Wednesday, May 7, 2014

நான் என்பதே பன்மை

28.12.2013
சனிக்கிழமை
சென்னை .

கவிக்கோ .அப்துல் ரஹ்மான் அவர்கள் நடத்தும் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழாவும் , கவிக்கோ அவர்களின் முழுமையான கவிதைத்தொகுப்பு வெளியிடும் நிகழ்வும் ஒரு சேர நடந்தது .

அவரது கவிதைகள் குறித்துப் பேசும் பாக்கியம் எனக்கு .

மிக நேர்த்தியாகப் புத்தகத்தை வடிவமைத்து , அச்சிட்டு , அழகுறக் கொண்டு வந்திருந்தார் நேஷனல் பதிப்பக உரிமையாளர் , நான் ஷாஜி என்று பிரியமுடன் அழைக்கும் ஜனாப் . ஷாஜஹான் .

ஒரு குழந்தையின் குதூகலம் , கோபக்கார இளைஞனின் சீற்றம் , மனமுருகும் காதலனின் தவிப்பு , முதிர்ந்த ஞானியின் மேதமை என்று எல்லாம் காணக் கிடைக்கிற பொக்கிஷம் அந்தத் தொகுப்பு .

தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றில் ஒப்பற்ற இடம் கவிக்கோவுக்கு உண்டு .குறைந்த சொற்களில் மிக விரிந்த பொருள் பேசும் ஆற்றல் கொண்டவை அவரது கவிதைகள் மட்டுமே  . "கூறியது கூறல் " என்னும் குற்றம் கடந்த படைப்புகள் .
இருண்மையான சொற்கள் இன்றி எழுதப்பட்ட போதும் , தூய்மையான பக்தனுக்கு மட்டும் காட்சி தரும் கடவுள் தன்மை கொண்டது அவரது எழுத்துக்கள் .

வாழ்வை , காதலை , மானுடத்தை நேசிக்காத ஒருவருக்கு அவரது படைப்புகளை உணர்ந்து கொள்ளுவது கடினம் . மாசற்ற ஒரு வாசகனுக்கு எல்லாவற்றையும் கற்றுத்தரும் வல்லமையும்  அவைகளுக்கு உண்டு .

நான் அவரிடம் கற்றுக் கொண்டவன் . எனது  படைப்புலக ஆசான்களில் ஒருவராக கவிக்கோ எப்போதும் இருக்கிறார் . நன்றி வாப்பா .

எல்லையற்ற தமிழ்க்கவிதையின் எல்லைகளை அறிந்து கொள்ள விரும்புகிற எவராயினும் , கவிக்கோவை வாசிக்கத்தான் வேண்டும்

தேர்தல் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் எழுதினார்

"புறத்திணைச் சுயம்வர 
மண்டபத்தில் 
போலி நளன்களின் கூட்டம் 
கையில் மாலையுடன் 
குருட்டுத் தமயந்தி "

இரண்டு காதல் கவிதைகள்

"உன்னைக் காதலித்ததற்க்குப் பதிலாக 
மரணத்தைக் காதலித்திருக்கலாம் .
அது 
வாக்குத் தவறுவதேயில்லை "

"உன்னைவிட்டுப் பிரிந்து செல்லும் 
பாதையும் உன்னையே அடைகிறது "

இன்னும் ஒன்றிரண்டு கவிதைகள்


"புத்தகங்களே குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள் "

" தினங்களைக் கொண்டாடுவதை விட்டு 
குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?"

"வந்த போது 
உடலோடு வந்தோம் 
போகும் போது 
அதையும் விட்டு விட்டுப் 
போக வேண்டும் ."

"நான் என்பதே பன்மை " 

இதற்கு மேலும் வாழ விரும்புகிறவர்கள் , வாங்கிப் படித்துப் பயனுற வேண்டும் .

நேஷனல் பப்ளிஷர்ஸ் ,
2.வடக்கு உஸ்மான் சாலை
தி . நகர் , சென்னை 600 017
044 28343385
94440 47786



1 comment:

Muscat Mu.Basheer said...

அன்பு நண்பர் பாரதி அவர்களின் கவிக்கோ பற்றிய பதிவும் அவரின் படைப்புக்கள் பற்றிய குறிப்பும் கவிக்கோ அவர்கள் பற்றி இன்னும் இன்னும் படிக்கத்தோன்றும் உணர்வினைக் கூட்டிக்கொண்டே இருக்கிறது ,,,தமிழ் ஆர்வலர்கள் மனத்தில்...
கவிக்கோ அவர்கள் இறைவன் அருளால் நீடூழி வாழ வேண்டுகிறேன்..!

Post a Comment