Sunday, April 28, 2013

இப்படித் தான் இருக்க வேண்டும் முத்தமிழ் விழாக்கள் .

இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு , பெப்ரவரி இருபத்தி ஆறாம் நாள் சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் பங்கு பெறுகிற நல் வாய்ப்பு அமைந்தது . 

ஆயிரத்து இரு நூறுமாணவிகள் கூடி இருந்த அரங்கு நிறைந்த கூட்டம் . துவக்கத்தில் இருந்த சில சலசலப்புகள் அடங்கியதும் நிகழ்வு உயிர் பெற்றது .
மிக எளிய , நடுத்தரக் குடும்பத்து மாணவிகள் தான் அதிகம் இருப்பதை என்னால் உணர முடிந்தது . பொதுவாக நகர்ப் புறத்துக் கல்லூரிகளில் காணப்படும் பணக்காரத்தனம் இல்லாத எளிமை எங்கும் தென்பட்டது மிகுந்த மகிழ்வைத் தந்தது . ஒரு மணி நேரம் மகாகவி பாரதியை அவர்களுக்கு , அவர்களின் மொழியில் அறிமுகம் செய்தேன் . இன்றைய சம கால நிகழ்வுகளோடு , அதனைப் பொருத்திப் பேசினேன் .
உரிய எதிர் வினைகளோடு எனது உரையை மாணவிகள் அங்கீகரித்தார்கள்.


எனது உரையைத் தொடர்ந்து அன்பு நண்பர் . முனைவர் கார்த்திகேயனின் இயக்கத்தில் நிகழ்ந்த பாரதி குறித்த நாட்டிய நாடகம் மிகுந்த பாராட்டையும் . அங்கீகாரத்தையும் பெற்றது .அடையாறில் உள்ள டாக்டர் எம் ஜி ஆர் - ஜானகி கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் அறுபது மாணவிகள் அதில் பங்கேற்று இருந்தார்கள்.  நவீன நாடகத்தின் உத்திகளை இந்த நாட்டிய நாடகத்தில் இணைத்து இருந்தது தனிச் சிறப்பு .  ஒன்றரை மாதக் கடின உழைப்பில் உருவாகி இருந்தது நாடகம் . முனைவர் கார்த்திகேயன் மிகச் சிறந்த நடிகரும் கூட . " அண்ணாமலை" என்ற பெயரில் வந்த மிகப் பிரபலமான தொலைக் காட்சித் தொடரில் " சூதாடிச் சித்தன் " என்னும் பாத்திரத்தில் ஜொலித்தவர் .

தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளிலும் அரங்கேற்றம் செய்யும் தகுதியுடன் இருந்தது நாடகம் .இது போன்ற தரமும் , தகுதியும் வாய்ந்த நிகழ்வுகளை நடத்தும் கல்லூரிகளின் எண்ணிக்கை அருகி வருவதை நான் அறிவேன்.
எந்த அறிவுத் திறனும் தகுதியும் அற்ற , வெறுமனே  ஏதேனும் ஒரு ஊடகத்தின் மூலம் பிரபலமான மூடர்களைக் கொண்டாடும் இந்தக் காலத்தில், செல்லம்மாள் கல்லூரியின் முனைப்பைப் பாராட்டத் தான் வேண்டும்.

மிகச் சிறப்பாக கல்லூரி முதல்வருக்கும் , தமிழ்த் துறைக்கும் எனது நெஞ்சம் நிறைந்த மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர்களது அன்பான உபசரிப்பும் , பாங்கும் எப்போதும் என் நன்றிக்குரியது .நிகழ்வில் பங்கு பெற எனது பெயரை முன் மொழிந்த பேராசிரியை திருமதி . தமிழரசி முத்துப்பாண்டியன் அவர்களுக்கு எனது தனித்த நன்றியும் , வணக்கமும். மொத்தத்தில் பாரதிக்குப் புகழும் , பெருமையும் சேர்ப்பதாக எல்லாமே அமைந்தது . இப்படித் தான் இருக்க வேண்டும் முத்தமிழ் விழாக்கள் .

1 comment:

Muscat Mu.Basheer said...

நிறைவான விழாக்கள்!நெஞ்சம் தொடும்!! என்பதை அழகாய் சொல்லி வைத்தீர்கள்.
நன்றி..அன்பன் மஸ்கட். மு.பஷீர்

Post a Comment