Wednesday, December 3, 2014

சுட்டி விகடனுக்கு நன்றி.

கருத்துக் குருடர்கள் வாழும் இந்த சமுகத்தில்... 
நாளை பார்வைக் குறைபாடுள்ள குழந்தைகளோடு உரையாடப் போகிறேன்.
நெகிழ்ந்து கிடக்கிறது மனம்.
சுட்டி விகடனுக்கு நன்றி.

Saturday, October 11, 2014

இந்த வார நக்கீரன் இதழில் இருந்து ..... 03

'
"தீபாவளிப் பண்டிகையை 'ஒட்டி ரங்கநாதன் தெ௫வில் ஒரே நேரத்தில் இரண்டு லட்சம் பேர் திரண்டனர் "


தமிழ்நாடே சோகத்தில் உள்ளது - ஜெயா டி.வி


-Sathyam Satheesh Kumar ..


இந்த வார நக்கீரன் இதழில் இருந்து ..... 02



"ஜெயலலிதாவை அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும்"
                                                                                                       -கேப்டன் விஜயகாந்த்

          - 1969லேயே அந்தமான் ஜெயில் , தேசிய அருங்காட்சியகமாக மாத்துனத கேப்டன்கிட்ட இன்னும்மா சொல்லாம வச்சுருகாங்க... பச்ச புள்ளைடா தலைவன் ...
                 

- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் 

இந்த வார நக்கீரன் இதழில் இருந்து .....

" போராட்டம் கூடாது . அமைதி காப்பதே ஜெயலலிதாவுக்கு செலுத்தும் அன்பு"  - ஓ. பன்னீர் செல்வம்

தாயே ! எனக்கு பேச்சு வந்து விட்டது .

---- SK.Soundhararajan

Tuesday, October 7, 2014

நினைவுகளை எடுத்துக் கோர்க்கும் ஜன்னலோர இருக்கை

ஒவ்வொரு பேருந்து நிலையமும் ஒரு நிறத்தோடு வித்தியாசமாக இருக்கிறது.காரணம் அங்குதான் அந்தப்பகுதி கிராமத்து மக்கள் எல்லோரும் வந்து குழுமிப்போவார்கள்.விளாத்திகுளம் பேருந்து நிலையம் ஒரு வெளிர் மஞ்சள் நிறமாக இருப்பதாகவே எனக்குத் தெரிகிறது. ஒரு நான்குநாட்கள் அதை காலையும் மாலையும் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் சாத்தியமாயிற்று. அங்கிருந்து முக்கால் மணிநேரம் கிழக்கே பயணம் செய்தால் வேம்பார் வந்து விடும். வேம்பாருக்கு வேலை நிமித்தமாக நான்கு நாட்கள் போய்வந்தேன். ஆனால் அங்கே தான் முன்னொரு காலத்தில் தங்கியிருந்த மாதிரி மனசுகிடந்து அடித்துக்கொள்கிறது.

அங்கிருந்து கொஞ்ச தொலைவில் தான் வேப்பலோடையாம்.தோழர் மு.சுயம்புலிங்கத்தின் எழுத்துக்களைப் படித்ததால் ஒருவேளை நான் அங்கு நடந்து திரிந்தது போல பிரம்மை ஏற்பட்டிருக்கலாம்.விளாத்திகுளத்திலிருந்து ஒருமணிநேரம் மேற்கே பயணமானால் கோவில்பட்டி வந்துவிடும். எட்டயபுரத்திலிருந்து விளாத்திகுளம் வரை கண்ணுக்கெட்டிய தூரம் கண்ணங்கரே லென்று கரிசல்காடு விரிந்து கிடக்கிறது. அதில் கம்பு, குதிரை வாலி, உளுந்து முளைத்துக் கிடக்கிறது.பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருக் கிறது. விளைந்து நிற்கும் கம்மங் கதிரில் படகுருவிகள் பறந்துவந்து உட்காருவதும் சொல்லி வைத்தாற் போல நூறு குருவிகள் மேலெழும்பிப் பறப்பதும் மேஜிக் பார்க்கிற சுகானுபவத்தைக் கொடுக் கிறது.

