Monday, December 23, 2013

வெண்மணி நினைவேந்தல்

நாற்பத்தி ஐந்து  ஆண்டுகள் ஆகி விட்டன . இன்னும் கலையாத கண்ணீரும் , துயரமும் அந்தப் பூமியில் புகை போல மூடிக் கிடக்கிறது .

எந்த வடிவத்திலும் சொல்லி விட முடியாத , அளவிட முடியாத இழப்பிற்குப் பின்னும் வீறு கொண்டு , போராடியவர்கள் அந்த  மக்கள்

அவர்களது போர்க்குணமும் , பற்றுறுதியும் , நாம் கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைப் பண்புகள்.

இன்னும் சொல்லப்பட வேண்டிய பல தரவுகளும் , ஆவணங்களும் , செய்திகளும் என் சேகரிப்பில் உள்ளது .

எனினும் ஒரு எழுபது நிமிட ஆவணப் படமாக மட்டுமே அதை இறுதிப் படுத்த நேர்ந்தது .

அதன் வெளியீட்டு விழாவில்   ஏற்புரையாக .நான் சொன்னேன் . " இது இரண்டு அல்லது மூன்று மணி நேர ஆவணப்படமாக வந்திருக்க வேண்டும் . ஆனால் எனக்கிருக்கிற  பொருளாதாரத் தடைகள் காரணமாக நான் இதை எழுபது நிமிடத்தில் முடிக்க நேர்ந்தது . என் சொந்த உடலின் உறுப்புகளை நானே வெட்டிக் கொள்வது போன்ற துயரத்துடன் நான் இதனைச் செய்திருக்கிறேன். "

இன்னும் சொல்லப் பட வேண்டியவைகளைத் தொகுத்து இன்னுமொரு ஆவணப்படத்தை இரண்டாம் பகுதியாக செய்ய வேண்டும் என்கிற கனவும் , விருப்பமும் இருக்கிறது .

எல்லாம் இசைவாக வந்தால் அதை விட உன்னதமான பணி எதுவுமில்லை .

இந்தத் தலைமுறையில் , பாடப் புத்தகத்தில் இணைக்க வேண்டிய வரலாறு இது . அது வரை  நாம் தான் எல்லோருக்கும் இதனை உரக்கச் சொல்ல வேண்டும் . அந்த வகையில் , நிகழ்வை நடத்தும் சமூக ஆய்வு மையம் வாழ்த்துக்கும் , பாராட்டுக்கும் உரியது .

ஊனும் , உயிரும் உருக உருக ...

எத்தனையோ விருதுகள் பெற்றிருக்கிறேன் . எனது ஆவணத் திரைப்படங்களுக்காக ... எனது புத்தகங்களுக்காக ...

ஆனால் , குறிப்பிட்ட படைப்புக்கென  இல்லாமல் இத்தனை நாள் பேசிய தமிழுக்காக "தமிழ் நிதி " விருது பெறுகிறேன் .அம்பத்தூர் கம்பன் கழகம் இந்த விருதினை வழங்குகிறது .

அம்பத்தூர் கம்பன் கழகம் தகைமை சான்ற மனிதர்களால் நடத்தப் பெறுகிறது . அதன் தலைவர் "பள்ளத்தூர் " திரு . பழ . பழனியப்பன் கம்ப ராமாயண உரை ஆசிரியர் .

அவர் என்னை அழைத்து இந்த விருது பற்றி சொன்னதும் , மனமார ஒப்புக் கொண்டேன்.

இத்தகைய விருதுகளுக்கு தகுதி உடையவனாக என்னை ஆளாக்கியது என் அன்னையே . அவளை நான் மிக அதிகமாக நினைத்துக் கொள்ளுவதுண்டு .இருபத்தி நான்கு மணி நேரமும் நினைத்துக் கொண்டே இருப்பதாகச் சொன்னால் அது மிகையான பொய் .

யாரும் , யாரையும் இருபத்திநாலு மணி நேரமும் நினைத்திருக்க இயலாது .எந்த பக்தனுக்கும் ,  காதலனுக்கும் , காதலிக்கும் , நண்பனுக்கும் ,எதிரிக்கும் ... கூட  அது சாத்தியமில்லை .

நினைக்கிற தருணத்தில் , அந்த நொடியில், மனதின் அடியாழம் வரை ஊனும் , உயிரும் உருக உருக நினைத்துக் கொண்டால் போதுமானது .

அம்மா ... உன்னைப் பற்றி நினைக்கிற போதெல்லாம் ஊனும் , உயிரும் உருக , உருகித் ததும்ப நினைத்துக் கொள்ளுகிறேன் .

அம்மா ... நீ ... இருந்திருக்கலாம் . எதனால் இத்தனை விரைவாக விடை பெற்றுக் கொண்டாய் ? உன் உயிர் பிரிந்த கணத்தில் உன் அருகில் தானே இருந்தேன் ... ஏதும் சொல்லாமல் போனாய் . நினைந்து , நினைந்து மகன் உருகட்டும் என்று நீ நினைத்திருக்கவே மாட்டாய் . ஆனாலும் , தனியே விட்டு விட்டுப் போனாய் .

வாழ்வில் தனிமை என்பதை முதன் முறை அறிந்ததும் , உணர்ந்ததும் அன்றைக்குத் தான் . அது இன்றும் , இப்போதும் என்னைச் சூழ்ந்தே இருக்கிறது .
உன்னை எரியூட்டினோம் . சொந்த நிலத்தில் புதைத்திருக்க வேண்டும் . புதைப்பது தான் திராவிடர்களின் பழக்கம் , பண்பாடு .
நிலமில்லாத நாடோடிகளின் பழக்கமே எரியூட்டுவது .

உன்  கல்லறை இல்லாத போதும் எல்லாவற்றையும் உன் காலடியில் தான் சமர்ப்பணம் செய்கிறேன் .

Thursday, December 5, 2013

சென்னைக் கம்பன் கழகத்தில் ...

 அக்டோபர் பதினான்காம் தேதி சென்னைக் கம்பன் கழகம் ஏற்பாடு செய்த ஆத்தி சூடி வரிசை தொடர் சொற்பொழிவில் பேசும் வாய்ப்பு அமைந்தது .

அரங்கம் நிறைந்த கூட்டம் .

சான்றோர்கள் நிறைந்த சபை .

அன்றைய எனது உரையை சிறந்த ஆய்வுரை என்று பார்வையாளர்கள் பலரும் பாராட்டினார்கள் .

அன்று பேசியதை ஒரு நூலாக எழுதலாம் என்று ஒருவர் ஆலோசனை சொன்னார் . ஒப்புக் கொண்டேன் . பாரதியின் அடுத்த பிறந்த நாளுக்குள் எழுதி விட வேண்டும் என்று திட்டம் .

எல்லாக் கனவுகளும் மெய்ப்பட வேண்டும் .


