Tuesday, June 7, 2011

18.05.2011 ஆனந்த விகடனில் வெளியான "கோடி" சிறுகதை


கோடி        

ங்கும் மீன்கள் செத்துக் கிடக்க, வறண்டு கருத்த குளம் போலாகி இருந்தது அப்பாவின் முகம். முப்பது ஆண்டுகளாக கட்டிச் சுமந்து திரிந்த பொய் மூட்டை அவிழ்ந்து, வீடெங்கும் பொசுங்கிய ரோமத்தின் துர்நாற்றம், முற்றத்தில் நின்ற தூண்களைப் போல நிலை கொண்டு நின்றது. தரைக்குள் முகம் புதைத்துக் கொள்ளும் நெருப்புக் கோழி போல, முகத்தைத் தொண்டைக்கும், மார்புக்கும் நடுவில் புதைத்துக் கொண்டார் தாத்தா. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, வீடு தேடி வந்திருந்த அத்தையையும் மாமாவையும்,தாத்தாவும் அப்பாவும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

தாத்தா உட்கார்ந்திருந்த கட்டிலுக்கு நேர் எதிரில் கிடந்த நாற்காலியின் விளிம்பில், மாமா உட்கார்ந்து கொண்டார். யாரும் உட்காரச் சொல்லாததால், அத்தையே அவரை அதில் உட்காரச் சொன்னதாக சுமதி பிற்பாடு சொன்னாள். நல்ல கருப்பாக, லட்சணமாக, தீர்க்கமான கண்களுடன், மாமா எல்லோரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டேயிருந்தார். கட்டிலுக்கு இடது புறம் இருந்த பழைய ஸ்டீல் சேரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு, வாசலைத் தாண்டி,அதையும் தாண்டி எங்கோ பார்த்த படி உட்கார்ந்து கொண்டார் அப்பா. நடுக்கூடத்தில்,இரண்டு கைகளையும் தரையில் ஊன்றியபடி, தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் நடுவில், இருவருக்கும் சேர்த்துப் பொதுவாகத்  தரையில் விழுந்து கும்பிட்டது அத்தை. ஆதரவாகத் தொட்டுத் தூக்கப் போன அம்மாவின் கையைப் பிடித்து வெடுக்கென இழுத்து, தனக்கு அருகில் தரையில் உட்கார வைத்துக் கொண்டார் அப்பா. கொஞ்ச நேரம் அப்படியே கிடந்து விட்டுக் கூப்பிய கரங்களுடனும், சிவந்து கலங்கிய கண்களுடனும், எழுந்த அத்தை, அங்கேயே மாமாவின் காலடியிலேயே அமர்ந்து கொண்டது.

ல்லாம்... மறந்து... எங்கள...  ஏத்துக்கணும்... ஒரே... மகளுக்குக்... கல்யாணம் வச்சுருக்கேன்... எல்லாரும்... வந்துரணும்...” அத்தையின் ஒவ்வொரு சொல்லுக்கும் இடையே, கடந்து போன ஆண்டுகளின் இடைவெளி கனத்துப் படிந்திருந்தது. ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு முகமாகப் பார்த்துச் சொன்னது அத்தை. எங்களுக்கு அத்தை என்று ஒருத்தி இருப்பதும், அப்பா தனியாகப்பிறந்தவர் இல்லையென்பதும், தெரியவந்த அதிர்ச்சியில் இருந்து, குழந்தைகளாகிய நாங்கள் மீளவேயில்லை. நான், தம்பி சதீஷ், தங்கை சுமதி மூன்று பேரும் அம்மாவுக்குப் பின்னால் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டோம். தாத்தா, அப்பா, அம்மா, மூவருமாகச் சேர்ந்து, கட்டிக்காத்த பொய் மூட்டை அவிழ்ந்து, அத்தையாக வெளிப்பட்டு நின்றது. கருகருவென்று சுருட்டையான தலை முடி, திருத்தமான முகவெட்டு, கன்றிப் போனத் தக்காளிச் சிவப்பில் பேரழகாக இருந்தாள் அத்தை. “எங்கள ஏத்துக்கிடணும்... எல்லோரும் வந்துரணும்என்று சொல்லி விட்டு இரண்டாவது முறையும் விழுந்து கும்பிட்டது அத்தை. “எதுக்கு இப்பிடித் திரும்பத்திரும்ப... “என்று சொல்ல வந்த அம்மாவை, தனது உதடுகளில் விரல் வைத்து மெளனமாக்கினார் அப்பா. யாரும் எதுவும் பேசவில்லை  திறந்திராத வீட்டுக்குள் அலை அலையாய் மௌனம் நுழைந்து கொண்டேயிருந்தது... மெளனம் மளமளவென்று நீர் மட்டம் போல ஏறி எல்லோரையும் மூச்சுத்திணற வைத்தது.