இந்தக்கரிசல் காடுகளை மையமிட்டுத்தான் எங்கள் தோழர் கு.அழகிரிசாமி யின் கதையும் முளைத் திருக்கிறது என்று நினைக்கும் போது அந்த சாப்பாட் டுக்கடை எங்கிருந்திருக்கும் என்று தேட ஆரம்பிக்கிறது எட்டயபுரத்தைக் கடக்கும் போதெல்லாம் குதிரைகளின் குளம்பொலியும், நகராச் சத்தமும், சாட்டையடியின் சளீர்ச்சத்தமும் அமானுஷயமாய் வந்து போகிறது. கூடவே பாரதியின் நினைவு வருவதை யாரும் தடை செய்ய முடியாது. அதே போல அந்த ஊரில் வைத்து நடந்த பாரதி விழாவில் மேலாண்மை, எஸ் ஏ பி, கந்தர்வன், பீகே,மாது,தமிழ்செல்வன், கோணங்கி, உதயசங்கர், பார்த்தசாரதி, என எக்கச்சக்கமான எழுத்தாளத் தோழர்கள் பங்குகொண்ட கருத்தரங்கக் காட்சிகளின் நினைவுகள் நிலழாடுகிறது.

குறுக்கே குறுக்கே எழுந்து பேசிய கோணங்கியைப் பார்த்து ’மொதல்ல ஒம்பேர மாத்தப்பா,பேசச்சொன்னா பேசமாட்டீங்ற ஆனா ஒருத்தரையும் பேசவிடாம குறுக்க குறுக்க எதாச்சம் குழப்படி பண்ணிக்கிட்டே இருக்கியே ஒக்காரு மொதல்ல’. என்று எஸ் ஏ பி சொன்ன வார்த்தைகளைக் கண்டு கொள்ளாமல் எல்லொரது பேச்சுகளின் மீதும் கேள்விகளைத்தொடுத்த கோணங்கியைப்பார்த்து அடிபுடி சண்டை வந்துவிடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நாக்குக் குளரும் பாவனையில் பேசும் கந்தர்வனின் தலைமையில் அன்று பேசிய எல்லோரும் இப்போது பெரிய ஆளுமைகள். ஆனால் எங்களுக்கு அப்போதும் இப்போதும் எப்போதும் பீகே தான் ஆளுமை.

                                                                                                                                     எஸ்.காமராஜ் 

நேரமற்ற நேரத்தின் நினைவரிக்கும் பேர்கள். கிருஷ்ணகுமார் - பாரதி

பாரதியைப்பற்றி யோசிக்கும்போதெல்லாம் அந்தப்பெயரும் நினைவுக்கு வந்துவிடும்.பாரதியைப்பற்றி சொல்லுமுன் என்னைச்சொல் என்னைச்சொல் என்று பிடிவாதம் பண்ணும்.ஆமாம் அதுதான் அது மட்டும் தான் நியாயம் என்று ஏற்றுக்கொள்கிற இடத்துக்கு வந்தாகிவிட்டது.

ஒவ்வொரு கொடியேற்ற நாளின் போதும் பாரத சமுதாயம் வாழ்கவே பாடலாக இருந்த பாரதியை.இயற்பெயர் சுப்ரமணிய பாரதியார் என்று மதிப்பெண்ணுக்காக படித்த பாரதியை.அங்கொன்றும் இங்கொன்றுமான அறிமுகத்தில் சலித்துப்போன பாரதியை கொண்டுவந்து கண்முன் நிறுத்தி பாராடா மஹா கவியை.கேளடா மானிட சாதியில்கீழோர் மேலோர் இல்லை என்று சொன்ன மயிர்க்கால்கள் குத்திட வைத்த ஒரு கிரியா ஊக்கி கிருஷ்ணகுமார்.

