதற்கு யாமென் செய்தல் கூடும் ?

காலத்தால் முந்தய படைப்பாளிகளின் படைப்பை மதிப்பிட , படைப்பின் வழியாக மட்டுமே அவர்களை அணுகும் சமூகம் , சம காலப் படைப்பாளிகளின் விசயத்தில் நீதியற்ற , நெறியற்ற அணுகுமுறையை கைக்கொள்ளுகிறது

அது தான் ஜி . நாகராஜனின் விசயத்தில் நடந்தது . அவரது படைப்புகளைப் பற்றிய உரையாடல் எழுந்த போதெல்லாம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்களும் இணைந்து கொள்ளுவதை நான் கண்டிருக்கிறேன் .
எனக்கு அது எப்போதும் பொருத்தமற்றதாக , வரம்பு மீறியதாகவே பட்டிருக்கிறது .

நான் ஜி . என் அவர்களைப் பார்த்ததில்லை . அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எனக்கு எதுவும் தெரியாது . தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. அவரது படைப்புகளின் வழியாக மட்டுமே நான் அவரை அறிந்திருக்கிறேன் . அது எனக்குப் பெருமிதமும் , உவப்பும் தருகிறது .

"தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா" என்று பாடுவதற்கு எல்லையற்ற மகத்தான கற்பனையும் , காதலும் வேண்டும் . அது பாரதிக்குள் பொங்கிப்பிரவகிக்கும் கவிதைப் பேராற்றல். அது எல்லோருக்கும் வாய்க்காது .

அது போலவே , சமூக அநீதிகள் குறித்து எழுதுகிற எல்லோரும் , நெருப்புக்கு வெளியே நின்று கொண்டு தான் நெருப்பைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள் . இருக்கிறோம் .

ஆனால் , நெருப்புக்குள் நிற்கிறவனுக்குத்  தான் அதன் அசலான சூடு தெரியும். அப்படி ,நெருப்புக்குள் நின்று எழுதிய வெகு சில படைப்பாளிகளில் ஒருவர் ஜி . நாகராஜன் .

                                                                           அன்று பேசியதை இன்னும் எழுதுவேன்

Sunday, September 15, 2013

ஒப்பனையற்ற எழுத்துக்காரன் 01

ஜி . நாகராஜனின் நினைவைக் கொண்டாட வேண்டுமென , தம்பி பயஸ் தான் முன்மொழிந்தார் .உடனே அதைச் செயல் படுத்த வேண்டும் என முடிவு செய்தோம் . மதுரைப்  புத்தகக் கண்காட்சியில் உள்ள படைப்பரங்கில், அதனை நிகழ்த்துவது என்று முடிவானது . கோவை வெளிச்சம் வெளியீடு நிறுவனர் நண்பர் பாலாஜி அவர்களை இது குறித்து கோவை விஜயா பதிப்பக உரிமையாளர் அன்பிற்குரிய "அண்ணாச்சி" திரு . வேலாயுதம் அவர்களிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டேன் . பப்பாசி நிர்வாகிகளிடம் பேசி அண்ணாச்சி கட்டணமின்றி அனுமதி பெற்றுத் தந்தார் .முதல் நன்றியும் , வணக்கமும் அண்ணாச்சிக்குச் சொல்ல வேண்டும் .பப்பாசிக்கும் , அதன் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றி .

இனி வரும் காலங்களில் பப்பாசி தான் முன்னின்று நடத்துகிற புத்தகக் கண்காட்சிகளில் மாலை நேரப்  பொது அமர்வுகளில் நமது மொழியின் மற்றும் பிற மொழிகளின் மகத்தான படைப்பாளிகளை வெகு மக்களுக்கு, தகுதியான சொற்பொழிவாளர்கள் வழியே சிறப்பாக அறிமுகம் செய்து வைக்கலாம் . ஔவை , வள்ளுவன் , இளங்கோ , பாரதி , காளிதாசன் , பஷீர் , தகழி , கார்க்கி , கம்பன் ,செக்காவ் , தாயுமானவர் , குமரகுருபரர் , பாவேந்தர் , ..... என்றொரு மாபெரும் பட்டியல் இருக்கிறது . பட்டிமண்டபங்களை விட , தனித் தலைப்புகளை விட இது சிறந்த பயனை அளிக்கும் . பப்பாசியின் கவனத்திற்க்கு இதனை யாராவது கொண்டு போக வேண்டுகிறேன் . ஆட்சியாளர்களை , அதிகாரத்தில் இருப்பவர்களை சங்கடப் படுத்தாமல் புத்தகக் கண்காட்சியையும் சிறப்பாக நடத்தி கொள்ளலாம் .ஒரே கல்லில் இரண்டுக்கும் மேற்பட்ட மாங்காய்களை அடிக்கும் வித்தை எல்லாம் இப்போது எல்லோரும் சொல்லித் தருவதில்லை .


