Thursday, June 11, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 19



ஆனால் MGR எந்தப் பதற்றமும் இல்லாமல் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார் ...
கூட்டத்தில் எழுந்த ஆரவாரமும் , MGR மற்றும் மேடையில் இருந்தவர்களின் முகக்குறிப்பை உணர்ந்து பின்னே திரும்பிப் பார்த்தேன் .

எனக்கு நான்கைந்து வரிசைகள் தள்ளி நடுத்தர வயதுள்ள ஒரு மனிதர் நின்றுகொண்டு இருந்தார் . அவர் தனது  இடது கையால் தனது வலது முழங்கையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு நிற்க , உயர்த்திய அவரது வலது உள்ளங்கையில் ஒரு அருநெல்லிக்காய் அளவுள்ள கற்பூரம் கனன்று எரிந்து கொண்டிருந்தது . அடுத்த கணம் அவர் MGR க்கு நேரே தனது வலது கரத்தை உயர்த்தி , MGR க்கு திருஷ்டி கழிக்க ஆரம்பித்தார்.  கூட்டம் வெறிகொண்டு கத்திக் கைதட்டிப் புகழ் முழக்கம் செய்துகொண்டே இருந்தது . இடமிருந்து வலமாக , வலமிருந்து இடமாக மூன்று முறை அவர் சுற்றினார் . சிறிதும் பதட்டமோ , எரிச்சலோ , வலியோ ... என எந்த உணர்ச்சியும் இன்றி , பக்திப் பெருக்கோடு அதைச் செய்து கொண்டிருந்தார் . 

மேடையில் இருந்தவர்களில் தோழர் NS மட்டும் பதறிப்போய் அவரை அமருமாறு செய்கை காட்டிக்கொண்டே இருந்தார் . அந்த மனிதரோ MGR ஐத் தவிர எதையும்,யாரையும் பார்க்கவில்லை. நான் கீழிருந்து பார்த்தபோது , MGR இன் கருப்புக் கண்ணாடியில் அந்த எரியும் கற்பூரத்தின் பிம்பம் தெரிந்தது . நான் கருப்புக் கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தையும்  , அந்த மனிதனையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே இருந்தேன் . MGR என்ன நினைக்கிறார் என்பதைக் கண்டறிய இயலாமல் , எந்தத் திசையில் இருந்து பார்த்தாலும் அவரது கண்கள் தெரியாதபடி அவரது கருப்புக் கண்ணாடி இருந்தது . அதை அவர் அணிந்திருக்கவில்லை என்பதைப்போலவும் மாறாக அவரது உடலுறுப்பே போலவும்,அது இருந்தது .

 MGR ஆடாமல் , அசையாமல் அந்த மனிதரைப் பார்த்துக்கொண்டே இருந்தார் .  பதறவில்லை . தடுக்கவில்லை . இன்னும் சொல்லப்போனால் அதை அவர் மானசீகமாக ஏற்றுக்கொண்டு இருந்தார். கருப்புக் கண்ணாடிக்கு வெளியே தெரிந்த அவரது முகம் அதைத்தான் உணர்த்தியது .எனக்கு MGR மீது தீராத கோபமும் , அருவருப்பும் தோன்றியது . அந்த உணர்ச்சி எனக்கு இப்போதும் இருக்கிறது. 

திருஷ்டி கழித்து , தீபாராதனை  முடிந்து அந்த மனிதர் அமைதியாகப் பதட்டமே இல்லாமல் தரையில் அதே இடத்தில் அமர்ந்து கொண்டார் .ஆனால்,இம்முறை அவரது இடதுகை வலது மணிக்கட்டைப் பற்றி இருந்தது. முகத்தில் வலியின் எரிச்சலின் ரேகை  மெல்லிதாகப் பரவி இருந்ததை நான் கண்டேன். 

இந்தத் தருணத்தில்,இது தொடர்பில் இன்னொன்றை எழுத விரும்புகிறேன். கோடை வெயிலுக்கு இதம் வேண்டி ஒருவர் கருப்புக் கண்ணாடி அணிவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.இரவும் பகலும்,24 மணி நேரமும் ஒருவர் கருப்புக் கண்ணாடி அணிவதை எப்படிப் புரிந்துகொள்வது? தனது உணர்ச்சிகளை மறைப்பதற்கான கேடயமாக கருப்புக் கண்ணாடியை ஒருவர் அணிகிறார் என்றுதான் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.வியக்கத்தக்க முறையில் MGR கருப்புக் கண்ணாடியை அணிந்துக்கொண்டது போலவே,அவரது அரசியல் எதிரியான கருணாநிதியும் அணிந்துகொண்டே இருந்தார். நானறிந்தவரை உலகிலேயே 24 மணி நேரமும் கருப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டே இருந்தவர்கள், அவர்கள் இருவர் மட்டுமே.அவர்களோடு உரையாடும்போது,அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கண்டறிவது கடினம்.எங்கே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கண்டறிவது மிக மிகக் கடினமானது.

மேடையில் வந்து அமர்ந்து வலது காலை இடதுகாலின் மீது போட்டுக்கொண்டதைத் தவிர MGR மற்ற நேரம் முழுவதும் ஆடாமல் அசையாமல் மெழுகு பொம்மை போல் உட்கார்ந்து இருந்தார். இருபது முப்பது நிமிடங்களுக்குப் பிறகு நாற்காலியில் இருந்து சற்று முன்னே வந்து இரண்டு கைகளாலும் வேட்டியைப் பிடித்து உயர்த்திக்கொண்டு இடது காலைத் தூக்கி வலதுகாலின் மீது போட்டுக்கொண்டார். இந்த ஒரு அசைவுக்காகக்,கூட்டம் மீண்டும் ஆர்ப்பரித்து முழங்கிச் சிலிர்த்தது.
  
ஓரிருவர் பேசி முடித்ததும் ,தோழர் NS பேசினார். தோழர் NS பேசத் துவங்கியதில் இருந்து முடிக்கிறவரை அவரது பேச்சை,லேசாகத் தலையை உயர்த்தி வைத்துக்கொண்டு,முழுவதுமாக கவனித்தார் MGR. தோழர் NS பேசி முடித்ததும் MGR ஐப் பேச அழைத்தார்கள்.கட்டியிருந்த வேட்டி கசங்காமல் விருட்டென்று எழுந்து,ஒலிபெருக்கிக்கு அருகே போனார் MGR. அவர் பேசுவார் என்று அறிவித்ததிலிருந்து, பேசத் துவங்குகிற வரை கூட்டத்தின் பேரிரைச்சல் குறையவே இல்லை. 

தனது வழக்கமான, "ரத்தத்தின் ரத்தமான என் உடன்பிறப்புக்களே" என்றதும் கூட்டம் மேலும் ஆவேசமுற்று முழங்கியது. 

அவரே கூட்டத்தை அமைதியாக இருக்குமாறு செய்கையால் பணித்தார். "அவர் சொன்னால் மட்டுந்தான் கேட்போம்" என்பது அந்தக் கூட்டத்தின் பண்பாக இருந்தது. கூட்டம் ஆரவாரம் குறைந்து அவரது பேச்சைக் கேட்கத் துவங்கியது.

MGR க்குப் பொதுக்கூட்டங்களில் சிறப்பாகப் பேசத் தெரியாது என்றொரு பொதுக் கருத்து எல்லோருக்கும் எப்போதும் இருந்தது.ஆனால் அன்றைக்கு MGR அதைப் பொய்யாக்கினார்.

என்ன பேசினார்?

அப்புறம் சொல்லுகிறேன்...

-பாரதி கிருஷ்ணகுமார்.        

Tuesday, June 9, 2020

மானமிகு கல்வி அமைச்சருக்குத் திறந்த கடிதம் -02



மானமிகு கல்வி அமைச்சருக்கு!
உங்களுக்கு இது எனது இரண்டாவது கடிதம்.

எனது முந்தைய கடிதத்தை நீங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை.
படித்திருந்தாலும் பயன் ஏதுமில்லை.

ஏனெனில் 10ஆம் வகுப்புக்கு தேர்வுகள் நடந்தே தீரும் என்றும்,
அதற்கு "முதலமைச்சரே" ஒப்புதல் தந்து விட்டதாகவும் நீங்கள் அறிவித்து விட்டீர்கள்.

யாரோ பெற்றோர்கள் தொடுத்த வழக்கில், கல்வித் துறையின் செயல்பாட்டில் நீதிமன்றம் தலையிட இயலாது என்று நீதியரசர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால்,இப்போது மீண்டும் ஒரு வழக்கு வந்திருப்பதாகவும் விசாரணையை ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.என்ன தீர்ப்பு வருமோ? நீதிமன்றங்களில் தீர்ப்பு வருமென்று தெரியும்.நீதி கிடைக்குமா இல்லையா என்று யாருக்குத் தெரியும்? அது நடக்கிறபடி நடக்கட்டும்...

எதற்காகத் தேர்வுகள் நடத்தப்பட்டே ஆக வேண்டும் என்பதற்கான காரணங்கள்  எதையும் நீங்கள் இதுவரை சொல்லவில்லை.இது உங்கள் அதிகார மமதையைத் தவிர வேறு எதையும் உணர்த்தவில்லை.

எந்தக் கேள்விக்கும் , யாருக்கும் பதில் சொல்ல வேண்டுமென்கிற அவசியம் உங்களுக்கில்லை என்று நீங்கள் கருதுகிறீர்கள்.அது உண்மையல்ல.ஒரு ஜனநாயக நாட்டில் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டியது உங்கள் கடமை , பொறுப்பு. வெளியில் சொல்லமுடியாத காரணங்களுக்காகத்தான் நீங்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தத் துடிக்கிறீர்கள் என்று உங்களைப்பற்றி தவறாகக் கருதுவது பற்றிக் கூட நீங்கள் கவலைப்படவில்லையா?