 ஒரு பத்தாண்டுகள் பேய்பிடித்து ஆட்டிய காலத்தில் கூடவே நடந்தகால்கள்.மாதுவெனும் மஹா நட்பின் தூதுவனாக வந்து தாலியெடுத்துக் கொடுத்த கைகள்.அவ்வளவு பெரிய கண்களில் எங்களை விழுங்கிச் செரிக்கிற பார்வை இருக்கும் .தமிழகம் அப்போதும் இப்போதும் கொண்டாடுகிற ஒரு பேச்சாளியின் இடமும்,வலமுமாக நானும் மாதுவும் மட்டும் .நானும் மாதுவும் மட்டுமே அலைந்தோமென்கிற பெருமிதத்தின் பெயர் கிருஷ்ணகுமார்.

ஆனால் எங்கள் பண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கத்து தோழர்களிடம் எங்கள் பெயர் பைதூக்கிகள், தூக்குத்தூக்கிகள்.உண்மையில் அது ஒனிடாப் பொறாமையின் மருவிய சொற்கள்.விடிய விடிய நடக்கும் செயற்குழுக் கூட்டம்.அவர் உள்ளே நடத்திக்கொண்டிருப்பார் நாங்கள் வெளியே காத்திருப்போம்.எதாவது கதைகள் பேசிக்கொண்டு,எதாவது புத்தகம் படித்துக்கொண்டு, சின்ன சின்ன சண்டைகள் போட்டுக்கொண்டு காத்திருப்போம்.அல்லது கோட்டோ வியம் வரைவான். அவன் ஒரு பாக்கெட் சிகரெட்டை ஊதிப் புகையாக்குவான். நானும் ரெண்டு மூணு பங்கெடுத்துக்கொள்வேன்.பசிக்கும், ஒரு டீ க்கூட குடிக்காமல் காத்திருப்போம். 'அவர் வீட்டுக்காரம்மா கூட இப்படிக்காத்திருக்குமோ என்னமோ ஏண்டா இப்படிக் கெடந்து வயித்தப் பாழாக்குறீங்க' என்று சொல்லிச்செல்லும் வார்த்தைகள் எங்களுக்கு பெருமிதமாகப்பட்ட நாட்கள்.இரவு பதினோரு மணிக்குமேல் வருவார்.எல்லோரையும் கழித்துவிட்டு மூவர் மட்டும் சாப்பிடப் போவோம்.அவர் தான் செலவழிப்பார் பணத்தை .சாப்பாட்டோடு முடிந்து போவதில்லை அந்த இரவுகள் .இலக்கியம்,மார்க்ஸ்,பாரதியென்று விரியும் சஞ்சாரம் .இப்படித்தான் பேச்சின் திசையிருக்கும் என்று திட்டமிடப்படாதபடிக்கு பூவே பூச்சூடவா படத்து நதியாவின் நடையும் அவளது பிருஷ்ட அசைவுகளும் இடையிடையே வந்து புல்லாங்குழல் வாசிக்கும்.

அதுதான் அந்த சிலாக்கியம்தான் கூடவே பாரதியையும் பேசும். அகண்டமாக்கு அணைந்துகொள் விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை என்று புறம் பேசுகிற பாரதிதான் உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி என்று அகம் பேசும்.ஆஹாவென்றெழுந்தது யுகப்புரட்சியையும்,கண்ணம்மாவிடம் கனியும் அந்தரங்கத்தையும் பேசுவோம்.அப்போது பாரதி,அந்த மதுக்கிறக்க நேரத்தில் எங்களை அந்தரத்துக்கு தூக்கிப்போவான்.பாரதியைப்பற்றி பேசப்போகிற மேடைப்பேச்சுகளின் அனுக்கங்களை,உச்சிக்குத் தூக்கிப்போகும் இடங்களை எங்களிருவரிடமும் பேசிப்பயின்று கொள்வார்.அந்தக்காலத்தில் அவர் பேசப்போகிற இடங்களுக்கெல்லாம் நாங்கள் இருவரும் கட்டாயம் போவோம்.ஆயிரக் கணக்கானோர் திரண்டிருக்கும் கூட்டத்துக்குள் அமர்ந்து அழுவோம் சிரிப்போம் எழுந்து கைதட்டுவோம்.மேடை காலியாகி கீழே வரும்போது நேரே எங்களிடம்தான் வருவார் என்கிற பெருமிதத்தோடு காத்திருப்போம்.