புகைப்படத்தில் இடமிருந்து வலமாக ... திருமதி .பேரா . சாரதா நம்பிஆரூரன் , திரு .இலக்கியவீதி இனியவன் , பாரதி கிருஷ்ணகுமார் , திரு . இராம .வீரப்பன் , திருமதி பேரா . நசீமா பானு , திரு .பேரா .சாயபு மரைக்காயர் .

Wednesday, December 4, 2013

போலச் செய்தது ...






எல்லாம் சரியாக அமைந்து இருக்கிறதா என்று பார்க்க , நட்சத்திரம் அமர வேண்டிய இடத்தில் , படப்பிடிப்புக் குழுவில் இருக்கிற யாராவது ஒருவரை அந்த இடத்தில் அமர வைத்து MONITOR எடுத்துப் பார்த்துக் கொள்ளுவது சினிமாவில் எப்போதும் இருக்கிற ஒரு நடைமுறை 
அதற்குப் போய் அமர்கிறவர்கள் சும்மா உட்கார்ந்து கொண்டால் போதுமானது .முக பாவங்களை மாற்றுவதோ , உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதோ , நடிப்பதோ MONITOR க்குப் போய் உட்காருகிறவர்கள் செய்ய வேண்டியதே இல்லை 

.எப்போதாவது MONITOR பார்க்க நம்மை அழைக்க மாட்டார்களா என்று ஏக்கமாக இருக்கும் . அது சினிமாவில் வேலைக்குச் சேர்ந்த புதிது . பெரும்பாலும் காமிராத் துறையைச் சேர்ந்த நண்பர்கள் தான் போய் அமர்ந்து கொள்ளுவார்கள் .
ஒரு முறை என்னை அழைத்தார்கள் . படமாக்கப்படும் காட்சி எதுவென்று தெரிந்ததால் கொஞ்சம் முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்ட படி போய் அமர்ந்தேன் .எல்லோரும் சிரித்துக் கேலி செய்தார்கள் . எதற்குச் சிரிக்கிறார்கள் என்பது புரியவே கொஞ்ச நேரமாகி விட்டது . எனக்கு அந்தக் காட்சிக்கு ஏற்ப போலச் செய்தது தவறாகப் படவில்லை 



.இந்தப் புகைப்படங்களை தமிழ் சினிமாவின் மாபெரும் நிழற் படக் கலைஞர் நண்பர் கே .வி . ,மணி எடுத்தார் என்பது கூடுதல் பெருமை  



Tuesday, December 3, 2013

வாதாபி குடைவரைக்கோயில்

 வட கர்நாடகத்தில் உள்ள வாதாபி .
இரண்டாம் புலிகேசி காலத்திய குடைவரைக்கோயில்.
பேரழகும் , கலைத் திறனும் மிக்கது . ஒரு திரைப்படத்திற்காக , லொக்கேஷன் தேடித் திரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் .இந்தப் புகைப்படத்தின் தனிச்சிறப்பு ... இதை எடுத்தது இயக்குனர் இமயம் .

Wednesday, November 27, 2013

மகரிஷி வேதாத்திரியின் 103ஆவது பிறந்த நாள் விழா

ஏழாயிரம் பேர் கலந்து கொண்ட நிகழ்வு அது .
ஒரு சந்தடி , கூச்சல் , குழப்பம் ஏதுமில்லை .
அரங்கத்தில் அங்கும் இங்கும் யாரும் ஓடிக்கொண்டிருக்கவில்லை .
கூட்டம் நடந்து முடிகிற வரை ஒரு கைபேசி கூட ஒலிக்கவில்லை .
எங்கும் யாரும் மொபைலில் ரகசியமாகக் கூடப் பேசவில்லை .
அரங்கம் நிறைந்த பிறகு, வந்தவர்கள் வெளியில் அமர்ந்து கொண்டார்கள் .
வழி காட்டிய தொண்டர்கள் சைகையிலேயே கூட்டத்தை ஆற்றுப் படுத்தினார்கள் .

மிகச் சரியாகக்  , குறித்த நேரத்தில் விழா துவங்கியது .
அனைவரும் தங்களுக்குத் தரப்பட்ட கால அளவுக்குள் பேசினார்கள் .
எனக்குத் தந்திருந்த ஒரு மணி நேரத்திற்குள் நானும் பேசினேன் .

மகரிஷி வேதாத்திரி சமாதானத்தின் தூதுவர் . மனித குலம் வளமுடன் வாழ பதினான்கு அடிப்படைக் கோட்பாடுகளை முன் மொழிகிறார் .
அதில் முதன்மையானது "போரில்லா நல்லுலகம் ".
அதுவே அன்றைய சிறப்புரைக்கான தலைப்பு .

உலகில் போர்களுக்கு அடிப்படைக் காரணம் பேராசை கொண்ட ஆயுத வியாபாரிகளே என்று தயக்கமின்றி சொல்லுகிறார் .
மிக நீண்ட இந்திய ஞான மரபின் அழுத்தமான, உன்னதமான தொடர்ச்சியாக மகரிஷி உரையாடுகிறார் .

இரண்டு உலக மகா யுத்தங்களின் தீமைகளையும் , இன்றும் தொடரும் போர்களின் அழிவையும் விவரித்தேன் .வல்லரசுகள் ஆயுதமற்ற உலகத்தை உருவாக்குவோம் என்பதன் பொருள் , அவர்களைத் தவிர வேறு எவரிடமும் ஆயுதங்கள் இருக்கலாகாது என்பது தான் , என்பதைச்



Add caption
Add caption

சான்றுகளுடன் எடுத்துரைத்தேன் .

ஐக்கிய நாடுகள் சபை, ஏகாதிபத்திய  முதலைகளின் பல்லிடுக்கில் உள்ள இறைச்சியை உண்டு வாழ்கிற ஒரு சிட்டுக்குருவி வாழ்க்கையை வாழும் அவலத்தை அவைக்குச் சொன்னேன் .

வாழ்வதற்கு இந்த உலகத்தை விட்டால் , மனிதனுக்கு வேறு இடம் இல்லை என்பதை மனிதனுக்கு உணர்த்துவது நமது கடமை என்பதை மகரிஷி வேதாத்திரியின் சொற்களில் விவரித்தேன் .பேசிய அனைத்தையும் இங்கு எழுதி விட இயலாது ,

நான் சிறப்பாகக் குறிப்பிட விரும்புவது விழாவில் பங்கேற்ற பார்வையாளர்களின் சமூக நடத்தை.
அத்தகைய ஒழுக்கம் எல்லோரும் கற்று உணர வேண்டிய மாபெரும் பண்பு .
அற்புதம் . அளவாகக் கைதட்டி , அளவாகச் சிரித்து , முழுமையாகக் கவனித்து விழாவைப் பெருமை மிக்கதாக நடத்தினார்கள் .