அவசர அவசரமாக தேர்வுகளை நடத்தி , தேர்வு முடிவுகளையும் வெளியிட்டு , பள்ளிகள் துவங்கும் தேதியையும் அறிவித்தால் தான் , முதல் பருவத்துக்கான கட்டணமும் , வேறு வகையான கட்டணங்களும் வசூலிக்க முடியும் என்று சில தனியார் பள்ளிகள் விரும்புவதாகவும், அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றத்தான் நீங்களும் உங்கள் துறையில் சில அதிகாரிகளும் "கடுமையாக உழைத்து" , பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை நடத்தத் துடிக்கிறீர்கள் என்று,பலர் பகிரங்கமாகப் பேசுவதை ... நான் நம்பவில்லை. ஒரு மாநிலத்தின் கல்வி அமைச்சரும் , அவரது அமைச்சகமும் அப்படி நடந்து கொள்ளுகிறார்கள் என்பதை , ஒருவேளை அது உண்மையாகவே இருந்தாலும் எப்படி நம்புவது?

ஏன் தேர்வுகள் நடத்தக்கூடாது என்பதற்கு நான் சொல்லும் காரணங்கள்...



  • கொரோனா நோய்த் தோற்றும்,கொரோன உயிரிழப்பும் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் தேர்வுகள் தேவையற்றவை. அதுமட்டுமன்றி சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடிப்பது குழந்தைகளுக்குச்  சாத்தியமே இல்லை.
  • பொதுப் போக்குவரத்து இன்னும் சீராக இயங்கத் துவங்கவில்லை.குழந்தைகள் எப்படித் தங்கள் இல்லங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு குறித்த நேரத்தில் வந்து திரும்ப இயலும்? 
  • சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய அதிகம் கொரோனா பாதித்த பகுதிகளில் ஜூன் 30 வரை ஊரடங்கு என்று ஏற்கனவே அறிவித்த பிறகு, இப்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 15 நடக்கும் என்று அறிவிப்பது கோமாளித்தனம் அல்லவா ?
  • குழந்தைகள் தேர்வு மையங்களுக்கு யார் துணையோடு எப்படி வருவார்கள்? உணவு குடிநீர் இவைகளை எங்கு பெறுவார்கள்? யார் துணையுடன் எப்படித் திரும்பப் போவார்கள்?
  • ஏற்கெனவே விடுதிகளில் தங்கிப் படித்த குழந்தைகள் என்ன செய்வார்கள்?
  • கொரோனா விடுமுறை துவங்கியதும் பெரும்பாலான கிராமத்து,மலைவாழ் ஏழைக் குழந்தைகள் விவசாய வேலைகளுக்குச் சென்று விட்டதைத் தாங்கள் அறிவீர்களா? அவர்களுக்கு எப்படி தகவல் போகும்?
  • ஏற்கெனவே நீங்கள் அறிவித்த ஜூன் 1, பிறகு ஜூன் 15 என்கிற ஒத்திவைப்பு குறித்த அறிவிப்புகளே அவர்களுக்குப் போகவில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? அதுவும் உங்கள் சொந்த மாவட்டத்தில் உள்ள      மலைப்பகுதிக் குழந்தைகள் எல்லோரும் கரும்பு வெட்டும் வேலைக்கு போனது உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா? தெரியும் என்றால் , அதற்குப்பிறகும் தேர்வுகள் நடத்துவது இரக்கமற்ற செயல் அல்லவா ? தெரியாது என்றால் நீங்கள் எதற்குக் கல்வி அமைச்சராக இருக்கிறீர்கள்?  
  • நகர்ப்புறக் குழந்தைகளிலும் ஆகப் பெரும்பாலான குழந்தைகள் தங்கள் நேரத்தை அலைப்பேசி,மற்றும் தொலைகாட்சி முன்பு தான் செலவிட்டது என்பதும் உங்களுக்கு தெரியாதா?
  • ஏற்கெனவே கற்பித்ததை,கற்ற பாடங்களை மீண்டுமொருமுறை படிக்காமல்,வாசிக்காமல்,தேர்வெழுதுவது குழந்தைகளுக்குக் கடினமானது என்பதாவது உங்களுக்குத் தெரியுமா தெரியாதா?
  • தேர்வுகளை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைப்பது குழந்தைகளின் மனநிலை சீராக இருப்பதற்கு மிக மிக அவசியமானது என்று மனநல மருத்துவர்கள் கூட்டாக அறிக்கை வெளி யிட்டது உங்கள் கவனத்திற்கு வரவே இல்லையா?
  • இவ்வளவு கெடுபுடிகளுடன், இந்தத் தேர்வுகளை நடத்துவதன் மூலம் உங்கள் "கல்வித்தரம்" உயரும் என்று நீங்கள் மெய்யாகவே நினைக்கிறீர்களா?
  • கடந்த மூன்று ஆண்டுகளில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் (2017-95.2% , 2018-94.4% , 2019-93.6%)மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தின் சதவீதம் 94.4% என்றால்,தேர்வுகளே எதற்கு என்று உங்கள் அறிவிற்குத் தோன்றவே இல்லையா? மீதமுள்ள 5.6% சதவீதம் மாணவர்களையும் சேர்த்துத் "தேர்வுகளே இல்லாமல் அனைவரும்  தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதால் என்ன இழப்பு வந்து விடப்போகிறது?"
  • கல்வி வணிகத்திற்கு உதவும் பொருட்டே நீங்கள் அவசர அவசரமாக இந்தப் பணியைச் செய்கிறீர்கள் என்று குற்றம் சுமத்துவது தவறில்லை தானே?
  • மாணவர்களின் உயிர் எங்கள் உயிரை விட விலைமதிப்பற்றது என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் என்று படித்தேன்.அதை நீங்கள் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை இங்கு எவருக்கும் இல்லை.
  • நீங்கள் மீறித் தேர்வை நடத்தினால் மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,கல்வியாளர்கள் என அனைத்துப் பிரிவினர்களின் கோரிக்கைகளையும் நிராகரித்து இந்த முடிவை நீங்கள் மேற்கொள்கிறீர்கள்.
  • இதன் மூலம் அனைத்துப் பிரிவினருக்கும் மிகுந்த மன உளைச்சலையும்,நடைமுறைத் துன்பங்களையும் நீங்கள் பரிசாகத் தருகிறீர்கள்.
  • இதன் காரணமான இந்த ஆண்டு    தேர்ச்சி விகிதம் குறைந்து பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கூடங்களிலிருந்து வெளியே தூக்கி எறியப்படும் பாவத்திற்கும் நீங்கள் காரணமாக  இருக்கப்போகிறீர்கள்.

நீங்கள் 
தேர்வுகளை நடத்துங்கள்.
குழந்தைகளின் கழுத்தில் உங்கள் முழங்காலை வைக்கிறீர்கள். 
எங்களால் சுவாசிக்க முடியவில்லை என்ற, ஏழைக்குழந்தைகள், கற்றல் திறனில் மிதமான ,கற்றல் திறனில் பின்தங்கிய    குழந்தைகளின் குரல் எங்களுக்குக் கேட்கிறது.

ஏறி மிதிப்பவர்களுக்கு, எப்போதும் ஏழைகளின் குரல் கேட்பதே இல்லை.


இத்தனைக்குப் பிறகும் நீங்களும், உங்கள் துறையில் உங்களைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அதிகாரிகளும், இறுதி அனுமதி வழங்கும் முதலமைச்சரும் தேர்வு நடத்துவது என்று முடிவெடுத்தால் .... 

ஏனோ..

ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதருக்கென்று இருந்த பள்ளியறையை மூடிய      குடும்பங்களுக்குத் தலைமுறை தலைமுறையாக குழந்தைகள் இல்லை என்கிற ஒரு கதை இப்போது நினைவுக்கு வருகிறது.  

                ****

நேற்றிரவு எழுதிய இந்தக் கடிதத்தைக் கிழித்துப்போட மனமில்லை.இது உங்கள் செயல்பாட்டிற்கு ஒரு சாட்சியமாக இருந்துவிட்டுப் போகட்டும்.

இன்று காலையில் இதைப் பதிவேற்றம் செய்யும் தருணத்தில்,10 மற்றும் 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக,தொலைக்காட்சிகளில் தமிழக அரசின் அறிவிப்பைக் காண நேர்ந்தது.

இலட்சக்கணக்கான ஏழைக்குழந்தைகளின் சார்பில் தமிழக அரசுக்கும், அதன் முதலமைச்சருக்கும் மனமார்ந்த நன்றி.




Friday, June 5, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 18

முந்தைய மதுரைக் கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட  மாரியம்மன் தெப்பக்குளம்.

தோழர் N S.  அவர்களைச் சில வாரங்களிலேயே, அதே அலுவலகத்தில்  மீண்டும் மீண்டும் சந்திக்க நேர்ந்தது.


அவசரநிலையைத் தொடர்ந்து வந்த 1977 பாராளுமன்றத் தேர்தலில் இந்திராவும் எம் ஜி ஆரும் CPI உம் கூட்டணி . கருணாநிதியோ  ஜனதா கட்சி மற்றும் CPIM உடன் எதிர் அணியில் நின்றார். தமிழகத்தில் 39 இல் 34 இடங்களில் எம் ஜி ஆர் கூட்டணி  வென்றது .

ஆனால் மத்தியில் ஜனதா கட்சி  ஆட்சி.  மூன்றே ஆண்டுகளில் நிலைமை மாறியது. ஜனதா ஆட்சி கவிழ்ந்தது. எம் ஜி ஆருக்கும் , இந்திரகாந்திக்கும் இருந்த நல்லுறவும்
முறிந்தது .