தொழிற்சங்க சுற்றறிக்கையில் பாரதியின் கவிதை வரிகள் கோர்த்துக்கொடுக்க அவர்தான் பரிந்துரைப்பார். எங்கள் சங்கத்துக்காக ஒரு பத்திரிகை தொடங்குவதெனத் திட்டமிடும் போது பாரதிதான் எங்களுக்கு பத்திரிக்கைக்கு பேர்தந்தான் .அக்கினிக்குஞ்சு. அது ஒரு கையெழுத்துப் பிரதி.அந்தப்பதினாறு பக்கப் பிரதியில் எது யார் கையெழுத்து என்று கண்டுபிடிக்கச் சிரமப்படும் எழுத்துக்கள் மூவருக்கும் வாய்க்கபெற்றோம்.       மாது இதை நீ எழுது,காம்ஸ் நீ எழுதிப்பாரேன் என்று உசுப்பேத்தி எங்களை அங்கீகாரம் செய்த சமதர்மக் குருகுலம் கிருஷ்ணகுமார். நாங்கள் எழுதிக் கொண்டிருக்கும்போது சட்டையைப்போட்டுக்கொண்டு வெளியேறிப்போவார்.திரும்பவரும்போது ஒருபாக்கெட் கோல்டு ப்ளேக் பில்டரும் ரெண்டு குவளைத்தேநீரும் வாங்கிக் கையில் ஏந்திக் கொண்டுவருவார். அப்போது அந்த ஆறடி உயரம் எங்களுக்கும் அவருக்குமான வயது இடைவெளியைச் சுருக்கி அளக்கமுடியாத உயரத்துக்குப்போகும்.

அவரது ஜோல்னாப்பையிலும்,அவரது புத்தக அலமாரியிலுமாக பாரதிசார்ந்த புத்தகங்கள் நிறைய்யக்கிடக்கும்.மாது படிப்பான் எனக்குப்படிக்கத் தோன்றாது.கற்றலிற்கேட்டல் நன்று.முதல் பையனுக்கு கிஷோர் பாரதி எனப்பெயரிடவும்,அடுத்தவனுக்கு சூரியபாரதி எனச் சூட்டி மகிழவும் பாரதி எங்களோடிருக்கிறான்.அதன்பிறகு எனது சுற்றத்தாரின் குழந்தைகள் எல்லோரது பெயரிலும் பாரதி தொற்றிக்கொண்டான்.

இதோ இருநூறு புத்தகங்களுக்கிடையில் ரெண்டே ரெண்டு பாரதி புத்தகம் கிடக்கிறது.அதை முழுமையாகப் படித்தேனென்றெல்லாம் பொய்சொல்ல முடியாது.ஆனால் நடந்துகொண்டு,கால்போட்டுத் துங்கும்போது, மதுக் கிறக்கத்தில்,மேடையில் என பாரதியை வியந்தோதிய வரிகள் கோர்வையற்று வந்து வந்து போகிறது.

அவரோடு இரண்டு முறை எட்டயபுரம் போயிருந்தோம்.ஒன்று கருத்தரங்கம் அதில் தோழர் எஸ் ஏபி,தமிழ்செல்வன்,கந்தர்வன்,மாம்ஸ் ஷாஜஹான், கோணங்கியெல்லாம் பேசினார்கள்.இன்னொருதரம் பாரதியின் வீட்டுக்கு அந்த தாழ்ந்த வாசலுள்ள வீட்டை நினைவிடமாக மாற்றி யிருந்தார்கள். போய்விட்டு அரண்மனை பார்க்கப் போகலாம் என்ற யோசனையை யாரோ சொன்னார்கள் நானும் மாதுவும் பிடிவாதமாக மறுத்துவிட்டோ ம்.இப்போதும் அதை நினத்தால் சிரிப்பு வருகிறது.