ஆழியாறு அறிவுத் திருக்கோவிலின் அறங்காவலர்கள் இருவர் , தலைமை அறங்காவலர் திரு எஸ் .கே .எம் . மயிலானந்தம் , திரு பொள்ளாச்சி மகாலிங்கம் ,சி .பி .ஐ முன்னாள் இயக்குனர் திரு டி.கார்த்திகேயன் ஆகிய பெருமக்கள் விழாவைச் சிறப்பித்தனர் .

அனைத்தையும் பார்த்து விட்டு , விழாவில் உரையாற்றி விட்டுப் புறப்படுகிற பொழுது மனதில் தோன்றியது இது தான் ...

வாழ்க வளமுடன்




Monday, November 25, 2013

ஈரோடு புத்தகத் திருவிழா

கனத்த மழைக்குப் பின்னும் அரங்கம் நிறைந்தது .
வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க, புத்தகத் திருவிழா நடத்தும் மக்கள் சிந்தனைப் பேரவை , கேட்கும் பழக்கத்தையும் வளர்த்து வைத்திருக்கிறது .

வெகு மக்களின் கேட்கும் திறனை , ரசனையை வளர்ப்பது எளிதான செயல் அல்ல . ஒன்பது ஆண்டு கால தொடர் உழைப்பு , முயற்சி இவைகளால் விளைந்த பயன் அது .

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவரும் , மக்கள் சிந்தனைப் பேரவையின்  நிறுவனருமான தோழர் . ஸ்டாலின் குணசேகரன் தான் இதனை சாத்தியப் படுத்திய பெருமைக்கு உரியவர் .

மூட நம்பிக்கைகளை உருவாக்கும் ,வளர்க்கும் , பதிப்பகங்களின் புத்தகங்களை புத்தகத் திருவிழாவிற்குள் அவர் அனுமதிப்பதே இல்லை.
இது  தனியே குறிப்பிட்டுப் பாராட்டப்பட வேண்டிய செய்தி .

பொது அரங்கில் பேச அழைக்கப்படும் எவருக்கும் எந்தத் தடையும் இல்லாத சுதந்திரத்தையும் அவர் தருவார் . அதுவே நமது கடமையையும் , பொறுப்பையும் நமக்கு உணர்த்தி விடும் .

பத்து நாள் நடந்த விழாவில் இந்த ஆண்டும் எனக்குப் பேச வாய்ப்பளித்தார் தோழர் . ஸ்டாலின் குணசேகரன் . "நன்றின் பால் உய்ப்பது அறிவு " என்னும் பொருளில் பேசினேன் . எனது பேச்சின் வீடியோ பதிவையோ அல்லது அதன் சாரத்தையோ விரைவில் தர முயல்கிறேன் .

முன்பே இது பற்றி நான் எழுதி இருக்கிறேன் என்றபோதும் , சிறந்த சமூகக் கடமைகளைத் தொடர்ந்து பாராட்டுவதும் , பேசுவதும் கூட ஒரு தொடர்ந்த கடமை என்பதை நான் அறிந்திருக்கிறேன் .

இந்த புகைப்படங்களை எடுத்த நண்பர் நந்தா பாஸ்கருக்கு நன்றி.
 புத்தகத் திருவிழா அரங்கம்
 தோழர் . ஸ்டாலின் குணசேகரன் துவக்கவுரை
 




Saturday, November 16, 2013

வாழ்தல் என்பது ...



எங்காவது , எதற்காவது ஒரு வரிசையில் சென்று கடைசி ஆளாக நிற்கும் போது அடி மனதில் ஒரு அவநம்பிக்கை தோன்றுகிறது . அடுத்த அரை மணி நேரத்தில் நமக்குப் பின்னால் ஒரு பத்துப் பேர் வந்து நின்றதும் அதே அவநம்பிக்கை , நம்பிக்கையாகத் தானே உருமாற்றம் கொள்ளுகிறது


இந்த மாற்றத்தை அறிவு தருகிறதா அல்லது மனம் தானே உருவாக்கிக் கொள்ளுகிறதா ? துல்லியமான விடை தட்டுப்படவில்லை.


மனமோ , அறிவோ ... எல்லாவற்றிலும் அதன் நுட்பம் என்னவென்று அறிந்து கொள்ளுகிற போராட்டமே ... வாழ்தல் என்றாகிறது 

ஈட்டுவதற்கு எதுவுமில்லை எனக்கு ...

 ஒரு சாலை விபத்திற்குப் பிறகு , கடுமையான கால் வலியோடு இந்த விழாவிற்குப் போனேன் .


அன்பினால் அரவணைத்துப் போற்றிப் பாதுகாத்து நெகிழ வைத்தார்கள் விழா அமைப்பாளர்கள் . மனமுருக நன்றி சொல்லுகிறேன் அவர்கள் அனைவருக்கும் .


இலக்கியக் கழகத்தின் தலைவரும் , பேராசிரியருமான சகோதரி குருவம்மாள் என்னை எப்போதும் " கிருஷ்ணா " என்று தான் அழைப்பார் . என் வலி உணர்ந்து அமர்ந்து பேசுகிறாயா ? என்று சலுகை தந்தார் . அந்த அன்பை வணங்கி ஏற்றுக் கொண்டு , அமர்ந்து பேசுவது மிகுந்த சிரமம் தருமென்பதால் நின்று தான் பேசினேன் .எனக்கான நினைவுப் பரிசை அவரே எனக்குத் தந்ததும் அளவற்ற மகிழ்ச்சி தந்தது .


.
நண்பர்கள் ஆர் . எஸ் . மணி , இளங்கோ என்று எல்லோரும் பார்த்துப்பார்த்து அன்பினால் நனைத்தார்கள் . அதிலும் இளங்கோ நான் இரவு உறங்கிப் போகிற வரை , தான் ,கண் விழித்து என்னைப் பராமரித்துக் கொண்டார் . எனக்கான பரிசுக்குரிய புத்தகங்களை ஒரு குழந்தை போல ஓடி ஓடிக்  கொண்டு வந்து தந்தார் மணி .



என் சிரமங்களைக் கடந்து நான் சிறப்பாகப் பேச எல்லாம் செய்து கொடுத்தார்கள் . விழாவில் பேசியவை குறித்தும் , விழாவில் எடுக்கப்பட்டப் புகைப்படங்களையும் விரைவில் பதிவிடுகிறேன் .



இத்தகைய மகத்தான , மாசற்ற , எந்தப் பலனும் எதிர்பாராத இதயங்களின் அன்பைப் பெற்று இருக்கிறேன் என்பதை விடவும் , நான் ஈட்டுவதற்கு எதுவுமில்லை இந்த உலகத்தில் .

Thursday, October 10, 2013

ஓய்வாக இருப்பது தான் பெரும் வேதனை ...

சென்னையில் மெட்ரோ ரயிலுக்கானக் கட்டுமானப் பணிகள் நடக்கிறது. .எப்போது சாலையில் என்ன மாற்றங்கள் நடக்குமென்று அவதானிக்கவே முடியாது .சில இடங்கள் பகலில் ஒரு வழிப் பாதையாக இருப்பதும் , அதே சாலை இரவில் இரு வழிப் பாதையாக மாறுவதும் அன்றாடம் நடக்கும் .

