Saturday, June 13, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 21

The MGR phenomenon - DTNext.in


அழகாக , நிறுத்தி நிதானமாகப் பேசிகொண்டே போனார் MGR . உறவு , சுற்றம் என்று நமக்கு எத்தனை பேர் இருந்தாலும் நண்பர்கள் இன்றி நமது வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள் தீர்மானிக்கப்படுவதில்லை என்றார்  . அத்தகைய " நண்பர்கள் மூன்று வகைப்படுவார்கள் " என்று வகை பிரித்தார்  MGR .

முதலாவது வகைப்பட்ட நண்பர்கள் எப்போதும் நம்மோடு இருப்பவர்கள் . அவர்கள் நாம் எதைச் செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு , அதை ஆமோதிப்பார்கள் . ஆதரிப்பார்கள் . உண்மையில் அவர்கள் நண்பர்களே அல்ல ; நமது விரோதிகள் .

சில நொடிகள் நிறுத்திப் புன்னகைத்துக்கொண்டு, மேடையில் இருக்கிற எல்லோரையும் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

இரண்டாவது வகைப்பட்ட நண்பர்கள் நம்மோடும் இருப்பார்கள் . எதிர் முகாமிலும் இருப்பார்கள். அவர்கள் நாம் எதைச் செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு , அதைக் குற்றம் சொல்லுவார்கள். எதிர்ப்பார்கள். உண்மையில் அவர்கள் நண்பர்களே அல்ல ; துரோகிகள் . 

இம்முறையும் சிலநொடிகள் நிறுத்தி,மேடையில் இருந்தவர்களை நோக்கி  ஆழ்ந்த புன்னகை ஒன்றை, பரவ விட்டுவிட்டு, தான் சொன்னதைத் தானே ரசித்துச் சிரித்துக்கொண்டார்.

மூன்றாவது வகைப்பட்ட நண்பர்கள் நம்மோடும் இருப்பார்கள். எதிர் முகாமிலும் இருப்பார்கள். எங்கு வேண்டுமானாலும் இருப்பார்கள். ஆனால் , அவர்கள் நாம் எதைச் செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கவும் மாட்டார்கள் ; எதிர்க்கவும் மாட்டார்கள். ஆம் நாம் நல்லது செய்தால் ஆதரிப்பார்கள் தவறு செய்தால் எதிர்ப்பார்கள். அவர்கள் தான் உண்மையான நண்பர்கள். அத்தகைய நண்பர்களே உங்கள் வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பார்கள் .

கொஞ்சம் மௌனம் . மலர்ந்த ஒரு புன்னகை . மேடையில் இருந்த எல்லோரையும் திரும்பிப் பார்த்துக்கொண்டே, சங்கரையாவை நோக்கிக் கை நீட்டியபடியே சொன்னார்.

சங்கரய்யா , எனக்கு அத்தகைய சிறந்த நண்பர்களிலே ஒருவர். சங்கரய்யா சட்ட மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படா விட்டால் ....
இராமச்சந்திரன் தனது வலது கையை இழந்து விட்டான் என்று பொருள்.

தனது வலது கையை மேலே உயர்த்திக் காட்டினார். கூட்டம் தலைவா தலைவா என்று பதறியது...

இந்த ஜனநாயகத்தில் , ஒரு தொகுதியில் உள்ள வாக்குகள் அனைத்தையும் நான் ஒருவனே செலுத்தமுடியும் என்கிற அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டால் , வாக்குச் செலுத்துவதற்குத் தரப்படும் அந்தச் சிறிய கட்டையைக் கீழேயே வைக்காமல் ... மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒன்றரை லட்சம் வாக்குகளையும் அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் சங்கரய்யாவுக்குத் தான் போடுவேன் என்று , தனது இடது உள்ளங்கையில் வலது கையால் குத்திக்காட்டி, சத்தம் வர சந்தோசம் பொங்கச் சிரித்தார்.அவரது முகம் மேலும் எப்படிச் சிவந்தது என்பதை வார்த்தைகளில் சொல்லவே முடியாது. அவர் வெள்ளையாக இல்லை . சிவப்பாகவும் இல்லை. அது ஏதோ சந்தனமும் ரோஜாவும் கலந்த நிறம். அவர் சிரித்தபோதும் , சினந்தபோதும் அந்த நிறம் அவரைச்சுற்றி ஒளிர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். (MGR குறித்து எனக்கு எப்போதும் எந்த மயக்கமும் இருந்ததில்லை என்பதை, எனது வாசகர்கள் மறந்து விடக்கூடாது. இன்னும் சொல்லப் போனால்,"அவர் நாற்பது ஆண்டுகள் திரையுலகத்தை ஆட்சி செய்தார்;  பத்தாண்டு காலம் முதலமைச்சராக நடித்தார்"என்பதே அவரைப் பற்றிய எனது விமர்சனம்) சங்கரய்யா உட்பட எல்லோரும் மலர்ந்து சிரித்தார்கள்...
MGR இன் புன்னகைக்கு மயங்கிக் கூட்டம் கடல் அலை போல ஆர்ப்பரித்தது. 

கரவொலியும் , சிரிப்பும் அடங்கக் காத்திருந்தார்.சட்டென்று கூட்டத்தைப் பார்த்து," எனக்கொரு சத்தியம்செய்து கொடுப்பீர்களா?" என்று கேட்டார். கூட்டம் செய்வோம் செய்வோம் என்று , ஒழுங்கற்று வீசுகிற காற்றுப் போல ஊளையிட்டது .

என்ன சத்தியம் கேட்டார் ? 

அப்புறம் சொல்லுகிறேன்...

-பாரதி கிருஷ்ணகுமார்  

1 comment:

Rathnavel Natarajan said...

அருமை சார்

Post a Comment