1990 ஆம் வருடம். பாரதி பிறந்தநாளில். அந்த 42 பி எல் எஃப் தெருவில். எங்கள் சங்க அலுவலகத்து விடிகாலையில்.புகைநாற்றம் கலைந்து சந்தனப்பத்தியின் வாசம் கமழ்ந்துகொண்டிருந்தது. எங்களுக்கு முன்னாடியே எழுந்து கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்து அவர் வியர்த்திருந்தார் கிருஷ்ணகுமார்

.கரகரத்த அவரது குரலில் பாரதியின் பாடல்களை முணுமுணுத்தபடி அந்த எட்டுக்குப்பத்து அலுவலகத்துக்குள் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தார்.ஒரு பண்டிகையின் குதூகலம் அவரிலிருந்து எங்களிடமும் தொற்றிக்கொண்டது.'அடே உடல் முழுக்க இன்று பாரதியே நிறைந்திருக்கிறான்,எனது கால்கள் தரையில் பாவமாட்டேங்குது' என்று சொல்லிவிட்டு காம்ஸ் டே அந்த சிந்து நதியின் மிசை நிலவினிலே பாட்டைப் பாட்றா என்றார். அந்த நினைவுகள் ஒவ்வொரு டிசம்பர் பதினோறாம் தே஢ மட்டும் தான் வரும் என்றில்லை. நேரமற்ற நேரத்தில்,நல்ல உச்சி வெயிலில் வியர்வையோடு.ஒரு தீக்குச்சியைக்கிழிக்கும் ஜ்வாலையின் தகிப்பில்,ஆரத்தழுவிக்கொள்கிற ஆலிங்கணத்தில் ஏன் கழிப்பறையின் காத்திருப்பில் கூட வரும்.
மன்னித்துவிடு பாரதி எனக்கு உன்னைவிட அவனை ரொம்பப் பிடிக்கும்.நண்பனாய் தோழனாய் நல்லாசிரியனுமாய்.
                                                                                                                                எஸ்.காமராஜ் 

தமிழ் தி ஹிந்துவுக்கு நன்றி

அக்டோபர் ஐந்தாம் தேதி மாலை, சென்னை ராயபுரத்தில்," சுமைப்பணி மற்றும் பொதுத்தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில்..." நடைபெற்ற குடும்ப விழாவில், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தும் முன் போட்டியில் வென்ற குழந்தைகளுக்கு பரிசு அளிக்கும் மகிழ்ச்சியான தருணம் 

Sunday, October 5, 2014

ஜூனியர் விகடனுக்கு நன்றி

 கழுகார் பதில்  ஜூனியர் விகடன் 21.05.2014)

தமிழ் இலக்கியப் பேச்சாளர்களில் யாருடைய பேச்சு மிகவும் ரசிக்கும்படி இருக்கும்?


வள்ளுவத்தை இரா.இளங்குமரனாரும், சிலப்பதிகாரத்தை சிலம்பொலி செல்லப்பனும், சமய இலக்கியங்களை இலங்கை ஜெயராஜும், வள்ளலாரை பழ.கருப்பையாவும், இதிகாசங்களை இளம்பிறை மணிமாறனும், பாரதியை பாரதி கிருஷ்ணகுமாரும், கண்ணதாசனை தமிழருவி மணியனும் பேசினால்... ரசிப்பது மட்டுமல்ல, பின்பற்ற வேண்டும் என்ற உணர்வு பிறக்கும்.

Wednesday, May 14, 2014

அடிமைகளுக்குத் தாய் மொழி இல்லை

முந்தைய பதிவில் , ஆனந்த விகடன் வாசகர்களுக்குச் சொன்ன ஒரு கதையை அடுத்த சந்திப்பில் சொல்லுவதாக எழுதி இருந்தேன் . இதோ அந்தக் கதை .
என் சொந்தக் கதையில்லை . எங்கோ படித்தது .என் மொழியில் உங்களுக்குச் சொல்லுகிறேன் 

அழகிய தோற்றமுடைய  ஒரு பச்சைக்கிளி , கரிய நிறங் கொண்ட ஒரு காகத்தைக் கண்டதும் கேலி பேசத் துவங்கியது .