சமயத்தில் வழக்கமான பாதையை அடைத்து வேறு பாதைக்குத் திருப்பி விட்டு விடுவார்கள் . சில இடங்களில் நூறு அடிச்சாலை இருபது அடிச்சாலை ஆகச் சிறுத்திருக்கும் .தலைக்கு மேலும் , தரைக்குக் கீழும் ஓடப் போகிற ரயிலுக்காக மகா ஜனங்கள் இந்த மாற்றங்களை சபித்துக்கொண்டே ஏற்றுக் கொள்ளுகிறார்கள் .

வடபழனியில் இருந்து இட வலமாகப் போகிற நூறு அடிச்சாலையும் சில இடங்களில் சிறுத்து , இரை கிடைக்காத விலங்கின் வயிற்றைப் போல ஒடுங்கிப் பின் , இரை எடுத்த மலைப் பாம்பாக விரிந்து கிடக்கும்

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில்கொண்டு தான் மெட்ரோ ரயில் திட்டம் நடக்கிறதாம் . இவர்கள் கட்டி முடிப்பதற்குள் மக்கள் தொகையும் , வாகனங்களின் எண்ணிக்கையும் மூன்று மடங்கு அதிகரித்து விடும் . திட்டங்களுக்கான கால வரையறையும் , துல்லியமான நடைமுறைப்படுத்தலும் இல்லாத ஒரு நாட்டில் எந்தத் திட்டமும் உரிய பயனை மக்களுக்கு வழங்காது .

நகரம் உருவாகிறபோதே உரிய அகலமான சாலைகளும் , வழித்தடங்களும் இணைத்தே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். நகரின் எல்லா நீர் நிலைகளையும் விழுங்கி விட்டார்கள் .

சென்னையில் பல இடங்களில் லேக் வியூ சாலைகள் இருக்கின்றன . ஆனால் ஏரிகளைக் காணோம் . நீர் நிலைகளைக் காப்பாற்றாமல் மழை நீர் சேகரிப்புத் திட்டம் நடத்துவதை சொல்லிப் பெருமை கொள்ளுகிறது அரசு. குதிரை காணாமல் போன பிறகு, அது இருந்த லாயத்தைப் பூட்டும் அறிவுடைமை அரசுக்கே உரியது .

சென்னையின் நெரிசலான, நகரின் மையமான  பகுதிகளில் உள்ள பல தெருக்களுக்குள் ஆத்திர அவசரத்திற்கு ஆம்புலன்சோ , தீயணைப்பு வண்டிகளோ எளிதில்  வரவே இயலாது . எல்லாத் தெருக்களிலும் நான்கு சக்கர , இரு சக்கர வாகனங்களைத்  தெருவின் இரண்டு புறத்திலும் எந்த ஒழுங்குமின்றி நிறுத்தி வைத்திருப்பார்கள்.

எதையோ சொல்ல வந்து ... எதையோ பேசிக்கொண்டு இருக்கிறேன் .
சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறேன் .

அக்டோபர் நான்காம் தேதி பிற்பகல் மதிய உணவுக்காக எனது அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு வடபழனி நூறு அடிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்தேன் .

போக்குவரத்து அதிகம்  இல்லாது இருந்தது . சாலையில் எனக்கு வலது புறத்தில் ஒருவர் சீரில்லாமால் , ஒழுங்கின்றி காரோட்டிக் கொண்டு வந்ததைக் கவனித்தேன் . அவரிடமிருந்து விலகி , இடது புறமாக விலகிப் போனேன் .

சாலை அகலமாக இருந்த அந்த இடத்தில் , அவரை விட்டு விலகி விட இடம் இருந்தது . நல்ல பசி எடுத்ததால் விரைந்து வண்டியைச் செலுத்தினேன் . அந்தக் காரோட்டியை மறந்து போனேன் .

சாலை குறுகலான இடத்திற்கு வந்த போது , கொஞ்சம் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி மெதுவாகப் போக நேர்ந்தது . அந்தக் கார் இப்போது மீண்டும் எனக்கு வலது புறத்தில் வந்தது . அந்தக் காரைப் பார்த்ததும் மீண்டும் விலகினேன் . அவர் மேலும் இடது பக்கமாக ஏற ஆரம்பித்தார் .

நான் மேலும் விலகினேன் . அவர் முழுக்க , சட்டென இடது புறம் காரை ஏற்றி என் மீது மோதுவது போல  வந்தார் . மிக முயன்றும் அவரது காரின் பின் பக்கத்தில் , எனது இரு சக்கர வாகனம் மோதி நிலை தடுமாறிக் கீழே விழுந்தேன் .

இடது முழங்காலில் பலத்த காயம் . குருதி கசிந்தது . போட்டிருந்த ஜீன்ஸ் கிழிந்து தொங்கியது . இடது முழங்கால் , கையில் பிடிக்க முடியாத ஒரு பந்து போல வீங்கியது . அதற்குப் பந்துக்கிண்ண மூட்டு என்று பெயர் வைத்ததற்கான காரணம் உடனே புரிந்தது .

பின்னால் வந்த மாநகரப் பேருந்தின் டிரைவர் பெருத்த ஓசையோடு பேருந்தை நிறுத்தினார் . தரையில் கிடந்த படியே பார்த்த போது , இதுவரை பார்க்காத பெரிதாக இருந்தது பேருந்து . எழுந்து நிற்பது கடினமாக இருந்தது . ஒருவர் உதவினார் . எழுந்து சாலை ஓரத்திற்கு வந்து சேர்ந்தேன் . தன் நிலைக்கு வர ஒன்றிரண்டு நிமிடங்கள் தேவைப்பட்டது .

பிறகு, நானே வண்டியை ஒட்டிக்கொண்டு மருத்துவமனைக்குப் போனேன் . அழுத்தித் துடைத்து , எதையோ ஊற்றி , வெட்டி ஒட்டி , ஊசி போட்டு , மாத்திரை கொடுத்து , ஐந்து நாள் ஓய்வெடுக்கச் சொன்னார் அந்த டாக்டர் .ரொம்ப நடக்காதீங்க, படி ஏறாதீங்க என்றும் சொன்னார் .

ஓய்வெடுக்க வாய்க்கவில்லை . ஐந்தாம் தேதி காலை  புதுச்சேரியில் ஜூனியர் விகடன் ஏற்பாடு செய்த தமிழ் மண்ணே வணக்கம் நிகழ்வு ...அங்கிருந்து திருவாரூர் சென்று த .மு .எ .க .சங்கம் நடத்திய கலை இரவு முடித்து மீண்டும் புதுச்சேரி வந்து புதுச்சேரி அரசு நடத்தும் புத்தகத் திருவிழாவில் உரையாற்றி விட்டு வந்தேன் .