ப்பா... அண்ணே... ஏத்துக்குங்க... ஏதாவது பேசுங்க ... எதுக்கு வந்தேன்னாவது கேளுங்கண்ணே... அப்பா... அண்ணே... “என்று குரல்வளை அறுந்து போகிற மாதிரி தீனமான குரலில், அத்தை சொன்னதெல்லாம், தண்ணீருக்குள் இருந்து கூப்பிட்டது போலாகியது. கரையேறி நின்ற தாத்தாவுக்கும், அப்பாவுக்கும் எதுவும் கேட்கவில்லை. வீடு முழுவதும் நின்று தளும்பிக்கொண்டே இருந்த மௌனத்தின் அலைகள், வெளியேறிய போது, அத்தையையும் மாமாவையும் அடித்துக்கொண்டு போய் இருந்தது. மௌனத்தின் கசடுகள் சேறு போல வீட்டுக்குள் படிந்து விட, யார் பேசுவதும் குற்றமாகப் பார்க்கப்பட்டது. சிறிய சத்தம் வந்தால் கூட, தாத்தா திடுக்கிட்டுத் திடுக்கிட்டு  சுற்றுமுற்றும் மலங்க மலங்கப் பார்த்துக்  கொண்டேயிருந்தார். முற்றத்துக்குப் போகிற நடை பாதையில் பாய் விரித்துப் படுத்துக்கொண்ட அப்பா, உறங்குவது போல், கண்களை மூடிக்கொண்டு, எல்லோரும் மௌனமாக இருக்க வேண்டுமென்ற உத்தரவைத் தனது உடலில் இருந்து வெளியேற்றிக் கொண்டே இருந்தார். எப்போதும் சட்டையுரிக்காத அழுக்குப் பிடித்த பாம்பாக மௌனம வீட்டை விழுங்கிக்கொண்டே இருந்தது.

டுத்தடுத்த நாட்களில், கொல்லைப்புறத்தில், கிணற்றடியில், சமையல்கட்டில், மொட்டைமாடியில் என  வேறு வேறு தனிமையான இடங்களைத் தேர்ந்தெடுத்து, அம்மா தான் அத்தையைப் பற்றிய எல்லாச் சேதிகளையும் சொல்லிக்கொண்டே இருந்தாள். தங்கை தான் எப்போதும் அத்தையைப் பற்றி, அம்மாவிடம் பேசிக்கொண்டே இருந்தாள். அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் இது பற்றியெல்லாம் குழந்தைகளுக்கு ஏதும் சொல்ல வேண்டியதில்லை என்கிற உறுதியானகொள்கைஇருந்தது. “வளந்து ஆளான புள்ளைங்ககிட்ட எத்தன நாளைக்குப் பொய்யும் புரட்டும்... அவங்களுக்கு எல்லாம் தெரியணும்என்று தீர்க்கமாக அப்பாவிடம் சொன்னாலும், அப்பா வீட்டில் இல்லாத நேரமும், தாத்தா தூங்குகிற நேரமும் பார்த்து எல்லாவற்றையும் ரகசியமான குரலில் தான் பேச முடிந்தது அம்மாவால்.

