Thursday, January 16, 2020

சுளுந்தீ நாவல் அறிமுக நிகழ்வு - தேனி - பகுதி ஒன்று

எப்போதும் நான் "ஸபி" என்று அன்பு பொங்க அழைக்கும் முகமது ஸபிக்கும் எனக்கும் முப்பது ஆண்டு கால நட்பு .

தொண்ணூறுகளின் இறுதியில், தேனியில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின்  கலைஇரவு நிகழ்வில் பேச அழைக்கப்பட்டிருந்தேன் . தேனி பேருந்து நிலையத்திற்கு அருகில் , பங்களாமேட்டில் மதுரைக்குப் போகிற சாலையை அடைத்துப் பெரிய மேடை போட்டிருந்தார்கள் .

பின்னிரவில் பேசத் துவங்கினேன் .  " கோபுரங்களும் குப்பைமேடுகளும் " என்பது நான் தந்த தலைப்பு . இலக்கியத்தில் எது கோபுரமாக உயர்ந்து நிற்கிறது , எது குப்பைமேடாகச் சிறுத்துக் கிடக்கிறது என்பது அன்றைய பேச்சின் சாரம் . ஒரு மணி நேரம் இருபது நிமிடம் பேசி இருப்பேன் .

பேசி முடித்துப் பெருகிய வியர்வையோடு மேடைக்குப் பின்புறம் சென்று அமர்ந்தேன் . தோழர்கள் மனம் திறந்து பாராட்டிக்கொண்டு இருந்தார்கள் .
எல்லோருக்கும் நன்றி சொல்லிக்கொண்டு இருந்தேன் .

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகு , ஒரு தேநீர் குடிக்க எழுந்து போனேன் . விழா மேடைக்கு வலதுபுறம் இருந்த கடைக்குப் போனேன் . அங்கும் பலரும் என் பேச்சைப் பாராட்டி வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள் .

சிவந்த , மெலிந்த தோற்றம் கொண்ட ஒருவர் என் கரங்களைப்பற்றி எனக்குப் பாராட்டுகள் சொன்னார் . என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் . நான் சம்மதித்தேன் . புகைப்படம் எடுக்கவும் , உரையாடவும்  வசதியாக மேடைக்கு எதிர்ப்புறமாக மேற்கு நோக்கி நகர்ந்தோம் . அவர் தான் பேசிக்கொண்டே இருந்தார் . ஏதோ அவசர வேலை இருப்பது போலவும் , உடனே புறப்பட்டுப் போகப்போகிறவர் போலவும் விரைந்து பேசினார் . தந்தி அடிப்பது போல ஒரு படபடப்போடு பேசினார் . ஆனால் அப்படி ஏதுமில்லை . நீண்டநேரம் பேசினார் . புகைப்படம் எடுத்துக்கொண்டோம் .பேருந்து நிலையத்திற்கு அருகில் மூடிஇருந்த ஒரு கடை வாசலில் நின்று
படமெடுத்துக் கொண்டோம் .  அவரது நண்பர் தான் அந்தப் புகைப்படத்தை எடுத்தார் .


எனக்கு இந்தப் புகைப்படம் அனுப்புவீர்களா என்று கேட்டேன் . அனுப்புவதாக உறுதி தந்தார் . அவர் கையில் இருந்த ஒரு சிறிய நோட்டுப் புத்தகத்தில் எனது அலுவலக முகவரியை எழுதிக் கொடுத்தேன் . பத்து நாட்களுக்குப் பிறகு நானும் அவரும் சேர்ந்து இருக்கும் அந்தப் புகைப்படம் எனக்கு வந்தது .

அன்றிலிருந்து இன்று வரை சேர்ந்து இருக்கிறோம் . வாழ்வில் நிறைய இழப்புகளை , துன்பங்களை , இருவருமே  சந்தித்து இருக்கிறோம் . இருவரும் , ஒருவருக்கொருவர் தனிப்பட்ட வாழ்வின் ஏற்ற இறக்கங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம் . ஒருவருக்கொருவர் தவறுகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறோம் . கற்போடு இருக்கிறது எங்கள் நட்பு .

அன்றாடம் சந்திப்பதில்லை . அன்றாடம் பேசிக்கொள்வதும் இல்லை . ஆனால் இருவரும் எப்போதும் அருகிலேயே இருக்கிறோம் .


சில மாதங்களுக்கு முன் , ஒருநாள் அலைபேசியில் அழைத்து சுளுந்தீ நாவல் படித்து விட்டீர்களா என்று ஸபி கேட்டார் . அப்படி ஒரு பெயரைக் கேள்விப்பட்டதே இல்லை என்றேன் .

உடனே அனுப்புகிறேன் . அந்த நூலுக்கு ஒரு அறிமுக விழா வைக்க வேண்டும் என்றார் . அவ்வளவு முக்கியமான படைப்பா  என்று கேட்டேன் . ஆம் என்றார் .
புத்தகம் அனுப்புங்கள் என்றேன் . வாசிக்காமல் எந்தப் புத்தகம் தொடர்பான ,எந்த விழாவுக்கும் நான் போவதில்லை  என்று அவருக்குத் தெரியும் .

சில நாட்களில் புத்தகம் வந்தது. வாசிக்கத் துவங்கினேன் .

.... தொடரும்
 


அன்பு நண்பன் ஸபி .