நிகழ்வுக்கு என்ன தலைப்பிடுவது என்று பயஸ் கேட்டார் . ஆழ்ந்து சில நிமிடங்கள் யோசித்து  "ஒப்பனையற்ற  எழுத்துக்காரன்" என்ற தலைப்பை சொன்னேன் . பயஸின் தனது சந்தோசத்தை அப்போதே உற்சாகமான குரலில் வெளிப்படுத்தினான் .அழைப்பிதழை வடிவமைத்தோம் . நினைவுப் பரிசைத் தீர்மானித்தோம் . அழைப்பிதழில் பெயர் இல்லாத போதும் விழாவில் பங்கு பெற்றுப் பேச விரும்புவதாக உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் பெருந்தன்மையோடு விருப்பம் தெரிவித்தார் .அவருக்கும் நன்றி சொல்லணும்

 அவரது படைப்புக்களை முழுவதுமாக வாசித்திருந்த போதும் , மறு வாசிப்பிற்காக மீண்டும் புத்தகம் வேண்டுமெனக் கேட்டதும் தனது பிரதியைத் தந்து என்னை வியப்பில் ஆழ்த்தினார் பயஸ் .

விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது . ஜி . என் , அவரது படைப்புகள் மிகச் சிறப்பாக நினைவு கூறப்பட்ட தருணம் அது . அவரது அன்பு மகன் திரு . கண்ணன் முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு , தன் தந்தை வாழ்ந்த மதுரை மண்ணில் அவரது நினைவும் , படைப்புகளும் கொண்டாடப் படுவதைக் கண்கள் சிவக்க , கலங்கப் பார்த்துக் கொண்டே இருந்தார் . அவரது தந்தையின் உருவப் படத்தை நான் அவருக்குப் பரிசளித்த போது மிக மிக நெகிழ்ந்து , ததும்பிக் கொண்டே அதைப் பெற்றுக் கொண்டார் .

சென்னைக்குத் திரும்பி , வீட்டில் அந்தப் படத்தை தனது தாயிடத்தில் தந்திருக்கிறார் . அவரே பயசுக்குப் போன் செய்து ," அம்மாவின் முகம் இத்தனை ஒளிர்ந்து இருப்பதை நான் எப்போதும் பார்த்ததில்லை . அப்பாவின் படத்தை மடியில் வைத்துக்கொண்டு அம்மா அதை ஸ்பரிசிப்பதை , கலங்குவதை , சிரிப்பதை , நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் " என்று சொல்லி இருக்கிறார் . இதைத் தனிப் பதிவாக பயஸ் தனது முக நூலிலும்
பதிவிட்டிருக்கிறார் .

இந்த நிகழ்வுக்காக அல்லாமல் வேறு பணி நிமித்தமாக மதுரை வந்த கல்கி இதழின் நிருபர் ஸ்ரீரெங்கம் திருநாவுக்கரசு மிகச் சிறப்பாக, நேர்த்தியாக , மெய்மை நிரம்ப அதனைக் கல்கி இதழில் எழுதி இருக்கிறார் . அவருக்கும் , கல்கி இதழுக்கும் நமது நன்றி .