இப்போது கருணாநிதியும் இந்திராகாந்தியும் ஓரணியில் நின்றார்கள் .  எம் ஜி ஆர் இடதுசாரிகளோடு எதிர் அணியில் நின்றார் .

1980 பாராளுமன்றத் தேர்தலில் 37 இடங்களை கருணாநிதியும் , காங்கிரசும்  வென்றனர் . எம் ஜி ஆர் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்று துவண்டு போனார் . 

1980 நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற இந்திராகாந்தி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த அ.இ அ தி மு க அரசைக் கலைத்தார் . அ இ அ தி மு க அரசைக் கலைக்க வேண்டும் என்று கருணாநிதியும் கோரிக்கை வைத்தார் . மூன்றே ஆண்டுகளில் அ இ அ தி மு க அரசு கலைக்கப்பட்டது .


நாடாளுமன்றத் தேர்தல் நடந்த சில மாதங்களிலேயே சட்டமன்றத் தேர்தல் வந்தது. கருணாநிதியும் , இந்திரா காந்தியும் ஓரணியில் . எம்  ஜி ஆர் இடதுசாரிகளுடன் இணைத்து கொண்டார். நாடளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்ற உற்சாகம் கருணாநிதிக்கும் காங்கிரசுக்கும் இருந்தது . அதைவிட மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்திருந்தது காங்கிரஸ் . இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆகியிருந்தார்.


1977சட்டமன்றத் தேர்தலின் போது, அருப்புக்கோட்டை தொகுதியில் நின்று வென்ற எம்  ஜி ஆர்,   1980 சட்டமன்றத் தேர்தலில் CPIM  ஆலோசனையை ஏற்று மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட்டார். மதுரை கிழக்குத் தொகுதியில் தோழர் சங்கரய்யா CPIM இன் வேட்பாளர் . மதுரை மத்திய தொகுதியில் தி மு க காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்துக் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பழ நெடுமாறன் சுயேச்சை வேட்பாளர் . அவரை ஆதரித்து அந்தத் தொகுதியில் தனது கட்சியின் சார்பில் யாரையும் நிறுத்தவில்லை எம் ஜி ஆர் . 


மொத்தத்தில் மதுரை மிகுந்த உஷ்ணமான களமாக மாறி இருந்தது . இரண்டு தேர்தல் பணிகளின் போதும் தோழர் NS உள்ளிட்ட எல்லாத் தலைவர்களையும் அன்றாடம் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது .


மதுரை கிழக்குத் தொகுதியில் ,64 ஆவது வார்டில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குத் தரப்பட்டது . அங்கிருந்த இ எம் எஸ் படிப்பகம் தான் தங்குமிடம் . அந்த வார்டில் என்னோடு இணைந்து பணியாற்ற நாட்டரசன்கோட்டையில் இருந்து தோழர் இளஞ்செழியன் வந்திருந்தார் . அவர் ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வந்தவர் . 


என் உயரம் . நல்ல தமிழ் அறிவு . நல்ல தோழமைப்பண்பு . நல்ல நகைச்சுவை உணர்வு . சேர்ந்து பணியாற்றியது மறக்கவொண்ணா இன்பம் . அங்கு எங்களைப் பார்க்கவரும் பலரில் சௌபாவும் , எப்போதும் இருந்தான் . 


அவ்வப்போது எனது அன்பிற்குரிய ஆசான் , அருமைத்தலைவர் எஸ் ஏ பி யும் அங்கு வருவார் . நான் அவருக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமாகி  நட்பும் தோழமையும் வளர்ந்து பூத்துக் கொண்டிருந்த நாட்கள் அவை .


அவர் இளஞ்செழியனின் நலம் காணவே அங்கு வருவார் என்பதை நான் அறிவேன் . அது குறித்து இளஞ்செழியனுக்கு மிகுந்த பெருமிதம் இருந்தது . இரவெல்லாம் இருவரும் பேசிக்கொண்டே இருப்போம் . பல இரவுகளில் சேகர் , தங்கமாரி , சௌபா என யாராவது சேர்ந்து கொள்ளுவார்கள் . பெரும்பாலான சமயங்களில் எல்லோரும் இருப்பார்கள். என்னைத் தேடிவரும் என் நண்பர்கள் தோழர்கள் குறித்து இளஞ்செழியன் எப்போதும் எந்தப் புகாரும் சொன்னதில்லை . மாறாக அகமிக மகிழ்ந்து அரவணைத்துக் கொண்டார் . நாங்கள் எல்லோருமே எந்த வருமானமும் இல்லாத , அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லாதவர்கள்.எனது நண்பர்கள் என்னைப் பார்க்க வருவது குறித்துச் சொல்லப்பட்ட புகார்களை இளஞ்செழியன்  இடது கையால் தள்ளினார் . 


கடுமையாகத் தேர்தல் பணி செய்தோம் . வீடு வீடாகப் போய் வாக்குக் கேட்பது , வீதிகளில் சின்னம் வரைவது , சுவர் விளம்பரங்கள் எழுதுவதை உறுதி செய்வது , ஓவியருக்குத் தேவையான உதவிகள் செய்வது , வீதி வீதியாகப் போய் நிதி வசூல் செய்து அதைப் பொறுப்பாளரிடம் ஒப்படைப்பது ,  போஸ்டர்கள் ஒட்டுவது, அதற்கான பசை காய்ச்சுவது ,வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது , வீடுகளுக்குத் தருவதற்கான டோர் ஸ்லிப் எழுதுவது , அதை வீடுகளில் கொண்டுபோய்த் தருவது ,    அன்றாடப் பணிகள் குறித்து கட்சி அலுவலகத்திற்குத் தகவலும் அறிக்கையும் தருவது , மாற்றுக் கட்சியின் பணிகளை கண்காணிப்பது , மதிப்பிடுவது , அது பற்றியும் கட்சிக்குத் தகவல் தருவது , வார்டுக்குள் நடக்கும் மாற்றுக்கட்சிப் பொதுக்கூட்டங்களுக்குப் போவது , அவர்கள் பேசுவதைக் கட்சிக்குச் சொல்லுவது ,தொகுதியின் மற்றப் பகுதிகளில் நடக்கும் சிறந்த பணிகளைக் கண்டு நமது வார்டிலும் அதை அமலாக்குவது , பிரச்சாரத்திற்குத் தலைவர்கள் வந்தால் அவர்களுடன் இணைந்து செல்வது , அவ்வப்போது ஒலிபெருக்கி இல்லாமல் தெருமுனைக் கூட்டங்களில்  உரையாற்றுவது , அவ்வப்போது அழைக்கப்படும் பொதுக்கூட்டங்களிலும் உரையாற்றுவது ... 

 எனப் பலப்பல பணிகளைச் செய்துகொண்டே இருந்தோம் . கடின உழைப்பின் அருஞ்சுவையை அருந்திக்கொண்டே இருந்த நாட்கள் அவை. 

ஆனால் கூட்டணியில் இருந்த அ இ அ தி மு கவின் இரண்டாம் கட்ட , மூன்றாம் கட்டத் தலைவர்களும் , தொண்டர்களும் எங்களோடு பணியாற்றவில்லை . அவர்கள் எல்லோரும் தங்கள் தலைவர் போட்டியிட்ட மேற்குத் தொகுதிக்குக் குடிபெயர்ந்து போய் விட்டார்கள் . நாங்கள் கட்சியில் புகார் சொல்லுவதும் , கட்சி அ இ அ தி மு க தலைமைக்குப் புகார் சொல்லுவதும் , உடனே இரண்டு நாட்கள் எங்கள் கண்களில் படத் திரிவதும் , பிறகு காணாமல் போவதும் என்று நாடகம் நடந்துகொண்டே இருந்தது .


இரண்டு கட்ட வாக்குப்பதிவு என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது . இப்போது போல பிரச்சாரத்திற்கு நேரக் கட்டுப்பாடு ஏதும் அப்போதில்லை . கலைஞர் இரவு ஒரு மணிக்கும் , எம் ஜி ஆர் அதிகாலை மூன்று மணிக்கும் கூட வாக்குச் சேகரிக்க வருவார்கள் . ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து நிற்பார்கள் . முதல் கட்ட வாக்குப்பதிவு முடிந்தது .


இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் வந்தது மதுரை . வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் இருந்தபோது , தோழர் சங்கரய்யாவை ஆதரித்து , மதுரை கிழக்குத் தொகுதியில் , ஒரு பொதுக்கூட்டத்தில் எம் ஜி ஆர் பேசுகிறார் என்று சொல்லப்பட்டது . 


மதுரை கீழவாசலுக்கு அருகில் இருந்த மைனா தெப்பக்குளம் என்கிற இடத்தில் அவர் பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டது .

அவரது வருகை மற்றும் பொதுக்கூட்டம் பற்றி விரிவாக , வீடு வீடாக விளம்பரம் செய்யுமாறு பணிக்கப்பட்டோம் . எல்லா வகையான விளம்பரங்களும் செய்தோம் . 

கூட்ட நாளன்று மாலையில் எம் ஜி ஆரின் கூட்டத்திற்குப் புறப்பட்டோம் . சௌபாவும் , தங்கமாரியும் உடன் வந்தார்கள் . கூட்டம் அப்போதே அலைமோத ஆரம்பித்து இருந்தது . மேடைக்கு அருகில் போவது கடினமாக இருந்தது . திகைத்துக் கொண்டிருந்தபோது தோழர் MM எங்களை அழைத்தார் . எங்களை மேடைக்கு முன்புறம் முதல் வரிசையில் தரையில் உட்கார வைத்தார் . " அவர் என்ன பேசுறார்னு விரிவா குறிப்பு எழுதி வச்சுக்கங்க... அத நாளைக்குத் தீக்கதிர்ல போடலாம் " என்று காதில் முணுமுணுத்தார், தோழர் MM . வரவு செலவு எழுதிவைத்த ஒரு காகிதத்தின் பின்புறத்தில் MGR பேசுவதைக் குறிப்பெடுக்கத் தயாரானேன்.நான் என்னை ஒரு பத்திரிகையாளன் ஆக முதன்முறை உணர்ந்தேன் . 