எல்லா இடங்களிலும் படியேற நேர்ந்தது . வீக்கமும் , வலியும் கொஞ்சம் குறைந்துள்ளது என்ற போதும் , இரண்டு நாட்களாக இளங் காய்ச்சலும் அடிக்கிறது .கால் இப்போது , கால் வாசி குணமாகி இருக்கிறது .


கனிவோடும் , பரிவோடும் , பாசத்தோடும் எல்லோரும் கேட்கிறார்கள் " பாத்து ஓட்டக் கூடாதா ?" என்று . நான் அல்லது நாம் மட்டும் பார்த்து ஒட்டி என்ன செய்ய ? எல்லோரும் பார்த்து ஓட்டினால் தான் விபத்தின்றி வாழலாம் . எப்படிப் பார்த்தாலும் அந்தக் காரோட்டியைக் கேட்க வேண்டிய கேள்வியை என்னைப் பார்த்துக் கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும் ?

அப்புறம் பார்த்து நலம் விசாரிக்கிற எல்லோரும் " என்ன ஆச்சு , எப்படி ஆச்சு  ?" என்று கேட்கத் தான் செய்கிறார்கள் .அதைச் சொல்லாமல் இருக்கவே முடியாது என்பதும் அனுபவமாகி விட்டது ."இனிமே பாத்துப் போங்க" என்பதும் இலவச இணைப்பாகச்  சொல்லப்படுகிறது .

" ஏதோ இந்த மட்டில் தப்பித்தது புண்ணியம்" என்ற வார்த்தைகளையும் , ஆறுதல் வார்த்தைகளாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் .

விபத்தை விடவும் கடினமானது விபத்துக்குப் பிந்தைய விசாரணைகள். நமக்குத் தெரிந்த யாருக்காவது இப்படி நடந்தால் நாமும் இந்த விசாரணைகளைச் செய்யாமல் இருப்பதில்லை . நாம்  என்ன கொடுக்கிறோமோ அதுவே நமக்கும் திருப்பித் தரப்படுகிறது .

நாளை மறுநாள் மீண்டும் வெளியூர் போகணும் . வலியைப் பொறுத்துக் கொண்டு போகத்தான் வேண்டும் . வேலை இல்லாமல் ஓய்வாக இருப்பது தான் பெரும் வேதனை .







Monday, September 30, 2013

ஒற்றைச் சொல்

தாத்தாக்களும், பாட்டிகளும்
அம்மா , அப்பாவும் ,
அக்காக்களும்
ஆரம்ப , நடு , உயர் பள்ளி ஆசிரியர்களும் ,
ஒரு சில கல்லூரி ஆசான்களும் ,
வேலைக்கு வந்தவிடத்தில்
அபூர்வமாய்ச் சிலரும்
இப்படித்தான் அழைத்தார்கள் .

இன்னும் கூட மிச்சமிருக்கிறார்கள் ஓரிருவர் .
அப்படி எல்லோரும் அழைத்தது ,
என்னைத்தானென்ற போதும் ,
அழைக்கப்பட்டது நான் மட்டும் தான் .
எல்லோருமழைத்தது  எல்லாம்
செவிகளில் நுழைந்து திரும்பிய ஓசைகள் .

அதே ஒற்றைச் சொல்லால்
அவள் அழைக்கிற போது ,
உடல் , உயிர் , உணர்வு , ஆன்மாவென்று
எல்லாவற்றையும் அழைக்கிறது அது .
ஒற்றைச்சொல் மந்திரமாகும்
சூட்சுமமது .

அழைக்க அல்லாது ,
உயிர்ப்பிக்க அழைத்த ஒற்றைச் சொல்

"டே "....






Thursday, September 19, 2013

ஒப்பனையற்ற எழுத்துக்காரன் 02

மதுரையில் நடந்த விழாவில் நான் சொன்னேன் .

ஒரு படைப்பாளியை அவனது படைப்புகளின் வழியே தான் அவனது வாசகர்களும் , ஒரு சமூகமும் அணுகுதல் வேண்டும் .

அவனது தனிப்பட்ட , அந்தரங்க வாழ்க்கையின் வழியே அவனது படைப்புகளை அணுகுதல் பிழையான அணுகுமுறை .

திருவள்ளுவர் நல்லவரா , கெட்டவரா என்று யாருக்குத் தெரியும் ? திருவள்ளுவரைப் பற்றி வழக்கில் இருக்கும் கதைகள் அவரது புகழுக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை .திருவள்ளுவர் அழைத்ததும் , கிணற்றடியில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருந்த அவரது மனைவி வாசுகி , கயிற்றை அப்படியே விட்டு விட்டு ஓடிப் போனதாக ஒரு கதை சொல்லப்படுகிறது .அந்தக் கயிறும் , வாளியும் கிணற்றில் விழாமல் அப்படியே இருந்ததாகக் கதை நீளுகிறது .

கயிறும் , வாளியும் அப்படியே நின்று விட வாய்ப்பே இல்லை . இறைத்து முடித்து விட்டு வருகிற வரை காத்திருக்கும் பொறுமை வள்ளுவருக்கு இல்லாமல் இருந்திருக்கும் என்று எடுத்துக் கொண்டால் , "வாழ்க்கைத் துணை நலம்" என்ற அதிகாரத்தை எந்த அதிகாரத்தில் வள்ளுவர் எழுதினார் என்று எளிதில் கேட்டு விடலாம் .இது பொருத்தமான அணுகுமுறை அன்று .ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை முறைகளைக் கடந்து நிற்பது படைப்பு மட்டுமே .

இந்தக் கேள்வியைக் கம்பன் , இளங்கோ , காளிதாசன் , என்று எல்லாப் படைப்பாளிகளுக்கும் , படைப்புகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம் . திருவள்ளுவரைப் பற்றி எல்லாம் இத்தகைய கேள்விகளை நீங்கள் எழுப்பக்கூடாது என்று ஒரு நண்பர் நிகழ்ச்சி முடிந்ததும் சொன்னார் . அவருக்குச் சொன்னேன் . "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் ...... என்பது வள்ளுவனுக்கும் பொருந்தும் என்று . அவர் அறிவு ஒப்புக் கொண்டாலும் மனசு கேட்கவில்லை என்றார் . அதற்கு யாமென் செய்தல் கூடும் ?

காலத்தால் முந்தய படைப்பாளிகளின் படைப்பை மதிப்பிட , படைப்பின் வழியாக மட்டுமே அவர்களை அணுகும் சமூகம் , சம காலப் படைப்பாளிகளின் விசயத்தில் நீதியற்ற , நெறியற்ற அணுகுமுறையை கைக்கொள்ளுகிறது

அது தான் ஜி . நாகராஜனின் விசயத்தில் நடந்தது . அவரது படைப்புகளைப் பற்றிய உரையாடல் எழுந்த போதெல்லாம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்களும் இணைந்து கொள்ளுவதை நான் கண்டிருக்கிறேன் .
எனக்கு அது எப்போதும் பொருத்தமற்றதாக , வரம்பு மீறியதாகவே பட்டிருக்கிறது .

