Tuesday, January 7, 2020

ஒரு வேலை நிறுத்தமும் , ஒரு பிரசுரமும் ....

ஒரு முன்னுரை 

அப்போது நான் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்களின் சங்கத்தில் பொதுச்செயலாளர்பொறுப்பில் இருந்தேன் . எங்கள் சங்க அலுவலகம் , அந்தப் பகுதியில் இயங்கிய அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைகிற , இயங்குகிற சந்திப்பு மையம் ஆக இருந்தது . அது மிகப்பெரிய வரலாற்று நிகழ்வுகள் நிகழ்ந்த காலம் . அது பற்றி தனியே எழுதும் எண்ணம் இருக்கிறது . அதில் ஒன்றை , ஒரு கணத்தை , மேனாள் அரசு ஊழியர்கள் சங்கத் தலைவராக இருந்த தோழர் . பாலசுப்ரமணியம் முகநூலில் பதிவு செய்திருக்கிறார் . 
தோழர் . வீரகடம்பு அதை எனக்கு அனுப்பி இருந்தார் . 

இதை வாசித்ததும் , கொஞ்சம் முரட்டுத்தனமாக, நான் நடந்து கொண்டது போல சிலருக்குத் தோன்றலாம் . ஆனால் அது ஒரு தோற்றமே . உண்மையில் , ஒன்றைப் புதிதாகவும் , சிறப்பாகவும் செய்ய வேண்டும் என்கிற நமது உறுதியைச் சிலர் பிடிவாதம் என்று மொழிப்பெயர்ப்பு செய்து கொள்ளுகிறார்கள் . நாம்  நினைத்தது போலத்தான் எல்லாமே நடக்கவேண்டும் என்று நாம்  நினைப்பதாகப்  பொருள் கொள்ளுகிறார்கள் . அவர்கள் , மாற்றங்களை விரும்பாத , அல்லது மாற்றங்களால் ஒருவர் அங்கீகாரம் பெறுவதைக் கண்டு அஞ்சுகிறவர்களாக மட்டுமே இருக்கிறார்கள் . 


உண்மையில் பெரும்பான்மையான தோழர்கள் மாற்றங்களை நேசிக்கிறார்கள் . அதனை உளமார விரும்புகிறார்கள் . அங்கீகரிக்கிறார்கள் . பெரும் திரளாக நம்முடன் அணி வகுக்கிறார்கள் . நமது கூட்டு பேர உரிமையின் வலிமையை உயர்த்துகிறார்கள் . அவர்களே , தாங்கள் தேர்வு செய்த சங்கத் தலைவர்களைக் காப்பாற்றுகிறார்கள் .


எத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும் , அப்போது பெய்த மழையில் புறப்பட்டு வரும் மண் வாசனை போல அதை  வெளிப்படுத்துகிறார்கள் . நினைவின் பூக்களில் இருந்து மகரந்தங்களைக் காற்றில் மிதக்க விடுகிறார்கள் . அதன் நறுமணம் உண்மையின் நறுமணம் . தோழமையின் நறுமணம் . 

இதை மறந்தவர்களும் உண்டு . மறைக்கிறவர்களும் உண்டு .இவர்கள்தான் எல்லாப் பூக்களையும் மலடாக்கி  விட முயல்கிறார்கள் . சமயங்களில் ஓரளவு வெற்றியும் பெற்று விடுகிறார்கள் .


ஆனால் , அன்பின் மகரந்தங்களால் பூக்கள் பூப்பதும் , கனிவதும் , விதைகள் மண்ணோடு கலப்பதும் , மீண்டும் பூப்பதும் நடந்துகொண்டே தானிருக்கும் .


அப்படி , முப்பது ஆண்டுகளுக்குப் பின் , தோழர் பாலுவின் நினைவில் பூத்த பூ .இந்த நினைவுக் குறிப்பு . நம் தோழமை மணம் பரப்புகிறது பாலு ... மனமார்ந்த நன்றி .

நிறைய எழுதுங்கள் .






சிட்டுக்குருவிகளாய் சிறகடித்துப் பறந்த காலத்தின் சுவடுகள்..... 
➖➖➖➖➖➖➖➖
அன்றைய காலகட்டத்தில் மாநில செயற்குழு நடந்து முடிந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு போராட்ட முடிவு இருக்கும்.

மாவட்டத்தில் அந்த இயக்கத்திற்கான தயாரிப்பு வேலைகளில் உற்சாகமாக இறங்கி விடுவோம்.

ஆனால்... . தோழர்.பாலுச்சாமி செய்து வந்த பல வேலைகளில் ஒரே ஒரு வேலையை மட்டும் யாரும் செய்ய முன்வர மாட்டார்கள். அது நோட்டீஸ் எழுதுவது.

அது ஒரு அகில இந்திய வேலை நிறுத்தத்திற்காக வட்ட அளவில் வாயிற் கூட்டங்கள் நடத்துவது என்ற மாநில செயற்குழு முடிவு .


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிற் கூட்டத்தில் சிறப்புரையாற்ற பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் அன்றைய பொதுச் செயலாளர் தோழர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்களை அழைப்பதென முடிவு செய்திருந்தோம்.

