Thursday, December 26, 2019

பாரதி கிருஷ்ணகுமார் | உயிர்மை சுஜாதா விருதுகள் 2019 | Bharathi Krishnakumar speech

ஒரு சாலை விபத்திற்குப் பிறகு , சில மாதங்கள் எங்கும் போக இயலாத சூழலில் கிடந்தேன் . வருவாய்க்கான வழிகள் எல்லாம் அடைபட்டுக்கிடக்க , மருத்துவச் செலவுகள் அடைபடாமல் போய்க்கொண்டிருந்தது . இப்படியொரு விபத்தில் சிக்குவதும் , அதன் பிறகு அதனினும் துன்பமான மருத்துவச் செலவுகளில் அகப்படுவதும் முதன்முறை அன்று . மூன்றாவது முறை . விபத்தில் அகப்பட்டதை எவரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை . அருகில் இருந்து அறிந்து கொண்டவர்கள் தவிர மற்றவர்களுக்குச் சொல்லவில்லை .நிகழ்ச்சிகளுக்கு யாராவது அழைத்தாலும் , வர இயலாது என்று மட்டுமே சொல்லிக்கொண்டு இருந்தேன் . மனுஷ் அழைத்தார் . சுஜாதா விருது வழங்கும் விழாவிற்கு .... இயலாது என்றேன் . ஏனென்றார் . தயக்கத்துடன் உடல்நிலை குறித்துச் சொன்னேன் . அவரிடம் அதைப் பகிர்ந்து கொள்ளாமைக்குக் கடிந்து கொண்டார் . எத்தனை வசதி வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் . விழாவிற்கு வந்து விடுங்கள் என்றார் . தயங்கினேன் . ஏனெனில் இடது கையில் போட்டிருந்த கட்டு கழற்றப்படாமல் இருந்தது . என் தயக்கத்தை தகர்த்தார் . நீங்கள் தான் சுஜாதாவைப் பற்றி பேச வேண்டும் என்றார் . என் பேச்சு அவருக்கு எத்தனை முக்கியம் என்று சொன்னார் . நான் வெட்கப்படும் அளவுக்கு என்னைப் புகழ்ந்தார் . வெட்கம் தந்த மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன் . பல மாதங்களுக்குப் பிறகு எனக்கும் ஒரு நடை எங்காவது போகவேண்டும் என்றிருந்தது . மனுஷ்யபுத்திரன் அதை சாத்தியப்படுத்தினார் . சுஜாதா எங்கள் இருவருக்கும் இடையில் காரணமாய் இருந்தார் . மனுஷ்யபுத்திரனுக்கு என் நன்றி . நிழலிலேயே கிடந்த உடலும் மனமும் வெயில் குடித்த நாள் அது. உள்ளுக்குள் ரொம்ப வெப்பமாக இருந்தது . பேசப்பேச, உடம்பு குளிர்ந்துகொண்டே இருந்தது .மறக்க முடியாத நாட்களில் ஒன்று .


பாரதி கிருஷ்ணகுமார்.

https://youtu.be/1eGNazC3h5E

இந்த இணைப்பில் உரையைக் கேட்கலாம் .