அதுவரை இருந்த கண்கள் அல்ல எனது கண்கள் ... எனது கண்கள்  காதுகள் என எல்லா அவயங்களும் புதிதாக வேறொன்றாக மாறி இருந்ததை உணர்ந்தேன் . ஒரு பத்திரிகையாளனாக ஆகப் போகிறோம் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தந்தது . அந்த விருப்பம் கல்லூரி நாட்களில் நண்பர்களோடு நடத்திய சிறு பத்திரிகைகளின் தொடர்ச்சி தான் . 


கூட்ட மேடை , அதன் உயரம் , மேடையில் இருந்தவர்கள் , பிரமுகர்கள் , ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கூட்டம் எல்லாவற்றையும் கண்கள் அளக்க ஆரம்பித்தது . 


மாலை ஏழு மணிக்குக் கூட்டம் துவங்கும் என்று சொல்லி இருந்தார்கள் . ஆறு மணிக்கே கூட்டம் அலைமோதியது . மதுரை மேற்குத் தொகுதியில் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு , தான் தங்கி இருக்கும் பாண்டியன் ஹோட்டலுக்கு MGR போய்க்கொண்டு இருக்கிறார் என்று தகவல் வந்தபோது மணி எட்டரை . கூட்டம் ஏறிக்கொண்டே இருந்தது . மேற்கே கீழவாசலைத் தாண்டியும் , கிழக்கே அரசமரம் வரைக்கும் கூட்டம் . கண்ணுக்கு எட்டியவரை கூட்டம் என்பது அதுதான் . 


பாண்டியன் ஹோட்டலில் இருந்து அவரை அழைத்துவர CPMதலைவர்கள் போய்க்கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னபோது மணி ஒன்பதரை .


பத்து மணி தாண்டிய சில நிமிடங்களில், அந்த இடம் மொத்தமும் பரபரப்பானது . கார்கள் வருவதற்காக , ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்த ஒரு பாதையில் கீழவாசலில் இருந்து, பொதுக்கூட்ட மேடை நோக்கி இரண்டு மூன்று கார்கள்   விரைந்து வந்தன.


முதல் காரில் இருந்து தோழர் NS வெளியில் வந்த அதே கணத்தில் இரண்டாவது காரில் இருந்து எம் ஜி ஆர் வெளிப்பட்டார் . தாமதம் ஏதுமின்றி மேடையில் ஏறுவதற்காகப்  போடப்பட்டிருந்த படிகளில் மின்னலைப் போலத் தாவி ஏறினார் . மேடையில் இருந்த விளக்கு ஒளியில் மேலும் மின்னி மின்னி ஒளிர்ந்தார் . மேடையின் முகப்பு வரைவந்து , நான்கு திசையும் நடந்து திரும்பி கரங்களைக் கூப்பி , கரங்களை அசைத்து , புன்னகைத்து ஒரு பெரும் உற்சாக அலையைத் தன் செயல்களால் உற்பத்தி செய்துகொண்டே இருந்தார் . கூட்டம் வெறி கொண்டு கூவிக் கத்தி வாழ்த்தி கரை புரண்டது .


சட்டென அனைத்தையும் நிறுத்திக்கொண்டு தனக்கான  நாற்காலியில் அமர்ந்து கொண்டார் . கூட்டத்தைக் கைகளால் அமைதிப் படுத்தினார் . அவரது ஒவ்வொரு அசைவுக்கும் கூட்டம் ஆர்ப்பரித்தது . கைகளை மீண்டும் சற்று அதிகமாக உயர்த்திக் கூட்டத்தை அமைதி காக்கச் சொன்னார் . கூட்டம் கொஞ்சம் அடங்கியது . NS பக்கமாகத் திரும்பி கூட்டத்தை ஆரம்பிக்கச் சொன்னார். 


சந்தன நிறத்தில் வேஷ்டி , அதே நிறத்தில் முழுக்கைச் சட்டை . வலது மணிக்கட்டில் , சட்டையின் மீது கட்டிய கைக்கடிகாரம் . வலது கரத்தில் சுருட்டி இறுகப் பிடித்த கைக்குட்டை . வேஷ்டியைத் தழையத் தழையக் கட்டி இருந்தார் . நல்ல புதிய நன்கு பாலிஷ் செய்த கருப்பு கட் ஷூ .எங்கிருந்து பார்த்தாலும் , அவரது கண்கள் தெரியாத அடர்ந்த கறுப்புக் கண்ணாடி .



யாரோ வரவேற்றுப்பேசிக்  கொண்டிருந்தார்கள் .சட்டென 
தனது இருக்கையில் இருந்து சற்று முன்னே வந்து குனித்து பார்த்தார் . மீண்டும் சற்று பின்னே சென்று , உட்கார்ந்தபடியே தனது இரண்டு கைகளாலும் , தனது முழங்காலுக்கு அருகே  , தனது வேஷ்டியை தூக்கிப் பிடித்துக்கொண்டு , தனது வலது காலை எடுத்து இடது காலின் மீது போட்டுக் கொண்டார். கசங்காமல் வேஷ்டியை மெதுவாகக் கீழே விட்டார். அதைப் பார்த்துக் கூட்டம் ஆர்ப்பரித்தது .இடது கையின் மீது வலது கரத்தை வைத்துக் கொண்டார் . தோழர் NS பேசுவதற்குச் சில நிமிடங்கள் முன்பாக , நான் மிகவும் பதறிப் போன , என்னால் பார்க்கச் சகிக்காத ஒரு செயல் எனக்குச் சற்றுப் பின்னே நடந்தது .

ஆனால் MGR எந்தப் பதற்றமும் இல்லாமல் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தார் ...


என்ன அது ...


அப்புறம் சொல்லுகிறேன்... 


- பாரதி கிருஷ்ணகுமார். 

Friday, May 29, 2020

மானமிகு கல்வி அமைச்சருக்குத் திறந்த கடிதம்-01

Courtesy: Thnathi TV

மாண்புமிகு மற்றும் மானமிகு கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு...
அன்பும் வணக்கமும்.

நேற்றைய தினம் உங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் ஓய்வுபெறும் நிகழ்வொன்றில், நீங்கள் கண்கலங்கிய காட்சிகளை செய்திகளில் பார்க்க நேர்ந்தது.உங்கள் இளகிய மனதை உணர்ந்து என் கண்களும் கலங்கியதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.

பிறர் துன்பம் காணப் பொறுக்காத,வெடித்துக் கண்ணீர் சிந்துகிற மனம் தான் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இன்றைக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது.அது உங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.
அறுபது வயதை நெருங்கும் அதிகாரிகளைப் பிரிவதற்கு மனம் இல்லாமல் நீங்கள் அழுதீர்கள் என்றால்,அவர்கள் உங்களுக்காக உங்களோடு உங்களுக்காகவே எப்படியெல்லாம் பணியாற்றி இருப்பார்கள் என்பதை என்னால் உணரமுடிகிறது.

வயது ஏறிய ஆட்களுக்காக வருந்திக் கலங்கும் நீங்கள்,வயது குறைந்த குழந்தைகள் விஷயத்திலும் கருணையோடு இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஜூன் 1ஆம் தேதி முதல் நடைபெறுமென்று முதலில் அறிவித்தீர்கள்.மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்போது ஜூன் 1ஆம் தேதி தேர்வுகள் எப்படி சாத்தியம் என்று சிந்திக்காமலேயே அறிவித்தீர்கள்.அக்கறையுள்ள கல்வியாளர்கள் ஆசிரியர் சங்கங்கள் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் நீங்கள் பொருட்படுத்தவில்லை.ஆனால்,ஜூன் 1ஆம் தேதி தேர்வுகளை நடத்த முடியாதென்று உங்களுக்கும் உங்கள் துறையில் உள்ள அறிவிற்சிறந்த அதிகாரிகளுக்கும் தெரிந்துவிட்டதால்,இப்போது தேர்வுகளை ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிரீர்கள்.
இப்போதும் மற்றவர்கள் கேட்டுக்கொண்டதற்காக நீங்கள் தேதியை மாற்றவில்லை.நீங்களும் உங்கள் துறை சார்ந்த அதிகாரிகளும் கூடி எடுத்த அறிவார்ந்த முடிவு இது.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை ஜூன் 15ஆம் தேதியே நடத்தியாக வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள்? என்ன அவசரம்?எதற்கு அவசரம்? உங்கள் உத்தரவை நீங்கள் எப்படி நியாப்படுத்துகிறீர்கள்? அல்லது நீங்கள் முன்வைக்கும் நியாமான காரணங்கள் யாவை? உங்கள் துறையின் இந்த அறிவார்ந்த முடிவின் அறம் சார்ந்த பின்னணி எது?

