Thursday, April 11, 2013

ஒரு கனிக்குள் இருக்கும் மரங்களை . . .

இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டு திருச்சியில் உள்ள எஸ் .ஆர் . வீ . மேல் நிலைப்பள்ளியில் "கனவு மெய்ப்பட " எனப் பெயரிடப்பட்ட பயிலரங்கைத் தொடங்கி வைக்க வாய்த்தது .

மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் , ஏதேனும் ஒரு தொழிற் கல்விக்கான உயர் கல்விக்குத் தகுதி பெறுவதும் தான் இங்கே உடனடி இலட்சியங்கள் . அப்புறம் பெரிய வேலையில் சேர்ந்து கை கொள்ளாமால் சம்பாதிக்கணும் என்பது நீண்ட கால லட்சியம் .

இந்த இரண்டையும் கடந்து மனித நேய மிக்க மனிதர்களாக உருவாவது தான் , வீட்டுக்கும் , நாட்டுக்கும் எப்போதும் பயன் தரும் .
அதனை மனதில் கொண்டே இந்தப் பயிலரங்கம் உருவாக்கப்பட்டது .

பயிலரங்கம் விரும்பிய வண்ணம் , மாணவர்களுக்குள் அத்தகைய சிந்தனைகள் உருவாவதைக் காண முடிந்தது . உணர முடிந்தது .
அடுத்தடுத்த ஆண்டுகளிலும் "கனவு மெய்ப்பட" என்ற தலைப்பிலேயே பயிலரங்கம் நடப்பதை நான் அறிவேன் .
தமிழ் சமூகத்தின் மகத்தான ஆளுமைகள் அதில் பங்கேற்று , அதனை மேலும் அர்த்தமுடையதாகதரம் உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள் என்பதையும் நான் அறிவேன் .

 தொடரும் இந்தமுயற்சிகளுக்காகப் பெரிதும் பாராட்டுதலுக்கு உரியவர், அந்தப்பள்ளியின் முதல்வர் அருமைச் சகோதரர் துளசிதாசன் .
அவருக்கு , அதை நிகழ்த்தத் துணை நிற்கும் அந்தப் பள்ளியின் நிர்வாகக் குழுவும் வாழ்த்துக்கு உரியது .

இதில் என் சந்தோசம் ஒன்று தான் .
இந்த மகத்தான பணியை நான் துவங்கி வைத்தேன் என்பது தான் .
மரக் கன்று நடுவதா பெரிய காரியம் ?
அது வளர்ந்து , துளிர் விட்டுத் தழைப்பதைப் பார்ப்பது தான் சிறந்த மகிழ்ச்சி .
அது தழைப்பதைப் , பூப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் .
அதுவே நிழல் தரும் . கனிகள்  தரும் .
கனிகள் விதைகள் தரும் .
விதைகள் மேலும் , மேலும் புதிய மரங்கள் தரும் .

"ஒரு மரத்தில் இருக்கும் கனிகளை எண்ணி விடலாம் .
ஆனால் ஒரு கனிக்குள் இருக்கும் மரங்களை யாராலும் எண்ணி விட இயலாது "... என்று எங்கோ படித்ததை எழுதினால் இந்தப் பத்தி நிறைவு பெறுவதாக நான் உணர்கிறேன் .


No comments:

Post a Comment