Sunday, April 5, 2020

அவனை முதன் முறை பார்த்தபோது - பகுதி ஒன்று - பாரதி கிருஷ்ணகுமார்


அப்போது நான் பாண்டியன் கிராமவங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.கணையாழி இலக்கிய இதழைத் தொடர்ந்து நடத்த இயலாமல் அதை யாருக்காவது விற்று விடுவது என்று திரு கஸ்தூரி ரெங்கன் முடிவு செய்து இருந்தார்.அதனை தசரா அறக்கட்டளை வாங்க வேண்டும் என்று முடிவடுத்தது . அந்த முடிவில் சம்பந்தப்பட்ட பலரில் நானும் ஒரு முக்கிய பங்கு வகித்தேன்.எனவே கணையாழி இதழைத் தசரா அறக்கட்டளை வாங்கும் நிகழ்வை ஒரு விழாவாக நடத்துவது என்று முடிவு செய்தோம்.

அந்த விழாவில் நானும் பங்குபெற்று உரையாற்ற வேண்டும் என நண்பர்கள் கேட்டுக்கொண்டார்கள். எனக்கு இருந்த வேலைப்பளு காரணமாக நான் முதலில் சம்மதிக்கவில்லை.தொழிற்சங்கமும் அதன் பணிகளும் எனது நேரம் முழுவதையும் ஆக்கிரமித்து இருந்த நாட்கள் அவை .சங்க அலுவலகத்தில் உடன் பணியாற்ற , சொன்னதைத் துல்லியமாகச் செய்ய பல தோழர்கள் இருந்தார்கள்.
என்றபோதும் முடிவுகளை எடுக்க இரண்டாம் நிலையில் இருந்த தலைவர்கள் எவரும் முன்வரவே இல்லை . இரண்டு மூன்று நாட்கள் எங்காவது பயணம் போய்விட்டு வந்தால் சங்கத்திற்கு வந்த எல்லாக் கடிதங்களும் பிரிக்கப்படாமல் அப்படியே கிடக்கும் . அது போலக் கடிதங்கள் கிடக்கும் நாட்கள் எப்போது வெளியூர் போய்  வந்தாலும் காணக் கிடைக்கும் . எனவே என் இயலாமையைச் சொல்லிகொண்டே இருந்தேன். நண்பர்கள் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள்.நேரம் தான் பிரச்சனை என்றால் விமானத்தில் வந்து போகலாம் என்றார்கள் . நான் அதற்கும் சம்மதிக்கவில்லை. ஒரு நண்பர் சொன்னார் . "ஒரு காரியத்தில் எங்களை ஈடுபடுத்திவிட்ட பிறகு இறுதிவரை எங்களோடு இருப்பது தான் நல்லது bk " என்றார்.சம்மதித்தேன்.

நிகழ்ச்சி நடந்த அன்றைக்குக் காலையில் இரயிலில் சென்னைபோய்ச் சேர்ந்தேன் . மாலையில் நிகழ்ச்சி. மனதிற்குள் என்னபேச வேண்டும் என்பதைத் திட்டமிட்டுக்கொண்டே இருந்தேன் .இப்போதும் எப்போதும் எனக்கு அந்தப் பழக்கம் உண்டு . மனதுக்குள் சொல்லிப்பார்த்துக் கொள்ளுவேன் . குறிப்புகளாக எழுதி வைத்துக் கொள்ளுவேன். மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்துக் கொள்ளுவதும், எழுதி எழுதிப் பார்த்துக்கொள்ளுவதும் சலிக்காமல் நடக்கும் .பத்துப் பதினைந்து பக்கங்களுக்கு எழுதிக் கிழித்து குறைத்து அதையே மீண்டும் எழுதி மேலும் குறைத்து அன்றைய நிகழ்ச்சிக்குத் தயாராவது என்பது பெரும் துன்பம் தான் .

இன்றைக்கு நன்றாகத் தயாரித்து விட்டோம் என்கிற நிறைவோடு ஒரு கூட்டத்துக்கும் போனதில்லை . அடித்து திருத்தி மீண்டும் மீண்டும் மீண்டும் எழுதுவதால் நிறையக் குறிப்புகள் நினைவில் தங்கிவிடும். எனவே மேடையில் பேசுகிறபோது குறிப்புகளைப் பார்க்காமல் பேசுவது சாத்தியமாகி விடும் . எப்படி இப்படி குறிப்புகளை வைத்துக் கொள்ளாமல் இரண்டு மணிநேரம் பேசுகிறீர்கள் என்று இப்போதும் சிலர் கேட்பார்கள் .இரண்டு மூன்று நாட்கள் தரையில் புரண்டு உருண்டு தயாரித்தால் பேசுவது எளிதானது . இவ்வளவுக்குப் பிறகும் மிகச் சிறியதாகவேனும் குறிப்புகளைப் பேசும்போது கையில் வைத்துக்கொண்டு தான் பேசுகிறேன் .

நன்றாகப்பேசிப் புகழ் பெறவேண்டும் , யாரைவிடவும் நன்றாகப் பேசிவிட வேண்டும் என்பதெல்லாம் உள்ளிருக்கும் விருப்பங்கள் தான்.ஆனால் முதன்மையான நோக்கம் எப்போதும் அதுவல்ல . தங்களது நேரத்தை நமக்கெனத் தந்து அந்த அரங்கில் கூடி இருக்கும் மனிதர்களில் ஒரு சிலருக்கேனும் அல்லது ஒருவருக்கேனும் சிறு அளவேனும் பயன்தரத்தக்க ஒரு உரையைத் தந்துவிட வேண்டும் என்பது தான் எப்போதும் எந்த மேடையிலும் முதன்மையான இலட்சியமாக இருக்கிறது . அது தருகிற அச்சம் தான் மேடைக்குப் போகுமுன்னர் அந்தப்பாடு படுத்துகிறது.