நான் ஜி . என் அவர்களைப் பார்த்ததில்லை . அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எனக்கு எதுவும் தெரியாது . தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. அவரது படைப்புகளின் வழியாக மட்டுமே நான் அவரை அறிந்திருக்கிறேன் . அது எனக்குப் பெருமிதமும் , உவப்பும் தருகிறது .

"தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா" என்று பாடுவதற்கு எல்லையற்ற மகத்தான கற்பனையும் , காதலும் வேண்டும் . அது பாரதிக்குள் பொங்கிப்பிரவகிக்கும் கவிதைப் பேராற்றல். அது எல்லோருக்கும் வாய்க்காது .

அது போலவே , சமூக அநீதிகள் குறித்து எழுதுகிற எல்லோரும் , நெருப்புக்கு வெளியே நின்று கொண்டு தான் நெருப்பைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள் . இருக்கிறோம் .

ஆனால் , நெருப்புக்குள் நிற்கிறவனுக்குத்  தான் அதன் அசலான சூடு தெரியும். அப்படி ,நெருப்புக்குள் நின்று எழுதிய வெகு சில படைப்பாளிகளில் ஒருவர் ஜி . நாகராஜன் .

                                                                           அன்று பேசியதை இன்னும் எழுதுவேன்

Sunday, September 15, 2013

ஒப்பனையற்ற எழுத்துக்காரன் 01

ஜி . நாகராஜனின் நினைவைக் கொண்டாட வேண்டுமென , தம்பி பயஸ் தான் முன்மொழிந்தார் .உடனே அதைச் செயல் படுத்த வேண்டும் என முடிவு செய்தோம் . மதுரைப்  புத்தகக் கண்காட்சியில் உள்ள படைப்பரங்கில், அதனை நிகழ்த்துவது என்று முடிவானது . கோவை வெளிச்சம் வெளியீடு நிறுவனர் நண்பர் பாலாஜி அவர்களை இது குறித்து கோவை விஜயா பதிப்பக உரிமையாளர் அன்பிற்குரிய "அண்ணாச்சி" திரு . வேலாயுதம் அவர்களிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டேன் . பப்பாசி நிர்வாகிகளிடம் பேசி அண்ணாச்சி கட்டணமின்றி அனுமதி பெற்றுத் தந்தார் .முதல் நன்றியும் , வணக்கமும் அண்ணாச்சிக்குச் சொல்ல வேண்டும் .பப்பாசிக்கும் , அதன் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றி .

இனி வரும் காலங்களில் பப்பாசி தான் முன்னின்று நடத்துகிற புத்தகக் கண்காட்சிகளில் மாலை நேரப்  பொது அமர்வுகளில் நமது மொழியின் மற்றும் பிற மொழிகளின் மகத்தான படைப்பாளிகளை வெகு மக்களுக்கு, தகுதியான சொற்பொழிவாளர்கள் வழியே சிறப்பாக அறிமுகம் செய்து வைக்கலாம் . ஔவை , வள்ளுவன் , இளங்கோ , பாரதி , காளிதாசன் , பஷீர் , தகழி , கார்க்கி , கம்பன் ,செக்காவ் , தாயுமானவர் , குமரகுருபரர் , பாவேந்தர் , ..... என்றொரு மாபெரும் பட்டியல் இருக்கிறது . பட்டிமண்டபங்களை விட , தனித் தலைப்புகளை விட இது சிறந்த பயனை அளிக்கும் . பப்பாசியின் கவனத்திற்க்கு இதனை யாராவது கொண்டு போக வேண்டுகிறேன் . ஆட்சியாளர்களை , அதிகாரத்தில் இருப்பவர்களை சங்கடப் படுத்தாமல் புத்தகக் கண்காட்சியையும் சிறப்பாக நடத்தி கொள்ளலாம் .ஒரே கல்லில் இரண்டுக்கும் மேற்பட்ட மாங்காய்களை அடிக்கும் வித்தை எல்லாம் இப்போது எல்லோரும் சொல்லித் தருவதில்லை .


நிகழ்வுக்கு என்ன தலைப்பிடுவது என்று பயஸ் கேட்டார் . ஆழ்ந்து சில நிமிடங்கள் யோசித்து  "ஒப்பனையற்ற  எழுத்துக்காரன்" என்ற தலைப்பை சொன்னேன் . பயஸின் தனது சந்தோசத்தை அப்போதே உற்சாகமான குரலில் வெளிப்படுத்தினான் .அழைப்பிதழை வடிவமைத்தோம் . நினைவுப் பரிசைத் தீர்மானித்தோம் . அழைப்பிதழில் பெயர் இல்லாத போதும் விழாவில் பங்கு பெற்றுப் பேச விரும்புவதாக உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் பெருந்தன்மையோடு விருப்பம் தெரிவித்தார் .அவருக்கும் நன்றி சொல்லணும்

 அவரது படைப்புக்களை முழுவதுமாக வாசித்திருந்த போதும் , மறு வாசிப்பிற்காக மீண்டும் புத்தகம் வேண்டுமெனக் கேட்டதும் தனது பிரதியைத் தந்து என்னை வியப்பில் ஆழ்த்தினார் பயஸ் .

விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது . ஜி . என் , அவரது படைப்புகள் மிகச் சிறப்பாக நினைவு கூறப்பட்ட தருணம் அது . அவரது அன்பு மகன் திரு . கண்ணன் முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு , தன் தந்தை வாழ்ந்த மதுரை மண்ணில் அவரது நினைவும் , படைப்புகளும் கொண்டாடப் படுவதைக் கண்கள் சிவக்க , கலங்கப் பார்த்துக் கொண்டே இருந்தார் . அவரது தந்தையின் உருவப் படத்தை நான் அவருக்குப் பரிசளித்த போது மிக மிக நெகிழ்ந்து , ததும்பிக் கொண்டே அதைப் பெற்றுக் கொண்டார் .

சென்னைக்குத் திரும்பி , வீட்டில் அந்தப் படத்தை தனது தாயிடத்தில் தந்திருக்கிறார் . அவரே பயசுக்குப் போன் செய்து ," அம்மாவின் முகம் இத்தனை ஒளிர்ந்து இருப்பதை நான் எப்போதும் பார்த்ததில்லை . அப்பாவின் படத்தை மடியில் வைத்துக்கொண்டு அம்மா அதை ஸ்பரிசிப்பதை , கலங்குவதை , சிரிப்பதை , நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் " என்று சொல்லி இருக்கிறார் . இதைத் தனிப் பதிவாக பயஸ் தனது முக நூலிலும்
பதிவிட்டிருக்கிறார் .

