Wednesday, February 9, 2011

நாஞ்சில் நாடன்

 தமிழினி பதிப்பகம் நடத்திய நாஞ்சில் நாடனுக்கான பாராட்டு விழா மதுரையில் நடந்தது. பிப்ரவரி நான்காம் தேதி மாலை. பேராசிரியர் அ. மார்க்ஸ், மூத்த கவிஞன் சமயவேல், எழுத்தாளர் ஷாஜகான், நான், என நான்கு பேர் பேசினோம். நாஞ்சில் ஏற்புரை சொன்னார். அரங்கம் நிறைந்த கூட்டம் தான்.

"எச்சம்" "யாம் உண்பேம்" என்னும் நாஞ்சில் நாடனின் இரண்டு மகத்தான சிறுகதைகளை அரங்கில் குறிப்பிட்டேன். என் மொழியில் அந்த கதைகளைச் சொன்னேன். பார்வையாளர்களும், நாஞ்சில் நாடனும் ஒரு சேரக் கண் கலங்கினார்கள். "நீங்க பேசும்போது கண்ணு கலங்கிடிச்சு" என்று கூட்டம் முடிந்ததும் நாஞ்சில் சொன்னார். நாஞ்சில் எனக்களித்த விருதாக, இந்த வார்த்தைகளைப் போற்றுவேன்.

எப்போது சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டாலும், எங்கிருந்தேனும் ஒரு எதிர்ப்பு வரும். பகிரங்க எதிர்ப்பு இல்லாவிட்டாலும், உள்ளுக்குள்ளேனும் ஒரு கூட்டம் வருந்திக் கண்ணீர் வடிக்கும். பரிசு பெறுகிறவர் குறித்த விவாதம் இல்லாவிட்டாலும், இந்த தொகுப்புக்குத் தந்திருக்கக் கூடாது என்கிற முணுமுணுப்பாவது இருக்கும். எதுவும் இல்லை இந்தமுறை. இது நாஞ்சில் நாடனின் ஆளுமையையும், தமிழ் வாசகப்பரப்பின் மேன்மையையும் எனக்கு ஒரு சேர உணர்த்துகிறது. எத்தனை விருதுக்கும் தகுதி உடையவர் நாஞ்சில்.

எனினும், அரசு சார்ந்த அல்லது அறியப்பட்ட அமைப்புகளின் விருதுகளுக்குப் பிறகு, படைப்பாளியை கொண்டாடுவது பொதுப்புத்தியில் இருக்கும் பொறுப்பின்மை தான். தனக்கு சாகித்ய அகாடமி விருது தரப்பட்டபோது, "எனக்கு விருது கொடுத்து சாகித்ய அகாடமி தன்னை கௌரவித்துக்  கொண்டது" என்றார் ஜெயகாந்தன். "An award has been granted to me by Sakithya Academy, which has no sakithya" என்றாராம் க.நா.சு. பிறகு ஏன் விருது வாங்கினீர்கள் என்று கேட்டபோது, விருதுடன் இணைந்த இருபத்தைந்தாயிரம் ரூபாயை எப்படி விட்டுக்கொடுப்பது என்று சொன்னதாக ஒரு தகவல் என் காதிற்கு வந்து எனக்குள் கிடக்கிறது. நாஞ்சிலுக்கு விருது கொடுத்தது அகாடமிக்குப் பெருமையா இல்லை நாஞ்சிலுக்குப் பெருமையா என்று என்னைக் கேட்டால், தனது எழுத்தாற்றலால் நாஞ்சில், சாகித்ய அகாடமியை வென்றிருக்கிறார் என்றே எனக்குப் படுகிறது. ஒற்றையாக, ஊர் சுற்றி, ஊர் சுற்றி, நொம்பலப்பட்டு, அல்லற்பட்டு, ஆற்றாது, பிறர் துயர் கண்டு துடித்த ஒரு மனிதன் தன் விரல்களால் வென்றிருகிறான்.

அங்கேயே இன்னொன்றையும் குறிப்பிட்டேன் "இப்படித்தான் ஊர் ஊராக இனி கூப்பிடுவார்கள், துண்டு போடுவார்கள், பரிசு கொடுப்பார்கள், பாராட்டுவார்கள், எல்லாம் நடக்கும். இன்னும் ஒரு மூன்று மாதங்களுக்கு பிறகு. எல்லாம் ஓய்ந்து விடும். நீங்கள் நிம்மதியாக எப்போதும் போல் எழுதப் போய் விடலாம்" என்றேன். மௌனமாக, ஒரு புன்னகையோடு அதை ஆமோதித்தார் நாஞ்சில்.

நாம் அப்படித்தானே எப்போதும் செய்கிறோம்.
பேய்க்கூச்சல் அல்லது மயான அமைதி.

7 comments:

காமராஜ் said...

இந்த மிரட்டுகிற உண்மையை எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது.அது எங்களுக்கான உறை மோர்.

Unknown said...

//நாம் அப்படித்தானே எப்போதும் செய்கிறோம்.
பேய்க்கூச்சல் அல்லது மயான அமைதி.//

அண்ணா! நிஜம் எப்போதும் போல் சுடுகிறது...ஆனால் நானும் தமிழனல்லவா எப்போதும் போல் இதுவும் மறந்து போகும்....

போ. மணிவண்ணன் said...

உங்கள் உரை இரும்பு மனத்தாரையும் உருக்கிவிடும் என்பதை நான் நன்கு அறிவேன்.நாஞ்சிலின் நல்ல எழுத்துக்கள் பாரதியின் நல்ல உணர்வுகளால் உச்சரிக்கப்படும்போது ஏற்படும் சிலிர்ப்பை நான் உணர்கிறேன். இந்த பாராட்டும் நாஞ்சிலிடமிருந்த இன்னும் நல்ல படைப்புகளை வெளிக்கொண்டு வரட்டும்

தமிழ்மணவாளன் said...

BK,பரிசு பெறும்போது பாராட்டுவதும், வாழ்த்துவதும் சரிதான். அதே நேரம் இயல்பாகவே நல்ல படைப்பாளிகளை, கலைஞர்களைக் கொண்டாடும் மனோபாவம் தமிழ்சூழலில் மிகக்குறைவு .வார்த்தைகளின், உணர்வுப்பரிமாணத்தின் உச்சத்தை எட்டியபடியல்லவா உங்கள் உரை இருக்கும்.எந்த மனம் தான் கலங்காதிருக்க முடியும்.உங்களுக்கும் என் வாழ்த்துகள்.

பா.ராஜாராம் said...

வணக்கம் இருவருக்கும்.

தீபா நாகராணி said...

//ஒற்றையாக, ஊர் சுற்றி, ஊர் சுற்றி, நொம்பலப்பட்டு, அல்லற்பட்டு, ஆற்றாது, பிறர் துயர் கண்டு துடித்த ஒரு மனிதன் தன் விரல்களால் வென்றிருகிறான்.//
நாஞ்சில் நாடன் இதுவரை கடந்து வந்த பாதையை, ஒரே வரியில் அழகாக சொல்லி இருக்கீங்க...

ஈரோடு கதிர் said...

கடைசி வரியின் நிஜம் சிரிக்கிறது

Post a Comment