" என்னைப் பார் ...என் அழகைப் பார் ... என் வண்ணங்களைப் பார் ...இந்தக் கழுத்தில் கூட ஒரு அழகிய வண்ணமான வட்டம் ஒளிர்வதைப் பார் ...நீயேன் இப்படிக் கருப்பாய் , காணச் சகிக்காமல் இருக்கிறாய் " என்று மனம் புண்படப் பேசியது ,

எந்தப் பதிலும் சொல்லாமல் மௌனம் காத்தது காகம் .

சில நாட்கள் சென்றன .

காட்டுக்குள் வந்த வேடன் அந்தக் கிளியைப் பிடித்துக்கொண்டு  போய் ஒரு கிளி ஜோசியக்காரனிடம்
விற்றான் .

ஜோசியக்காரன் கிளியின் நாக்கில் வசம்பைத் தேய்த்து , மனிதர்களின் மொழியைப் பேசப் பழக்கினான் . "வாங்க ,,, வணக்கம் " என்று மனிதர்களின் மொழியைப் பேசிக் கொண்டு , மனிதர்களின் தரும் உணவை உண்டு வாழ்ந்து வந்தது கிளி . உணவு கொண்டு வந்த ஜோசியக்காரனின் மனைவி , கொஞ்சம் உணவை எடுத்து , "கா... கா " என்று  உணவை ஏற்குமாறு காகத்தை அழைத்தாள் .

காகம் வந்தது . உணவை உண்டது .கிளியைப் பார்த்து கனிவுடனும் , பரிவுடனும் சொன்னது ...

" ஒரு கூண்டில் அடைபட்டு , உன் மொழியை மறந்து மனிதர்களின் மொழியைப் பேசிக் கொண்டு , அவர்கள் தரும் உணவை உண்டு வாழ்கிறாய் .நான் சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருக்கிறேன் . மனிதர்கள் எனது மொழியைப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் .

உன்னை ஒருவன் சிறைப் பிடித்த போது , உன் இனத்தவர்கள் உன்னைப் காப்பாற்றாமல் ஓடி ஒளிந்து கொண்டார்கள் . ஒரு காகத்தை ஒருவன் சிறைப் பிடிக்க வந்தால் பிற காகங்கள் அதை அனுமதிப்பதில்லை . கத்திக் கூக்குரல் எழுப்பி , பிடிக்க வந்தவனைக் கொத்தி விரட்டி விடும் . அதையும் மீறி ,  அகப்பட்ட ஒரு காகம் எந்தக் கூண்டிலும் மனிதர்கள் தரும் உணவை உண்டு , மனிதர்களின் மொழி பேசி உயிர் வாழ்வதில்லை . வடக்கிருந்து இறந்து போகும் காக்கை .

அதனால் தான் காக்கைகள் தங்கள் மொழி பேசிக் கொண்டிருக்கின்றன .அடிமைகளுக்குத் தாய் மொழி இல்லை "

Tuesday, May 13, 2014

மீண்டும் ஆனந்த விகடனில் ...

 ஆனந்த விகடன்  வழங்கும்  இன்று ஒன்று நன்று  என்னும் சிறப்பு நிகழ்ச்சியில், மூன்றாம் முறையாகப் பேசும் வாய்ப்பு அமைந்தது .

ஏப்ரல் பதினேழாம் தேதி முதல் இருபத்திமூன்றாம் தேதி வரை ஒலிபரப்பானது . நிறைய நண்பர்கள் கேட்டு விட்டுப் பாராட்டினார்கள் .

