Sunday, April 28, 2013

நான் எப்போதும் கொடுத்து வைத்தவன்

நூலின் முதல் பிரதியை வெளியீட்ட பிறகு , கவிதை நூல் குறித்து மற்ற நண்பர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தேன் .

எனக்கு முன் எப்போதும் அறிமுகமில்லாத அந்தப் பெண் குழந்தை மேடையேறி வந்து என்னோடு உரையாடத் துவங்கினாள்.

அது நண்பன் சென்றாயனின் மகள் என்று அறிந்து கொண்டேன் .

எந்தத் தயக்கமும் இல்லாமல், ஏதோ முன்பு பேசிக் கொண்டிருந்து பாதியில் நிறுத்திய உரையாடலைத் துவங்குவது போலத் துவங்கியது அவளது உரையாடல் .

ஒலிபெருக்கியின் ஓசையில் அவளது குரல் எனக்கு சரியாகக் கேட்க இல்லை. குழந்தையோ முன் வரிசையில் அமர்வதற்கு இடம் தேடிக் கொண்டே என்னோடு பேசிக் கொண்டிருந்தாள் .

முன் வரிசையில் காலி இருக்கைகள் ஏதுமில்லை . என் மடியில் உட்கார அழைத்தேன் . அதற்காகவே காத்திருந்தது போலத் துள்ளி மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

"நீங்க பேசுவீங்களா ? "என்றாள்.
" நாம் அப்புறமாப் பேசுவேன் "
குழந்தையின் முகத்தில் மிகுந்த சந்தோசம் .
பேச மாட்டேன் என்று சொல்லி இருந்தால் ரொம்ப சந்தோசம் அடைந்திருப்பாள் என்று இப்போது தோன்றுகிறது .

அடுத்த கேள்வி ... " உங்களுக்குத் திருக்குறள் தெரியுமா ?"
"தெரியாது" என்றேன் .
 அவளுக்கு அளவற்ற சந்தோசம் .
" எனக்குத் தெரியும் " என்றாள்.

எதற்கும் காத்திராமல் திருக்குறள் சொல்ல ஆரம்பித்தாள்.
அவளது மழலை மொழியில் ஆசான் வள்ளுவன் உயிர் பெறத் துவங்கினான் .
அவன் தானே மழலை மொழியின் பெருமை பேசியவன் .
அதே மழலை மொழி அவன் பெருமை பேசுகிறது .

மூச்சு முட்ட , மழலைத் தமிழ் நடனமாட பத்துத் திருக்குறள்கள் .
என் மனதுள் புது வெள்ளமாய்ப் புரண்டது மகிழ்ச்சி . எனக்குத் தெரியாத ஒன்றை எனக்குச் சொல்லித் தந்த பெருமிதம் அவள் முகத்தில் பரவிக் கிடந்தது . வந்த வேலை முடிந்த நிறைவு அவளுக்கு .

பிறகு ,அவ்வப்போது வருவதும் , பேசுவதும் , போவதுமாக  இருந்தாள்.

அத்தனை பேர் இருந்த மேடையில் அவள் என்னைத் தேர்வு செய்து
என்னோடு பேசியது எனக்கு வாய்த்த வரம் .
குழந்தைகள் உங்களைத் தேர்வு செய்ய நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் . நான் எப்போதும் கொடுத்து வைத்தவன் என்பதெனக்குத் தெரியும் .

குழந்தையின் பெயர் மதிவதனி .
 

No comments:

Post a Comment