நீங்கள் உத்தரவிட்டபடி பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி நடைபெறாவிட்டால்...
எந்தக் கடல் கரையேறி வந்துவிடும்?
எந்த மலை தகர்ந்து தரைமட்டமாகிவிடும்?
எந்தச் சாப்பாட்டில் மண் விழுந்துவிடும்?
யார் வருமானம் குறைந்துவிடும்?
இந்த நான்கு கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு விடையளித்து நீங்கள் தேர்ச்சி பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டுமெனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஊரடங்கு முடிந்து பொதுப் போக்குவரத்து செயல்படத்துவங்கி கொரோனா அச்சம் ஓரளவேனும் விலகி,பள்ளிகள் திறந்து இயங்க ஆரம்பித்து,குறைந்தது 15 நாட்கள் குழந்தைகள் ஆசிரியர்களின் அரவணைப்பில் இருந்த பிறகே பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெற வேண்டும்(ஜூன் 15ஆம் தேதி கூட அல்ல) என்பதற்கான நியாங்களை,அடுத்து உங்களுக்கு எழுதும் கடிதத்தில் விரிவாக எழுதுகிறேன்.

அதற்கு முன்னதாகவே, என் முந்தைய கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு விடையளிக்க வேண்டுமெனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


தங்கள்
உண்மையிலும் உண்மையுள்ள,
பாரதி கிருஷ்ணகுமார். 

பின் குறிப்பு:
இக்கடிதத்தைப் படிக்கும் பொதுமக்களுக்கு...
1.10ஆம் வகுப்பில் படிக்கும் குழந்தைகள் எதுவும் எனக்கில்லை.
2.10ஆம் வகுப்பில் படிக்கும் குழந்தைகளை என் குழந்தைகளாகக் கருதுகிறேன்.     
3.பெற்றால் தான் பிள்ளையா? என்றொரு திரைப்படத்தில் M.G.R. நடித்திருப்பதை கல்வி அமைச்சருக்கும் மற்றவர்களுக்கும் நினைவூட்டுகிறேன்.
4.எவனுக்கோ வந்த துன்பம் தானே என்று சும்மா இருந்தால்,நமக்குத் துன்பம் வரும்போது தோள் கொடுக்க யாரும் இருக்கமாட்டார்கள்.
5.ஒய்வு பெறும் அதிகாரிகளை நினைத்துக் கண்ணீர் வடித்த கல்வி அமைச்சரைப் பார்த்தாவது நாமெல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டும்.
6.மற்றதெல்லாம் அடுத்த கடிதத்தில்.

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 17

என்.சங்கரய்யா @ N.S 

அம்மா இறந்த இருபத்தி இரண்டாவது நாள் என் வாழ்வின் மிக முக்கியமான ஒரு நிகழ்வு நடந்தது.   

 பின்னாளில் நான் பணிக்குச்சேர்ந்த பாண்டியன் கிராமவங்கியில் , பணியில் சேர்வதற்கான நேர்முகத்தேர்வு சாத்தூரில் நடந்தது .


அதே வேலைக்கான எழுத்துத் தேர்வு, ஓராண்டுக்கு முன்பே  மதுரையில் நடந்து முடிந்திருந்தது. அதில் நான் கலந்துகொண்டதே அம்மாவின் சந்தோசத்திற்காக தான் . எனவே , அம்மாவின் சந்தோசத்தை நான் நிறைவேற்ற வேண்டும் என்றும் , அதனால் நேர்முகத்தேர்வுக்குப் போகவேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டேன். அதனால் போனேன் . ஒரு வருடம் எந்தத் தகவலும் இல்லை. நானும் அதை மறந்து போனேன். 



அம்மாவின் மரணத்திற்கு முன்பாகவே நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றத் தொடங்கி இருந்தேன் . அப்போது கட்சியின் நகரச் செயலாளர் ஆகத் தோழர் எம் . முனியாண்டி இருந்தார். M.M. என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட , அருமையான தோழர் . கட்சியின் இளைஞர் பிரிவு அப்போது சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி SYF என்று அழைக்கப்பட்டது . அதுவே இன்றைய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் DYFI. கட்சியில் சேருவது என்பது நானே எடுத்த முடிவு. எனவே,நானாகவே மதுரையில்  மண்டையன் ஆசாரி தெருவில் இருந்த கட்சி அலுவலகத்திற்குப் போனேன். 


நான் நேரே கட்சி அலுவலகம் போய் தோழர் M.M. அவர்களைச் சந்திப்பது என்கிற முடிவை சௌபாவும் , நண்பர் தங்கமாரியும் மட்டுமே அறிந்து இருந்தார்கள் . சௌபாவுக்குத் தோழர் M.M. உடன் நல்ல நெருக்கமும் தோழமையும் இருந்தது . வேறு யார் பரிந்துரையும் இன்றி நீங்கள் நேரே அவரைப் பார்ப்பது நல்ல பயன் தரும் என்று இருவருமே எனக்குச் சொன்னார்கள். அதன்படியே நான் அவரைச் சந்தித்தேன். அது சிறந்த பலனைத் தந்தது .


அதற்குப்பிறகு நானும் சௌபாவும் இணைந்து நிறைய நிகழ்ச்சிகளில் பேசிக்கொண்டே இருந்தோம் . சந்தித்துக் கொண்டே இருந்தோம் . 


அம்மாவின் இழப்பில் இருந்து என்னை மீட்டு எடுக்க சௌபாவும் , குணசேகரும் ஆற்றிய பங்களிப்பை என் வாழ்நாளின் இறுதிவரை நான் மறக்கமாட்டேன் . இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் என்னோடு இருந்தார்கள் . நான் துன்பக்கேணியில் இருந்து கரையேற இருவரும் தங்கள் கரங்களைத் தந்துகொண்டே இருந்தார்கள். ஆனால் இருவரின் இறுதிச் சடங்கிலும் பங்கேற்க இயலாத , ஒரு சபிக்கப்பட்ட வாழ்க்கைச் சூழல்  எனக்கு அமைந்தது. 


எங்கள் சந்திப்பு மையமாகக் கட்சி அலுவலகம் இருந்தது . என்னைச் சந்திக்க வேண்டியே குணசேகர் கட்சி அலுவலகம் வந்து , கட்சிக்காரன் ஆனான் . சௌபா ஏற்கெனவே கட்சியில் இருந்தான். 


கட்சி எங்களை அனுப்பிவைத்த பல நிகழ்ச்சிகளில்,அரசியல் வகுப்புகளில் சில விசயங்களைத் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டே இருக்கும் நிலை வந்தது . அது எனக்கே சோர்வும் அலுப்பும் தந்தது.  புதிய செய்திகளைப் பேசவேண்டும் என்கிற விருப்பம் நிறையப் படிக்க வைத்தது . என்றபோதும் , சில செய்திகளைப் பேசித்தான் ஆக வேண்டும் என்கிற சூழல் இருந்துகொண்டே இருந்தது . சில தோழர்கள், பேசுனதையே எதுக்குப் பேசுறீங்க என்று கேட்டு நிம்மதியை அழித்தார்கள் .  


எத்தனை விதமான களப்பணிகளைச் செய்தபோதும்,பிரச்சாரம் என்பது மிகமிக முக்கியமான களப்பணிகளில் ஒன்று  என்கிற நுண்ணறிவு எனக்கிருந்தது.அதைப் பலரது வாக்குமூலங்களைப் படித்து அறிந்து இருந்தேன்.மேடையில் பேசுவது தவிர, அனைத்துவகையான களப் பணிகளையும் எவ்வித மனத்தடையும் இன்றிச் செய்யும் பண்பும் எனக்கு இயல்பிலேயே வாய்த்து இருந்தது.இதுகுறித்து எனக்குப் பெருமிதங்கள் எப்போதும் உண்டு. 


ஆனபோதும், மனித மனங்களை வெல்லும் மாயக்கலையான மேடைக்கலை குறித்து ஆழ்ந்த அக்கறையும் கவனமும் செலுத்தினேன். எவ்வளவு கூட்டங்கள் பேசினேனோ , அவ்வளவு கூட்டங்கள் கேட்டேன். கலை இலக்கியம் அரசியல் சார்ந்து, பேதமில்லாமல் எல்லா ஆளுமைகளின் உரைகளையும் கேட்டேன்.எஞ்சிய நேரமெல்லாம் படித்தேன்.இந்தக் காலம் முழுவதிலும் துணையாக, நட்பாக , உறவாக வந்து கொண்டே இருந்தான் சௌபா. ஆனால் இந்தக் கூறியது கூறல் பற்றி மட்டும் குழப்பமே நீடித்தது. கூறியது கூறல் குற்றம் என்றார்கள் நான் அறிந்த தமிழ் ஆசிரியர்கள்.


ஒருநாள் மண்டையன் ஆசாரி தெருவில் இருந்த கட்சி அலுவலகத்தில் நானும் சௌபாவும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். பிற்பகல் நான்கு மணி இருக்கும். தோழர். சங்கரய்யா உள்ளே வந்தார். வந்ததும் எங்கள் இருவரோடும் உரையாடத் தொடங்கினார் . ஏதோ , பாதியில் நிறுத்திவிட்டுப் போன உரையாடலைத் தொடர்வது போலத் தொடர்ந்தார் . " நெறைய கூட்டங்கள் , வகுப்புகளுக்கு எல்லாம் போறீங்கன்னு கேள்விப்பட்டேன். நல்லது. நெறையப் படிக்கணும். படிக்கிறத நிறுத்தக்கூடாது"என்று சொல்லிக்கொண்டே போனார். எப்போதும் பேச ஆரம்பித்ததும் குரலை உச்ச ஸ்தாயியில் துவங்கி முடிக்கிறவரை அதே உச்ச ஸ்தாயிலேயே பேசுவது அவரது வழக்கம் . தான் பேசும் எல்லாச் சொற்களுக்கும் சமமான மதிப்புத் தருவது போன்ற பேச்சு அது.


நான் மெதுவாகக் கேட்டேன்," பேசுற விசயத்தையே பேசுறோம்னு தோழர்கள் சொல்லுறாங்க .. அத எப்பிடி தவிர்க்கிறது?" 


