Thursday, February 10, 2011

குருதி கொப்பளிக்க வைக்கும் கேள்விகள்


எப்போதும் , ஒருவர் அறிமுகமாகிற போது , அன்றி நமக்கு அறிமுகப்படுத்தப் படுகிற போது உரையாடலைத் துவங்க கேள்விகளைத் தான் நம்பி இருக்கிறோம் நாம் . இந்தக் கேள்விகளின் நோக்கம் உரையாடலைத் தொடர்வது மட்டுமல்ல . அவரை , அவரைப் பற்றிய அனைத்து உண்மைகளையும் , வாய்ப்பிருந்தால் ரகசியங்களையும் அறிந்து கொள்ளுகிற அவசர அவசியம் தான் . ஆனால் நாம் உணர்வதில்லை அந்தக் கேள்விகள், உள்ளுக்குள் அறுத்துக் குருதி கொப்பளிக்க வைக்கும் கேள்விகள் என்பதை.சிலர் எந்த உள் நோக்கமும் இன்றி இந்தக் கேள்விகளைக் கேட்டு வைக்க , பலர் திட்டமிட்டே, கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள் .

எப்படியெல்லாம் கேட்டு விடுகிறார்கள் . வேலை கிடைக்காமல் வெறுத்துப் போய் , வெம்பிப் போய் அலைகிறவர்களிடம்,"இப்ப என்ன பண்ணுற ? .. எங்க வேல பாக்குற? "
திருமணம் ஆகாமல், பொருத்தமான இடம் அமையாமல் அவதிப்படும் ஆட்களிடம் ,"எப்பம் கல்யாணம் ? கல்யாணச் சோறு எப்பப் போடுவ ? ". திருமணமாகிக் குழந்தை பிறக்காமல் மனதாலும் உடம்பாலும் தவமிருக்கிறவர்களிடம் , "எதுவும் புழு பூச்சி இருக்கா? எத்தினி குழைந்தங்க ?" என்று கூசாமல் கேட்டு வைக்கிறோம்/வைக்கிறார்கள்.
பத்துப் பன்னிரெண்டு வருடமாக வாய்ப்புத் தேடிப் போராடுகிற ஒரு உதவி இயக்குனரிடம்,"எப்பம் தனியா படம் பண்ணுவ ? எவன் எவனோ பண்றான் . நீ என்ன பண்ற? "
எத்தனை கேள்விகள்? ? ?

தன் சொந்த சாதி , மதம், பிறப்பு குறித்து ஏதோ குற்ற உணர்ச்சியோ , தாழ்வு மனப்பான்மையோ , ஒருவருக்கு இருக்கலாம் என்பதை உணராமல்,"நீங்க என்ன ஆளுங்க?..என்ன சாதி ? அப்பா அம்மா என்ன பண்ணுறாங்க ? " என்று ஈவு இரக்கமில்லாமல் கேட்டு விடுகிறார்கள். பிக் பாக்கெட் அடிக்கிறவன் விரல்களுக்கு நடுவில் வைத்திருக்கும் கூர்மையான பிளேடால் நமது பையை அறுத்து நம் பொருளைக் கவர்ந்து போவது போல. ஒவ்வொரு கேள்வியும் இதயத்தின் அடிப்பகுதியை அறுத்து குருதி கொப்புளிக்க வைக்கிறது . பெருகிக்கொண்டே இருக்கும் இந்தக் குருதி அடி வயிற்றில் இறங்கி உறைந்து கெட்டி தட்டி நின்று விடுகிறது . " ஏதாவது விசேஷம் இருக்கா ? .. என்னமாவது தகவல் உண்டா ? .... என்பதான நாசூக்கான கேள்விகளும் கூட இதில் அடங்கி விடும் . ஒரு கல்யாண வீட்டில் , நண்பரொருவர் எதிரில் வந்த ஒரு பெரியவரை, அன்புடன் , "நல்லா இருக்கீங்களா ? " என்று கேட்டதும் பெரியவர் முகம் சிவந்து , " நல்லா இருக்குறவங்களப் பாத்து எதுக்கு இப்பிடிக் கேக்குற ? என்றார்.
பிறகு எப்படிப் பேசுவது ... என்ன பேசுவது ... எங்கே துவங்குவது என்று பலருக்குத் தோன்றும் . எந்த வகையிலும் காயம் உண்டாக்காத கேள்விகள் இருந்தால் பேச வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் மனம் திறக்கிற வரை காத்திருக்கத் தான் வேண்டும் .

 ஒரு குழந்தை தன் தாய் மொழியைத் தடையின்றிப் பேச மூன்று ஆண்டுகள் பிடிக்கும் என்கிறது மருத்துவ விஞ்ஞானம் . ஆனால், அதை முறையாகப் பேசி விட வாழ்நாள் முழுவதும் போராட வேண்டி இருக்கிறது..எல்லாச் சந்திப்புகளிலும், உரையாடல்களிலும் சக மனிதர்களுடைய இதயத்தை அறுத்து விடாத சொற்களை எனது மொழி எனக்குத் தர வேண்டும் என்று தவமிருக்கிறேன்.

7 comments:

rajasundararajan said...

ஒரு மனிதனாய்
-------------------------

என்னைக் கணக்கு வைக்க
மக்கள் தொகைக் கணக்கு எடுக்கும்
ஆள் வந்திருப்பதாகச் சொன்னார்கள்.

சாதி கேட்கப்படும்:
சொல்லிவிடலாம் கூச்சப் பட்டாவது.
குடும்ப விவரம் கேட்கப் படும்:
அவள் இருப்பிடத்தில் இதே விவரத்துக்கு
கணக்குக் காட்டியிருக்க மாட்டாள் என்னை
இவ்விடத்தில் காட்டமுடியாது நானும்.

தவிர்த்துத் தவிர்த்து,
குடும்ப, வாக்குரிமை உரிமங்களும்
பெறமுடியாத குடிமகனாய்ப்
பதுங்கிப்புழங்கி வருவழியில்
இடு/சுடு காடு உண்டு.
அவ்விடத்தில் வைத்திருக்கிறேன் கணக்கு.

vimalanperali said...

மனிதனை வார்த்த நாகரீகம், மனிதத்தையும்,மனிதமனத்தையும் இன்னும் வளப்படுத்தவில்லை.

Unknown said...

மொழியின் உன்னதத்தை தேட வாழ்நாள் முழுவதும் வாசிக்க வேண்டியிருக்கிறது...

காமராஜ் said...

அசத்தல் bk

பா.ராஜாராம் said...

அருமை bk!

rvelkannan said...

உங்களின் பதிவும் +//
மொழியின் உன்னதத்தை தேட வாழ்நாள் முழுவதும் வாசிக்க வேண்டியிருக்கிறது..//
இந்த பதில் மொழியும் அருமை

Yaathoramani.blogspot.com said...

தீப்பொறிபோல நல்ல சிந்தனையை
விதைத்துச் செல்கிறது
உங்கள் பதிவு
இதயத்தை அறுக்காத சொற்களைக் கையாள
அவசியம் பழக வேண்டும்
நல்ல பதிவு
தங்களைத் தொடர ஆர்வமூட்டுகிறது

Post a Comment