காவல் துறையின், உளவுப் பிரிவில், தலைமைப்பொறுப்பில் இருந்த தாத்தாவைத்தான், ஊரில் நடக்கிற எல்லாவற்றிற்கும் அரசாங்கமே நம்பி இருந்தது. அவருக்குத் தெரியாமல் ஒட்டு மொத்த மாநிலத்திலும், ஒருத்தனும் ஒண்ணுக்குக் கூடப் போக முடியாது என்கிற அளவுக்கு, அவரது ஆட்கள்எல்லாரையும்” “எல்லாவற்றையும்கண்காணித்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால் உள் வீட்டில் ஒரே மகள், பக்கத்தில் இருந்த வேதக் கோவிலில் மணியடித்துக் கொண்டிருந்தகோயில் பிள்ளையின்ஒரே மகனான சாமுவேல் எட்வர்ட் ராஜகுமாரைக் காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கொள்வதற்காக, ஒரு விடியற்காலையில் வீட்டை விட்டு ஓடிப் போன போதுகூட, மகளை யாரோ கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் என்று தான் பதறினார். அதிகாலையில், வாசல் தெளிக்கக் கொண்டு போன ஒரு வாளித் தண்ணீரும், வெளக்கமாரும், கோலப்போடி போட்டு வைத்திருந்த டப்பாவும் அப்படியே வாசலில் இருக்க, மகள் காணாமல் போனது அவரைக் கலங்கடித்தது. தன்னால் பாதிக்கப்பட்ட யாரோ இதைச் செய்திருக்கக் கூடும் என்று தான் அவரது போலீஸ் புத்தி கணித்தது. அவரது ஆட்கள் மாநிலமெங்கும் தேடத் துவங்கியிருந்தார்கள். மகள் காணாமல் போனதை விடவும். மனைவி பதட்டமாகி, வயிறு கலங்கிக் கலங்கி, அடிக்கொரு தரம் கழிப்பறைக்குப் போவதும், கழிப்பறைக்குள் குமுறிக் குமுறி அழுவதும், சமையல் கட்டிலேயே பாய் கூடப் போட்டுக்கொள்ளாமல் தரையில் படுத்து அழுவதும் அவரைப் பெரிதும் நோக வைத்தது.

துயரத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, மகன் கனக சபாபதியை மட்டும் மகளின் நண்பர்களது வீட்டில் தேடச் சொல்லிவிட்டு, வீட்டிலேயே இருந்து கொண்டார். ஆடர்லி வாங்கி வந்த காப்பியையும், பலகாரத்தையும் சாப்பிட மறுத்த மனைவியை கடிந்து கொண்டு, ஏலே... உனக்கு எம்  பேர்ல நம்பிக்கையில்ல... பொழுது சாயுறதுக்குள்ள புள்ளயக் கொண்டாந்து உங் கண்ணு முன்னால நிறுத்துறேன்... இப்பம் சாப்புடுதியா இல்லையா?...என்றதும், அவரின் அதிகாரத்தின் அருமை பெருமைகளை அறிந்த்ததினால், கொடுத்ததை சாப்பிட்டு விட்டு அங்கேயே படுத்துக் கொண்டாள். “நீங்க சாப்புடலையா?என்று  கேட்டதும்குளிச்சுட்டு, சாமி கும்புட்டுட்டுச் சாப்புடுறேன்என்றபடி எழுந்து கிணற்றடிக்குப் போனார் கல்யாண சுந்தரம் .பி.எஸ்.

