Sunday, September 15, 2013

ஒப்பனையற்ற எழுத்துக்காரன் 01

ஜி . நாகராஜனின் நினைவைக் கொண்டாட வேண்டுமென , தம்பி பயஸ் தான் முன்மொழிந்தார் .உடனே அதைச் செயல் படுத்த வேண்டும் என முடிவு செய்தோம் . மதுரைப்  புத்தகக் கண்காட்சியில் உள்ள படைப்பரங்கில், அதனை நிகழ்த்துவது என்று முடிவானது . கோவை வெளிச்சம் வெளியீடு நிறுவனர் நண்பர் பாலாஜி அவர்களை இது குறித்து கோவை விஜயா பதிப்பக உரிமையாளர் அன்பிற்குரிய "அண்ணாச்சி" திரு . வேலாயுதம் அவர்களிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டேன் . பப்பாசி நிர்வாகிகளிடம் பேசி அண்ணாச்சி கட்டணமின்றி அனுமதி பெற்றுத் தந்தார் .முதல் நன்றியும் , வணக்கமும் அண்ணாச்சிக்குச் சொல்ல வேண்டும் .பப்பாசிக்கும் , அதன் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றி .

இனி வரும் காலங்களில் பப்பாசி தான் முன்னின்று நடத்துகிற புத்தகக் கண்காட்சிகளில் மாலை நேரப்  பொது அமர்வுகளில் நமது மொழியின் மற்றும் பிற மொழிகளின் மகத்தான படைப்பாளிகளை வெகு மக்களுக்கு, தகுதியான சொற்பொழிவாளர்கள் வழியே சிறப்பாக அறிமுகம் செய்து வைக்கலாம் . ஔவை , வள்ளுவன் , இளங்கோ , பாரதி , காளிதாசன் , பஷீர் , தகழி , கார்க்கி , கம்பன் ,செக்காவ் , தாயுமானவர் , குமரகுருபரர் , பாவேந்தர் , ..... என்றொரு மாபெரும் பட்டியல் இருக்கிறது . பட்டிமண்டபங்களை விட , தனித் தலைப்புகளை விட இது சிறந்த பயனை அளிக்கும் . பப்பாசியின் கவனத்திற்க்கு இதனை யாராவது கொண்டு போக வேண்டுகிறேன் . ஆட்சியாளர்களை , அதிகாரத்தில் இருப்பவர்களை சங்கடப் படுத்தாமல் புத்தகக் கண்காட்சியையும் சிறப்பாக நடத்தி கொள்ளலாம் .ஒரே கல்லில் இரண்டுக்கும் மேற்பட்ட மாங்காய்களை அடிக்கும் வித்தை எல்லாம் இப்போது எல்லோரும் சொல்லித் தருவதில்லை .


நிகழ்வுக்கு என்ன தலைப்பிடுவது என்று பயஸ் கேட்டார் . ஆழ்ந்து சில நிமிடங்கள் யோசித்து  "ஒப்பனையற்ற  எழுத்துக்காரன்" என்ற தலைப்பை சொன்னேன் . பயஸின் தனது சந்தோசத்தை அப்போதே உற்சாகமான குரலில் வெளிப்படுத்தினான் .அழைப்பிதழை வடிவமைத்தோம் . நினைவுப் பரிசைத் தீர்மானித்தோம் . அழைப்பிதழில் பெயர் இல்லாத போதும் விழாவில் பங்கு பெற்றுப் பேச விரும்புவதாக உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் பெருந்தன்மையோடு விருப்பம் தெரிவித்தார் .அவருக்கும் நன்றி சொல்லணும்

 அவரது படைப்புக்களை முழுவதுமாக வாசித்திருந்த போதும் , மறு வாசிப்பிற்காக மீண்டும் புத்தகம் வேண்டுமெனக் கேட்டதும் தனது பிரதியைத் தந்து என்னை வியப்பில் ஆழ்த்தினார் பயஸ் .

விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது . ஜி . என் , அவரது படைப்புகள் மிகச் சிறப்பாக நினைவு கூறப்பட்ட தருணம் அது . அவரது அன்பு மகன் திரு . கண்ணன் முப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு , தன் தந்தை வாழ்ந்த மதுரை மண்ணில் அவரது நினைவும் , படைப்புகளும் கொண்டாடப் படுவதைக் கண்கள் சிவக்க , கலங்கப் பார்த்துக் கொண்டே இருந்தார் . அவரது தந்தையின் உருவப் படத்தை நான் அவருக்குப் பரிசளித்த போது மிக மிக நெகிழ்ந்து , ததும்பிக் கொண்டே அதைப் பெற்றுக் கொண்டார் .

சென்னைக்குத் திரும்பி , வீட்டில் அந்தப் படத்தை தனது தாயிடத்தில் தந்திருக்கிறார் . அவரே பயசுக்குப் போன் செய்து ," அம்மாவின் முகம் இத்தனை ஒளிர்ந்து இருப்பதை நான் எப்போதும் பார்த்ததில்லை . அப்பாவின் படத்தை மடியில் வைத்துக்கொண்டு அம்மா அதை ஸ்பரிசிப்பதை , கலங்குவதை , சிரிப்பதை , நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் " என்று சொல்லி இருக்கிறார் . இதைத் தனிப் பதிவாக பயஸ் தனது முக நூலிலும்
பதிவிட்டிருக்கிறார் .

இந்த நிகழ்வுக்காக அல்லாமல் வேறு பணி நிமித்தமாக மதுரை வந்த கல்கி இதழின் நிருபர் ஸ்ரீரெங்கம் திருநாவுக்கரசு மிகச் சிறப்பாக, நேர்த்தியாக , மெய்மை நிரம்ப அதனைக் கல்கி இதழில் எழுதி இருக்கிறார் . அவருக்கும் , கல்கி இதழுக்கும் நமது நன்றி .

எல்லாவற்றிற்கும் மேலாக இதனை நடத்திய கூழாங்கற்கள் அமைப்பு , அதில் பங்கு பெற்று பணியாற்றிய எனது நண்பர்கள் குறித்தும் , அந்த விழாவில் நான் விரிவாக ஜி . என்  , அவரது படைப்புகள் பற்றி பேசியதையும் இரண்டொரு நாளில் எழுதுகிறேன் . எழுதணும் . பேசியதைப் பதிவு செய்வது மிகுந்த அவசர , அவசியமாகி இருக்கிறது 

No comments:

Post a Comment