ஆனால்.. நோட்டீஸ் எழுத வேண்டுமே.. தோழர்.பாலுச்சாமியிடம் ஓடினேன்.
அவர்... "வட்டக் கிளைக்கு எல்லாம் நான் எழுதித் தர முடியாது, வட்டத் தலைவர் நீயே சங்கத்தில இருக்கிற பழைய மாடல பாத்து எழுதிக்கோ "என்று சொல்லிவிட்டார்.

சங்கத்திற்கு வந்து பழைய நோட்டீஸை தேடி எடுத்து அப்படியே காப்பி அடித்தேன்.

அது A 4 சைஸில் நான்கு பக்கம் வந்தது. அதை எடுத்துக் கொண்டு போய் தோழர்.பாலுச்சாமியிடம் காட்டி சரியாக இருக்கிறதா என்று கேட்டேன்.

அவர், அதை கையில் கூட வாங்கவில்லை.. போய் தோழர்.கிருஷ்ணகுமாரிடம் காட்டி அவர் பெயரை போடறதுக்கு பெர்மிசன் வாங்கிட்டு பிரஸ்ல கொடுத்து விடு என்றார்.


தோழர்.கிருஷ்ணகுமாரிடம் போய் நோட்டீஸை காட்டி அவர் பெயர் போட அனுமதி கேட்டேன்.

அவர் என் கையில் இருக்கும் பேப்பரை வாங்கி இது என்ன? என்று கேட்டார். ..

நோட்டீஸ் என்றேன்...

அவர் ஒன்றுமே சொல்லாமல் அதை அப்படியே கசக்கி கீழே போட்டுவிட்டு போயி வேற எழுதிட்டு வாங்க தோழர் என்றார்.

நான் கீழே கசக்கிபோட்ட பேப்பரை எடுக்கப் போனேன்.

ஆனால், அவர் அதை எடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்.

சங்கத்திற்கு சென்று புதிதாக எழுதினேன். இரண்டு பக்கத்திற்கு மேல் எழுத முடியவில்லை.

தோழர். கிருஷ்ணகுமாரிடம் கொண்டு போய் காட்டினேன். அவர் அதையும் கசக்கி கையில் வைத்துக் கொண்டு மீண்டும் வேறு எழுதிக் கொண்டு வரச் சொன்னார்.

இப்படியே ஐந்து முறை அலைய வைத்தார்.
ஐந்தாவது முறை நான் எழுதிக் கொண்டு போன நோட்டீஸ் 1 x 8 சைஸில் ஒரு பக்கம் இருந்தது.

அதைக் கையில் வாங்கிய அவர் நான் எழுதிய பக்கத்தை பேனாவால் அடித்து விட்டு அந்த பேப்பரின் பின் பக்கத்தில் 1 x 16 சைஸில் நோட்டீஸ் எழுதிக் கொடுத்தார்... 

➖➖➖➖➖➖➖➖
செப்- 6, 1990, அகில இந்திய வேலை நிறுத்தம்..



நமக்கும் - இதற்கும் என்ன சம்பந்தம்?
விளக்க வருகிறார் .... பாரதி கிருஷ்ணகுமார்


நாள் :      இடம்: மாவட்ட ஆட்சியரகம்,
எல்லாரும் வாங்க, விருதுநகர் கிளை.
➖➖➖➖➖➖➖➖

நான் அதை ஒரு மாதிரியாகப் பார்த்து இது போதுமா தோழரே.. என்று கேட்டேன்.

போய் இதை அச்சடித்து விநியோகம் செய்து விட்டு என்ன ரெஸ்பான்ஸ் ன்னு வந்து சொல்லுங்க என்றார்.

நோட்டீஸ் அளவோ உள்ளங்கை அளவு ...
அதில் இருப்பதோ ஆறே .. ஆறு வரிகள் மட்டும்.... இதை, யார் படிப்பார்கள் என்ற சந்தேகத்தோடு விநியோகித்தோம்.

என்ன ஆச்சரியம்..
அந்த நோட்டீஸை ஒருவர் கூட கீழே போடாமல் திரும்பத் திரும்ப படித்தார்கள்...

தோழர்.கிருஷ்ணகுமாரை பார்த்து நடந்ததைச் சொன்னோம். அப்போது சொன்னார்...
" தோழர்களே... நோட்டீ ஸோ.. புத்தகமோ கையில் எடுத்தால் கீழே வைக்காமல் மீண்டும், மீண்டும் படிக்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும்... என்ன பேசப்போகிறார்கள் என்பதைக் கேட்க கூட்டத்திற்கு போக வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டுவதாக இருக்க வேண்டும்...

அதை விடுத்து பக்கம், பக்கமாக எழுதினால் ... சலிப்பு ஏற்பட்டு படிக்காமல் ஒதுக்கி வைத்து விடுவார்கள் ...

ஒரு வேளை முழுவதுமாக படித்து முடித்தார்கள் என்றால்... இதைத் தானே பேசப் போகிறார்கள் என்று கூட்டத்திற்கே வரமாட்டார்கள்... என்றார்.


என்ன ஆச்சரியம்.. அன்றைய கூட்டத்திற்கு அரசு ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நோட்டீஸ் எழுத அன்று தோழர்.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களிடம் கற்றுக் கொண்டேன் என்பதை பெருமையோடு பதிவு செய்கிறேன்.

இரா.பாலசுப்பிரமணியன், முன்னாள் பொதுச் செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.