Friday, June 4, 2021

அறிந்தே செய்த பிழை

இலக்கணத்தில் மொழிக்கு முதலில் என்றால் , இந்த இந்த எழுத்துக்களோடு சொற்கள் தொடங்கும் என்பதே ஆகும். உயிர்எழுத்துக்களோடு கூட க,த, ந, ப, ம, ச, ஞ, ய, வ, ங போன்ற மெய்யெழுத்துக்களும் மொழிக்கு முதலில் வரும் என்பதை அனைவரும் அறிவோம்.


இவை தவிர உள்ள இந்த எட்டு மெய்யெழுத்துக்களும் ( ட,ண,ர,ல,ழ,ள,ற, ன ) மொழிக்கு முதலில் வருவதில்லை. ஆனால், இந்த எழுத்துக்களைக் குறித்துச் சொல்லும் போது மட்டும் , இவை மொழிக்கு முதலில் வரும். அதாவது ட என்னும் எழுத்து,  ழ என்னும் எழுத்து என்று இந்த எழுத்துக்களைக் குறிப்பிட்டுச் சொல்லும் போது மட்டும், மொழி முதலில் இவை இடம்பெறும்.


தமிழர்கள் பிற மொழி பேசுபவர்களுடன் கலந்து பழகி வாழும் பண்பு கொண்டவர்கள். அவ்வாறு மற்றவர்களுடன் கொண்ட உறவினால் , பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். அப்படிப் பேச்சுத் தமிழில், தமிழ் மொழியில் நுழைந்த பிறமொழிச் சொற்கள் நம்மிடையே புழக்கத்தில் உள்ளன.


அத்தகைய பிறமொழிச் சொற்களில் ட, ண, ர, ல, ற என்னும் ஐந்து மெய்யெழுத்துக்களும் சில இடங்களில் மொழி முதலில் வருகின்றன.


ராமன் , லலிதா முதலான பிறமொழிப் பெயர்களைத் தமிழில் பயன்படுத்துகிறோம். அவ்வாறு பயன்படுத்தும் போது, அவற்றை நமது மொழியின் இயல்புக்கும் இலக்கணத்திற்கும் ஏற்பத் தான் பயன்படுத்த வேண்டும்.

ர, ல போன்ற எழுத்துக்கள் மொழி முதலில் வருவதில்லை என்பதால் , அவற்றுக்கு முன் 'இ' என்னும் எழுத்தைச் சேர்த்து எழுத வேண்டும்.

ராமன் ----- இராமன்

ரவி      -----. இரவி

லாபம் ------ இலாபம்

லாடம்  -----. இலாபம் 

சில இடங்களில் இ சேர்ப்பது போலவே 'அ' என்னும் எழுத்தும் சேர்த்துப் பயன்படுத்துவதும் உண்டு.

சில இடங்களில் 'உ' சேர்ந்து வரும்.

ரங்கன் ---- அரங்கன்

ரோமம் ---- உரோமம். ... 

‌இவ்வாறு பிற மொழிகளில் இருந்து பயன்படுத்தும் சொற்கள் அனைத்துமே பெயர்ச் சொற்கள் என்பதையும் நினைவில் இருத்த வேண்டும். பிற மொழிப் பெயர்ச் சொற்களைப் பயன்படுத்துவது போல, வினைச் சொற்களையும் பிற சொற்களையும் பயன்படுத்தக்கூடாது என்கிறது நமது இலக்கணம்.

‌கவிச்சக்கரவர்த்தி கம்பன் இராமாயணத்தை மொழியாக்கம் செய்த போது , அனைத்து வடமொழிப் பெயர்களையும் , தமிழ் இலக்கண மரபிற்கு ஏற்ப மாற்றித் தான் எழுதினார் .

‌ராமன் ---- இராமன் 

‌லக்ஷ்மண் ---- இலக்குவன்

      ராவணன் ---- இராவணன்.


இந்த இலக்கணக் குறிப்பை நான் அறிந்திருந்த போதும், கீழவெண்மணி குறித்த எனது ஆவணப்படத்திற்கு இராமய்யாவின் குடிசை என்று பெயர் வைக்காமல் ராமய்யாவின் குடிசை என்று தான் பெயரிட்டேன்.

அறிந்தே பிழை செய்தேன் .


ஆனால், எதிர்பார்த்தது போலவே, என்மீது அன்பு கொண்ட , தமிழை முறையாகப் படித்த நண்பர் ஒருவர் , ஆவணப்படம் கையில் கிடைத்த அடுத்த நிமிடம் என்னை அழைத்தார்.


" Bk என்னது ... எடுத்ததுமே இலக்கணப் பிழை"


"என்ன பிழை "


" இராமய்யாவின் குடிசை என்று தானே இருக்க வேண்டும். ராமய்யாவின் குடிசை என்று ஏன் வைத்தீர்கள் ?"


" தெரிந்தே , அறிந்தே வைத்தேன்."


"என்ன சொல்றீங்க ? நீங்க தெரியாம செய்த பிழை என்றல்லவா ... நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன்.

தெரிந்தே பிழை செய்யலாமா ? 

தெரிந்தே செய்வது குற்றமாகாதா ? "


நான் மௌனமாக இருந்தேன்.


" பதில் சொல்லுங்க " என்றார்.


44 உயிர்கள் அநீதியாகப் பொசுக்கப்பட்ட குற்றத்தின் முன்பு , ஒரு உயிரெழுத்து இல்லாமல் போவது குற்றமா ? என் அறச் சீற்றத்தை மொழியின் மீதும் , இலக்கணத்தின் மீதும் காட்டினேன்" என்றேன்.


அவர் மௌனமாக இருந்தார்



" பதில் சொல்லுங்க " என்றேன்.


"நீங்க செஞ்சது குற்றமில்லை"என்றார்.




1 comment:

Yaathoramani.blogspot.com said...

அதை விட இராமையாவை விட ராமையாவே மனதிற்கும் நெருக்கமாய் இருக்கிறது..

Post a Comment