Friday, May 29, 2020

மானமிகு கல்வி அமைச்சருக்குத் திறந்த கடிதம்-01

Courtesy: Thnathi TV

மாண்புமிகு மற்றும் மானமிகு கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு...
அன்பும் வணக்கமும்.

நேற்றைய தினம் உங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் ஓய்வுபெறும் நிகழ்வொன்றில், நீங்கள் கண்கலங்கிய காட்சிகளை செய்திகளில் பார்க்க நேர்ந்தது.உங்கள் இளகிய மனதை உணர்ந்து என் கண்களும் கலங்கியதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

பிறர் துன்பம் காணப் பொறுக்காத,வெடித்துக் கண்ணீர் சிந்துகிற மனம் தான் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இன்றைக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது.அது உங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.
அறுபது வயதை நெருங்கும் அதிகாரிகளைப் பிரிவதற்கு மனம் இல்லாமல் நீங்கள் அழுதீர்கள் என்றால்,அவர்கள் உங்களுக்காக உங்களோடு உங்களுக்காகவே எப்படியெல்லாம் பணியாற்றி இருப்பார்கள் என்பதை என்னால் உணரமுடிகிறது.

வயது ஏறிய ஆட்களுக்காக வருந்திக் கலங்கும் நீங்கள்,வயது குறைந்த குழந்தைகள் விஷயத்திலும் கருணையோடு இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஜூன் 1ஆம் தேதி முதல் நடைபெறுமென்று முதலில் அறிவித்தீர்கள்.மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்போது ஜூன் 1ஆம் தேதி தேர்வுகள் எப்படி சாத்தியம் என்று சிந்திக்காமலேயே அறிவித்தீர்கள்.அக்கறையுள்ள கல்வியாளர்கள் ஆசிரியர் சங்கங்கள் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் நீங்கள் பொருட்படுத்தவில்லை.ஆனால்,ஜூன் 1ஆம் தேதி தேர்வுகளை நடத்த முடியாதென்று உங்களுக்கும் உங்கள் துறையில் உள்ள அறிவிற்சிறந்த அதிகாரிகளுக்கும் தெரிந்துவிட்டதால்,இப்போது தேர்வுகளை ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிரீர்கள்.
இப்போதும் மற்றவர்கள் கேட்டுக்கொண்டதற்காக நீங்கள் தேதியை மாற்றவில்லை.நீங்களும் உங்கள் துறை சார்ந்த அதிகாரிகளும் கூடி எடுத்த அறிவார்ந்த முடிவு இது.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை ஜூன் 15ஆம் தேதியே நடத்தியாக வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள்? என்ன அவசரம்?எதற்கு அவசரம்? உங்கள் உத்தரவை நீங்கள் எப்படி நியாப்படுத்துகிறீர்கள்? அல்லது நீங்கள் முன்வைக்கும் நியாமான காரணங்கள் யாவை? உங்கள் துறையின் இந்த அறிவார்ந்த முடிவின் அறம் சார்ந்த பின்னணி எது?

நீங்கள் உத்தரவிட்டபடி பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி நடைபெறாவிட்டால்...
எந்தக் கடல் கரையேறி வந்துவிடும்?
எந்த மலை தகர்ந்து தரைமட்டமாகிவிடும்?
எந்தச் சாப்பாட்டில் மண் விழுந்துவிடும்?
யார் வருமானம் குறைந்துவிடும்?
இந்த நான்கு கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு விடையளித்து நீங்கள் தேர்ச்சி பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டுமெனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஊரடங்கு முடிந்து பொதுப் போக்குவரத்து செயல்படத்துவங்கி கொரோனா அச்சம் ஓரளவேனும் விலகி,பள்ளிகள் திறந்து இயங்க ஆரம்பித்து,குறைந்தது 15 நாட்கள் குழந்தைகள் ஆசிரியர்களின் அரவணைப்பில் இருந்த பிறகே பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெற வேண்டும்(ஜூன் 15ஆம் தேதி கூட அல்ல) என்பதற்கான நியாங்களை,அடுத்து உங்களுக்கு எழுதும் கடிதத்தில் விரிவாக எழுதுகிறேன்.

அதற்கு முன்னதாகவே, என் முந்தைய கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு விடையளிக்க வேண்டுமெனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


தங்கள்
உண்மையிலும் உண்மையுள்ள,
பாரதி கிருஷ்ணகுமார். 

பின் குறிப்பு:
இக்கடிதத்தைப் படிக்கும் பொதுமக்களுக்கு...
1.10ஆம் வகுப்பில் படிக்கும் குழந்தைகள் எதுவும் எனக்கில்லை.
2.10ஆம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளை என் குழந்தைகளாகக் கருதுகிறேன்.     
3.பெற்றால் தான் பிள்ளையா? என்றொரு திரைப்படத்தில் M.G.R. நடித்திருப்பதை கல்வி அமைச்சருக்கும் மற்றவர்களுக்கும் நினைவூட்டுகிறேன்.
4.எவனுக்கோ வந்த துன்பம் தானே என்று சும்மா இருந்தால்,நமக்குத் துன்பம் வரும்போது தோள் கொடுக்க யாரும் இருக்கமாட்டார்கள்.
5.ஒய்வு பெறும் அதிகாரிகளை நினைத்துக் கண்ணீர் வடித்த கல்வி அமைச்சரைப் பார்த்தாவது நாமெல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்.
6.மற்றதெல்லாம் அடுத்த கடிதத்தில்.

No comments:

Post a Comment