குளித்து முடித்து ஈரத் துணியோடு பூஜையறைக்கு வந்துநெல்லையப்பரைமனமார வழிபட்டால், எந்த வழக்கிலும் அவன் துப்புக்கொடுப்பான் என்பது அவரது நம்பிக்கை. அடியும், முடியும் அறியப்படாத எம்பெருமானுக்கு எல்லாத்  திசைகளிலும் என்ன நடக்கிறதென்று தெரியுமென்பதால், எந்த வழக்கை எந்த திசையில் எப்படி செலுத்துவதென்று, பூஜை நேரத்தில் அவருக்குள் தோன்றுவதை, நெல்லையப்பரே தனக்குக் காட்டுகிற பாதையாகத் தான் இன்று வரை கருதிக் கொண்டிருக்கிறார். குளித்து முடித்து பூஜையறைக்குள் போகிற வரை வழக்குகள் குறித்தோ, வேலை குறித்தோ எதையும் நினைக்க மாட்டார். குளிக்காமல், சுத்த பத்தமில்லாமல்அவனைப்பற்றி நினைப்பது தகாது என்று கருதுகிற அளவு சுத்தம் பார்க்கிற பழக்கம் இருந்தது. இன்றைக்கோ, குளிக்கப் போகிற போதே, நெல்லையப்பரே !... வழிகாட்டுமய்யா... பொம்பளப் புள்ளயப்  பத்திரமா பொழுது சாயறதுக்குள்ள வீட்டுக்கு கொண்டாந்து சேத்துருமைய்யா... நீரு கேக்குற காணிக்கைய உம்ம காலடியிலேயே கொண்டாந்து சேக்குறேன்என்று மனசுக்குள் கரைந்து, உருகி வேண்டிக் கொண்டார்.

நெல்லையப்பர் அவரை முழுவதுமாகக் கைவிட்டு விடவில்லை... பூசைஅறையில், நெல்லையப்பர் படத்துக்குக் கீழே, மகள் எழுதி வைத்துவிட்டுப் போன கடிதம் கிடந்தது. எல்லாம் தெளிவாகி விட்டது. மகளைத் தேடுவதை நிறுத்துமாறு தனது ஆட்களுக்கு உத்தரவிட்டார். மகனைத் திரும்ப வரச்சொல்லி வேலைக்குப்  போய் விடச்சொன்னார்... மகளின் கடிதத்தை, மனைவியின் கையில் வாசிக்கக் கொடுத்து விட்டு, உம் மவ செத்துப்போயிட்டா" என்று சொல்லி விட்டு ஆபீஸுக்குப் புறப்படத் தயாரானார்... மத்தியானம் எப்பவும் போல சாப்பிடவர்றேன்... எதையாவதுஆக்கிவைஎன்றார். கல்யாணியம்மாள் தயங்கித்  தயங்கி, “...அறியாத புள்ள... அதுக்காகச் செத்துருச்சுன்னா சொல்லறது... எங்கன இருந்தாலும் தேடிக் கூட்டிக்கிட்டு வாங்கஎன்றாள். “இப்பிடியொரு சாதி கெட்ட, ஓடுகாலி முண்டயப் பெத்ததுக்கு இந்த வயத்துல கொள்ளிய வச்சுரலாம்என்று மனைவியின் வயிற்றுக்கு நேரே ஐந்து விரல்களையும் ஆயுதம் போல நீட்டினார். ஓசையே எழாமல் அழுதுகொண்டே, மீண்டும் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு கழிப்பறைக்கு ஓடினாள் கல்யாணியம்மாள். பெத்த வயிறு பேதலித்தது. அடி வயிறெங்கும், அவரது சொற்களும், விரல்களும் பாதாளக்கரண்டி போலப் புரண்டது. உஷ்ணமாய்க் குருதி பெருக்கெடுத்துக் கால்களை நனைத்துத் தரையெங்கும் ஓடியது. அறுந்து போவதற்கே இழுத்துக் கட்டப்பட்ட வீணையின் நரம்பு போல் கால்கள் விறைத்துக்கொண்டு நீண்டது. கழிவறையிலேயே சவமானாள் கல்யாணியம்மாள். கழிவறைக் கதவை உடைத்து, மாலையிலேயே இறுதிச்சடங்குகளை முடித்துக்கொண்டார் கல்யாணசுந்தரம்மனைவி செத்ததை விடவும், மகள் ஓடிப்போனத்தை விடவும், ஊரெல்லாம் உளவு பார்த்துச் சொன்ன தனது அதிகாரத்தின் மீது மண் விழுந்தது, அவரை உடுப்பைக்  கழற்றித் தூரப் போட வைத்தது. அன்றைக்குத் தலையைத் தொண்டைக்கும் நெஞ்சுக்கும் நடுவில் புதைத்தவர் தான்நிமிரவேயில்லை. அப்பாவும் மகனுமாகச் சேர்ந்து, ஓடிப் போனவளதுஉடைமைகள், நினைவுகள் என எல்லாவற்றையும் தடயமின்றி அழித்தார்கள். அப்படியொரு பெண் பிறக்கவில்லை என்கிற பொய்யைப் பிறப்பித்து அதைப் பேணி வளர்த்தார்கள். அப்பாவுக்குக் கல்யாணமாகி வீட்டுக்கு வந்த அம்மாவும் அதைச் சேர்த்துக்  காப்பாற்றியிருக்கிறாள். பிறந்துவளர்ந்த வீடு தேடி, அத்தையே வருகிற வரை, அந்தப்  பொய் மூட்டை அவிழாமல் இருந்தது. இப்போது எல்லாமே அவிழ்ந்து, உடைந்து தெறித்துக் கிடந்தது. இந்தக் கதையெல்லாம் இரண்டு மூன்று நாட்களில் ரகசியமாக அம்மா சொல்லித் தீர்த்துக் கொண்டாள். வீடு தன்னிலை திரும்பப் பல வாரங்களாகி விட்டது. ஓடுகிற காலம், தன் காலடியில் அகப்பட்ட எல்லாவற்றையும் அரைத்துத் தேய்த்துக் கூழாக்கி, உருமாற்றி, உருட்டிப் புரட்டி எங்கெங்கோ கொண்டு சேர்த்து விடுகிறது.. அதற்குப் பிறகு, யாரும் எதுவும் அத்தையைப் பற்றிப் பேசக் கூடாது என்று உத்தரவாகி இருந்தது. தங்கை சுமதி மட்டும் எப்போதாவது அத்தையை விட மாமா தான் அழகு என்பாள். “நிறம் தான் வேற வேற... ரெண்டு பேருமே அழகுதான்என்பாள்  இன்னொரு சமயம். அதுவும் மறந்து,  பின் எப்போதும்  யாரும், எதுவும் அத்தையைப்  பற்றியோ, மாமாவைப் பற்றியோ பேசிக்கொண்டதேயில்லை.