இந்த நிகழ்வுக்காக அல்லாமல் வேறு பணி நிமித்தமாக மதுரை வந்த கல்கி இதழின் நிருபர் ஸ்ரீரெங்கம் திருநாவுக்கரசு மிகச் சிறப்பாக, நேர்த்தியாக , மெய்மை நிரம்ப அதனைக் கல்கி இதழில் எழுதி இருக்கிறார் . அவருக்கும் , கல்கி இதழுக்கும் நமது நன்றி .

எல்லாவற்றிற்கும் மேலாக இதனை நடத்திய கூழாங்கற்கள் அமைப்பு , அதில் பங்கு பெற்று பணியாற்றிய எனது நண்பர்கள் குறித்தும் , அந்த விழாவில் நான் விரிவாக ஜி . என்  , அவரது படைப்புகள் பற்றி பேசியதையும் இரண்டொரு நாளில் எழுதுகிறேன் . எழுதணும் . பேசியதைப் பதிவு செய்வது மிகுந்த அவசர , அவசியமாகி இருக்கிறது 

Friday, September 6, 2013

திருநங்கைகளின் மாநில மாநாட்டில் . . .

ஒருவரின் வளரிளம் பருவத்தில் , அவரது உடலில் ஏற்படும் காத்திரமான மாற்றம் காரணமாகவே அவர் தன்னைத் திருநங்கையாக உணர்கிறார் . மாறுகிறார் .

அவர் உணர்வதை , மாறுவதை அவரைத் தவிர வேறு யாரும் அந்தக் குடும்பத்தில் ஒப்புக்கொள்ளுவதில்லை .ஏற்பதில்லை .

அத்தகைய மாற்றத்திற்கு உள்ளாகும் ஒருவரை குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக , இரக்கமின்றி கொன்று விடுகிற அளவுக்குப் பேதமையும் , கொடுமையும் நிலவுவதும் உண்டு . இதற்கு மேலும் இதில் விவரிக்க எதுவுமில்லை .

பெரும் புறக்கணிப்பும் தனிமையும் வழியும் அவர்களைச் சூழ்ந்து கொள்ளுகிறது . இதை எழுத்தில் இறக்கி , பொதுச் சமூகத்திற்கு உணர்த்திய பெருமை வித்யாவுக்கு உண்டு .

நான் சரவணன் ... என்று துவங்கி சரவணன் என்கிற பெயர் மீது பெருக்கல் குறியிட்டு ...வித்யா என்று தலைப்பிடப்பட்ட அந்த நூல் திருநங்கைகளைப் புரிந்துகொள்ள, அறிந்து கொள்ள உதவும் தனித்துவமான நூல் .

சிறந்த மொழி நடையில் , தனது அனுபவங்களை மெய்மை துலங்க எழுதி இருப்பார் வித்யா .என் மனம் கவர்ந்த புத்தகங்களில் அதுவும் ஒன்று . அவரை நான் முதல் முறை கடந்த மாதம் ஒன்பதாம் தேதி  மதுரையில் சந்தித்தேன் .

மிக நீண்ட நாள் கண்டு அறிந்து , புரிந்து  கொண்ட நண்பர்களாய் உணர்ந்தோம்.தனது சிறுகதைத்தொகுப்பை எனக்குப் பரிசளித்தார் . இன்னும் படிக்கவில்லை . படித்த பிறகு தனியே அது பற்றி எழுதுகிறேன்

தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும் , தமிழ்ப் பேராசிரியரும் , சிறந்த நாவன்மை கொண்டவருமான தோழியர் . சுந்தரவல்லியும் திருநங்கைகளின் மாநாட்டை வாழ்த்த வந்திருந்தார் .

வெறும் வாழ்த்துரையோடு நில்லாமல் திருநங்கைகளுக்காக களப் பணி செய்யும் சிறந்த பெண் போராளி சுந்தரவல்லி . நல்ல  கம்பீரமும் , ஆளுமையும் கொண்டவர் . எப்போதும் எனது அன்பிற்கும்  மதிப்பிற்கும் உரியவர் .

நாங்கள் இருவரும் இணைந்து சில அரங்குகளில் உரையாற்றி இருக்கிறோம் . அதில் திருநங்கைகளுக்கான மாநில மாநாடும் ஒன்று .

எங்கள் அனைவரது ஒற்றுமையை , ஒன்றுபட்டுச் சிந்திக்கும்,  செயல்படும் பாங்கை , இந்தப் புகைப்படங்கள் அனைவருக்கும் சொல்லுகிறது


திருநங்கைகளின் மாநில மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்துகிறார் பாரதி கண்ணம்மா



திருநங்கைகளின் மாநில மாநாடு - மேலும் செய்திகள் , புகைப்படங்கள் 01



திருநங்கைகளின் மாநில மாநாடு - மேலும் செய்திகள் , புகைப்படங்கள்




Thursday, August 29, 2013

கண்களும் , கறுப்புக் கண்ணாடிகளும் ...

      நான் எப்போதும் கறுப்புக் கண்ணாடிகள் அணிந்ததில்லை .அவைகளின் மீது எனக்கு பெரும் விருப்பம் இருந்ததில்லை .
படிப்பதற்கும் , எழுதுவதற்குமான கண்ணாடியை அணியத் துவங்கிய பிறகு அதைக் கழற்றி வைக்கவே வாய்ப்பும் , வழியும் இல்லாமல் போய் விட்டது . .ஒரு கண்ணாடியைப் பராமரிப்பதே பெரும் பாடு .
இதில் இன்னொரு கண்ணாடி குறித்த விருப்பம் வராமால் போய் இருக்கலாம் .

கறுப்புக் கண்ணாடிகள் எல்லோருக்கும் பொருந்துவதில்லை . சிலருக்கு மேலும் பொலிவைத் தரும் அவை , சிலருக்கு எதிர் மறையான தோற்றத்தை தருவது நமது காட்சிப் பிழையாகக் கூட இருக்கலாம் .

வெளியில் போகிற போது , வெயிலுக்கு அஞ்சிக் கறுப்புக் கண்ணாடி அணிந்து கொள்ளுவது ஏற்புடையது தான் . ஆனால் பரஸ்பர உரையாடலின் போது கண்களைப் பார்த்துப் பேச வழி இல்லாமல் செய்து விடுகின்றன கறுப்புக் கண்ணாடிகள் .

எப்போதும் கறுப்புக் கண்ணாடி அணிந்து கொண்டே இருக்கும் ஒருவருடன் உரையாடுவது கடினமானது . அவர் நாம் பேசுவதைக் கேட்கிறாரா , உறங்குகிறாரா என்று அறிந்து கொள்ள இயலாது . அதனினும் ,அவர் என்ன கருதுகிறார் என்பதை அவரது கண்களின் வழியே நீங்கள் கண்டறிய முடியாது .
பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் , கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், சென்னைக் கண் வியாதிக்காரர்கள்  அணிவது நியாயமானது . அவர்கள் தேவை கருதி அதை அணியத் தான் வேண்டும் .