N.S.என்று எல்லோரும் இன்றும் மதிப்புடன் அழைக்கும் தோழர் சங்கரய்யா, தான் அமர்ந்த நாற்காலியில் கொஞ்சம் தன்னை இடம் மாற்றி அமர்த்திக் கொண்டார். தலையை சற்று முன்புறமாகச் சாய்த்துக்கொண்டு கண்களுக்குள் பார்த்துப் பேசத் துவங்கினார் .


"நிறையப் படிச்சா , நிறையப் புது விசயங்களைப் பேசிக்கிட்டே இருக்கலாம்.அதுக்காக எல்லாமே புதுசாப் பேச முடியுமா? ஏற்கெனவே இருக்குற சமூகப் பிரச்சனைகளை எப்பிடிப் பேசாம இருக்குறது?தீர்க்கப்படாத பிரச்சனைகளைப் பேசாம இருக்க முடியுமா? அதப் பழைய விஷயம்னு பேசாமவிட்டா என்ன ஆகும் ?அத எப்பிடி தீக்குறது ? அது தீர்ற வரைக்கும் அதப்பத்திப் பேசணுமா இல்லியா? என்ன கதையா சொல்லுறோம்?நேத்து சொன்ன கதைய இன்னைக்குச் சொல்லக்கூடாதுன்னு சொல்லுறதுக்கு ? எது புதுசு ? எது பழசு ? யாரு தீர்மானிக்குறது?


கேள்விகளாகப் பொரிந்தார் N.S.

ஒவ்வொரு கேள்வியும், ஒரு விடையாக எனக்குப் பாதை திறந்து கொண்டே இருந்தது.

" இல்ல... நம்ம தோழர்கள் சில பேரு"... என்று நான் சொன்னதும் , தனது விரிந்த கையை உயர்த்தி என்னை நிறுத்தச் சொன்னார். ஒரு இளம் புன்னகையுடன் தொடர்ந்தார். "நம்ம தோழர்கள் ஆர்வத்துல , எல்லாக் கூட்டத்துக்கும் வந்துருவாங்க...அவங்க சொல்லுறதப் பொருட்படுத்த வேண்டியதில்ல ..ஏன்னா  பொதுக்கூட்டம் மக்களுக்கானது.. நம்ம தோழர்களுக்கு மட்டுமில்ல.. அரசியல் வகுப்பு எடுக்கும்போது வேணா அவங்க சொல்லுறத நினைவுல வச்சுக்கலாம்... அப்பக் கூட சொல்ல வேண்டிய  விசயங்களை திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருக்கணும் . சோர்வில்லாமச் சொல்லணும் . புதுசாச் சொல்லுறமாதிரி சொல்லணும் . ஒரு பிரச்சனைய அது தீர்ற வரைக்கும் பேசணும். உயிரோட்டத்தோட பேசணும். வறுமை, பசி , வேலையில்லாத் திண்டாட்டம், இதெல்லாம் பழசுன்னு பேசாம இருப்பமா? ஏகாதிபத்திய எதிர்ப்பு , விவசாயிகள் நெசவாளர்கள் பிரச்சனை , மத ஒற்றுமை, தீண்டாமை,மாதர் முன்னேற்றம் ... இப்பிடி எத்தனை இருக்கு .. இதெல்லாம் பழசுன்னு பேசாம இருக்கலாமா ?


இந்த நாட்டுல சுதந்துரத்துக்கான போராட்டம் இருநூறு வருஷம் நடந்துச்சு... இருநூறு வருஷமும் சுதந்திரம் தான் ... அதைத்தான் பாரதியார் "எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு"ன்னு பாடினார். ஒரே topic  தான்... bore அடிக்குதுன்னு topic  மாத்திக்கல..மாத்தி இருந்தா சுதந்திரம் கெடச்சு இருக்காது" ன்னு சொல்லி நிறுத்திப் புன்னகைத்தார் ."ஒரே ஊர்ல , அடுத்தடுத்து பேசும்போது வேணா கவனமாப் பேசணும் .. சொன்னதையே சொல்லிப் பேரக் கெடுத்துக்கக் கூடாது.. ஒன்னு விசயத்த மாத்தணும் ... இல்ல ஊர  மாத்தணும். ஏற்கெனவே ஒரு ஊர்ல பேசுன விசயத்த இன்னொரு ஊர்ல பேசும்போது கூட அதப் புதுசாப் பேசுற உணர்வோடப் பேசணும் ... சுதந்திரம் வேணுமுன்னு எப்பப் பேசுனாலும்,சோர்வில்லாமத் தான பேசணும்" ...


அவரது இடது கையில் உட்புறமாக வைத்துக்கட்டி இருந்த கடிகாரத்தைப் பார்த்தார் . "வேறென்ன " என்றார். இருவரும் ஒன்றுமில்லை என்பதுபோல எழுந்து நின்றோம். விரைந்து வெளியில் புறப்பட்டுப் போனார். எங்களோடு பேசுவதற்காகவே அவர் வந்துவிட்டுப் போவதாக உணர்ந்தேன். என் மேடைக்கலையின் ஆற்றலை உயர்த்திய பெருமை உணர்ச்சி ஏதும் இன்றி போய்க்கொண்டே இருந்தார் எங்கள் அன்புத் தலைவர் தோழர் N S.                

சில வாரங்களிலேயே, அதே அலுவலகத்தில் அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. 

அப்போது சந்தித்தபோது...


என்ன நடந்தது?


அப்புறம் சொல்லுகிறேன்...



-பாரதி கிருஷ்ணகுமார்.




Thursday, May 28, 2020

யுகங்களைக் கடந்தும் ...


விடைகளற்ற வினாக்களும் 
வினாக்களற்ற விடைகளும்
பொருதி,வீழ்ந்து,
துடிக்குமொரு போர்க்களத்தில்,
புறமுதுகில் குத்துப்பட்டு
மரணித்துக் கிடக்கிறேன் நான்.

களத்தில் எனைத் தேடி வந்து,

புறமுதுகின் காயம் பார்த்து,
புறமுதுகு கொண்டானோ மகனெனக் கருதி,
பருத்துச் சரிந்து,
பழுத்த மாம்பழமெனக் கனிந்த,
எனக்கு அமுதூட்டிய,
உன் மார்பகங்களை,
அவசரப்பட்டு
அறுத்துக்கொண்டு விடாதே அம்மா.

இறந்த பின்னும் உன்னோடு பேசும்

என் சொற்களைக் கேள்.
இது எதிரிகளின் வெற்றியன்று.
கோழைகள் நிகழ்த்திய துரோகம்.
என்னோடிருந்தவனின் ரேகை கத்தியின் பிடியில் காணக் கிடைக்கும் அம்மா..

ஆழமான காயம் முதுகில் கொண்டும்,

வீரனாகத்தான் இறந்திருக்கிறேன்.
வீரனாகவே இருந்திருக்கிறேன்.
இந்தக் களம் வேறு.
காலம் வேறு.
காயங்களும் வேறு.

யுகங்களைக் கடந்தும்

நீ மட்டும் 
எப்போதும் 
அம்மாவாகவே இருக்கிறாய்.

-ப்ரகலாதன்.    

(பாரதி கிருஷ்ணகுமார்)

Monday, May 18, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 15


கலைச்செல்வி: படித்துறை
(திருப்புவனம் அல்ல) 

அஸ்தியைக் கரைத்தோம்.மண் குடம் கொஞ்ச தூரம் நீரில் அசைந்தோடி,தண்ணீர் குடித்துத் தண்ணீருக்குள் மூழ்கியது.

நானும் சௌபாவும் குணசேகரும் ஒன்றாக இருந்தோம்  . கொஞ்சம் தயங்கித் தாமதித்துக் கரையேறினோம்  . அப்பாவும் நெருங்கிய உறவினர்களும் கொஞ்சம் முன்னால் நடக்க, தலைகள் மறைந்ததும் எங்களைப் படித்துறைப் படிக்கட்டுகளில் உட்காரச் சொன்னான் குணசேகர். கொஞ்சம் நடுத்தர வயதில் இருந்த அந்தப் பிராமணரின் கைகளைப் பிடித்து "நீரும் உக்காரும் சேர்ந்து போகலாம் "என்று அவரையும் உட்காரவைத்தான் . அவர் அச்சத்துடன் அமைதியாக அமர்ந்து கொண்டார் .அதுபோல எதையாவது செய்துகொண்டே இருப்பது அவனுக்குப் பழக்கம்.  நீங்கள் கற்பனை கூடச் செய்துவிட முடியாத ஒன்றை , இயல்பாகச் செய்வது அவனது பண்புகளில் ஒன்று. எதுக்கு? என்றேன் நான் . அந்த ஆளு இங்க இருந்தா நம்மளத் தேட மாட்டாங்க என்று அவருக்கும் கேட்கிற சத்தத்தில் சொன்னான் . சிகரெட் பாக்கெட்டைத் திறந்து,  எனக்கும் அவனுக்கும் சேர்த்து இரண்டு சிகரெட்டுகளை எடுத்து , இரண்டையும் தன் வாயில் வைத்துப் பற்ற வைத்தான் . சௌபா இந்தக் காட்சியை சபையில் பலமுறை  பார்த்திருக்கிறான். அந்த பிராமணர் திகைத்துப் போனார் . அக்கம்பக்கம் இருந்த ஒன்றிரண்டு பேர்களும் திகைத்து, மெல்லிதாகச் சிரித்துக்கொண்டே போனார்கள் . பற்ற வைத்ததும் ஒன்றை எடுத்து எனக்குத் தந்தான் . நாங்கள் இருவரும் புகைக்க ஆரம்பித்தோம் . ஒரு நொடி கூட இடைவெளி இல்லாமல் அந்தப் பிராமணரிடத்திலும் , சிகரெட் பாக்கெட்டை நீட்டினான் . அவர் இரண்டு கரங்களையும் குவித்துத் தலைதாழ்த்திக் குணசேகரைக் கும்பிட்டார் . சேகர் அதேபோல் திரும்பக் கும்பிட்டான் . அதில் கேலியோ , பகடியோ எதுவும் இல்லை . நான் ஆழ்ந்து புகைபிடிக்கத் தொடங்கி இருந்தேன். ஆறு கலங்கலாக ஓடிக்கொண்டிருந்தது . என் மனம் போலவே ...

