Tuesday, March 19, 2013

மலர்களே இல்லாத ஒரு மலர் வளையம்

எனது தயாரிப்பிலும் இயக்கத்திலும் உருவான "என்று தணியும் ?" ஆவணத் திரைப்படம் குறித்து தினமணி நாளிதழ் ஒரு முழுப் பக்கத் திறனாய்வைப் பிரசுரித்தது .

 கும்பகோணத்தில்,  இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு ஜூலை மாதம் பதினாறாம் தேதி ஒரு தனியார் பள்ளியில் நடந்த தீ விபத்தில் தொண்ணூற்று நான்கு குழந்தைகள் பலியான நிகழ்வுக்குப் பின்னே இருக்கும் உண்மைகள் குறித்துப் பேசும் ஆவணத் திரைப்படம் .

ஆவணப் படத்தின் துவக்கத்தில்  ஓரிரு நிமிடங்கள் மட்டுமே இடம் பெறுகிறது இந்த மலர் வளையம் . ஆனால் .இதை வடிவமைக்க இரண்டு நாட்களுக்கு மேலாகி விட்டது .

அந்தத் திரைப்படத்தின் டிசைனரும் , சிறந்த ஓவியனும் , எனது நண்பனுமான ஈரோடு சிவா எனக்கு நானூறுக்கும் அதிகமான மலர் வளையங்களை எனக்குக் காட்டினார் . நான் அனைத்தையும் நிராகரித்துக் கொண்டே இருந்தேன் . அவர் சலிப்பின்றி மேலும் , மேலும் காட்டிக் கொண்டே இருந்தார் .ஒரு கட்டத்தில் "சார் ... வாங்க ... எவ்வளவு பணம் செலவானாலும் சரி . கடைக்குச் சென்று நீங்க விரும்புற மாதிரி ஒரு மலர் வளையம் கட்டி , அதைப் புகைப்படம் எடுத்து அதைப் பயன்படுத்தலாம் என்றார் .  நான் அதற்கும் சம்மதிக்கவில்லை . எனது உள் மனது எதையோ தேடிக் கொண்டு இருந்தது . சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை .

மூன்றாம் நாள் அதிகாலையில் உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டேன் . மனதில் இருந்தது சொற்களாகப் பீறிட்டது . " சிவா ...  மலர்களைப் போன்ற  தொண்ணூற்று நான்கு குழந்தைகள் இறந்த இடத்தில் வைக்க எனக்கு மலர்களே இல்லாத ஒரு மலர் வளையம் வேண்டும் " என்றேன் .

அடுத்த இரண்டு மணி நேரத்தில் இதை வடிவமைத்தார் சிவா . அந்த இரண்டு நாட்களும் மனது முழுவதும் நிறைந்து கிடந்தது இந்த மலர் வளையம் தான் . அதனால் தான் பார்த்த பல நூறு மலர் வளையங்களையும் மனது நிராகரித்தது என்பது பிறகு புரிந்தது .                  

1 comment:

vimalanperali said...

சிறு சிறு விஷயஙகளிலும் நுணுக்கம் தேடுகிற மனது.தேடல் மனிதனை முழுமையாக்கும் என்பார்கள்.

Post a Comment