ன்பது வருடம் கழித்து இன்றைக்குத்தான், வள்ளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த எனக்குத் தங்கை சுமதி போன் செய்தாள். “அண்ணே ... மாமா செத்துப் போயிருச்சாம்...அத்தையே போன் பண்ணிச் சொல்லுச்சு...இங்க யாரும் போறதாத் தெரியல .யாராவது போயி, அவளுக்குப் பொறந்த வூட்டுக் கோடி எடுத்துப் போடணும்னு அம்மா சொன்னதுக்கு, எம் பொண்டாட்டி செத்ததுக்குக் காரணமானவ வீட்டு எழவுக்கு நாம் போக மாட்டேன்... கனகு நீ வேணா போய்க்கப்பான்னு தாத்தா சொன்னதுமே, உங்களுக்கே மக இல்லன்னா, எனக்கு எங்க இருந்து உடம்பொறப்பு வரும்ன்னு சொல்லீட்டு, அப்பா ஆபீசுக்குப் போயிட்டாருண்ணே ... அங்க இருந்து கயத்தாறு பக்கமா இருந்தா நீ போயிட்டு வாண்ணேஎன்று ஒரே மூச்சாகச் சொல்லி விட்டு, பதிலுக்குக் கூடக் காத்திராமல் போனைத் துண்டித்தாள் தங்கை. போகணும் என்பதைத் தவிர வேறு எதுவும் தோன்றவில்லை. ஆபீசுக்கு லீவு சொல்லி விட்டு, டாக்ஸி ஸ்டாண்ட் போய், வழக்கமாக ஆபீசுக்கு வண்டியோட்டும் குருநாதன் அண்ணாச்சியைப் பார்த்து வண்டி பிடித்தேன்.எங்க போகணும், எப்ப திரும்புவோம் என்று கேட்க ஆரம்பித்து, எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்ட அண்ணாச்சி சொன்னார். “அடப்பாவமே... ஒரு மனுஷம் மேல ஒரு மனுஷி ஆசப்பட்டதுக்கா இம்புட்டுத் துயரம் ...அப்பம் ,அத்தைக்குப் பொறந்த வூட்டுல இருந்து தம்பி மட்டும்தான் போறீங்கண்ணா, வெறுங் கையோட போக்கூடாது. பொறந்த வூட்டுக் கோடின்னு ஒரு புடவை வாங்கிட்டுத் தான் போகணும்என்று, பாளையங்கோட்டையில் ஒரு பெரிய துணிக்கடை வாசலில் வண்டியை நிறுத்தினார். முதன் முறை வீட்டுக்கு வந்தபோது அடர்ந்த செம்மண் நிறத்தில், வெள்ளைப் பூப் போட்ட, உடம்போடு ஒட்டிய ஒரு சேலையை அத்தை கட்டியிருந்தது நினைவுக்கு வந்தது. ஏறக்குறைய அதே வண்ணத்தில், ஏதேதோ கோடுகளும், வட்டங்களுமாகப் போட்ட ஒரு புடவை அத்தைக்கு பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. புடவை வாங்கிக்கொண்டு வந்து காரில் ஏறும் போது அண்ணாச்சி கேட்டார். “தம்பி... நீங்க போனது நாளைக்குத் தாத்தாவுக்கோ, அப்பாவுக்கோ தெரிஞ்சா என்ன செய்வீக?”... “தெரிஞ்சப்புறம் பார்த்துக்கலாம்என்றேன்... மலர்ந்து சிரித்துஇது தான் மனுஷங்குறதுஎன்றார் அண்ணாச்சி.