பகலில் கண்களில் தூசி படாமல் இருக்க அணிவதும் சரி தான் . இருபத்தி நாலு மணி நேரமும் அணிந்து கொண்டு திரிகிற ஒருவரால் இந்த உலகத்தை அதன் அசலான வண்ணத்தில் ஒரு போதும் பார்க்க இயலாது .

ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி மதுரையில் திருநங்கைகளின் மாநில மாநாட்டில் துவக்க உரை நிகழ்த்த , தங்கி  இருந்த விடுதியில் இருந்து புறப்பட்ட போது வீதிகளில் வெயில் மிகப் பெரும் வெண் சாமரம் வீசிக் கொண்டிருந்தது .

"என்னாப்பா ... இப்பிடி வெயில் " என்றதும் , " இதப் போடுங்கண்ணே " என்று தனது கறுப்புக் கண்ணாடியைக் கழற்றிக் கொடுத்தான் தம்பி எர்னஸ்டோ .
முதலில் தயக்கமாக இருந்தது . வாங்கி அணிந்து கொண்டதும் "நன்றாக இருப்பதாக" சுற்றி இருந்த எல்லோரும் சொன்னார்கள் . நம்பிக்கை தானே வாழ்க்கை .அணிந்து கொண்டேன் .

மாநாட்டு வாசலில் போய் இறங்கியதும் எர்னஸ்டோவே வளைத்து வளைத்து வித விதமாய்ப் புகைப்படங்கள் எடுத்தான் .புகைப்படம் எடுத்து முடித்ததும் கண்ணாடியைக் கழற்றிக் கொடுத்து விட்டேன் .வந்த புகைப்படங்களைப் பார்த்த போது நண்பர்கள் பொய் சொல்லவில்லை என்பது தெரிந்தது

 எனவே , முதன் முறையாகக் கறுப்புக் கண்ணாடி ஒன்றை வாங்க வேண்டும் என்று விரும்பினேன் . அண்மையில் மும்பை போன போது சில கடைகள் ஏறி இறங்கியும் வாங்காமல் வந்து விட்டேன்

எப்போது வாங்குவேன் என்று தெரியவில்லை .


இந்தப் படத்தைப் பார்த்து விட்டு ஒருவர், "மதுரைல அரவிந்த் கண் மருத்துவ மனைக்குப் போனியா ? என்று கேட்ட பிறகும் கண்ணாடி வாங்குகிற ஆசை குறையவில்லை . யாரை விட்டது ஆசை ...

 ஆனால் உரையாடல்களின் போது கண்களுக்கு இடையில் கறுப்புத்  திரை இருப்பதை ஒரு போதும் என்னால் ஏற்க இயலாது


Tuesday, July 23, 2013

புகைப்படங்களும் பிரிவும் . . .

அது "கடல்  பூக்கள்" திரைப்படத்தில் பணியாற்றிய போது எடுத்த புகைப்படம் .திரு கே . வி . மணி தான் எடுத்தார் .
ஒரு பத்து நாட்கள் எங்களோடு இருந்தார் திரு . ஜனகராஜ் .
அபூர்வமான கலைஞன் .பத்தே நாட்களில் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்
படம் இறுதியான போது அவர் நடித்த காட்சிகள் எதுவும் படத்தில் இடம் பெறவில்லை .அது வேறு தனிக் கதை .

இந்த புகைப்படம் நாங்கள் இருவரும் விரும்பி எடுத்தது .
இதை எடுத்ததும் ," நல்ல பிரண்ட்ஸ் போட்டோ எடுத்தா பிரிஞ்சுருவாங்களா BK " என்று கேட்டார் ஜனகராஜ் . அதைத் தொடர்ந்து தனது வழக்கமான பெரும் சிரிப்பை மேற்க்குக் கரையெங்கும் காற்றில் படர விட்டார் .

"அப்படிஇருக்காது ஜனா ... அதை விட ஒரு போட்டோவுக்குத் தாங்காத பிரெண்ட்ஷிப் இருந்தா என்ன போனா என்ன " என்றேன் .
மீண்டும் பெரும் குரலெடுத்துச் சிரித்தார் . கடல் அலைகளும் அவரோடு சேர்ந்து சிரித்தன ... சட்டென மௌனமானார் .
"அதானே ... அதுக்குத் தாங்காத பிரெண்ட்ஷிப் என்னாத்துக்கு ... சூப்பராச் சொன்னீங்க BK" என்றார் .

இந்தப் படம் எடுத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன . இது அவரது பங்குக்கு உரிய  படப்பிடிப்பு வேலைகள்  முடிந்த இறுதி நாளில் எடுக்கப்பட்டது . அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் சென்னையிலேயே இருந்தும் இன்று வரை சந்தித்துக் கொள்ளவே இல்லை . தொலைபேசியிலும் உரையாடவில்லை . எனினும் நாங்கள் இன்னும் , இப்போதும் சிறந்த நண்பர்கள் தான் என்று நான் கருதுகிறேன் ...

" சரி தானே ஜனா ? அப்படிச் சொல்லலாம் தானே ? எப்போதாவது இதைப் பார்த்தால் , அப்போது நீங்கள் சொன்னால் போதும் ஜனா ...எதுவாக இருந்தாலும் நீங்கள் சொல்லலாம் . அது தானே நாகரீகமான நட்பு .

   

கடிதமல்ல . . . கல்வெட்டு

திரைப்படத் துறையில் என்னோடு இணைந்து பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களில் நான் மிக மதிக்கும்  மனிதர் கே. வி. மணி .
மகத்தான புகைப்படக் கலைஞர் ..
 தீவிரமான வாசகர் .
அசலான தமிழ்ப் பற்றாளர் .
ஆனந்த விகடன் இதழில் பிரசுரமான எனது "அப்பாவின் வாசனை "
சிறுகதை குறித்து அவர் எனக்கு எழுதின கடிதம் இது .



ஒரு படைப்பாளி தனது படைப்புக்கான ஆகச்சிறந்த
அங்கீகாரமாக இது போன்ற கடிதங்களையே சுவீகரிக்கிறான் .
அது அவன் எழுத அமரும் தருணங்களில் ஆசனமாய்
அவனுக்கு இடமளிக்கிறது . எழுதுகோலுக் குள் உயிர் மையாய்ப் பெருகுகிறது.

Friday, July 19, 2013

"அப்பாவின் வாசனை "

ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒரு சிறுகதை எழுத வாய்த்தது.
ஆனந்த விகடன் அதனைப் பிரசுரித்துச் சிறப்பித்தது .
என் மனதுக்குள் இருந்த அந்தக் கதையின் நாயகியை வண்ணத்தில் வடித்து இருந்தார் ஓவியர் ம. செ.
இதழைப் பிரித்ததும் ,வியப்பும் ,ஏனோ வேதனையும் ஒருங்கே மனதில் வந்தது