எனக்கு எப்போதும் மேடை அச்சம் உண்டு . அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்பான் வள்ளுவன் . அந்த அச்சம் இருக்கிற வரை தான் மேடைகளுக்குப் பேசப் போவேன் . அந்த அச்சம் விலகிய நாளில் நான் ஒருபோதும் மேடையில் பேசச் சம்மதிக்க மாட்டேன்.

இதை எல்லாம் இப்போது எதற்குச் சொல்லுகிறேன் என்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது .நீங்கள் நாட்கணக்கில் போராடிப் புரண்டு புரண்டு படித்து மாற்றி மாற்றி எழுதி மனதில் நினைவில் ஏற்றிக்கொண்டு போனால் உங்களுக்கு முன்னே பேசுகிற வரம் பெற்றவர்கள் நீங்கள் எழுதி வைத்த எல்லாவற்றையும் உங்கள் காது பார்க்கப் பேசிக்கொண்டு இருப்பார்கள் .அல்லது நீங்கள் தயாரித்த குறிப்புகளுக்குத் தொடர்பேயில்லாத வேறு ஒரு திசையில் நிகழ்ச்சி போய்க்கொண்டிருக்கும். எது வேண்டுமானாலும் நடக்கும்.

அரங்கில் யாரும் வந்துசேருவதற்கு முன்பாக பேசச்சொல்லி விடுவார்கள். அல்லது எல்லோரும் போனபிறகு பேசச் சொல்லுவார்கள் . பதினைந்து நிமிடங்கள் பேசவேண்டும் என்று அழைப்பார்கள் . மேடை ஏறும்போது காதுக்கருகில் வந்து பத்து நிமிடம் என்பார்கள், பேச அழைப்பதற்கு முன்பு ஐந்து நிமிடம் என்பார்கள் . இடுப்பில் டைம்பாம் கட்டித்தான் பேச அனுப்புவார்கள் .

இன்னைக்கு வேற யாரும் வரல்ல .. நீங்க மட்டும் தான் ரெண்டு மணி நேரமும் நீங்க தான் பாத்துக்கணும்... என்று எல்லாச் செங்கல்லையும் நம் தலையில் கட்டிவிட்டுக் கால் நடுங்காமல் நடக்கிறோமா என்று முன் வரிசையில் அமர்ந்து கவனிக்கிறவர்களும் உண்டு.எதுவும் நடக்கும். எது வேண்டுமானாலும் நடக்கும் .

அப்படியாகக் காலையில் இருந்து தயாரித்துக்கொண்டு கணையாழி விழாவிற்குப் போனேன். தயாரித்து எடுத்துக்கொண்டு போன குறிப்புகள் எதையும் பேச இயலவில்லை .அரங்கம் வேறு ஒரு சூழலில் மனநிலையில் இருந்தது. எனக்கு முன்னே பேச அழைக்கப்பட்ட ஒருவர் நான் தயாரித்துக்கொண்டு வந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டே இருந்தார்.அந்தக் கணம் நடந்த நடக்கிற நிலைமைக்கு ஏற்பப் பேசவேண்டிய நிலைமை வந்துவிட்டதை உணர்ந்தேன் .

அந்த அரங்கில் முத்துக்குமாரும் இருந்தது எனக்குத் தெரியாது ....


மற்றது... பிறகு

3 comments:

கரிகாலன். said...

உங்கள் பதிவை படிக்க முடியவில்லை.பின்னால் இருக்கும் படம் இடையூறாக இருக்கிறது. இது செல்பேசியில் பார்த்தது.

Anonymous said...

மகிழ்ச்சி தோழர். மனதுக்குப் பிடித்த கவிஞனைப் பற்றிப் படிக்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சி ஒரு புறம். அதுவும் நம்ம BK வுடனான கவிஞனின் சந்திப்பு என்ற மகிழ்ச்சி இன்னுனாரு புறம். ஆனால் உள்ளபடியே இந்தக்கட்டுரை தந்த மகிழ்வு ஆனந்த அதிர்ச்சி வேறு. BK தன் மேடைப்பேச்சின் அனுபவத்தையும் அதற்கான தயாரிப்பையும் பகிர்ந்துக்கிட்டதே அந்த ஆனந்த அதிர்ச்சி. தொடர்ந்து ஆவலுடன்...
- இ. கலைக்கோவன்

Anonymous said...

மகிழ்ச்சி தோழர். மனதுக்குப் பிடித்த கவிஞனைப் பற்றிப் படிக்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சி ஒரு புறம். அதுவும் நம்ம BK வுடனான கவிஞனின் சந்திப்பு என்ற மகிழ்ச்சி இன்னுனாரு புறம். ஆனால் உள்ளபடியே இந்தக்கட்டுரை தந்த மகிழ்வு ஆனந்த அதிர்ச்சி வேறு. BK தன் மேடைப்பேச்சின் அனுபவத்தையும் அதற்கான தயாரிப்பையும் பகிர்ந்துக்கிட்டதே அந்த ஆனந்த அதிர்ச்சி. தொடர்ந்து ஆவலுடன்...
- இ. கலைக்கோவன்

Post a Comment