யத்தாற்றில், வீடு கண்டுப் பிடிப்பதில்  சிரமமேதும் இல்லை. மாமா பூர்வீகமாக அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவர் என்பதால் ஊரே திரண்டிருந்தது. உள்ளூரில் பள்ளிக்கூடமேல்லாம் லீவு விட்டு, பஜாரெல்லாம் அடைத்திருந்தார்கள். நாங்கள் போய்ச சேர்ந்த போது தான்எடுக்கநேரம் குறித்து வேலைகள் நடந்து கொண்டிருந்தது. மாமா வீடு விசாலமாக இருக்க, நடுக் கூடத்தில், தரையில் மாமாவைக்  கிடத்தி இருந்தது. வீட்டுக்குள் கூட்டம் நெருக்கி நின்று கொண்டிருந்தது. மாமாவின் தலைமாட்டில் தரையைப் பார்த்து குனிந்தபடி உட்கார்ந்திருந்தது அத்தை. அத்தைக்குப் பக்கத்தில் மெளனமாகக் கண்ணீர் விட்டபடி இருந்தது தான் கட்டிக் கொடுத்த மகளாக இருக்க வேண்டும். என் ஊகங்களுக்கு நடுவே, ஒரு வயதான பெரியவர்எடுப்பதற்கானஎல்லா வேலைகளையும் சத்தம் போட்டுச் செய்து கொண்டிருந்தார். எல்லா இழவு வீடுகளிலும், இந்த  நடைமுறைகளை ஒரு வயசாளியே எடுத்துப் போட்டுக் கொண்டு செய்வது, மரணத்தை எதிர் கொள்ளப் போகும் துணிச்சலா, அச்சமா அல்லது தன்னை எடுக்கிறபோது என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கற்றுக் கொடுப்பதா எனபது புலப்படவில்லை. ஈவு இரக்கமில்லாத ஆள் மாதிரித் தான் பெரிசு பேசிக் கொண்டும், நடந்து கொண்டுமிருந்தார் .

