Thursday, May 2, 2013

உங்களைப் போன்ற ஆசான்கள் இருந்தால்...

உண்மையின் போர்க்குரல் - வாச்சாத்தி நான் இயக்கிய நான்காவது ஆவணத் திரைப்படம் . இதனைத் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கமே தயாரித்தது . சிறப்புற அதனை 30.09.2012 அன்று  வெளியீட்டும் எங்களைப் பெருமைப்படுத்தியது  . இது பற்றி எனது முந்தைய பதிவுகளில் நான் எழுதி இருக்கிறேன் .

இந்த ஆண்டு ஜனவரி மாத இதழில் அதற்கு ஒரு விமர்சனத்தைப் பிரசுரித்து எங்கள் பணியை அங்கீகரித்து , மேலும் பெருமை சேர்த்தது " செம்மலர் " இலக்கிய மாத இதழ் . செம்மலர் ஆசிரியருக்கும் , ஆசிரியர் குழுவுக்கும் எனது மனமார்ந்த நன்றி .

அந்த விமர்சனத்தை எழுதி இருந்தார் எப்போதும் என் மதிப்பிற்குரிய பேராசிரியர்  பி . விஜயகுமார் .அவருக்கும் எங்களது தனித்த நன்றி

பேராசிரியர் விஜயகுமாரை ஒரு உறுதி மிக்க தொழிற் சங்கத் தலைவராக நான் அறிவேன் . ஒரு ஆங்கில மொழிப் பேராசிரியராகப் பணி  புரிந்த அவர் மதுரை காமராஜர் பல்கலைக் கழக ஆசிரியர்கள் மன்றத்தின் பொதுச் செயலாளராகத் திறம்படச் செயல் புரிந்தவர் .

ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்குப் போராடிய அவர் ஒட்டு மொத்த கல்வித் துறையின் மேம்பாடு குறித்து விரிவாக , ஆழமாகச் சிந்தித்தவர் . ஒரு கல்லூரியில் , உயர் கல்வித் துறையில் வேலை பார்த்த போதும் அடிப்படையான ஆரம்பக் கல்வி குறித்து மிகுந்த அக்கறை கொண்டவர் .

ஆரம்பக் கல்வியின் அடிப்படைகளைத் தகர்த்து விட்டு , சிறப்பான உயர் கல்வி  அமைப்பை உருவாக்க இயலாது என்கிற அறிவார்ந்த புரிதலும் , தெளிவும் கொண்ட சிந்தனையாளர் .

எல்லாவற்றிற்கும் மேலாக  அனைத்து இந்தியக் குழந்தைகளுக்கும் எந்த விதமான பாகுபாடுமின்றி தரமான , சமமான , கட்டணமற்ற கல்வி தரப் பட வேண்டும் என்கிற கோரிக்கையில் , முழக்கத்தில் , கொள்கையில் சமரசமில்லாத பிடிப்புக் கொண்டவர் .

தமிழகத்தில்  பள்ளிக் கல்வியின் நிலை , தரம் , தேவைகள் , உரிமைகள் என பல அம்சங்களை ஆராய்ந்த  "எனக்கு இல்லையா கல்வி ?' என்னும் எனது முந்தைய ஆவணப்படத்திற்காக அவரது சாட்சியத்தைப் பதிவு செய்யும் வாய்ப்பு அமைந்தது. எந்த "பந்தாவும்" இல்லாமல் பேட்டிக்கு ஒப்புக் கொண்டார் . குறித்த நேரத்தில் தயாராக இருந்தார் .

.அனைத்து இந்தியக் குழந்தைகளுக்கும் கல்வி என்ற கோரிக்கையின் நூறாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றை , அதன் ஏற்ற இறக்கங்களை , அதனை முன்மொழிந்தவர்களை , எதிர்த்தவர்களை , அரசுகளின் அணுகுமுறைகளை , மோசடிகளை என எல்லாவற்றையும் கையில் ஒரு சிறு குறிப்பு கூட இல்லாமல் மடை திறந்த வெள்ளமென ஒரு மணி நேரம் சாட்சியமளித்து எங்களுக்கு ஒரு சேர வியப்பும் , அறிவும் ஊட்டினார் .

அவரது சாட்சியம் மட்டுமே ஒரு தனித்த ஆவணப் படமாகும் அளவு வரலாறும் , தரவுகளும் , செய்திகளும் கொண்டதாக இருந்தது .  இன்றைய பள்ளிக் கல்வியில் நிலவும் சமமற்ற போக்கை அவர் விவரித்த விதமே தனிச் சிறப்புடையது . ஆவணப் படத்தை இறுதிப் படுத்துகிற சமயம் அவரது சாட்சியத்தின் சில பகுதிகளைத்தான் படத்தில் சேர்க்க முடிந்தது .

மெல்லிய , உறுதியான , தெளிவான , குரலில் அவர் அதனை எங்களுக்கு அளித்தார் . நிறை குடம் அவர் . அப்போது அவரிடம் "நன்றி" என்ற ஒரு வார்த்தை தவிர எதுவும் நான் சொல்லவில்லை.

அத்தகைய மதிப்பு மிக்க மனிதர் வாச்சாத்தி ஆவணப் படத்தைப் பார்த்து விட்டு , ஒரு அரை மணி நேரத்திற்கும் மேலாக என்னோடு அலைபேசியில் பேசினார் . கண்கள் கலங்க , கண்ணீர் பெருக அதனைப் பார்த்ததாகச் சொன்னார் . அதன் உருவாக்கத்திற்காக எங்களை  மனசார வாழ்த்தினார் . சில வரலாற்றுச் சம்பவங்களைக் குறிப்பிட்டு அவைகளையும் நீங்கள் படமாக்க வேண்டும் . அது உங்களால் முடியும் என்றார் .

அறிவும், தெளிவும், சிந்தனையும், செயலும் மிக்க உங்களைப்  போன்ற ஆசான்கள் இருந்தால்... அவர்களது வழிகாட்டுதலும் வாழ்த்தும் இருந்தால் எங்களால் எதுவும் முடியும் ப்ரொபசர் விஜயகுமார் .


No comments:

Post a Comment