Wednesday, April 10, 2013

விந்தையான பொருத்தம்

இதுவும் கீழ வெண்மணி ஆவணப்படத்திற்கென வெளியீடப்பட்ட பிரசுரம் தான் .

படத்தில் இடம் பெற்ற மூவரில் , மேலே இருப்பது "இருக்கை"  ராமுப் பிள்ளை . வெண்மணி வழக்கில் நான்காவது குற்றவாளி . வெண்மணிச் சம்பவம் நடந்த சமயம் தான் மருத்துவ மனையில் இருந்ததாகப் பொய்யான ஆவணங்களை நீதி மன்றத்தில் சமர்ப்பித்து விடுதலை அடைந்தவர் . இதனை அவரே வாக்குமூலமாக , எனது ஆவணப்படத்தில் ஒப்புக் கொள்ளுகிறார் .

இரண்டாவதாகவும் , வலது புறத்திலும் இருப்பது வெண்மணி வழக்கில் பதினான்காவது குற்றவாளி . வழக்கின் முதல் குற்றவாளி "இருஞ்சியூர்" கோபாலகிருஷ்ண நாயுடுவின் மூத்த சகோதரரின் மகன் .அவரும் எனது ஆவணப் படத்தில் தாங்கள் வெண்மணியில் குடிசைகளுக்குத் தீ வைத்ததை  ஒப்புக் கொள்ளுகிறார் . அவரும் நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர் தான் .

இறுதியாக இருப்பது வழக்கைப் பதிவு செய்த அன்றைய கீழையூர் காவல் நிலைய ஆய்வாளர் .எல்லாம் தெரிந்திருந்தும் , ஏதும் அறியாதவர் போலப் பேசிய பண்பாளர் . அவரது வாக்குமூலமும் ஆவணப் படத்தில் இடம் பெற்றுள்ளது .

இவர்கள் விரித்த வஞ்சனை வலையில் தான் அந்த நாற்பத்தி நான்கு உயிர்களும் கருகின .எனவே வடிவமைப்பில் அவர்களுக்குப் பின்னே ஒரு சிலந்தியின் வலையை வைத்தோம் .

ஒரு பெரிய சிலந்தி வலையை ஒரு நாள் அதிகாலை வெண்மணிக்குப் படப்பிடிப்புக்குப் போன பொழுது , வெண்மணி நினைவு இல்லத்திற்கு அருகில் இருந்த ஒரு வேலியில் பார்த்தேன் . அத்தகைய ஒரு பெரியதான  சிலந்தி வலையை நான் பார்ப்பது அதுவே முதல் முறை . அதைப் படம் பிடித்துக் கொண்டேன் . நீண்ட நேரம் காத்திருந்தும் அந்த சிலந்தி வலையின் "உரிமையாளர்" அங்கு வரவேயில்லை . அந்த சிலந்தி வலை தான் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கிறது . வலை விரித்து வைத்து விட்டு வராமலே போன அந்த சிலந்தியைப் போலவே , இந்தக் குற்றவாளிகளும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொண்டார்கள் . இயற்கையாக நடக்கிற சில விஷயங்கள்  நம் அனுபவத்திற்குப் பொருந்தி வருவது விந்தையானது தான் .

No comments:

Post a Comment