எல்லாவற்றிற்கும் மேலாக இதனை நடத்திய கூழாங்கற்கள் அமைப்பு , அதில் பங்கு பெற்று பணியாற்றிய எனது நண்பர்கள் குறித்தும் , அந்த விழாவில் நான் விரிவாக ஜி . என்  , அவரது படைப்புகள் பற்றி பேசியதையும் இரண்டொரு நாளில் எழுதுகிறேன் . எழுதணும் . பேசியதைப் பதிவு செய்வது மிகுந்த அவசர , அவசியமாகி இருக்கிறது 

Friday, September 6, 2013

திருநங்கைகளின் மாநில மாநாட்டில் . . .

ஒருவரின் வளரிளம் பருவத்தில் , அவரது உடலில் ஏற்படும் காத்திரமான மாற்றம் காரணமாகவே அவர் தன்னைத் திருநங்கையாக உணர்கிறார் . மாறுகிறார் .

அவர் உணர்வதை , மாறுவதை அவரைத் தவிர வேறு யாரும் அந்தக் குடும்பத்தில் ஒப்புக்கொள்ளுவதில்லை .ஏற்பதில்லை .

அத்தகைய மாற்றத்திற்கு உள்ளாகும் ஒருவரை குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக , இரக்கமின்றி கொன்று விடுகிற அளவுக்குப் பேதமையும் , கொடுமையும் நிலவுவதும் உண்டு . இதற்கு மேலும் இதில் விவரிக்க எதுவுமில்லை .

பெரும் புறக்கணிப்பும் தனிமையும் வழியும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளுகிறது . இதை எழுத்தில் இறக்கி , பொதுச் சமூகத்திற்கு உணர்த்திய பெருமை வித்யாவுக்கு உண்டு .

நான் சரவணன் ... என்று துவங்கி சரவணன் என்கிற பெயர் மீது பெருக்கல் குறியிட்டு ...வித்யா என்று தலைப்பிடப்பட்ட அந்த நூல் திருநங்கைகளைப் புரிந்துகொள்ள, அறிந்து கொள்ள உதவும் தனித்துவமான நூல் .

சிறந்த மொழி நடையில் , தனது அனுபவங்களை மெய்மை துலங்க எழுதி இருப்பார் வித்யா .என் மனம் கவர்ந்த புத்தகங்களில் அதுவும் ஒன்று . அவரை நான் முதல் முறை கடந்த மாதம் ஒன்பதாம் தேதி  மதுரையில் சந்தித்தேன் .

மிக நீண்ட நாள் கண்டு அறிந்து , புரிந்து  கொண்ட நண்பர்களாய் உணர்ந்தோம்.தனது சிறுகதைத்தொகுப்பை எனக்குப் பரிசளித்தார் . இன்னும் படிக்கவில்லை . படித்த பிறகு தனியே அது பற்றி எழுதுகிறேன்

தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும் , தமிழ்ப் பேராசிரியரும் , சிறந்த நாவன்மை கொண்டவருமான தோழியர் . சுந்தரவல்லியும் திருநங்கைகளின் மாநாட்டை வாழ்த்த வந்திருந்தார் .

வெறும் வாழ்த்துரையோடு நில்லாமல் திருநங்கைகளுக்காக களப் பணி செய்யும் சிறந்த பெண் போராளி சுந்தரவல்லி . நல்ல  கம்பீரமும் , ஆளுமையும் கொண்டவர் . எப்போதும் எனது அன்பிற்கும்  மதிப்பிற்கும் உரியவர் .

நாங்கள் இருவரும் இணைந்து சில அரங்குகளில் உரையாற்றி இருக்கிறோம் . அதில் திருநங்கைகளுக்கான மாநில மாநாடும் ஒன்று .

எங்கள் அனைவரது ஒற்றுமையை , ஒன்றுபட்டுச் சிந்திக்கும்,  செயல்படும் பாங்கை , இந்தப் புகைப்படங்கள் அனைவருக்கும் சொல்லுகிறது


திருநங்கைகளின் மாநில மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்துகிறார் பாரதி கண்ணம்மா



திருநங்கைகளின் மாநில மாநாடு - மேலும் செய்திகள் , புகைப்படங்கள் 01



திருநங்கைகளின் மாநில மாநாடு - மேலும் செய்திகள் , புகைப்படங்கள்