ஒரு கூட்டத்துக்குப் பேச அழைத்த போது வின்சென்ட் சர்ச்சில் சொன்னாராம் ."ஒரு மணி நேரம் பேச வேண்டுமென்றால் இப்போதே வருகிறேன் . ஐந்து நிமிடம் பேச வேண்டுமென்றால் அடுத்த வாரம் வருகிறேன் " என்று .

அனுபவ உண்மை . செறிவாக , தெளிவாகக் குறைந்த நேரம் பேசுவது கடினமான காரியம் தான் . அதிலும் விகடனில் மூன்று நிமிடம் தான் பேச அனுமதிப்பார்கள் . ஏழு நாட்களுக்குப் பேச வேண்டும் .

சவாலான பணி தான் எனக்கு . மற்றவர்களுக்கு எப்படியோ , எனக்கு அது கடினமான பணி தான் . கடினமான பணிகளைச் செய்து பார்க்கும் விருப்பம் எப்போதும் இருப்பதால் , ஒப்புக் கொள்ளுகிறேன் .

இந்த முறை பேசியதில் ஒரு காகமும் , கிளியும் பேசிக் கொண்ட , நான் படித்த கதை ஒன்றை , விகடன் வாசகர்களுக்குச் சொன்னேன் .
அந்தக் கதையை உங்களுக்கும் சொல்லுகிறேன் ... அடுத்த சந்திப்பில் .

Wednesday, May 7, 2014

நான் என்பதே பன்மை

28.12.2013
சனிக்கிழமை
சென்னை .

கவிக்கோ .அப்துல் ரஹ்மான் அவர்கள் நடத்தும் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழாவும் , கவிக்கோ அவர்களின் முழுமையான கவிதைத்தொகுப்பு வெளியிடும் நிகழ்வும் ஒரு சேர நடந்தது .

அவரது கவிதைகள் குறித்துப் பேசும் பாக்கியம் எனக்கு .

மிக நேர்த்தியாகப் புத்தகத்தை வடிவமைத்து , அச்சிட்டு , அழகுறக் கொண்டு வந்திருந்தார் நேஷனல் பதிப்பக உரிமையாளர் , நான் ஷாஜி என்று பிரியமுடன் அழைக்கும் ஜனாப் . ஷாஜஹான் .

ஒரு குழந்தையின் குதூகலம் , கோபக்கார இளைஞனின் சீற்றம் , மனமுருகும் காதலனின் தவிப்பு , முதிர்ந்த ஞானியின் மேதமை என்று எல்லாம் காணக் கிடைக்கிற பொக்கிஷம் அந்தத் தொகுப்பு .

தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றில் ஒப்பற்ற இடம் கவிக்கோவுக்கு உண்டு .குறைந்த சொற்களில் மிக விரிந்த பொருள் பேசும் ஆற்றல் கொண்டவை அவரது கவிதைகள் மட்டுமே  . "கூறியது கூறல் " என்னும் குற்றம் கடந்த படைப்புகள் .
இருண்மையான சொற்கள் இன்றி எழுதப்பட்ட போதும் , தூய்மையான பக்தனுக்கு மட்டும் காட்சி தரும் கடவுள் தன்மை கொண்டது அவரது எழுத்துக்கள் .

வாழ்வை , காதலை , மானுடத்தை நேசிக்காத ஒருவருக்கு அவரது படைப்புகளை உணர்ந்து கொள்ளுவது கடினம் . மாசற்ற ஒரு வாசகனுக்கு எல்லாவற்றையும் கற்றுத்தரும் வல்லமையும்  அவைகளுக்கு உண்டு .

நான் அவரிடம் கற்றுக் கொண்டவன் . எனது  படைப்புலக ஆசான்களில் ஒருவராக கவிக்கோ எப்போதும் இருக்கிறார் . நன்றி வாப்பா .