" நான் சொல்றேன்னு தப்ப நெனச்சுக்காதீங்கோ ... உங்க தாயாருக்கு நல்ல கொடுப்பினை இருக்கு ... புண்ணியாத்மா " என்றார் அந்தப் பிராமணர். 

அம்மா மாபெரும் புண்ணியாத்மா என்பதை நானறிவேன் . யார் எப்போது வந்தாலும் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வயிறார உணவு படைத்தவள் அம்மா . சமைப்பதில் மட்டுமல்ல . பக்கத்தில் நின்று பார்த்துப்பார்த்துப் பரிமாறுவதில் அம்மா நுட்பமான மனுஷி . குறைவாகக் கிள்ளிக் கிள்ளி  வைக்காமல், ரொம்பத் தள்ளித் தள்ளி முகத்தில் அடித்து விடாமல் , பரிமாறுகிற கலை அவள் கைகள் மட்டுமே அறிந்த அனுபவ நுட்பம் . நேற்றுக் கூட அனுப்பானடியில் இருந்து கீழத்தெரு முழுவதும்  திரண்டு அம்மாவுக்கு அஞ்சலி செலுத்த வந்தது . கீழத்தெரு ஊர்த்தலைவர் இருளாண்டி , அம்மாவின் உடலுக்கு முன்னால் இரண்டு கைகளையும் நீட்டி , " அன்னலெட்சுமி அன்னலெட்சுமி " என்று கூவி அரற்றி அழுதது கண் முன்னே வந்தது . இந்தப் பிராமணர் என்ன சொல்லுகிறார் என்று அறிய அவர் முகம் பார்த்தேன் . சௌபா எனக்கு மிகஅருகில் நெருங்கி அமர்ந்து அவர் சொல்லுவதைக் கேட்கத் தொடங்கினான்.

அவர் தொடர்ந்தார் ," நல்ல வசதி இருக்கிறவா அஸ்தியைக் கரைக்க காசிக்குப் போய் கங்கையில கரைப்பா ... இல்ல இப்படியே ராமேஸ்வரம் போய் அக்கினி தீர்த்தக் கடல்ல கரைப்பா... ரொம்ப ஏழைப்பட்டவா  , மயானத்துக்குப் பக்கத்துலயே ஏதாவது குளம் குட்டைன்னு பாத்துக் கரைச்சுப்பா ... நம்மள மாதிரி மிடில் கிளாஸ்ல இருக்குறவா , கொஞ்சம் நுட்பமானவா இங்க தான் வருவா ... எத்தனை தூரம் வைகை ஓடி வர்றா ... ஆனா இங்க கரைச்சாத்தான் விஷேசம் " என்று நிறுத்தினார் . நாங்கள் மூவரும் அவரையே பார்த்தோம் .

"இந்த எடத்துக்கு என்ன பேரு ? திருப்புவனம் ... ஒரு காலத்துல இந்த இடம் எல்லாம் பெரிய காடு . பெரிய பெரிய மரங்கள் அடர்ந்து இருந்த படித்துறைன்னு எங்க பாட்டனார் சொல்லி இருக்கார் .. இப்ப சும்மா பேருக்கு நாலு மரம் நிக்குது , வனம் ன்னாலே காடு தான ... அதுலயும் வெறும் வனமில்ல கேட்டுக்கோங்க .. திருப்புவனம் ... அதாவது இந்த உலகத்துக்கு வந்த எல்லா ஜீவனும் ஒரு நாள் பகவான் கிட்டத் திரும்பப் போய்டறது. அது தானே நியதி .. ஆனா பாருங்கோ .. சில ஆத்மாக்கள் அந்தக் கர்ம காலம் முடியாம பூமியில அலஞ்சுட்டுத் தான் , அப்புறமா பகவான்கிட்ட போறது ... அது சாந்தி ஆகாமத் திரிஞ்சுட்டுத்தான் போகும் . அப்படித் திரியப்பிடாதுன்னு தான் இந்த சாஸ்திரம் சடங்கு எல்லாம் நம்மப் பெரியவா உண்டு பண்ணி இருக்கா ... இதுல ஒரு விஷேசம் என்னன்னா " என்று நிறுத்தினார் . 

சேகர் ஏதாவது சொல்லிவிடுவானோ என்கிற பதட்டம்  எனக்கு இருந்தது . ஏனெனில்  எதுவும் எப்போதும் நடக்கலாம் என்பது எங்கள் எல்லோருக்குமான அனுபவம் . அந்த பிராமணருக்கு நல்லநேரம் . வழக்கத்திற்கு மாறான அமைதியோடு சேகர் இருந்தான் .

"இந்த இடம் தான் விஷேசம் .. சாதாரண வனமில்லே .. திருப்புவனம் ... இந்த லோகத்துக்கு வர்ற எல்லா ஆத்மாக்களையும் திருப்பி அனுப்புற வனம் .. அதுனாலதான் இந்த எடத்துக்கு திருப்புவனம் னு பேரு .. அது மட்டுமில்ல . இந்த எடத்தப் புஷ்பவனத்துக் காசின்னும் சொல்லுவா ... இங்க அஸ்தியைக் கரைச்சுட்டா அந்த ஆத்மா அப்பவே பகவான்கிட்ட போயிடுறது ... திரும்பாது அலையாது .. சாந்தி ஆயுடறது " என்றபடியே எழுந்து கொண்டார் . " வாங்கோ போலாம் " என்றபடியே எங்களுக்காகக் காத்திராமல் நடந்துபோக ஆரம்பித்தார் . 

எனக்கு அதிர்ச்சியாகி விட்டது . நான் இந்த வார்த்தைகளை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை . நான் சௌபாவைத் திரும்பிப் பார்த்தேன் . அவனது கண்களில் ஒரு சிறிய கலக்கம் இருந்தது . 

நான் சௌபாவிடமும் , சேகரிடமும் சொன்னேன் .

என்ன சொன்னேன் ?


அப்புறம் சொல்லுகிறேன் 

- பாரதி கிருஷ்ணகுமார். 


Friday, May 15, 2020

சீவலப்பேரி பாண்டி எழுதிய சௌபா என்ற சௌந்திரபாண்டியன் - 14

தத்தளிக்கும் தத்தனேரி மயானத்திற்கு ...
தத்தனேரி மயானம்,மதுரை.




அம்மா உடல் எரியூட்டப்பட்ட மறுநாள் காலை தத்தனேரி மயானத்திற்கு அஸ்தி சேகரிக்கப் போனோம் . சௌபா அங்கே காத்திருப்பதாகச் சொல்லி இருந்தான் . 

தத்தனேரி பொது மயானம். மதுரையின் மிகப்பெரிய மயானம் . அது பற்றி ஆனந்த  விகடனில் ஒரு சிறப்புக்கட்டுரையை சௌபா எழுதி இருக்கிறான் . சிறந்த கட்டுரை . அந்த வருடம் எனக்கு நினைவில்லை . ஆனால் அந்தக் கட்டுரையைப் படித்ததும் நான் சௌபாவுடன் பேசினேன் என்பது நினைவில் இருக்கிறது . 2003 ஆம் ஆண்டு சுதந்திரதின சிறப்பிதழுக்காக சௌபா அதை எழுதினார் என்று இந்தத் தொடரின் முந்தைய பதிவில் தம்பி இளங்கோவன் அன்பன் பதிவிட்டு இருக்கிறார் . அந்தக் கட்டுரையைப்  படித்ததும் , நான் சௌபாவோடு பகிர்ந்து கொண்ட செய்திகளை இப்போது சொல்லுவது பொருத்தமானது.


பள்ளி இறுதி வகுப்பில் படிக்கிறபோதே, நான் காதலில் நின்றேன் . விழுந்தேன் என்று சொல்லுவது எனக்குச் சம்மதமில்லை . "You should not fall in love ; You must stand in love "  என்று யாரோ எனக்கு எப்போதோ சொன்னதை இப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன் .


"அன்பெனும் பெருவெள்ளம் இழுக்குமேல் அதனை யாவர் பிழைத்திட வல்லரே ?

முன்பு மாமுனிவர் தமை வென்றவில் 
முன்னர் ஏழைக் குழந்தை என் செய்வனே ?"
என்று பாரதியார் தன் பிள்ளைக் காதல் பற்றிப் பாடுகிறார்.

காதல் உடலுக்குத் தருகிற பரவசம் முக்கியமே இல்லை . அது மனதுக்குள்ளும் அறிவிற்குள்ளும் நிகழ்த்துகிற  ரசவாதமே அற்புதமானது. அது எல்லாக் கருப்பு வெள்ளைப் படங்களையும் வண்ணமுறச்  செய்து விடுகிறது . எல்லா வண்ணப் படங்களையும் ஓவியங்களாக்கி விடுகிறது . ஒரு அரைவட்டமான வானவில் தலைக்குமேல் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். வாழ்வில் முதன்முறையாக இரவு பகலாகி , பகல் இரவாகும். ஒரு பூந்தூறல் நீங்கள் போகிற பாதை எங்கும் எப்போதும் பொழிந்து கொண்டே இருக்கும் . களங்கமற்ற அந்த இளம் உயிர்களின் பார்வையின் பரிசுத்தம் பற்றி மட்டுமே பத்துப் பக்கங்கள் எழுதலாம்.