மாமாவின் தலைமாட்டில் போய் நின்று கொண்டு, எல்லாரையும் ஒரு சுற்று பார்த்துவிட்டுப்  பெரிசு சத்தமாக கேட்டதுஅந்த அம்மாவுக்குப் பொறந்த வூட்டுக் கோடி யாரு போடுறா? ”... அவர் குரல் முடிவதற்குள்ளேயே, பத்து முப்பது  வருஷமாக அவுக யாரும் போக்குவரத்துக் கிடையாதுஎன்றது ஒரு குரல். சொன்னது யாரென்று கண்டறிவதற்குள், அப்ப சம்பந்தி வீட்டுல கோடி போடுறாங்களாஎன்றார் பெரிசு. குருநாதன் அண்ணாச்சி என்  காதருகே வந்து, பொறந்த வூட்டுக் கோடி கொண்டாந்துருக்கமின்னு சொல்லுங்கப்பாஎன்றார். சொல்ல விரும்பியும் சொல்ல இயலாது திகைத்து நின்ற தருணத்தில் அன்னாச்சியே பெருங்குரலெடுத்து, தம்பி... பொறந்த வூட்டுக் கோடி கொண்டாந்திருக்குஎன்றார்.

றையெங்கும் பரவிக்கொண்டிருந்த சின்னச் சின்ன ஓசைகள்  அடங்கி, கண் இமைக்கும் நேரத்திற்கும் குறைவான நொடியின் இடைவெளியில் மௌனம வெடித்துக் கிளம்பியது. எல்லோரும் அண்ணாச்சியைத் திரும்பிப் பார்க்க, ஏதும் பேசாமல் என்னைத் தோள் தொட்டு ஆதரவாக முன்னே நகர்த்தினார் அண்ணாச்சி. கூட்டம் தன்னிச்சையாக விலகி,உருவாக்கிய வழிக்கு நேரே எதிரில், அத்தை  நிமிர்ந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. இரண்டு கைகளையும் கழுத்து வரை உயர்த்தி, கைகளைச் சேர்க்காமல் வணங்கினேன். எல்லாவற்றையும் உணர்ந்து கொண்டதான பாவனையில், மெல்லத்  தலையசைத்துத் தன்னருகே வருமாறு கூப்பிட்டது அத்தை. அத்தையை நோக்கி நகர்ந்து, பைக்குள் இருந்த புடவையை எடுத்த கணத்தில் ஏதோ ஒரு கை பையை என்னிடமிருந்து ஆதரவாக வாங்கிக்கொண்டது. இரண்டு கைகளாலும் கனத்த புத்தகம் போல புடவையை ஏந்திக் கொண்டு, குனிந்து அத்தைக்கு முன்பாக  நீட்டினேன். இழந்த அன்பை முழுவதுமாக அன்றே யாசித்துப்  பெறுவது போல, இரண்டு கைகளையும் நீட்டிப் புடவையை வாங்கியது அத்தை. ஈரமின்றிக்  குளிர்ந்து கிடந்தது அத்தையின் கைகள்புடவையைத்  தன் மார்பில் ஒத்தி எடுத்து, மடியில் போட்டுக் கொண்டது. இரண்டடி தள்ளி நின்ற என்னை மீண்டும் நிமிர்ந்து பார்த்து இன்னும் அருகே வருமாறு தலையசைத்து அழைத்தது அத்தை. நெருங்கிய கணத்தில், என்  இரண்டு கால்களையும் கட்டி, இறுக்கமாக அணைத்துக் கொண்டு, எல்லோரும் திகைத்துக் கண்கலங்கக் பெருங்குரலில் கதறியபடி அத்தை கூப்பிட்டது ... “யண்ணே”....

-பாரதி கிருஷ்ணகுமார்




10 comments:

நிழல்மொழி said...

உணர்வுகளைக்கடத்துவதற்குத் தேவை நேர்மையான அணுகுமுறை மட்டுமே.பாரதி கிருஷ்ணகுமாரின் அணுகுமுறை அத்தகையதே.கண்ணீரை வரவழைப்பது கோடி சிறுகதையின் வெற்றி.காலங்களைக் கடந்து நிற்கும்.

