Monday, April 29, 2013

பாழும் திருவுளமே பாழும் திருவுளமே ...

நேற்றைய பதிவொன்றில் புதுகை தனிக்கொடியின் மகத்தான , மனம் கலங்கி அழ வைத்த  பாடல் பற்றி எழுதி இருந்தேன் .அந்தப் பாடலைத் தந்திருக்கிறேன் . மேலே தந்திருப்பது அந்த ஆவணப் படத்தின் முகப்பு .

ஒரு பனை உயரத்தில்,  சின்னஞ் சிறு தூக்கணாங்குருவி தன் குஞ்சுக்கு மிகப் பாதுகாப்பான ஒரு கூட்டைக் கட்டி வைக்கிறது . ஆனால் மனிதன் ... இன்னும் இப்போதும், தன் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான ஒரு உலகத்தை உருவாக்கவே இல்லை .

என் ஆருயிர் நண்பனும் , ஒரு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியனுமான இரா \. பிரபாகர் இந்தப் பாடலுக்கு இசை அமைத்துத் தானே பாடி பாடலுக்கு எல்லையற்ற மதிப்பும் , துயரும் தந்து என் உயிரை உருக்கினான் .

அதன் காட்சி வடிவத்தை இங்கு பதிவிட முயலுகிறேன் .


பாடல்
----------------------------------------------------------------------------------------------------------

சொல்ல மனம் துடிக்குதே தேமித் தேமி - எங்க
புள்ளக் கறி கேட்டது எந்தச் சாமி ?

பாழும் திருவுளமே  பாழும் திருவுளமே
வாழப் பிடிக்கலையே சோழப் பெருநிலமே 

இப்ப அழச்சது போல் இருக்கு எம் புள்ள முகம் 
எப்பத் திரும்பி வரும் என் வீட்டுத் தங்க ரதம் 

தவழ்ந்த வாசம் இன்னும் தரை விட்டுப் போகலியே - கண் 
வளர்த்த தொட்டில் இன்னும் காத்தசஞ்சும் ஆடலியே 

பால் வாசம் மாறுமுன்னே பால் ஊத்த விட்டீகளே 
தங்கத்தைக் கருக விட்டுச் சாம்பலைத் தான் தந்தீகளே 

மாடு  அலறலியே வழிப் பூனை மறிக்கலயே
மாட விளக்கு அணைஞ்சு மரணத்தைச் சொல்லலியே 

காட சாக்குருவி கத்தித் தொலைக்கலியே -எங்
குடி கவுறப் போகுதுன்னு கவுளியும் சொல்லலியே  

படு களத்தில் மாண்டிருந்தா பாவி மனசாறிவிடும் 
இடி மின்னல் விழுந்திருந்தா விதியோன்னு போயிருக்கும் 

பத்திய கொலைத் தீயில் பால் நிலவு அவுஞ்சிருச்சே 
வெத்தல கொடிக்காலில் கொழுந்தெல்லாம் கருகிருச்சே 

எம் புள்ள என்னோட இருந்த ஒரு பொழுத 
திருப்பித் தந்திடுமா தீர்ப்பெழுதும் கச்சேரி 

களவுக்கும் காவுக்கும் கன்னக்கோல் வச்சுருக்கும் -இந்த 
எழவெடுத்த கல்விக்கு என்னைக்குக் கருமாதி  

1 comment:

ilangovan thayumanavar said...

கொத்தாய் இதயம் பிசையும் தனிக்கொடியின் வரிகள்..
தோழர் ப்ரபாகரின் eerie pathos...

எப்படித் தணியும்?

Post a Comment