Thursday, September 19, 2013

ஒப்பனையற்ற எழுத்துக்காரன் 02

மதுரையில் நடந்த விழாவில் நான் சொன்னேன் .

ஒரு படைப்பாளியை அவனது படைப்புகளின் வழியே தான் அவனது வாசகர்களும் , ஒரு சமூகமும் அணுகுதல் வேண்டும் .

அவனது தனிப்பட்ட , அந்தரங்க வாழ்க்கையின் வழியே அவனது படைப்புகளை அணுகுதல் பிழையான அணுகுமுறை .

திருவள்ளுவர் நல்லவரா , கெட்டவரா என்று யாருக்குத் தெரியும் ? திருவள்ளுவரைப் பற்றி வழக்கில் இருக்கும் கதைகள் அவரது புகழுக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை .திருவள்ளுவர் அழைத்ததும் , கிணற்றடியில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருந்த அவரது மனைவி வாசுகி , கயிற்றை அப்படியே விட்டு விட்டு ஓடிப் போனதாக ஒரு கதை சொல்லப்படுகிறது .அந்தக் கயிறும் , வாளியும் கிணற்றில் விழாமல் அப்படியே இருந்ததாகக் கதை நீளுகிறது .

கயிறும் , வாளியும் அப்படியே நின்று விட வாய்ப்பே இல்லை . இறைத்து முடித்து விட்டு வருகிற வரை காத்திருக்கும் பொறுமை வள்ளுவருக்கு இல்லாமல் இருந்திருக்கும் என்று எடுத்துக் கொண்டால் , "வாழ்க்கைத் துணை நலம்" என்ற அதிகாரத்தை எந்த அதிகாரத்தில் வள்ளுவர் எழுதினார் என்று எளிதில் கேட்டு விடலாம் .இது பொருத்தமான அணுகுமுறை அன்று .ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை முறைகளைக் கடந்து நிற்பது படைப்பு மட்டுமே .

இந்தக் கேள்வியைக் கம்பன் , இளங்கோ , காளிதாசன் , என்று எல்லாப் படைப்பாளிகளுக்கும் , படைப்புகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம் . திருவள்ளுவரைப் பற்றி எல்லாம் இத்தகைய கேள்விகளை நீங்கள் எழுப்பக்கூடாது என்று ஒரு நண்பர் நிகழ்ச்சி முடிந்ததும் சொன்னார் . அவருக்குச் சொன்னேன் . "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் ...... என்பது வள்ளுவனுக்கும் பொருந்தும் என்று . அவர் அறிவு ஒப்புக் கொண்டாலும் மனசு கேட்கவில்லை என்றார் . அதற்கு யாமென் செய்தல் கூடும் ?

காலத்தால் முந்தய படைப்பாளிகளின் படைப்பை மதிப்பிட , படைப்பின் வழியாக மட்டுமே அவர்களை அணுகும் சமூகம் , சம காலப் படைப்பாளிகளின் விசயத்தில் நீதியற்ற , நெறியற்ற அணுகுமுறையை கைக்கொள்ளுகிறது

அது தான் ஜி . நாகராஜனின் விசயத்தில் நடந்தது . அவரது படைப்புகளைப் பற்றிய உரையாடல் எழுந்த போதெல்லாம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்களும் இணைந்து கொள்ளுவதை நான் கண்டிருக்கிறேன் .
எனக்கு அது எப்போதும் பொருத்தமற்றதாக , வரம்பு மீறியதாகவே பட்டிருக்கிறது .

நான் ஜி . என் அவர்களைப் பார்த்ததில்லை . அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எனக்கு எதுவும் தெரியாது . தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. அவரது படைப்புகளின் வழியாக மட்டுமே நான் அவரை அறிந்திருக்கிறேன் . அது எனக்குப் பெருமிதமும் , உவப்பும் தருகிறது .

"தீக்குள் விரலை வைத்தால் நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா" என்று பாடுவதற்கு எல்லையற்ற மகத்தான கற்பனையும் , காதலும் வேண்டும் . அது பாரதிக்குள் பொங்கிப்பிரவகிக்கும் கவிதைப் பேராற்றல். அது எல்லோருக்கும் வாய்க்காது .

அது போலவே , சமூக அநீதிகள் குறித்து எழுதுகிற எல்லோரும் , நெருப்புக்கு வெளியே நின்று கொண்டு தான் நெருப்பைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள் . இருக்கிறோம் .

ஆனால் , நெருப்புக்குள் நிற்கிறவனுக்குத்  தான் அதன் அசலான சூடு தெரியும். அப்படி ,நெருப்புக்குள் நின்று எழுதிய வெகு சில படைப்பாளிகளில் ஒருவர் ஜி . நாகராஜன் .

                                                                           அன்று பேசியதை இன்னும் எழுதுவேன்

1 comment:

Unknown said...

கற்றோரை கற்றாரே காமுருவர்

Post a Comment