Tuesday, July 23, 2013

புகைப்படங்களும் பிரிவும் . . .

அது "கடல்  பூக்கள்" திரைப்படத்தில் பணியாற்றிய போது எடுத்த புகைப்படம் .திரு கே . வி . மணி தான் எடுத்தார் .
ஒரு பத்து நாட்கள் எங்களோடு இருந்தார் திரு . ஜனகராஜ் .
அபூர்வமான கலைஞன் .பத்தே நாட்களில் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்
படம் இறுதியான போது அவர் நடித்த காட்சிகள் எதுவும் படத்தில் இடம் பெறவில்லை .அது வேறு தனிக் கதை .

இந்த புகைப்படம் நாங்கள் இருவரும் விரும்பி எடுத்தது .
இதை எடுத்ததும் ," நல்ல பிரண்ட்ஸ் போட்டோ எடுத்தா பிரிஞ்சுருவாங்களா BK " என்று கேட்டார் ஜனகராஜ் . அதைத் தொடர்ந்து தனது வழக்கமான பெரும் சிரிப்பை மேற்க்குக் கரையெங்கும் காற்றில் படர விட்டார் .

"அப்படிஇருக்காது ஜனா ... அதை விட ஒரு போட்டோவுக்குத் தாங்காத பிரெண்ட்ஷிப் இருந்தா என்ன போனா என்ன " என்றேன் .
மீண்டும் பெரும் குரலெடுத்துச் சிரித்தார் . கடல் அலைகளும் அவரோடு சேர்ந்து சிரித்தன ... சட்டென மௌனமானார் .
"அதானே ... அதுக்குத் தாங்காத பிரெண்ட்ஷிப் என்னாத்துக்கு ... சூப்பராச் சொன்னீங்க BK" என்றார் .

இந்தப் படம் எடுத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன . இது அவரது பங்குக்கு உரிய  படப்பிடிப்பு வேலைகள்  முடிந்த இறுதி நாளில் எடுக்கப்பட்டது . அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் சென்னையிலேயே இருந்தும் இன்று வரை சந்தித்துக் கொள்ளவே இல்லை . தொலைபேசியிலும் உரையாடவில்லை . எனினும் நாங்கள் இன்னும் , இப்போதும் சிறந்த நண்பர்கள் தான் என்று நான் கருதுகிறேன் ...

" சரி தானே ஜனா ? அப்படிச் சொல்லலாம் தானே ? எப்போதாவது இதைப் பார்த்தால் , அப்போது நீங்கள் சொன்னால் போதும் ஜனா ...எதுவாக இருந்தாலும் நீங்கள் சொல்லலாம் . அது தானே நாகரீகமான நட்பு .

   

1 comment:

nagaikavin said...

aam naagariikamaana natpu

Post a Comment