எல்லையற்ற தமிழ்க்கவிதையின் எல்லைகளை அறிந்து கொள்ள விரும்புகிற எவராயினும் , கவிக்கோவை வாசிக்கத்தான் வேண்டும்

தேர்தல் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் எழுதினார்

"புறத்திணைச் சுயம்வர 
மண்டபத்தில் 
போலி நளன்களின் கூட்டம் 
கையில் மாலையுடன் 
குருட்டுத் தமயந்தி "

இரண்டு காதல் கவிதைகள்

"உன்னைக் காதலித்ததற்க்குப் பதிலாக 
மரணத்தைக் காதலித்திருக்கலாம் .
அது 
வாக்குத் தவறுவதேயில்லை "

"உன்னைவிட்டுப் பிரிந்து செல்லும் 
பாதையும் உன்னையே அடைகிறது "

இன்னும் ஒன்றிரண்டு கவிதைகள்


"புத்தகங்களே குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள் "

" தினங்களைக் கொண்டாடுவதை விட்டு 
குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?"

"வந்த போது 
உடலோடு வந்தோம் 
போகும் போது 
அதையும் விட்டு விட்டுப் 
போக வேண்டும் ."

"நான் என்பதே பன்மை " 

இதற்கு மேலும் வாழ விரும்புகிறவர்கள் , வாங்கிப் படித்துப் பயனுற வேண்டும் .

நேஷனல் பப்ளிஷர்ஸ் ,
2.வடக்கு உஸ்மான் சாலை
தி . நகர் , சென்னை 600 017
044 28343385
94440 47786



Tuesday, May 6, 2014

வள்ளுவனின் வானுயர் சிறப்பு



புதுவை மத்தியப் பல்கலைக் கழகத்தின் அரசியல் மற்றும் பன்னாட்டு உறவியல் துறையும் , சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலமும் , செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்திய "உலகமயமாக்கல் சூழலில் திருக்குறளின் பொருத்தப்பாடு குறித்த தேசியக் கருத்தரங்கில, நிறைவு விழாவில் சிறப்புரை நிகழ்த்தும் மகத்தான வாய்ப்பு அமைந்தது .

இந்தக் காலத்திற்கும் வள்ளுவன் வழி காட்டுவதை , உலகமயமாக்கல்  என்னும் சர்வதேச வர்த்தகச் சூழலை ,வள்ளுவன் எல்லா எல்லைகளையும் கடந்து நிற்பதை , ஒன்றரை மணி நேர உரையில் விவரித்தேன் .

விடுமுறை நாளாக இருந்தும் அரங்கம் நிறைந்து இருந்தார்கள் இளங்கலை, முதுகலை, ஆய்வு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் . நன்கு ஆழ்ந்து , கவனித்துக் கேட்டார்கள் .

பேசியதை எல்லாம் இங்கு எழுத வேண்டும் என்கிற ஆவல் இருக்கிறது ..ஆனால் ,
அதற்குரிய வாய்ப்பு இப்போது எனக்கில்லை .ஒரு சிறு நூலாக எழுதும் அளவுக்குச் செய்திகள் இருப்பதாக எல்லோரும் சொன்னதும் ஒரு காரணமாக இருக்கலாம் .

மறு வாசிப்பில் , வள்ளுவனின் வானுயர் சிறப்பை நான் உணர்ந்தேன் என்பதைச் சொன்னால் போதும் ... இப்போதைக்கு .


Thursday, January 9, 2014

விகடனுக்கு நன்றி

ஆனந்த விகடன் வழங்கும் "இன்று ஒன்று நன்று " என்னும் நிகழ்வில் இரண்டாம் முறையாகப் பேசி இருக்கிறேன் .

இன்றைய ஒலிபரப்பில், அண்மையில் அமரரான இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குறித்துப் பேசி இருக்கிறேன் .வாய்ப்பு இருக்கிறவர்கள் கேளுங்கள் .

நான் எப்போதும் இதனைக் கேட்கிற வழக்கம் உடையவன் .
நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்புள்ள பகுதி .

மூன்று நிமிடத்திற்குள் பேசி முடிக்க வேண்டுமென்பது அசலான சவால் . எனவே அது பெரும்பாலும் சுண்டக் காய்ச்சிய பால் போல செறிவாக , சுவையாக அமைந்து விடுகிறது .

விகடனுக்கு நன்றி .