அப்போது எங்கள் வீடு மதுரையின் தென்கரையில் இருந்தது . நாங்கள் இருவரும் பள்ளி முடித்து கல்லூரிக்கு வந்திருந்தோம். ஆற்றைக் கடந்து வடகரைக்கு வந்தால் நான் படித்த அமெரிக்கன் கல்லூரி . வடகரையிலேயே, மேற்கு நோக்கி ஏழு கிலோமீட்டர் போனால் அவள் படித்த கல்லூரி . அவள் வீடும் வடகரையில் இருந்தது. காலையில் சந்திக்க இயலாது . எனவே மாலையில் கல்லூரி முடிந்ததும் சைக்கிள் பறக்கும் . ஆற்றின் வடகரை வழியாக , தத்தனேரி மயானத்தைக் கடந்து தான் அந்தப் பெண்கள் கல்லூரிக்குப் போகவேண்டும் . செல்லூர் சாலை இளம்பிள்ளை வாதம் பிடித்த கால்போல , ஓரிடத்தில் வலதுபுறமாக  வளைந்து , ரெயில்வே கேட்டில் முட்டி நிற்கும் . அங்கிருந்து லேசாக மேடேறும் சாலையின் வலதுபுறத்து முதல் வாசல் தத்தனேரி மயானம். இப்போது போல மின்மயானமோ , உயர்ந்த புகைபோக்கிகளோ அப்போது இல்லை .  பொது மயானம் என்றதும் எல்லாமே பொது என்று மயங்கி விடாதீர்கள் . சாதி வாரியாகத்தான் பிணம் எரிப்பார்கள் . சாதிப்பிணம் எப்போதும் உயிர்த்திருந்த மயானம் தான் அது . " வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே "... என்று ,மருதகாசி என்னும் மாபெரும் கவிஞன்   எழுதிய கவிதையைப் பொய்யாக்கிய போலிகள் நாம். தன்தரையில் தான் பிணங்களை எரிப்பார்கள் .அந்தப் புகையும் தரையோடு தரையாகத்தான் பரவிக்கொண்டே இருக்கும்.  சுடலையில் இருந்து வரும் நிணம் கருகும் நாற்றம் கடந்து போக இயலாதது . எனவே ரெயில்வே கேட் வந்ததும் சட்டைக் காலர் மூக்குவரை உயர்ந்துவிடும் . மூக்கு மார்பு வரைக்கும் புதைத்துக்  கொள்ளும் . இல்லாத வேகத்தில் விரைந்து கடந்து போய்விடுவேன் . ரெயில்வே கேட் மூடிவிட்டால் இன்னும் கொடுமை . சைக்கிளைத் தலைக்குமேல் தூக்கிக்கொண்டு கடந்து ஓடுவேன் . சைக்கிளைத் தூக்க முடியுமா என்று காதல் அனுபவம் இல்லாதவர்களே கேட்பார்கள். அருவருப்போடும் அவசரத்தோடும் மயானத்தைக் கடந்து போவேன். இங்கும் , நிண வாடையின் அருகிலேயே மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்கிற வியப்போடும் தான் திரும்பிவருவேன் .


அங்கு போனதும் , காத்திருக்கும் அவளைப் பார்ப்பதும் , அவள் பேருந்தில் ஏறுகிறவரை காத்திருந்து , பார்த்திருந்து , பேருந்து புறப்பட்டதும் திரும்பிவிடுவேன் . ஒரு வார்த்தை பேச இயலாது . யாராவது மாணவி யாராவது ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தால், அதைக் கல்லூரி முதல்வரின் கவனத்துக்கு உடனே கொண்டுசேர்க்கும் பெண் உளவாளிகள் நிறைய நியமிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் மாணவிகளிடையே பரப்பப்பட்டு இருந்தது . எனவே நாங்கள் பேசுவதற்கு வேறு இடத்தைத் தேர்வு செய்கிறவரை நயனபாஷை தான் . அதுபோதாதா? காதலுக்கு மொழி எதற்கு? மொழிக்கும் முந்தைய காதலுக்கு மொழி எதற்கு ?

அப்படியாகக் கடந்து போகவும் வரவும் நான் கஷ்டப்பட்ட , அருவருத்த தத்தனேரி மயானம் நோக்கிப் போய்க்கொண்டு இருந்தேன். முதல்நாள் தான் அம்மாவை அங்கு எரியூட்டி இருந்தது. இரண்டாம் நாள் பாலூத்தும் சடங்கு.எங்கள் வாகனம் மூடிக்கிடந்த ரெயில்வே கேட்டில்நின்றது.

காற்றில் நிணவாடை மிதந்து கொண்டே இருந்தது. ஆனால் ஏதும் துர்நாற்றமில்லை. காற்றில் அம்மாவின் வாசனையைத் தேடித் தவித்தது நாசி . ஜாதிப்பூவும் மஞ்சளும் குங்குமமும் தனது வியர்வையும் கலந்த வாசனையில் இருந்து வேறு ஒரு வாசனைக்கு அம்மா மாறி இருக்கிறாள் என்பதை உணர்ந்த நொடியில் ஆழ்ந்து சுவாசிக்கத் தொடங்கினேன் . என் மார்புக்கூடு முழுவதும் அந்த நறுமணத்தை நிரப்பிக் கொள்ளத் தவித்தேன். அந்நியமான உடலாக இருந்தால் துர்நாற்றமாகவும் , அந்நியோன்யமான உடலாக இருந்தால் நறுமணமாகவும் மாறும் விந்தையை அன்றைக்குத்தான் உணர்ந்தேன். ஏனோ அறிவெங்கும் வெட்க உணர்ச்சி பரவிக் குமைந்தேன் .

மார்புக்கூடு விரிந்தது . பலமுறை பலமுறை சுவாசித்து மார்பெங்கும் அந்தப் புகையின் நறுமணத்தை நிறைத்தேன். அதற்குப்பிறகு இன்றுவரை தத்தனேரி மயானத்தை விரைந்து கடந்ததே இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே மயானத்தில் தான் அப்பாவும் எரியூட்டப்பட்டார்.

இப்போதெல்லாம் சென்னையில் இருந்து மதுரைக்கு ரெயிலில் வந்தால் , திண்டுக்கல் தாண்டியதும் எழுந்துகொள்ளுவேன். மதுரை வரக் காத்திருப்பேன். மதுரையைத்  தொடுவதற்கு முன்னால் வைகை ஆற்றுப்பாலத்திற்கு சற்று முன்னதாக  ரயிலின் மேற்குப்பக்க கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டு நின்று கொள்ளுவேன். தொலைவில் மின்னொளியில் தத்தனேரி மயானம் ஜொலிக்கும். மின்னொளியை எப்போதும் புகைசூழ்ந்து இருப்பதாகவே எனக்குத் தெரியும். மணம் மாறிய அம்மாவின் புகை;அப்பாவின் புகை. மின்விளக்கிற்கு இடது புறத்தில் , சற்றுத் தொலைவில் நவீன மின்மயானத்தின் கருத்த உயர்ந்த புகைபோக்கி . தலையில் இடி விழுந்த பனைமரம் போல நிற்கும். மேற்கில் இருந்து ரெயில் மீது மோதும் காற்றை நிறையச் சுவாசித்து நெஞ்சமெல்லாம் நிறைத்துக் கொள்ளுவேன். அந்த மணம் அற்புதமானது.

வெந்து சாம்பலாகி இருந்தாள் அம்மா . முதல்நாள் பார்த்தபோது உணர்ந்தேன் .. இறந்து கிடந்தது அம்மாவே அல்ல; அச்சு முறிந்து கிடந்த அப்பாவின் அதிகாரம் என்று ...
இப்போது உணர்ந்தேன் .. எல்லா அதிகாரமும் ஒருநாள் சாம்பலாகும் என்று......

பாலூத்தி , நீராத்தி மண் கலயத்தில் அம்மாவைச் சேகரித்துக்கொண்டு திருப்புவனம் போனோம்.சௌபா , முரளி , குணசேகர் என மூன்று பேர் உடன் வந்தது நினைவில் இருக்கிறது . நாற்பத்தியொரு ஆண்டுகளுக்குப் பின் இதனை எழுதுகிறபோது நடந்தது எல்லாம் காட்சியாக விரிகிறது . உடன் வந்த வேறு சிலர் பற்றியும் எனக்கு நினைவிருக்கிறது . ஆனால் மனக் கண்ணில் விரியும் காட்சிப்படலத்தில் அவர்கள் ஏனில்லை ? எவ்வளவு வலிந்து முயன்று தேடிப் பார்த்தாலும் அவர்கள் தென்படாமல் இருப்பது எதனால் ? நினைவாற்றலுக்குள் இந்தப் பாகுபாடு எப்படி நிகழ்கிறது ? புரியவேயில்லை... 

வைகையில் தண்ணீர் முழங்காலளவு ஓடிக்கொண்டிருந்தது.அங்கு அதற்கான இடத்தில் அஸ்தியைக் கரைத்தோம்.மண் குடம் கொஞ்ச தூரம் நீரில் அசைந்தோடி,தண்ணீர் குடித்துத் தண்ணீருக்குள் மூழ்கியது.குளித்துக் கரையேறியதும் கூட வந்த பிராமணர் சொன்னது கேட்டு நான் திகைத்தேன்.அதிர்ந்தேன்.

அவர் என்ன சொன்னார் ?

அப்புறம் சொல்லுகிறேன்...

-பாரதி கிருஷ்ணகுமார்.