சிநேகிதன் அக்பர் said...

அருமையான சிறுகதை. விகடனில் வெளியானதற்கு வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan said...

படித்து முடித்தபோது கண்கள் நிறைந்துவிட்டது.. பாரதிசார்.

kumaresan said...

குடும்ப உறவில் நெருக்கமின்றியே வளர்ந்தவன் நான். அந்த ஏக்கத்தை ஆழ்ந்து எடுத்து வைத்துக்கொண்டு உறைந்து உட்கார வைத்துவிட்டீர்கள் பி.கே.

காட்சிப்படுத்தலும் உணர்ச்சிப்படுத்தலும் இணைந்த உங்கள் கதையாக்கம் ஒரு தனி அனுபவத்தைத் தருகிறது.

காதலுக்கு நம் சமூகம் எழுப்பியுள்ள சுவர்,அதிலும் சாதி-மத வரப்பு மீறிய காதலுக்கு வெட்டப்பட்டுள்ள அகழி, அனைத்தையும் மீறி தொடர்புக்குத் துடிக்கும் புதிய தலைமுறை... எத்தனை கருக்கள்!

துக்க வீட்டு நடைமுறைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு நிர்வகிக்கும் வயசாளி பற்றிய வர்ணனை சிரிக்க வைக்கிறது என்றால், அந்த இறுதி “யண்ணே” மனம் குமைந்து அழச் செய்கிறது. “யக்கா” என்று ஒரு மடிதேடிப் புதைந்து ஆறுதல் தேட வேண்டும் என்ற எண்ணத்தைத் தருகிற இப்படைப்புக்கு கோடி கொடுத்தாலும் தகும்.

ராஜேஷ் said...

"என் ஊகங்களுக்கு நடுவே, ஒரு வயதான பெரியவர் “எடுப்பதற்கான” எல்லா வேலைகளையும் சத்தம் போட்டுச் செய்து கொண்டிருந்தார். எல்லா இழவு வீடுகளிலும், இந்த நடைமுறைகளை ஒரு வயசாளியே எடுத்துப் போட்டுக் கொண்டு செய்வது, மரணத்தை எதிர் கொள்ளப் போகும் துணிச்சலா, அச்சமா அல்லது தன்னை எடுக்கிறபோது என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று கற்றுக் கொடுப்பதா எனபது புலப்படவில்லை." - வெகு நாட்களாக எனக்குள் இருந்த சந்தேகத்தை மேற்சொன்ன வரிகள் போக்கிவிட்டது.நன்றி தோழர்.

தருமி said...

//பெருங்குரலில் கதறியபடி அத்தை கூப்பிட்டது ... “யண்ணே”.... //

தொடும் வார்த்தைகள் ...

Unknown said...

வைராக்கியஙகள் தாண்டி மனித உறவுகள் முக்கியமாக சித்தரிக்கப்பட்டிருப்பதும், மனித பலவீனங்கள் எதார்த்தமாக பேசப்பட்டிருப்பதும் அழகு...

Ponra said...

B.K

நெஞ்சைதொட்டுவிட்டது கதை என்பார்களே அது இப்படித்தானோ ...

இரத்த உறவுகள் என்றும் விடுவதில்லை விட்டுக்கொடுப்பதில்லை ...

எனக்கு எப்படி விமரிசிக்க என்றே தெரியவில்லை ...

அழகு அருமை இன்னும் என்னன்னவோ ...

திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது போல கண்களில் கண்ணீர் வந்துவிட்டது ...

பேச்சில் மட்டுமல்ல BK உங்களால் எழுத்தாலும் அனைவரையும் கட்டிவிடத்தெரிகிறது.

perumalkaruppiah said...

At the time of reading story in 2011 I simply wept but now I could understand the feelings of the orphaned ATHAI....

bharathi krishnakumar said...

இந்தச் சிறுகதை 2011 ஆம் ஆண்டின் சிறந்த சிறு கதையாக இலக்கியச் சிந்தனை அமைப்பால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment